நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 28, 2014

வளம்தரும் ஸ்ரீவராஹி

அன்னை. 

அவளிடமிருந்தே இந்த பிரபஞ்சம் தோன்றியது. அவளே அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி!.. 

உயிர்கள் உய்வடைய வேண்டுமென்று அவளே கருக்கொண்டாள்!. 

பின் அவளே அனைத்துமாக உருக்கொண்டாள்!.

''..பூத்தவளே!.. புவனம் பதிநான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே!..'' - என்பது அபிராமி பட்டரின் திருவாக்கு!...

வானகமும் வையகமும் உய்வடையும் பொருட்டு அன்னை நிகழ்த்திய திருவிளையாடல்களும் - மேற்கொண்ட திருக்கோலங்களும் அனந்த கோடி!...


அப்படிப்பட்ட திருக்கோலங்களுள் ஒன்றுதான் - ஸ்ரீவராஹி.

அம்பிகையை வழிபடுதற்கு நவராத்திரி நாட்கள்  மிகச்சிறந்தவை என்பர்.

அம்பிகையை ஆராதிக்க அனைத்து நாட்களும் சிறந்தவைகளே!..

எனினும் -  அமாவாசை அடுத்த ஒன்பது நாட்களும் சிறப்பானவை என்று ஒரு திருக்குறிப்பு உண்டு.  அந்த வகையில்  -

ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரியும்,
புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும்,
தை மாதத்தில் சியாமளா நவராத்திரியும்,
பங்குனி மாதத்தில் வசந்த நவராத்திரியும் - சிறப்பானவை. 

ஆனால் - நாம் கொண்டாடுவது சாரதா நவராத்திரியைத் தான்.

இருப்பினும் பாரதத்தின் பல தலங்களில் இந்த விசேஷமான நவராத்திரி வைபவங்கள் அனுசரிக்கப்படுகின்றன.

இவற்றுள் முதலாவதாக இடம் பெறும் ஆஷாட நவராத்திரி - ஆனி மாதத்தின் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் கொண்டாடப்படுவது.

வளமைக்கும் செழிப்புக்கும் இந்த மாதமே தொடக்கம். உயிர்களின் பசிப் பிணிக்கு மருந்தாகும் வேளாண்மையின் தொடக்கம் இந்த மாதத்தில் தான்.

ஆடியில் புது வெள்ளம் பெருகி வந்து குளம் குட்டைகள் நிறைந்து வயலில் -  நீர் பாய்வதற்கு முன்  - கோடையில் காய்ந்து கிடந்த நிலங்களில் எரு விட்டு உழவு செய்து ஆயத்தப்படுத்திக் கொள்வது ஆனியில் தான்!.. 

வேளாண்மை செழித்து ஓங்குவதே ஒரு நாட்டின் மேன்மைக்கு அடையாளம்!..

ஆதியில் இருந்தே விவசாயம் தான் ஆதாரத்தொழிலாக விளங்குவது. எனவே தான் - ''..சுழன்றும் ஏர் பின்னது உலகம்!..'' - என்றார் வள்ளுவப்பெருமான்!..

வேளாண் கருவிகளுள் - மேன்மையானதாக விளங்குவது ஏர்!..

இந்த ஏர் - தனைக் கையில் கொண்டு விளங்குபவள் - ஸ்ரீ வராஹி!.. 

ஸ்ரீ வராஹி  - வேளாண்மையின் ஆதாரம்!..  

ஸ்ரீ வராஹி - சப்த கன்னியருள் விளங்குபவள்.

தேவி புராணங்களில் சிறப்பாக வர்ணிக்கப்படுபவள்.

அளவற்ற சக்தியுடன் விளங்கும் ஸ்ரீவராஹி -  ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் அங்குசத்தில் இருந்து தோன்றியவள் என்பர்.

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தளபதியாகத் திகழ்பவள்.  

வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அருளும் கருணை உடையவள்.

ஆகவேதான்  - விவசாயம் பல்கிப் பெருகி, நாடு நலம் பெற வேண்டும் - என ஆஷாட நவராத்திரி நாட்களில் ஸ்ரீ வராஹி - ஆராதிக்கப்படுகின்றாள்.


அதன்படியே - 

தென்னகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகராக விளங்கும் தஞ்சை மாநகரில்  -

ஈடு இணையின்றி  வானளாவித் திகழும் ஸ்ரீராஜராஜேஸ்வரம் எனும்  -

ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் அருளாட்சி புரியும் ஸ்ரீ வராஹி அன்னைக்கு சிறப்பான முறையில் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகின்றது!..

தமிழகத்தில் சிவாலயங்கள் பலவற்றிலும் சப்தகன்னியர் திருமேனிகள் விளங்கினாலும்  -

காசியம்பதிக்கு அடுத்து - தஞ்சை பெரிய கோயிலில் தான் அன்னை ஸ்ரீ வராஹி தனி சந்நிதியில் விளங்குகின்றனள்.  

ஸ்ரீ மஹாவிஷ்ணு வராக உருக் கொண்டு - இவ்வுலகை அசுரர்களிடம் இருந்து மீட்டபோது அவரிடம் விளங்கிய சக்தி - ஸ்ரீ வராஹி என்பது  திருக்குறிப்பு!..


நம் உடலில் இலங்கும் ஆறு ஆதார சக்கரங்களில் ஐந்தாவதாக நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்தின் அதிபதி - ஸ்ரீ வராஹி.

ஆஷாட நவராத்திரி நாட்களிலும் நடுநாயகமாகத் திகழும் ஐந்தாவது நாளாகிய பஞ்சமி  - மிகச் சிறப்பான நாள்.  வேளாண்மைக்கு உரியதான ஏர் மற்றும் தொழிலுக்கு உரியதான உலக்கை இரண்டும் ஸ்ரீ வராஹி அன்னையின் திருக்கரங்களில் விளங்குகின்றன!..

ஸ்ரீ வராஹி மிகச் சிறந்த வரப்ரசாதி!..

ஸ்ரீ வராஹிக்கு சதுரங்க சேனாநாயிகா எனும் திருப்பெயர் உண்டு.  

ஸ்ரீ லலிதாம்பிகையின்  நால்வகைப் படைகளுக்குத் தலைவி இவளே!..

நம் மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை நிறைவேற்றித் தருவதில் இவளுக்கு நிகர் யாருமில்லை!.. 


மாமன்னன் ராஜராஜசோழனின் இஷ்ட தெய்வம் ஸ்ரீவராஹி என்று அறிய முடிகின்றது. ஸ்ரீவராஹியின் துணை கொண்டே -   குமரி முதல் நர்மதை வரை அரும்பெரும் வெற்றிகளை எளிதாக சாதிக்க முடிந்தது.

சோழ வளநாடு, இப்புகழினை எய்தியதற்கு -   ஸ்ரீ வராஹி அம்மனின்  பெருந் துணையே காரணம்  என்பதை எளிதாக உணரலாம். 

கடல் கடந்தும் வெற்றிகளைக் குவித்திட  - மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு உறுதுணையாக இருந்தவள் ஸ்ரீ வராஹி!..

தென்னகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகர்  தஞ்சை மாநகரில்  - தண்ணருள் பொழிபவள் ஸ்ரீ வராஹி!..

இன்றும் - தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலில்  கைகூப்பி வணங்கும் பல்லாயிரம் பக்தருக்கும் உற்றதுணை என வருபவள் ஸ்ரீ வராஹி!..

மிகுந்த இனிப்புடன் கூடிய பொங்கல், கேசரி, பாயசம், ஜிலேபி போன்ற நிவேத்யங்கள் அம்பிகைக்கு மிகவும் உகந்தவை.  

மருக்கொழுந்து, வில்வம், கிருஷ்ணதுளசி அல்லது மல்லிகை கொண்டு அர்ச்சிக்க - அல்லல்கள் அடியோடு அழிவதை உணரலாம். தீராத பிரச்னைகள் தீர்வதற்கு கருநீலம் அல்லது கரும்பச்சை வண்ணத்தில் புடவை சாத்தி நேர்ந்து கொள்ள அன்னையின் அருள் பரிபூரணமாகக்  கிட்டும். 

திருக்கரங்களில் ஏர்கலப்பையும் உலக்கையும் தங்கி விளங்குவதால் -  ஸ்ரீவராஹி அம்மனை வணங்குபவர் வீட்டில் உணவுக்குப் பஞ்சமே வராது!.

தவிரவும் - வீட்டில் நிலவும் கடன், நோய் போன்ற பிரச்னைகள் தொலைந்து போகும்!. வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் ஆரோக்கியமும் ஆயுளும் பொங்கிப் பெருகும்!..


ஆன வராக முகத்தி பதத்தினில் 
ஈனவராகம் இடிக்கும் முசலத்தோடு 
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை 
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே!.. 
                                                                           - திருமந்திரம் 4/5/28. 

- என,  ஸ்ரீ வராஹியின் பராக்கிரமத்தினை - திருமூலர் புகழ்கின்றார்.

திரிபுரசுந்தரியானவள் - இழிகுணத்தினை உடைய ஈனர்களின் தேகத்தினை இடித்து நசுக்கி ஒழிக்கும் (முசலம்) உலக்கை மற்றும் ஏழு படைக்கலன்களை ஏந்தி, புன்னகை தவழும்  - வராக முகத்தினளாக - தங்கள் துன்பங்கள் தீர வேண்டும் என - தன்னைத் தியானிக்கும் அன்பர்களின் உள்ளங்களில் என்றும் ஓங்கி விளங்குகின்றாள் - என்பது திருமூலரின் திருவாக்கு!..

நமது நேர்மையான கோரிக்கைகளுக்கு - ஸ்ரீ வராஹி நிச்சயம் அருள் புரிவாள் என்பது தெளிவு!..

அபிராமபட்டர் அபிராமி அந்தாதியிலும், திருப்பதிகத்திலும் பல இடங்களில் ஸ்ரீவராஹியின் திருப்பெயரினைப்  புகழ்கின்றார்.

''..மருந்தினும் இனிய சொற்பைங்கிளி வராஹி!.'' என்பது அவற்றுள் ஒன்று!

இங்கே, மருந்து எனக் குறிப்பிடப்படுவது - அமிர்தம்!..

அமிர்தத்தினை விட இனிய சொற்களைப் பேசுபவளாம் அன்னை!..

தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு - ஆனி 13 (ஜூன் 27) வெள்ளியன்று காலை மஹாகணபதி ஹோமத்துடன்  ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாகத் தொடங்கியுள்ளது. 


ஜூலை ஏழாம் தேதி வரை நிகழும் இத்திருவிழாவில் முதல் நாள் தொட்டு -

இனிப்பு வகைகள், மஞ்சள், குங்குமம், சந்தனம் - எனும் மங்கலங்களால் அலங்கரிக்கப்படுகின்றாள் அன்னை.

அடுத்தடுத்த நாட்களில்  -

தேங்காய் பூவினாலும், மாதுளை முத்துக்களாலும், நவதானியங்களாலும், அலங்கரிக்கப்படும் வராஹி வெண்ணெய் அலங்காரம் கொண்டும் திகழ்வாள்.

கனிகளாலும், காய்களாலும் மலர்களாலும் திருக்கோலங்கொள்ளும் வராஹி அன்னைக்கு ஜூலை ஏழாம் நாள் பூச்சொரிதல்!..

அன்று மாலை - கோலாகலமாக  திருவீதி எழுந்தருள்கின்றாள்.

செண்டை வாத்யமும் சிவகண கயிலாய மங்கல வாத்யங்களும் முழங்க  அலங்கார ரதத்தில் எழுந்தருளி - ராஜவீதிகளில் பவனி கண்டருள்கின்றனள். 

விழா நாட்களில் - காலையில் மூலமந்த்ரத்துடன் யாக சாலை பூஜை, மஹாஅபிஷேகம். மாலையில் சிறப்பு அலங்காரமும் மகாதீபாராதனையும் நிகழும்.

அன்னையின் ஆராதனையில் அன்னதான வைபவமும் இன்னிசை நிகழ்ச்சிகளும்  - குறிப்பிடத்தக்கவை.

அன்னை ஸ்ரீ வராஹி  - எதிர்ப்புகளை தகர்ப்பவள். வேளாண் தொழில்களில் மேன்மையை அருள்பவள். நம் வீட்டில் தன தான்ய மழையைப் பொழிபவள். பில்லி, சூனியம் போன்ற கொடுவினைகளை அடியோடு அழிப்பவள்.

நம்மிடம் நேர்மை இருக்கும் பட்சத்தில் - நமக்கு உற்ற துணையாகி நல்வழி காட்டுபவள்.  


இந்த ஆண்டில் எங்கள் இல்லத்தில் மங்கல நிகழ்வாக - என் மகளின் திருமணம்.

இணையத்தின் வழியாக ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொண்டபின் - முதல் முறையாக மாப்பிள்ளையும் பெண்ணும் சந்தித்துக் கொண்டது - 

பிரகதீஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவராஹி அம்மனின் சந்நிதியில் தான்!..

இவளே முன் நின்று திருமண வைபவத்தை நடத்திக் கொடுத்தாள்..

நியாயமான செலவுகளுக்காக வாங்கிய கடனை - திருப்பிக் கொடுக்க இயலாத சூழ்நிலையிலும், 

நம்பிக்கையுடன் கொடுத்த கடன் - எதிர்பார்த்தபடி திரும்பக் கிடைக்காத சூழ்நிலையிலும்,

அளப்பரிய அன்புடன்  - நமக்குக் கை கொடுப்பவள் ஸ்ரீ வராஹி. 

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர் 
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே!..(77) 

என்று  - ஸ்ரீவராஹியை அபிராம பட்டர் போற்றி வணங்குகின்றார்.

ஆஷாட நவராத்திரி நாட்களின் - மாலை நேரத்தில்,

உங்கள் வீட்டின் பூஜை அறையில் அல்லது வழிபடும் இடத்தில் -

நெல் அல்லது பச்சைப் பயிறு கொண்டு கோலமிட்டு,  நெய் விளக்கேற்றி வைத்து - அதிக இனிப்புடன் கூடிய (கேசரி, பாயாசம், ஜிலேபி போன்ற) பட்சணத்தினை நிவேதனம் செய்து ஸ்ரீ வராஹி அன்னையை வணங்குங்கள்.

உங்கள் இல்லத்திற்கும்
வரந்தர வாராஹி வருவாள்!..
வழித்துணை ஆகவும் வருவாள்!..

அம்பா சூலதனு கசாங்குஸதரி அர்த்யேந்து பிம்பாதரி
வாராஹி மதுகைடப ப்ரஷமனி வாணி ரமா ஸேவிதா
மல்லாத்யாசுர மூகதைத்ய மதனி மாஹேஸ்வரி சாம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீராஜராஜேஸ்வரி
* * *

18 கருத்துகள்:

  1. அனைத்தும் சிறப்பு ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. வணக்கம் ஐயா!..

    வராஹியின் இத்தனை பெருமைகளையும் அருமையையும்
    இங்கு உங்கள் பதிவினாலேயே அறிந்து கொண்டேன்.

    எத்தனை எத்தனை சிறப்பு!..
    இதயத்தில் ஏற்றி வேண்டுகிறேன்!

    வரமருளும் வராஹி!
    யாவர்க்கும் இரங்கித்
    தரவேண்டும் நிறைவு!
    தடையாவும் தகர்த்து!

    அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வருகையும் இனிமையான கவிதையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  4. தஞ்சை பெரிய கோவிலில் வராஹி விழா ஆனி 13-ம் தேதி ஜூன் 27- என்று இருக்கவேண்டும் ஜூலை 27 என்று இருக்கிறது.எப்படியோகண்ணில் பட்டது. படித்து ரசித்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      மிகக் கவனமாக இருந்தும் பிழை ஏற்பட்டது. திருத்தி விட்டேன். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. ஐயா என்னால் நம்புவது கஸ்டமாக இருக்கிறது ஒருஅரபு நாட்டில் வாழ்பவன் என்றமுறையில் சொல்கிறேன், ஆன்மீக விசயங்களை இவ்வளவு அழகாக தொடர்ந்து தொகுத்து வழங்குகிறீர்கள் தங்களின் இறைத்தொண்டுக்கு எமது பணிவான வணக்கங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கும் என் அன்பின் வணக்கங்கள்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. தஞ்சை பெரிய கோயில் அடிக்கடி சென்று இருக்கிறேன். தனியே இதுதான் ஸ்ரீ வராகி அம்மன் சந்நிதி என்று தரிசித்தது இல்லை. எல்லா சந்திகளையும் வணங்குவது போன்றே வணங்கி இருக்கிறேன். இனி ஸ்ரீ வராகி அம்மன் சந்நிதிக்கு தனி கவனம் செலுத்துவேன்.

    தங்கள் அன்பு மகளுக்கும், குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்! ஸ்ரீ வராகி அம்மன் அருள் புரியட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      எமக்கு நல்வாழ்த்துக்கள் கூறிய தங்களுக்கு அன்பின் வணக்கங்கள்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ஸ்ரீ வராகி அம்மன் பற்றி வளமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. தங்களின் எண்ணம்போல் தாங்களும், குடும்பத்தாரும் வாழ்வாங்கு வாழ இறையருள் துணை நிற்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் நல்லாசிகளுக்கு மிக்க நன்றி..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..