நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 23, 2012

கங்கை காவிரி கார்த்திகை


தமிழ் வருடத்தில் எட்டாவது மாதம். இதன் முதல் நாளே ஒரு சிறப்பான நாள்.  பொதுவாக  காவிரி, கங்கை முதலான நதிகளில் நீராடுவது புண்ணியம். கங்கையே காவிரியாக -  காவிரியே , கங்கையாக விளங்கும் ஒரு திருத்தலம்.. அது  எது?

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா?....  என்ற சொல் வழக்கு தஞ்சை மாவட்டத்தில் மிக பிரசித்தமானது. என்ன காரணம்?...

ஒரு சமயம் கங்கை தன்னால்தான் மக்களின் பாவங்கள் தொலைகின்றன என்று எண்ணி கர்வம் கொண்டாள். அந்த எண்ணத்தால் கங்கை பொலிவிழந்தாள்.. தன் எண்ணத்தால் விளைந்த பாவம் நீங்க இறைவனை நாடி பிராயச்சித்தம் அருளுமாறு கங்கை பணிந்து நின்றாள்.. கங்கையின் பிரார்த்தனைக்கு இரங்கிய ஈசன்  மயிலாடுதுறை காவிரியில் துலா ஸ்நான கட்டத்தில் நீராடும்படி ஆணையிட்டார்.

முன்னொரு சமயம்  காவிரி செய்த தவத்தின் பொருட்டு அம்பிகை மயிலாக உருமாறி காவிரிக் கரையினில் சிவ வழிபாடு செய்தனள். அம்பிகையின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன் தானும் மயிலாகத் தோன்றி உமாதேவியுடன் ஆனந்தமாக ஆடி மகிழ்ந்தார்.. அந்தத் தாண்டவமே மயூர தாண்டவம். ஈசனும் அம்பிகையும் மயிலாகத் தாண்டவமாடிய  தலமே மயிலாடுதுறை. 

ஈசன் ஆணையிட்டபடி இந்த தலத்தில் கங்காதேவி துலா மாதமாகிய  ஐப்பசியில் காவிரி நீராடி மயூரநாதரைப் பணிந்து வணங்கி பாவம் நீங்கினாள் என்பதும், ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை காவிரியை விட்டுப் பிரியாமல் அவளுடனேயே பிரவாகமாகி கலந்திருப்பதாகவும் ஐதீகம்... 

அதன்படி ஐப்பசி முழுதும் மக்கள் காவிரியில் நீராடி மயூரநாதரைப் பணிந்து வணங்கத் தலைப்பட்ட வேளையில், வெகு தொலைவில் இருந்து காவிரியில் நீராடுதற்காக திரண்ட அடியார்களுள் நடக்க இயலாத ஏழை ஒருவரும் தன் அளவில் முயற்சிக்க - ஐப்பசி கடைசி நாளும் ஆகிவிட்டது.. 

உடன் வந்தவர்கள் விரைவாய் சென்றுவிட நடக்க இயலாதவர்  நிலை பரிதாபமானது.. மனம் உடைந்த அவர் கண்ணீர் மல்கி கசிந்து உருகினார். ஐப்பசி கடைசி நாள் மாலைப் பொழுதுக்குள்  காவிரியில் நீராட இயலாத தன் நிலையை எண்ணிக் கதறினார்.. ஏழை அழுத  கண்ணீர் ஈசனின் திருவடிகளை நனைத்தது.. அன்பே  வடிவான சிவமும் அந்த ஏழைக்கு அருள் பொழிய நினைத்தது.

ஈசன் அடியவர் முன் தோன்றி, '' வருந்தற்க...நாளை கார்த்திகை முதல் நாள் உம் பொருட்டு கங்கை காவிரியிலேயே கலந்திருப்பாள்...நீராடி மகிழ்க..'' என்று அருள் புரிய, அது முதற் கொண்டு கார்த்திகையின் முதல் நாளும் புனித நாளாயிற்று.

அதன்படி ஐப்பசி தொடங்கி கார்த்திகை முதல் நாள் (முடவன் முழுக்கு) வரை பாவங்கள் விலகி புண்ணியங்கள் பெருகும்படிக்கு காவிரியே கங்கையாகத் திகழ்கிறாள்..
 
கார்த்திகையில் திருவண்ணாமலை தீபத்திருவிழா! 


அண்ணாமலைக்கு அரோகரா! என்று ஜோதி வடிவாய்த் திகழும் அண்ணா மலையாரைத் தரிசிக்கவும், வீட்டில்  வரிசை  வரிசையாய் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடவும் ஒட்டு மொத்த தமிழகமும் உற்சாகத்துடனும் பேராவலுடனும் காத்திருக்கும் மாதம் - கார்த்திகை மாதம் 

அதிலும் குறிப்பாக... கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமைகளில், சோமவார தரிசனம்  சிவாலயங்களில் சிறப்பான அபிஷேக அலங்காரங்கள், சுவாமி ஊர்வலம்
என கோலாகலமாக நிகழ்கின்றன. அந்த நாட்களில் வீட்டில் திருவிளக்கேற்றி வைத்து, திருவிளக்கின் முன் அமர்ந்து தேவாரம், திருவாசகம், சிவபுராணம், திருவிளையாடற் புராணம் முதலான ஞான நூல்களைப் படிப்பதும், கேட்பதும் மிகவும் சிறப்புடையது..

இதனால், நம் நெஞ்சில் இருள்  நீங்கி ஞான ஒளி பிறக்கும். இல்லத்தில் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகி துன்பங்கள்- கவலைகள் யாவும் தொலைந்து போகும்.

கார்த்திகை முதல் நாள்..

ஸ்ரீஐயப்பனுக்கு  மாலையணிந்து ''ஓம்...ஸ்வாமியே சரணம் ஐயப்பா!...'' என்று விரதம் துவங்குகிற அற்புத நாள்!

வழக்கமாக விரதம் ஏற்று சபரி மலைக்குச் சென்று தரிசனம் செய்யும் ஐயப்ப பக்தர்கள் மறுபடியும் மாலையணிவதற்குக் காத்திருக்கும் நாள் கார்த்திகை முதல் நாள்.. எல்லா விரதங்களும் எல்லா நியமங்களும் வலியுறுத்தும் ஒரே விஷயம்.... நீயே கதி என்று அவனைச் சரணடைதல்...அப்படிச் சரணடைபவர் முன் - இறைவன் ஜோதியாய் சுடராய் தோன்றுகின்றான்... என்பதே!...

 வழி காட்டும் வள்ளல் பெருமக்கள் கூறுவதும் இதைத் தான்!...

''தூண்டு சுடரனைய சோதி கண்டாய்'' - திருநாவுக்கரசர் .
''சுடுமால் எரியாய் நிமிர் சோதியனே'' - திருஞானசம்பந்தர்.
''பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே'' - சுந்தரர்.
 
''சோதியனே...துன்னிருளே.. தோன்றாப் பெருமையனே'' - மாணிக்கவாசகர்.
''தீப மங்கள ஜோதி நமோ நம...''  - அருணகிரிநாதர்.

''வந்து உதித்த வெயிலாய் இருக்கும் விசும்பில்'' - அபிராமி பட்டர். 
''அருட்பெரும் ஜோதி..அருட்பெரும் ஜோதி.." - வள்ளலார்.

திருச்சிற்றம்பலம்!...

2 கருத்துகள்:

  1. வணக்கம்,

    கங்கையாய், காவிரியாய்,, அருமையான விளக்கம், ஆழ்ந்த சிந்தனை, அருமை,,

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..