நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

தேவாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேவாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 09, 2024

தெங்கு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 25
செவ்வாய்க்கிழமை

சமையலுக்குத் தனியான தேங்காய் எண்ணெய் என்ற நகைச்சுவையைக் கேட்டு விட்டு தென்னையைப் பற்றி தேவாரம் என்ன சொல்கின்றது எனத் தேடினேன்...

நமக்குப் பக்கத்தில் திரு ஐயாறை அடுத்து ஆடுதுறை என்ற திருத்தலம்..

வாலி வழிபட்ட திருக்கோயில்.

இவ்வழியே சென்ற தாய்க்கும் மகளான கர்ப்பிணிக்கும் இரக்கம் கொண்டு தென்னை வளைந்து, குலை - இளநீர் - கொடுத்ததாக தல புராணம்..


திருத்தலம்
வட குரங்காடுதுறை

இறைவன்
ஸ்ரீ குலைவணங்கு நாதர்
அம்பிகை
ஸ்ரீஜடாமுடியம்மை
தீர்த்தம் காவிரி 
தலவிருட்சம் தென்னை

முந்தைய பதிவுகள் :




பற்பல திருப்பாடல்களில் தென்னையைப் பற்றி சொல்லப்பட்டு இருந்தாலும்
நவரத்தினம் போல ஒன்பது திருப்பாடல்கள் இன்று.


-: திருஞானசம்பந்தப் பெருமான் அருளியவை :-

குடந்தைக் காரோணம்
மலையார்மங்கை பங்கரங்கை யனலர் மடலாரும்
குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார் குடமூக்கில்
முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவா மதியினார்
கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோ ணத்தாரே. 1/72/3

திருஐயாறு
வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே
வானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார்
தேன் நெர் தெங்கிளநீர் கரும்பின் தெளி
ஆனஞ்சாடு முடியான் உமை ஐயாறுடை ஐயனே.  2/6/5

திருவீழிமிழலை
தாங்கருங் காலந் தவிரவந்திருவர் 
தம்மொடுங் கூடினா ரங்கம்
பாங்கினாற் தரித்துப் பண்டுபோ லெல்லாம் 
பண்ணிய கண்ணுதற் பரமர்
தேங்கொள்பூங் கமுகு தெங்கிளங் கொடி மாச் 
செண்பகம் வண்பலா இலுப்பை
வேங்கைபூ மகிழ் ஆல் வெயிற்புகா வீழி 
மிழலையான் என வினை கெடுமே. 3/119/4


-: திருநாவுக்கரசு ஸ்வாமிகள் அருளியவை :-

கடம்பூர்
திங்கள் தங்கிய செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும் மணாள னிருப்பிடம்
பொங்கு சேர்மணற் புன்னையும் ஞாழலும்
தெங்கு சேர் கடம்பூர் கரக்கோயிலே. 5/20/5

ஆமாத்தூர்
வானஞ் சாடு மதியர வத்தொடு
தானஞ் சாதுடன் வைத்த சடையிடைத்
தேனஞ் சாடிய தெங்கிள நீரொடும்
ஆனஞ் சாடிய ஆமாத்தூர் ஐயனே. 5/44/10

திருவலஞ்சுழி
கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்
கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்
அலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய்
அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய்
மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத்தெங்கஞ் சோலை சூழ் கொட்டையூரிற்
கோடீச்ச ரத்துறையுங் கோமான் தானே.. 6/73/2
-::-

-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளியவை :-

கானாட்டுமுள்ளூர்
பூளைபுனை கொன்றையொடு புரிசடையி னானைப்
புனலாகி அனலாகிப் பூதங்கள் ஐந்தாய்
நாளைஇன்று நெருநலாய் ஆகாய மாகி
ஞாயிறாய் மதியமாய் நின்றஎம் பரனைப்
பாளைபடு பைங்கமுகின் சூழல் இளந் தெங்கின்
படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளைவண்டு பாடமயில் ஆலும்வளர் சோலைக்
கானாட்டு முள்ளூரிற் கண்டு தொழுதேனே. 7/40/4

வாழ்கொளிபுத்தூர்
காளை யாகி வரையெடுத்தான் தன்
கைகளிற்று அவன் மொய்த்தலை யெல்லாம்
மூளை போத ஒருவிரல் வைத்த
மூர்த்தியை முதல் காண்பரி யானைப்
பாளை தெங்கின் பழம்விழ மண்டிச்
செங்கண் மேதிகள் சேடெறிந் தெங்கும்
வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.. 7/57/9

திருக்கேதீச்சரம்
அங்கத்துறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரில்
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரைமேல்
தெங்கம் பொழில் சூழ்ந்த திருக் கேதீச்சரத்தானே 7/80/5
-::-

வாழ்ந்த தடங் காட்டும்
வளர் தெங்கின் வழி நின்று
வாழ்வாங்கு வாழ்வோம்
வையகத்தில்!..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், ஏப்ரல் 18, 2024

திருவீழிமிழலை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மக நட்சத்திரம்
சித்திரை 5
வியாழக்கிழமை

திருத்தலம்
திருவீழிமிழலை


இறைவன்
ஸ்ரீ வீழிநாதர்
அம்பிகை
ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை
தீர்த்தம் விஷ்ணு தீர்த்தம்
தலவிருட்சம் வீழி எனும் செடி

இது கல்யாணத் திருத்தலம்..
காத்தியாயன முனிவருக்கு மகள் - என,  அம்பிகை தோண்றியபோது ஈசன் திருமணம் கொண்ட  தலம்..


சலந்தராசுரனை அழித்த சக்கரத்தை வேண்டி நாளும் ஆயிரம் தாமரை கொண்டு ஸ்ரீ மஹா விஷ்ணு -  ஈசனை வழிபடும் போது ஒருநாள் ஒரு மலர் குறைந்தது.. அவ்வேளையில் தனது 
கண்ணையே மலராக இட்டு அர்ச்சித்து சக்கரத்தைப் பெற்றார் என்பது தலவரலாறு..

யம பயம் தீர்க்கின்ற தலம்:

உத்தால முனிவரின் குமாரன் சுவேதகேதுவின்  உயிரைப் பறிப்பதற்காக  கால தேவனாகிய - யம தர்ம ராஜன் பாசக் கயிற்றை வீசியபோது  சுவாமி வெளிப்பட்டுக்  கால சம்ஹாரம் செய்ததாக  ஸ்தலபுராணம்..

செம்பொற்காசு அருளப் பெற்ற தலம் :

ஞான சம்பந்தப் பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும் இவ்வூருக்கு வந்தபோது, நாட்டில் கடும் பஞ்சம். மக்கள் வறுமையில் தவிக்கின்றனர்.. 

இந்த நிலையில் அப்பர், சம்பந்தர் இவர்களுடன் வந்த அடியார்களுக்கு உணவு அளிப்பது சிரமமாக இருக்கிறது..

மக்களின் துயர் தீர்வதற்கு சான்றோர் இருவரும் பதிகம் பாடி ஈசனை வணங்குகின்றனர்.. 

மறுநாள் இரவு - இருவரது கனவிலும் தோன்றிய இறைவன் - விடியற்காலையில், கிழக்கு பலிபீடத்தில் ஒரு காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு காசும் இருக்கும்.. - என, அறிவிக்கிறார் ..

அவற்றைப் பொருளாக்கி   சான்றோர் இருவரும் திருமடங்கள் அமைத்து மக்களின் பசி தீர்த்தனர் என்பது சமய வரலாறு...

அங்கு வறுமை தீரும் வரை இவ்வாறு தினமும் படிக்காசு பெற்று தொண்டு செய்திருக்கின்றனர்.. 

இருப்பினும், அப்பருக்கு செம்பொற் காசும், சம்பந்தருக்கு மாற்றுக் குறைந்த காசும் இறைவன் கொடுத்திருக்கின்றார்.. 

ஏனென்று கேட்க அப்பர் ஸ்வாமிகளின் உழவாரத் தொண்டு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.. 

அதைக் கேட்ட சம்பந்தர்,
 "வாசி தீரவே காசு நல்குவீர்" எனத் திருப்பதிகம் பாடி பிறகு அவருக்கும் செம்பொற்காசு அளித்து அருளப் பெற்றது..

"வாசி தீரவே காசு நல்குவீர்" எனும் திருப்பதிகத்தைப் பாராயணம் செய்தால் வீட்டில் வளம் நிறைந்து தங்கும் என்பது நம்பிக்கை..

இத்தகு மேன்மை நிறைந்த திருத்தலத்தில் பங்குனி 29 (11/4) முதல் சித்திரை 9 (22/4) வரை சித்திரைப் பெருவிழா நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.. 

நான்காம் திருநாளில் ஸ்வேதகேதுவிற்காக கால சம்ஹாரம்..

ஆறாம் திருநாளாகிய இன்று (சித்திரை 5 வியாழன்) மக நட்சத்திரத்தில் திருக்கல்யாண வைபவம்..

இப்பொன்னான நாளில்  அம்மையப்பனை மனதார சிந்தித்து நலமும் வளமும் பெறுவோமாக..


ஆறாடு சடைமுடியன் அனலாடு 
மலர்க்கையன் இமயப்பாவை
கூறாடு திருவுருவன் கூத்தாடுங் 
குணமுடையோன் குளிருங்கோயில்
சேறாடு செங்கழுநீர்த் தாதாடி 
மதுவுண்டு சிவந்தவண்டு
வேறாய உருவாகிச் செவ்வழி 
நற்பண்பாடும் மிழலையாமே.. 1/132/7
-: திருஞானசம்பந்தர் :-

பாலை யாழொடு செவ்வழி பண்கொள
மாலை வானவர் வந்து வழிபடும்
ஆலையார் அழல் அந்தணர் ஆகுதி
வேலையார் தொழும் வீழி மிழலையே.. 5/12/10
-: திருநாவுக்கரசர் :-

பரந்த பாரிடம் ஊரிடைப் பலி
பற்றிப் பாத்துணுஞ் சுற்றம் ஆயினீர்
தெரிந்த நான்மறையோர்க்கு 
இடமாய திருமிழலை
இருந்து நீர் தமிழோடிசை கேட்கும்
இச்சையாற் காசு நித்தல் நல்கினீர்
அருந்தண் வீழிகொண்டீர் 
அடியேற்கும் அருளுதிரே..
7/88/8
-: சுந்தரர் :-

ஏக நாயகனை இமையவர்க் கரசை
    என்னுயிர்க்கு அமுதினை எதிர் இல்
போக நாயகனைப் புயல்வணற்கு அருளிப் 
பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த
மேக நாயகனை மிகு திரு வீழிமிழலை 
விண்ணிழி செழுங் கோயில்
யோக நாயகனை அன்றி மற்றொன்றும் 
உண்டென உணர்கிலேன் யானே.. 9/5/1
-: திருவிசைப்பா சேந்தனார் :-

திருப்பாடல் தொகுப்பு
 நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், செப்டம்பர் 23, 2014

பலன் தரும் பதிகம்

திருவேதிகுடி.

திருமணத் தடையினை நீக்கும் திருத்தலமாகிய திருவேதிகுடியினைப் பற்றி கடந்த மார்ச் மாதம்,




- என மூன்று பதிவுகளை இறையருளால்  வெளியிட்டிருந்தேன். அவற்றில் திருத்தலச் சிறப்புகளுடன் - திருப்பதிகச் சிறப்பினைக் கூறும் போது,

திருஞானசம்பந்தப் பெருமான் - திருப்பதிகம் பாடி அதன் பலன் கூறியருளும் போது ஆணையிட்டு அருளிய திருப்பதிகங்கள் ஐந்தினுள் - திருவேதிகுடி திருப்பதிகமும் ஒன்று - எனக் குறிப்பிட்டிருந்தேன்.


அதனைத் தொடர்ந்து - வலைத்தள அன்பராகிய திரு. குமார் அவர்கள் - ஏனைய நான்கு திருத்தலங்களைப் பற்றியும் கூறுமாறு கேட்டிருந்தார். 

அவர் கேட்டிருந்தது - ஆகஸ்ட்/19 அன்று. 

அடுத்த சில தினங்களில் தருகின்றேன்- என, நானும் பதில் அளித்து விட்டேன். ஆயினும் விவரங்களை உடன் பதிவிட முடியாதபடி - அடுத்தடுத்த பதிவுகள்.

மிகவும் தாமதமாகி விட்டது. 

பன்னிருதிருமுறைகளுள் திருஞானசம்பந்தப்பெருமான் பாடியருளியவை முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 

அவற்றுள் ஆணையிட்டு அருளிய பதிகங்கள் ஐந்தினைப் பற்றிய விவரங்கள் - இங்கே குறிக்கப்படுகின்றன.

திருத்தலம்
கழுமலம் என்று புகழப்படும் சீர்காழி.

 
இறைவன் - ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரஹந்நாயகி

தலவிருட்சம் - பாரிஜாதம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம் முதலான 22 தீர்த்தங்கள்.

தலப்பெருமை:
காழி என்பது திருத்தலம். இதுவே சீர்காழி.
ஊழிப்  பிரளய காலத்தில் தோணி போல மிதந்த திருத்தலம்.

பன்னிரு தலங்களாக விளங்குவது. காழி, பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவம், சண்பை,  கொச்சைவயம், கழுமலம் என்பன அவை. 

திருஞான சம்பந்தர்  அவதரித்த திருத்தலம்.

திருப்பதிகம்
மூன்றாம் திருமுறை.
திருப்பதிக எண் - 118

மடல்மலி கொன்றை துன்றுவா ளெருக்கும் வன்னியு மத்தமுஞ் சடைமேற்
படலொலி திரைகண் மோதிய கங்கைத் தலைவனார் தம்மிடம் பகரில்
விடலொளி பரந்த வெண்டிரை முத்த மிப்பிகள் கொணர்ந்துவெள் ளருவிக்
கடலொலி யோத மோதவந் தலைக்குங் கழுமல நகரென லாமே. {1}

கானலங் கழனி யோதம்வந் துலவுங் கழுமல நகருறை வார்மேல்
ஞானசம் பந்த னற்றமிழ் மாலை நன்மையா லுரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி யுள்ளமு மொருவழிக் கொண்டு
வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்றிதற் காணையும் நமதே!.
{11}
* * *

திருத்தலம்
திருவேதிகுடி.

 
இறைவன் - ஸ்ரீ வேதபுரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ மங்கையர்க்கரசி

தலவிருட்சம் - வில்வம்.
தீர்த்தம் - வேத தீர்த்தம்.

தலப்பெருமை: 
நான்முகன் வழிபட்டு உய்ந்த திருத்தலம். ஈசன் ஒரு சமயம் வாழை மடுவில் தோன்றியருளியதாக ஐதீகம். திருமணத் தடை நீக்கும் திருத்தலம்.

திருப்பதிகம்
மூன்றாம் திருமுறை.
திருப்பதிக எண் -78.

நீறுவரி ஆடரவொ டாமைமன வென்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ லாதிய ரிருந்தவிடமாம்
தாறுவிரி பூகமலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே.{1}

கந்தமலி தண்பொழினன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி ஆதிகழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்திஅரசாளும் அதுவேசரதம் ஆணைநமதே!..
{11}
* * *

திருத்தலம்
திருவெண்காடு.


இறைவன் - ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பிரம்மவித்யா நாயகி

தலவிருட்சம் - ஆலமரம், கொன்றை, வில்வம்.
தீர்த்தம் - சூர்ய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம்.

தலப்பெருமை: 
அம்பிகையே குருவாக இருந்து - நான்முகனாகிய பிரம்மனுக்கு உபதேசித்த திருத்தலம்.

ஸ்வாமியும் அம்பாளும் திருமரமும் தீர்த்தமும் மும்மூன்றாகப் பொலியும் திருத்தலம்.

திருவேதிகுடி திருப்பதிகத்தில் திருமணம் கைகூடிவர அருளிய ஞானசம்பந்தர் திருவெண்காட்டில் பிள்ளைப் பேற்றுக்கு அருள்கின்றார்.

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே!..
{2/48/2}

திருவெண்காட்டில் உள்ள முக்குளங்களில் மூழ்கி எழுந்து, மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மையுடன் வீற்றிருக்கும் எம்பெருமானை  வணங்கி வழிபடுபவரை மாயை எனும் பேய்கள் விட்டு விலகிப் போகும். நல்ல மகப்பேற்றினை வேண்டிய மனவிருப்பம் இனிதே ஈடேறும். இதில் சிறிதும் ஐயம் வேண்டாம்!..  - என்று நமக்கு நல்வழி காட்டியருள்கின்றார்.

திருப்பதிகம்
மூன்றாம் திருமுறை.
திருப்பதிக எண் - 15.

மந்திர மறையவை வான வரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
வெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவிய
அந்தமு முதலுடை யடிக ளல்லரே. {1}

நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன்எம் சிவனுறை திருவெண் காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோ டருவினை அறுதல் ஆணையே!.. {11}
* * * 

திருத்தலம்
திருச்செங்குன்றூர் - திருச்செங்கோடு.



இறைவன் - ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பாகம்பிரியாள்

தலவிருட்சம் - இலுப்பை.
தீர்த்தம் - தேவதீர்த்தம்.

தலப்பெருமை:
ஐயனும் அம்பிகையும் - மாதொருபாகனாக  பாகம் பிரியாளாக விளங்கும் திருத்தலம். திருமுருகன் செங்கோட்டு வேலனாகப் பொலியும் திருத்தலம்.
சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் திருத்தலம்.

திருஞானசம்பந்தர் தன் அடியாருடன் திருச்செங்கோட்டுக்கு வருகை தந்த போது கொங்குநாட்டில் விஷக்காய்ச்சல் பரவியிருந்தது. அந்த விஷ ஜூரம் அடியார்களையும் பற்றிக் கொண்டது.

விஷ ஜூரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அடியார்களையும் காத்தருள வேண்டி அருளிய திருப்பதிகம் இது.

செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!..

ஒவ்வொரு திருப்பாடலின் இறுதியிலும் ஆணையிட்டருளி கொங்கு நாடு முழுவதும் பிணி தீர்த்தார். மக்களை வாட்டிய விஷ ஜூரம் நாட்டை விட்டே ஒழிந்தது - என்பது பெரிய புராணம் காட்டும் திருக்குறிப்பு.
 
திருநீலகண்டத் திருப்பதிகம் {பொது}
முதலாம் திருமுறை. 
திருப்பதிக எண் - 116 

அவ்வினைக்கு இவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்துஎம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்துஎமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
{1}

பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண்
திறம்பயின் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே!..
 
{11} 
* * *       

திருத்தலம்
திருமறைக்காடு - வேதாரண்யம். 


இறைவன் - ஸ்ரீ மறைக்காட்டு மணாளன்
அம்பிகை - ஸ்ரீ யாழைப்பழித்த மொழியாள்.

தலவிருட்சம் - வன்னி.
தீர்த்தம் - மணிகர்ணிகை.

தலப்பெருமை: 
வேதங்கள் வணங்கிய திருத்தலம்.  சப்த விடங்கத் திருத்தலங்களுள் ஒன்று.

திருவிளக்கின் நெய்யினை உண்ண வந்த எலி தான்  - மகாபலி மன்னனாகப் பிறந்தது.

ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் மகிழ்ந்து உறவாடி இருந்த திருத்தலங்களுள் ஒன்று. 

அக்காலத்தில் தென்பாண்டித் திருநாட்டில் புறச்சமயம் ஓங்கியிருந்தது.

சுவாமிகள் திருமடம் அமைத்துத் தங்கியிருந்த  போது -

சிவ சமயத்தை மீட்டெடுக்க  பாண்டிய நாட்டுக்கு எழுந்தருள வேண்டும்!..  

- என பாண்டிய நாட்டின் பட்டத்தரசியான மங்கையர்க்கரசி எனும் மாதரசி - ஞானசம்பந்தப் பெருமானுக்கு திருமுகம் அனுப்பியிருந்தாள். 

அதைக் கண்ட திருஞானசம்பந்தர் மதுரையம்பதிக்குப் புறப்படலானார்.

அப்போது, அப்பர் சுவாமிகள் - இவ்வேளையில் நாளும் கோளும் நல்லனவாக இல்லையே!.. - என, ஞானசம்பந்தரிடம் தனது கவலையைத் தெரிவித்தார். 

ஏனெனில் புறச்சமயத்தாரின் கொடுமைகளை  அனுபவித்து மீண்டு வந்தவர் அப்பர் சுவாமிகள்.

மனம் வருந்திய அப்பர் சுவாமிகளுக்கு ஆறுதல் கூறி - திருஞான சம்பந்தப் பெருமான் அருளிய திருப்பதிகம் இது!..

கோளறு திருப்பதிகம் {பொது}
இரண்டாம் திருமுறை. 
திருப்பதிக எண் - 85.

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டுமுடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..{1}

என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{2}

உருவளர் பவளமேனி ஒளிநீறணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{3}

மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{4}

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{5}

வாள்வரிய தளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடு உடனாய்
நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{6}


செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{7}

வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய்
வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{8}

பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{9}

கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்
மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே..
{10}      

தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் 
துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து 
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து 
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் 
வானில் அரசாள்வர் ஆணை நமதே!.. {11}
* * *
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறை இலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..
 * * *

செவ்வாய், ஆகஸ்ட் 13, 2013

சுந்தரர்

திருஆரூர்.

பூங்கோயில் எனப் போற்றப்படும் திருக்கோயில்.  அதன் மேற்குப்புறத்தில் உள்ள கமலாலாயத் திருக்குளம். காற்றினால் பரவிய அலைகள் -  கரையில்  மோதி சலசலத்துக் கொண்டிருக்கின்றன. 


பரந்து விரிந்திருந்த அத்திருக் குளத்தின் கரையில் தெய்வீகப் பேரழகு மிளிரும் தம்பதியர். தண்ணீருக்குள் நின்று - இருகைகளாலும் நீரில் அளைந்து எதையோ தேடி, எடுத்துக் கொண்டிருக்கின்றனர். 

காலை இளம் கதிர் ஒளியில் அவை மின்னுகின்றன. ஆம் . அவை அத்தனையும் பொற்காசுகள். 

''..என்ன வேடிக்கை இது!.. தண்ணீருக்குள் அவை எப்படி வந்தன!..''

''.. அது.. அந்த இளைஞன் பேரழகுப் பெட்டகமாய் திகழ்கின்றாரே - அவரே போட்டது!..''

''..என்ன.. அவரே போட்டதா?.. அவருக்கு என்ன பித்தா!..''

''..அவர் பித்தரா?.. சரிதான்!.. அவர் இறைவனையே பித்தன் என்றவர்!.. வல்வழக்கிட்டவர்!.. வன்தொண்டர் எனப்பட்டவர்... 


திருமணக் கோலத்தில் தடுத்தாட் கொள்ளப்பட்டவர்... பின் ஆரூரில் ஐயனை வணங்கி பரவை நாச்சியார் எனும் மங்கை நல்லாளுடன் மனையறம் கண்டவர்!..''

''..இவர் தம் மனை வாழ்வில் - மீண்டும் ஒரு கன்னியை திருவொற்றியூரில் கண்டு - உனைப்பிரியேன் என சூளுரைத்து - மணந்து - இல்வாழ்வு கண்டு - விதியின் வசத்தால் பிரிந்தபோது சத்தியத்தினை மீறியதால் கண்களைப் பறி கொடுத்தவர். இத்தனைக்கும் இவர் தம்பிரானின் தோழர்!..''

இவர்பால் கருணை கொண்ட அம்பிகை  - திருவெண்பாக்கத்தில் ஊன்று கோல் ஒன்று அருளி - மின்னலென வழிகாட்டி காஞ்சிபுரம் வரை அழைத்து வந்து அங்கே இடக்கண் கொடுத்தனள். பின் ஆரூரில் ஈசன் தன் பங்கிற்கு வலக்கண்ணையும் கொடுத்தருளினன்!.. அதன்பின் -

திருவொற்றியூரில் சங்கிலியார் மணம் புரிந்து கொண்டாரே - அந்த விஷயம் தெரிந்ததும் இங்கே திருஆரூரில் - பரவை நாச்சியார் - தன் வீட்டு கதவினை இழுத்து சாத்திக் கொண்டாள். 

''..உமக்கு என்ன - ஊருக்கு ஒரு திருமணமா?..'' - என்று!.. 

திகைத்தவர் - பெருமானிடம் சரணடைந்தார். தன் குறையை முறையிட்டார்.   அன்பர் தம் குறை தீரும் வண்ணம் - மாலவன் அறியா மலரடிகள் மண்ணில் பதிய,  ஆரூர் வீதியில் - இறைவன் தூது நடந்து - இளம் தம்பதியரின் ஊடலைத் தீர்த்து வைத்த பெருமையை உடையவர்!..  


பேரழகின் காரணமாக சுந்தரர் என அழைக்கப்படுபவர். ஆயினும் இயற்பெயர் நம்பிஆரூரன்!.. திருமுனைப்பாடி நாட்டினர். பிறந்த ஊர் திருநாவலூர். தாயார் இசைஞானியார். தந்தை சடையனார். வளரும்  காலத்தே - அந்நாட்டின் அரசர் நரசிங்க முனையரையர் - நம்பி ஆரூரரைத் தன் மகனாக சுவீகரித்துக் கொண்டார். 

பருவ வயதில் சடங்கவி சிவாச்சாரியார் என்பவருடைய திருமகளான சுகுணவதியுடன் திருமணம்  - கூடிவந்த வேளையில் - இறைவனால் நீ என் அடிமை என்று தடுத்தாட் கொள்ளப்பட்டவர்.  ''.. நீர் என்ன பித்தரோ?..'' - எனக் கோபித்தும் கூட , முதியவராக வந்து வழக்கிட்ட இறைவன் - திருவெண்ணெய் நல்லூரில் - தன் திருக்கோலங்காட்டியருளினார். 

அத்துடன் - முன்பு திருக்கயிலை மாமலையில் தமது அணுக்கத் தொண்டராயிருந்த காலத்தில் மலர் வனத்தில் அம்பிகையின் பணிப் பெண்களாயிருந்த கமலினி, அநிந்திதை எனும் இருவரிடம் - மனம் சென்றமையால் விளைந்த பிறவியின் ரகசியத்தினை உணர்த்தி - செந்தமிழால் பாடிப் பரவுக - என அருளினார். 

அதன் காரணமாகவே - ''..பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா!..'' எனத் திருப்பதிகம் தொடங்கி  - பின் ஊர்கள் தோறும் சென்று எம்பெருமானை வணங்கி வருபவர்.


இப்போது கூட குளத்தில் பொன்னைத் தேடி எடுத்தது ஏன் தெரியுமா?...சேர நாட்டின் அரசரான சேரமான் பெருமாள்  - சுந்தரரின் தமிழ் கேட்டு நண்பர் ஆனவர். இவருக்கு பொன்னும் மணியும் மிகக் கொடுத்து சிறப்பிக்க - வழியில் திருமுருகன் பூண்டியில் வேடுவர்கள் வழிமறித்து  - அவற்றை எல்லாம் பறித்துக் கொண்டனர்.

வந்ததே - சினம் சுந்தரருக்கு!.. நேராகக் கோயிலுக்குச் சென்று -  

முல்லைத் தாது மணங்கமழ் 
முருகன் பூண்டி மாநகர் வாய் 
எல்லைக் காப்பதொன்றில்லை யாகில் நீர்
எத்துக்கு இருந்தீர் எம்பிரானீரே!.. 

''..வேடுவர்களால் வழிப்பறி நடக்கும் இடத்தில்  - மக்களைப் பாதுகாத்து அருளாமல் எதற்காக நீர் இங்கே இருக்கின்றீர்?..'' - என்று நியாயம் கேட்டவர். 

அதற்குப்  பதிலாக ஈசன்  - ''..வன்தொண்டனே!.. வேடுவர் எல்லாம்  - சிவ கணங்கள். உன் தமிழ் கேட்கவே இவ்வாறு நிகழ்த்தினோம். வன் தமிழும் எமக்கு இன் தமிழே!.'' -  என்று அருளி மேலும் எல்லா செல்வங்களையும் வாரி வழங்கினார். 

அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே - திருமுதுகுன்றத்தில் (இன்றைய விருத்தாசலம்) மீண்டும் இறைவன் - பொற்காசுகள் அருளிய போது, வேடுவர் பயத்தினால் - அவற்றை அங்கு மணிமுத்தா நதியில் போட்டு விட்டு- இங்கே திரு ஆரூரில் கமலாயத் திருக்குளத்தில் தேடி எடுத்தவர். 

அதையும் பிள்ளையாரைக் கொண்டு உரசிப் பார்த்து தங்கத்தின் மாற்றினை சரி பார்த்துக் கொண்டவர். அதனாலேயே - கமலாலயத் திருக்குளக்கரையில் உள்ள பிள்ளையாருக்கு மாற்றுரைத்த பிள்ளையார் என்று திருப்பெயர்.

இதுதான் ''..ஆற்றில் போட்டு  - குளத்தில் எடு!..'' - என்பார்களே - அது!..

ஒரு சமயம் ஆரூருக்கு அருகில் உள்ள - குண்டையூர் எனும் ஊரில் இருந்த நிலக்கிழார், இவருக்கு நெல் வழங்க அவை இறைவன் கருணையால் மலை அளவாயிற்று. அந்த நெல் மலையினை பூதகணங்களைக் கொண்டு ஆரூர் மக்கள் அனைவருக்கும் அள்ளிக் கொடுத்தவர்.

அவிநாசியில் - முதலை உண்ட பாலனை மீட்டுக் கொடுத்து - பெற்றவர் வயிற்றினில் பால் வார்த்தவர்.


பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் 
போகமும் திருவும் புணர்ப்பானைப் 
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை
இன்ன தன்மையன் என்றறிவொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயற்பழனத்து அணி 
ஆரூரனை மறக்கலுமாமே!.. (7/59)

- என்று இறைவனும் தானும் கொண்ட நட்பினைப் பேசுபவர். 

மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய 
வந்தென்னை ஆண்டு கொண்டானே (7/70) 

- என்று தன்னை இறைவன் ஆண்டு கொண்ட விதத்தினை விவரிக்கின்றார். 

ஏயர்கோன் கலிக்காமர் , கோட்புலியார் எனும் நாயன்மார்கள்  இவருடன் நட்பு பேணியவர்கள். கோட்புலியாரின் மகள்களான சிங்கடி, வனப்பகை எனும் இருவரையும் தன் மக்களாகப் பாவித்து பதிகங்களில் உரைக்கின்றார்.

திருஐயாற்றுக்கு எழுந்தருளியபோது - காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. செய்வதறியாது திகைத்த சுந்தரர் - ஐயாற்று அடிகளோ!.. என பெருங்குரலில் ஓலமிட்டார். 

காவிரியின் வடகரையில் வீற்றிருந்த விநாயகர் இது கேட்டு அவரும் பெருங்குரலெடுத்து ஓலமிட- ஊர் திரண்டு வந்தது. அச்சமயம்  - விரிந்தோடிய காவிரி, ஒடுங்கி இரு பிளவாகி வழி விட்டு நின்ற அற்புதம் நிகழ்ந்தது. 

நல்லிசை ஞான சம்பந்தனும் நாவினுக்
    கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லியவே சொல்லியேத்து உகப்பானைத்
    தொண்டனேன் அறியாமை அறிந்து
கல்லியல் மனத்தைக் கசிவித்துக்
    கழலடி காட்டி என் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்க நின்றானை
    வலிவலந்தனில் வந்துகண்டேனே (7/67)

- என்று, தமக்கு முன் வாழ்ந்த - ஞானசம்பந்தரையும் திருநாவுக்கரசரையும் பல பதிகங்கள் வாயிலாகப் போற்றி மகிழ்கின்றார். 

வாழுங்காலம் முழுதும் தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழவைத்த சுந்தரர், இறைவனுக்கென - வாழ்ந்த பெருமக்களைக் குறித்து பாடியருளினார். அதுவே - திருத் தொண்டத் தொகை.  பின்னாளில் சேக்கிழார் பெரிய புராணம் பாட  - இதுவே முதல் நூல்.


சுந்தரர் - தாம் மீண்டும் கயிலை மாமலையினை சென்றடைய திரு உள்ளங் கொண்டார். அந்த அளவில் சிவபெருமான் தேவர்களை ஐராவதத்துடன் அனுப்பினார்.  திருஅஞ்சைக்களம் எனும் தலத்திலிருந்த சுந்தரர் வெள்ளை யானையின் மீதேறி திருக்கயிலை மாமலைக்கு ஏகினார். உடன் சேரமான் பெருமாள் நாயனாரும் சென்றார்.

இது நிகழ்ந்த நாள்  - ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம். 

அப்போது சுந்தரரின் வயது பதினெட்டு.

இந்திரன்மால் பிரமன் எழிலார்மிகு தேவர் எல்லாம்
வந்தெதிர் கொள்ள என்னை மத்தயானை அருள் புரிந்து 
மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரன் என்றான் நொடித்தான் மலை உத்தமனே!.. (7/100) 

- என்று திருப்பதிகம் பாடியவாறு திருக்கயிலாயம் புகுந்தார். 


திருஆரூரில் இருந்து பரவை நாச்சியாரும், திருஒற்றியூரில் இருந்து சங்கிலியாரும், பின் தொடர்ந்து - தம் பொன்னுடல் நீத்து புகழுடம்பு எய்தி -  ஒன்றி உடன் ஆயினர்.

சுந்தர மூர்த்தி சுவாமிகளுடன் நட்பு பேணியமைக்காகவே - சேரமான் பெருமாள் நாயனாரும் திருக்கயிலை புகும் பேறு பெற்றார். 

சுந்தரரின் காலம் - ஏழாம் நூற்றாண்டு என அறியப்படுகின்றது. அவர் அருளிய திருப்பதிகங்கள் பின்னாளில் - ஏழாம் திருமுறை எனத் தொகுக்கப்பட்டன.

பதினெட்டு வயதிற்குள் தமிழகமெங்கும் நடந்தே சென்று பக்திப் பயிர் வளர்த்து - வாழும் காலத்தில் பெரும் வள்ளலாக விளங்கியிருக்கின்றார்.

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களுள் நமக்குக் கிடைத்திருப்பவை - நூறு.
சுந்தரர் நமக்குக் காட்டிய வழியே - நாம் பெற்ற பெரும் பேறு!..

இன்று (13/8) ஆடி - சுவாதி!.. சுந்தரர் பேறு பெற்ற நாள்.
அவர் தம் திருவடிகளைத் தலைமேல் கொள்வோம்!. 

வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..

சனி, மார்ச் 30, 2013

திருநள்ளாறு


சந்நதியில் நந்தியும், பலிபீடமும் சற்று ஒதுங்கியிருக்கும்  திருத்தலம் . 

அரசனின் ஆணைப்படி திருக்கோயிலின் பசுக்களைப் பராமரித்து பாதுகாத்து, திருக்கோயிலின் கைங்கர்யத்திற்காக   நாள் தவறாது முறையாக பசும்பால் அளந்து வந்தார்  -  இடையர் குலத் தோன்றலாகிய சிவனடியார் ஒருவர்.  ஆனால் திருக்கோயிலின் வரவு செலவு கணக்குகளை நிர்வகித்த கணக்கன்,  அளக்கப்பட்ட பாலின் ஒருபகுதியைத் தன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, பொய்க் கணக்கு எழுதி அதையும் பராமரித்து வந்தான்.  

ஒருநாள் எதிர்பாராத விதமாக முன்னறிவிப்பு ஏதும் இன்றி திருக்கோயிலுக்கு வருகை புரிந்த மன்னன் திருக்கோயிலின் நிர்வாக செயல்பாடுகளைப் பரிசோதிக்க, அளக்கப்பட்ட பாலின் அளவில் குறைவினைக் கண்டறிந்தான்.  விசாரணையின் போது  ஏதும் அறியாதவராகிய தொண்டர் மீதே பழி விழுந்தது. கோபம் கொண்ட  மன்னன்,  பால் அளந்து கொடுத்த இடையரைத் தண்டிக்க தன் கைப்பிரம்பினால் வீசியபோது,  

பெருமானின் சந்நதியிலிருந்து மின்னலென சிவாஸ்திரம் பாய்ந்து கணக்கனின் கணக்கினை முடித்தது. இறைவன் நீதிக்கும் அநீதிக்கும் இடை நின்று - இடையரைக் காத்து, கணக்கனைத் தண்டித்து நிகழ்த்திய திருவிளையாடலை எண்ணி - பெருமை கொண்டாலும், 

முறையாக செயல்படாத தன் சிறுமதியையும் நிர்வாக சீர்கேட்டினையும் அதனால் விளைந்த பெரும் பழியையும் -  உணர்ந்து தன்னையே மாய்த்துக் கொண்டான் மன்னன். 

இதனால் மதி மயங்கிய சிவனடியார் தன்னையும் மாய்த்துக் கொள்ள முயன்ற போது அடியார்க்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார். பின்னர் அவர்  பொருட்டு மன்னனையும் கணக்கனையும் உயிர்ப்பித்து அருளினார்.

அன்று நீதிக்காக வெளிப்பட்ட -  சிவாஸ்திரத்திற்கு வழிவிட்டுத்தான் நந்தியும், பலிபீடமும் சற்றே தென்புறமாக விலகியுள்ளன.

எம்பெருமான் - அருள்மிகும் தர்ப்பாரண்யேஸ்வர். தர்ப்பை வனத்தில் வெளிப்பட்ட  சிவலிங்கத் திருமேனி. அம்பிகை பிராணேஸ்வரி   எனப்படும் போகமார்த்தபூண்முலையாள்.

திருநள்ளாறு விடங்க ஸ்தலம். சோழ மாமன்னராகிய முசுகுந்த சக்ரவர்த்தி தேவலோகத்தில் இந்திரனிடமிருந்து பெற்று வந்த விடங்கத் திருமேனிகள் ஏழினுள்  " நகவிடங்கர்''  விளங்கும் திருத்தலம். பெருமானின் திருநடனம் உன்மத்த நடனம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றினாலும் சிறப்புற்று விளங்கும் திருத்தலம். 

விநாயகப்பெருமான் -  ஸ்வர்ண விநாயகர் என்னும் திருநாமத்துடன் அருள் பாலிக்க -  திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனன்  ஆகியோர் வழிபட்டு பேறுபெற்ற தலம்.

நளச்சக்ரவர்த்தி தன் மனைவி தமயந்தி தேவியுடனும்  தம் பிள்ளைகள் இருவருடனும் போற்றி வணங்கி சனி தோஷம் நீங்கப் பெற்ற திருத்தலம். நளன் பெயரால் இத்திருத்தலம் விளங்குவதே நளனின் பெருமையாகும்.

திருக்கோயிலின் தென்புறம் சிவனடியாராகிய இடையனார் கோயில் உள்ளது. இங்கு இடையனார், அவர்தம் மனைவி, கணக்கன் ஆகியோர் திரு உருவங்கள் உள்ளன.

சனி தோஷமுடையோர் அதிகாலையில் நள தீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள விநாயகர் மற்றும் பைரவரை வணங்கி அனுமதி பெறவேண்டும்.

திருக்கோயிலினுள் நுழையும்போது கோயிலுக்குள் உள்ள கங்காதீர்த்தத்தை தரிசித்து,  நள தமயந்தி சரிதத்தை மனப்பூர்வமாக சிந்தித்து அவர்களைப் போற்ற வேண்டும். ஏனெனில் நள மகாராஜன் தான் - இத்திருத்தலத்தில் முறையாக சிவதரிசனம் செய்தவருக்கு சனி தோஷம் நீங்க வேண்டும் என வேண்டிக்கொண்டு  - நமக்கெல்லாம் வரம் பெற்றுத் தந்தவர்.

பின்னர் சுவாமி சன்னதிக்குள் சென்று அருள்தரும் தர்ப்பாரண்யேஸ்வர ஸ்வாமியை மெய்யுருக வணங்கி வழிபடவேண்டும். பின்னர் தியாக விடங்கர் சன்னதியில் மரகதலிங்கத்தை வணங்கிய பிறகு, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, சண்டிகேஸ்வரரை வணங்கவேண்டும்.

பின் வெளிப்பிரகார வலம் வந்து தெய்வத் திருமேனிகளைத் தரிசித்த பின் அம்பிகையாகிய பிராணேஸ்வரியை வழிபட வேண்டும்.

பிறகு தான்,  சனைச்சரரை வணங்கி  - குறை தீர -  முறையிட வேண்டும்.

வில்வம் தல விருட்சம்.  தீர்த்தங்கள் - பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம்,  நள தீர்த்தம் என்பன.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் - என மூவரும் எழுந்தருளி,  திருப்பதிகங்களால் துதித்து வணங்கிய திருத்தலம்.

திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் சமணருடன் அனல்வாதம் செய்யும் முன்பாக,  திருப்பதிகங்கள்  எழுதப் பெற்ற  ஓலைச்சுவடிகளில் திரு உளம் பற்றி - கயிறு சாத்திப் பார்த்தபோது ''போகமார்த்த பூண்முலையாள்'' (1/49) எனத் தொடங்கும் திருநள்ளாற்றுப் திருப்பதிகம் கிடைத்தது.  

அதையே திருக்குறிப்பெனக் கொண்டு, தீயில் இடப்பட்ட பனை ஓலைகள் -  கருகாமல் பச்சையாகப் பொலிந்தன. அதனால் இப்பதிகம் ''பச்சைப் பதிகம்'' எனும் சிறப்பினைப் பெற்றது. சைவ நெறியும் பகை வென்று நிலைத்தது. 

பெருமானின் கருணையைப் போற்றி, ஆலவாய் எனும் மதுரையம்பதியையும் திருநள்ளாற்றினையும் இணைத்து ''பாடக மெல்லடிப் பாவையோடும்'' (1/7) திருப்பதிகம் பாடியருளினார். பின்னும்,

''வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி
 நளன்கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே!.''
(2/33/3) - என்று, 


ளன் இங்கு வந்து தங்கி நாள்தோறும் தூபதீபங்களுடன் மலர்தூவி வழிபட்டுக் கலி நீங்கப் பெற்ற வரலாற்றினை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார்..

'' நலங்கொள் நீற்றர் நள்ளாறரை நாள்தொறும்
  வலங்கொள்வார் வினையாயின மாயுமே!. ''
(5/68/10) என்றும்


'' நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை
  நானடியேன் நினைக்கப்பெற்று  உய்ந்தவாறே!. ''
(6/20/6) - என்றும்


- திருநாவுக்கரசர் தம் திருவாக்கினால் நமக்கு வழி காட்டுகின்றார்.

''நாதனை நள்ளாறனை அமுதை
  நாயினேன் மறந்து என் நினைக்கேனே!.''
-
(7/68/8) என்றும்

''நலங்கொள் சோதி நள்ளாறனை அமுதை
  நாயினேன் மறந்து என் நினைக்கேனே!.''
- (7/68/9) என்றும்


 - சுந்தரமூர்த்தி சுவாமிகள் புகழ்ந்துரைக்கின்றார்.

நள தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால் சனி  தோஷம் நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் குளித்தால் முந்தைய சாபங்கள் தீரும். சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் ஞானம் விளையும் என்பது நம்பிக்கை. 

இங்கு இறைவனை வணங்கிய பிறகு சனைச்சரனை வணங்கினால் தான்  சனிதோஷ விமோசனம் கிடைக்கும்.

திருநள்ளாறு - சிவாலயம் சிறப்புற்று விளங்கும் திருத்தலம். சிவபெருமானே மூல மூர்த்தி. ஆயினும் இன்றைய ஊடகங்களும் பல்வேறு வகையான நாளிதழ்களும் சனீஸ்வரன் திருக்கோயில் என்றும் சனி பகவான் திருத்தலம் என்றும் குறிப்பிட்டு வருகின்றன. இது தவறு.


சூரியன் - சாயாதேவி தம்பதியருக்குப் பிறந்தவரும் மந்த நடையினை உடையவருமான சனைச்சரன் கங்கைக் கரையில், காசி விஸ்வநாதரை ஏக சிந்தையராக வழிபாடு செய்து - கிரகநிலையினைப் பெற்றார். எந்நேரமும் சிவசிந்தனையில் திளைப்பவர்.  மிகச் சிறந்த சிவபக்தர்.

நம்முடைய பாவக் கணக்குகளைப் பராமரித்து, நமது சிந்தையைச் சிவ வழியில் செலுத்துபவர் சனைச்சரரே!.. ஈஸ்வரனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நளமகராஜனை விட்டு விலகி - நளன்  இழந்த  எல்லாவற்றையும் அருளினார்.

அந்தத் திருத்தலமே திருநள்ளாறு. தம்மை உணர்ந்து தம் வினையை உணர்ந்து இங்கு வந்து வழிபடும்  பக்தர்க்கு நலம் விளையும் என்பதே திருக்குறிப்பு!...

உண்மையை உணர்ந்து கொள்வோர் - கொள்க!...

'' நலங்கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை
  நானடியேன் நினைக்கப்பெற்று  உய்ந்தவாறே!. ''

''திருச்சிற்றம்பலம்!''

வெள்ளி, மார்ச் 08, 2013

இமையோர் நாயகனே!.

 சிவராத்திரி நெருங்கி வரும் வேளையில்
'' சிவாய நம '' என்று சிந்தித்திருக்க...

சிவனே என் செழுஞ்சுடரே!...
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரம்
ஏழாம் திருமுறை,  திருப்பதிக எண் - 26.
தலம் - திருக்காளத்தி (காளஹஸ்தி).

செண்டா டும்விடையாய் சிவனே என் செழுஞ்சுடரே 
வண்டா ருங்குழலாள் உமை பாக மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்குங் கணநாதனெங் காளத்தியாய்
அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. - 1


இமையோர் நாயகனே இறைவாஎன் இடர்த்துணையே
கமையார் கருணையினாய் கருமாமுகில் போல்மிடற்றாய்
உமையோர் கூறுடையாய் உருவேதிருக் காளத்தியுள்
அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. - 2


படையார் வெண்மழுவா பகலோன்பல்  உகுத்தவனே
விடையார் வேதியனே விளங்குங்குழைக் காதுடையாய்
கடையார் மாளிகைசூழ் கணநாதனெங் காளத்தியாய்
உடையாய் உன்னையல்லால் உகந்தேத்த மாட்டேனே. - 3


மறிசேர் கையினனே மதமாவுரி போர்த்தவனே
குறியே என்னுடைய குருவேஉன்குற் றேவல்செய்வேன்
நெறியே நின்றடியார் நினைக்குந்திருக் காளத்தியுள்
அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. - 4


செஞ்சே லன்னகண்ணார் திறத்தேகிடந் துற்றலறி
நஞ்சேன் நானடியேன் நலமொன்றறி யாமையினால்
துஞ்சேன் நானொருகாற் றொழுதேன் திருக் காளத்தியாய்
அஞ்சா துன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே. - 5


பொய்யவ னாயடியேன் புகவே நெறியொன் றறியேன்
செய்யவ னாகிவந்திங் கிடரானவை தீர்த்தவனே
மெய்யவ னேதிருவே விளங்குந்திருக் காளத்திஎன்
ஐயநுன் றன்னையல் லால் அறிந்தேத்த மாட்டேனே. - 6


கடியேன் காதன்மையாற் கழற்போதறி யாதஎன்னுள்
குடியாக் கோயில்கொண்ட குளிர்வார்சடை யெங்குழகா
முடியால் வானவர்கள் முயங்குந்திருக் காளத்தியாய்
அடியே னுன்னையல்லால் அறியேன்மற் றொருவரையே. - 7


நீறார் மேனியனே நிமலாநினை யன்றிமற்றுக்
கூறேன் நாவதனாற் கொழுந்தேயென் குணக்கடலே
பாறார் வெண்டலையிற் பலிகொண்டுழல் காளத்தியாய்
ஏறே உன்னையல்லால் இனிஏத்த மாட்டேனே. - 8


தளிர்போல் மெல்லடியாள் தனையாகத் தமர்ந்தருளி
எளிவாய் வந்தெனுள்ளம் புகுதவல்ல எம்பெருமான்
களியார் வண்டறையுந் திருக்காளத்தி உள்ளிருந்த
ஒளியே  உன்னையல்லால் இனியொன்றும்  உணரேனே. - 9


காரூ ரும்பொழில்சூழ் கணநாதனெங் காளத்தியுள்
ஆரா இன்னமுதை அணிநாவலா ரூரன்சொன்ன
சீருர் செந்தமிழ்கள் செப்புவார் வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப் பொன்றிலரே. - 10



தென்னாடுடைய சிவனே போற்றி!...
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!...

''திருச்சிற்றம்பலம்''

வியாழன், மார்ச் 07, 2013

நல்லக விளக்கு!.

சிவராத்திரி நெருங்கி வரும் வேளையில்
'' சிவாய நம '' என்று சிந்தித்திருக்க...

நற்றுணையாவது நமசிவாயவே!.
 திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரம்,
நான்காம் திருமுறை. திருப்பதிக எண் - 11.
திருப்பதிகம்  - பொது.


சொற்றுணை வேதியன் சோதி வானவன்  
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நம சிவாயவே. - 1



பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம்  அரனஞ் சாடுதல்
கோவினுக்கு அருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக்கு அருங்கல நம சிவாயவே. - 2


விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை  ஒன்று மில்லையாம்
பண்ணிய  உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நம சிவாயவே. - 3


இடுக்கண்பட் டிருக்கினும்   இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும்  அருளி நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நம சிவாயவே. - 4


வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
நங்களுக் கருங்கல நம சிவாயவே. - 5


சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
நலமிலன்  நாடொறு நல்குவான் நலன்
குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது நம சிவாயவே. - 6


வீடினார்  உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார்  அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன்  ஓடிச்சென் றுருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று நம சிவாயவே. - 7


இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே. - 8


முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல்  திண்ணமே
அந்நெறியே சென்றங் கடைந்த வர்க்கெல்லாம்
நன்னெறி யாவது நம சிவாயவே. - 9


மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நம சிவாயப்பத்து
ஏத்தவல் லார்தமக்கு  இடுக்கண் இல்லையே.
  - 10


தென்னாடுடைய சிவனே போற்றி!...
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!...
திருச்சிற்றம்பலம்.