நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 11
செவ்வாய்க்கிழமை
நீறில்லா நெற்றிபாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை..
தமிழ் வளர்த்த ஔவை மூதாட்டியின் அமுத வாக்கு அது....
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக...
- என்று ஆழ்வார் உருகும் போது -
விறகில் தீயினன் பாலில் படு நெய் போல மறைய நின்றுளான்... - என்று அப்பர் போற்றுகின்றார்...
பக்தனைப் பசு என்கின்றது சைவ சித்தாந்தம்..
பசுவின் உடலில் சகல தேவர்களும் - என்று சொல்கின்ற வேதம்,
காளையை தர்மத்தின் வடிவம் எனப் புகழ்கின்றது..
திருநெய்த்தானம் என்று தஞ்சைக்கு அருகில் சிவ ஸ்தலமே உள்ளது..
ஆண்டாள் நாச்சியார் பாடியபடி - வாங்கக் குடம் நிறைத்த வள்ளல் பெரும் பசுக்களின் வம்சம் அழிந்து போயிற்று...
இன்றைக்கு எல்லாமே கலப்பினங்கள் தான்..
கோவிந்தபுரம் பாண்டுரங்கன் கோயில் கோசாலையில் மட்டுமே பாரம்பரிய பசுக்களும் காளைகளும் காணக் கிடைக்கின்றன..
இன்றைக்கு
சுத்தமான நெய் ஆபத்தான உணவுப் பட்டியலில்!..
அன்றைக்கு உடல் உழைப்பும் அதற்கான வலுவான புறக் கூறுகளும் காரணிகளும் இருந்தன... இன்றைய சூழ்நிலை அப்படி இல்லை..
இன்றைக்கு இருக்கின்ற கலப்பின பசுக்களுக்கு செயற்கை கருவூட்டல் தான்..
காளைகளுடன் இயற்கையான கூடல் கிடையாது...
கலப்பின பசு என்றாலும் செயற்கைக் கருவூட்டல் என்றாலும் இரத்தமும் சதையும் எலும்புமாய்
அதுவும் ஒரு ஜீவன் தானே...
வணக்கத்துடன் ஏற்றுக் கொள்வோம்...
அன்றைக்கு மந்தை என்கிற
மேய்ச்சல் நிலமும் பசுக்களுக்கும் காளைகளுக்கும் காலாற மேய்தல்
எனும் வழக்கம் இருந்தது..
ஆநிரை மேய்த்தல் எனும் வழக்கமும் இருந்தது..
இன்றைக்கு ஊர்ப் பசுக்களில் ஒன்றிரண்டு குப்பை மேட்டில் மேய்கின்றன என்றால் காலக் கொடுமை என்பது இதைத் தான்...
இதற்கிடையில்,
மயானத்தில் மேய்வதும்
கன்றை இழந்ததும் நோயுற்றதும் முடமானதும் ஆன பசுக்களிடம் இருந்து பால் கறக்கவோ அந்தப் பாலை அருந்துவதோ கூடாது என்பார்கள் பழைய காலத்தில்..
இறைச்சி -
பிரியாணிப் பிரியர்கள் அதிகமாகி விட்ட
இக்காலத்தில் அத்தகைய நடைமுறைகள் எதுவும் கிடையாது..
எங்கள் பிளாக்கில் வெளியாகின்ற சமையல் குறிப்புகளில் அடிக்கடி பசு நெய் குறிப்பிடப்படுவதால் அன்புக்குரிய நெல்லை அவர்கள் பெங்களூரில் பசுக்கள் குப்பையில் மேய்வதாக சொல்லியிருந்தார்.. அதை முன்னிட்டுத் தான் இந்தப் பதிவு..
பெங்களூருவைப் போலவே எங்களூரிலும் இப்படியான காட்சிகள் காணக் கிடைக்கின்றன..
நிதர்சனமாக கறந்த பாலுடன் ஏனைய பொருட்கள் வருங்காலத்தில் கிடைப்பது அரிது என்றே தோன்றுகின்றது..
இதற்கெல்லாம் யார் காரணம்?..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**