நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

மகா சிவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகா சிவராத்திரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, பிப்ரவரி 18, 2023

மகா சிவராத்திரி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 6
   சனிக்கிழமை

மகா சிவராத்திரி நாள்


இன்றைய பதிவில்
அப்பர் பெருமான்
அருளிச் செய்த
போற்றித் திருத்தாண்டகம்

ஆறாம் திருமுறை
திருப்பதிக எண் 32

அருளப்பெற்ற தலம்
திரு ஆரூர்


இறைவன்
ஸ்ரீ வன்மீகநாதர்

அம்பிகை
ஸ்ரீ அல்லியங்கோதை

தலவிருட்சம் பாதிரி
தீர்த்தம்
கமலாலய திருக்குளம்


கற்றவர்கள் உண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுதம் ஆனாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர் தம் புரம் எரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.,1

கஜ சம்ஹாரர் - வழுவூர்
வங்கமலி கடல்நஞ்சம் உண்டாய் போற்றி
மதயானை யீருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித் தோல் ஆடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..2


மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமேல் ஒற்றைக் கண் உடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவேல் ஏந்தீ போற்றி
ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையால் அன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.. 3


பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கும் ஆனாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க்கு உண்மையனே போற்றி போற்றி
உலகுக்கு ஒருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..4


நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..5


சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..6


வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரை கழலால் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க்கு அரும் பொருளே போற்றி போற்றி
நால்வேதம் ஆறங்கம் ஆனாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..7


உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளை ஏறேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..8


பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்கும் தேவே போற்றி
திருமாலுக் காழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை ஆண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..9


பிரமன்தன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி
கர நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி
காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி
அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளும்
சிரம் நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..10


திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசர் திருவடிகள் 
போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

சனி, பிப்ரவரி 29, 2020

அம்பிகை வந்தாள் 1

தஞ்சை மாநகருக்குள் வடக்குப் புறமாக கரந்தை வழியாக வரும்போது கொடிமரத்து மூலை எனும் பகுதியை நெருங்கும் முன்பாக அகழிக் கரையிலிருந்து மேற்குத் திசையில் நோக்கினால் நெடிதுயர்ந்த கோபுரம் தென்படும்...

சென்னை , மயிலாடுதுறை, கும்பகோணம், ஆத்தூர், அரியலூர் பேருந்துகள் இவ்வழியாகத் தான் வருகின்றன...

16.2.2012
சரி இருக்கட்டும்... அது என்ன கோயில்?.. சிவன் கோயிலா?..

இல்லை!...

பெருமாள் கோயிலா?..

அதுவும் இல்லை!...

அப்புறம் என்ன?... புதிர் போட்டு விளையாடுகிறீரா!...

அந்தக் கோயிலின் பெயர் என்ன என்பது இன்னும் சரியாக யாருக்கும் தெரியாது!...

என்னது!... பேர் தெரியாதா?...

உண்மைதான்..
நீங்கள் சிவன் கோயில் என்று சென்றால் -

16.2.2012

16.2.2012 
ஸ்ரீ சிவேந்த்ர மூர்த்தி 
அங்கே ஸ்ரீ சக்கரத்தில் திருமேனியுடன் பத்துப் பன்னிரண்டு வடிவங்களைத் தரிசிக்கலாம்...
சிவராத்திரியன்று திருக்கோலம் 
பெருமாள் கோயில் என்று சென்றால்
பிரம்மாண்டமாக ஸ்ரீ சுதர்சன மூர்த்தியை மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம்...

மூலஸ்தானத்தில் ஸ்ரீ சுதர்சன மூர்த்தி 
17/1/20 அன்று ஸ்ரீ சுதர்சனருக்கு அலங்காரம் 
இதனால் தான் இக்கோயிலை ராஜகோபாலசாமி கோயில் என்று சிலர் சொல்கிறார்கள்...

ஆனால் இங்கு தான் ராஜகோபாலன் இல்லையே!...
எங்கே போனான் - அந்த ராஜகோபாலன்!...

இங்கிருக்கும் காளி ஆடிய கூத்தினால்
செண்பகாரண்யம் எனப்படும் மன்னார்குடிக்கு
ராஜகோபாலன் சென்று விட்டதாக சொல்கிறார்கள்...

இது நாயக்கர்கள் காலத்தினால் நடந்ததாம்...
மன்னார்குடியில் பிரம்மாண்டமாகக் கோயிலைக் கட்டி எழுப்பி
அங்கே ஸ்ரீமந் ராஜகோபாலனை எழுந்தருளப் பண்ணினார்களாம்...

அதன் பிறகு இந்த கோயிலைக் கவனத்தில் கொள்ளவில்லை என்கிறார்கள்...

தற்காலத்தில் வடக்கு வீதி காளி கோயில் என்றால் தான் புரியும்...

மூலஸ்தானத்தில் ஸ்ரீ சுதர்சன மூர்த்தி...

அதற்குப் பின் புறமாக கன்னி மூலையில் பெரிய மண்டபம்..
அது தான் சிவேந்திரர் கோயில் எனப்படுவது...

இந்த மண்டபத்தினுள் தான் பல்வேறு சக்ர பீடங்களில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்றார்...

சிவபெருமான் என்றாலும் இருபுறமும் தேவியர் விளங்குகின்றார்களே!...
ஈசனுக்கு அப்படியான திருக்கோலம் எதுவும் கிடையாதே!..

சரியான கேள்விதான்... இருந்தாலும்
சிவ அம்சமும் நாராயண அம்சமும் ஒருங்கே விளங்குவதால்
அங்கே மேலராஜவீதி சங்கர நாராயணர் திருக்கோயிலில்
சங்கர நாராயண மூர்த்தி இருபுறமும் தேவியருடன் விளங்குவதைப் போல இங்கேயும் விளங்குவதாகத் தாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து...

ஓஹோ!.. இதுதான் முற்றான கருத்தா?...

அப்படியெல்லாம் இல்லை... இவ்வளவு நாள் இல்லாமல்
இந்தப் பதிவினை எழுதும்போது மனதில் உதித்த கருத்து இது!...
தங்களுக்கு உகந்தது எனில் உவப்புடன் கொள்க!...

அவ்வளவு தானா?...

இருக்கிறதே... மூலஸ்தானத்துக்கு ஈசான்ய மூலையில் இன்னொரு மண்டபம் அதனுள் இரு பிரிவாக ஒன்றில் ஏகப்பட்ட சிவலிங்கங்கள்...



16.2.2012
ஐந்தடி உயரத்துக்கு மேல் விநாயகர், பாலமுருகன், ஆஞ்சநேயர் - என திருமேனிகள்...

மேலும் யந்த்ர பீடத்துடன் கூடி வித்யாசமாக விளங்கும் நவக்ரக மூர்த்திகள்..

அந்தப் படங்கள் ஒன்றையும் இங்கே காணோம்!...

உண்மையைச் சொல்வதானால் -
அந்தத் திருவுருவங்கள்.. அங்கிருக்கும் அதிர்வலைகள் எல்லாம் சேர்ந்து கொள்ள அதிர்ந்து போனேன்... படமெடுக்கத் தோன்றவில்லை...

அப்படியானால் யாரும் வருவதில்லையா அங்கே!...

நல்ல கேள்வி கேட்டீர்கள்... காளி கோயில் என்றிருக்கும் போது பெண்கள் வராமலா இருப்பார்கள்!... நான் அங்கிருந்த போதே ஏராளமான பெண்கள் அவர்களாகவே சிவலிங்கங்களுக்கு மலர் சூட்டி தீபமேற்றி வழிபட்டுச் சென்றார்கள்...

எனக்குத் தான் சற்று நடுக்கம்... மண்டபத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன ஓட்டைகள்.. பிளவுகள்.. சுப்புக்குட்டிகள் இருக்குமோ என்று...

எல்லாவற்றுக்கும் மேலாக அங்கே பெரிய சுப்புக் குட்டிகளின் திருமேனிகள் வேறு...


எல்லாம் சரிதான்... அம்பிகையின் படம் ஒன்றையும் காணோமே!...

அம்பிகை வந்தாள் என்று தலைப்பு மட்டுமா!...

அவள் வந்து தானே பதிவைப் போடு!.. - என்றாள்...
இந்தப் படங்கள் எடுக்கப்பட்டு எத்தனை வருடங்கள் தெரியுமா!..
சரியாக எட்டு ஆண்டுகள்... 

இத்தனை ஆண்டுகளாக ஏன் போடவில்லை?...  

எல்லாம் ஒரு மரியாதை தான்... அவள் என்ன சொல்வாளோ... என்ற தயக்கம் தான்!...

அப்படியிருக்க இப்போது என்ன திடீரென்று!...

அவள் தான் சிவராத்திரி அன்று வந்தாளே!.. சிரித்துக் கொண்டே வந்தாளே!..
வேறு சில தகவல்களையும் சொல்வார் மூலம் சொன்னாளே!..

எதையாவது உளறிக் கொண்டு இருக்காமல் எட்டு வருடங்களுக்கு முன்னால் எடுத்த மற்ற படங்களையும் பதிவில் போட்டு விட்டு மறு வேலை பார்க்கவும்...

ஆகா!.. அதை விட எனக்கு வேறு வேலை என்ன எனக்கு!..
உங்கள் ஆசைக்காக ஒன்றே ஒன்று.. மற்றவை அடுத்த பதிவில்!...


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே.. (077)
-: அபிராமபட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

சனி, பிப்ரவரி 22, 2020

சிவதரிசனம்

ஸ்ரீ மஹாசிவராத்திரியன்று
தஞ்சை மாகரில் விளங்கும் சிவாலயங்கள் பலவற்றிலும்
சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்துள்ளன..

அவற்றுள் - இன்றைய பதிவில்
ஸ்ரீ சங்கர நாராயணர் திருக்கோயில், மற்றும் ஸ்ரீ ராஜகோபாலஸ்வாமி கோயிலின் ஸ்ரீ சிவேந்திரர் சந்நிதி தரிசனம்...

ஸ்ரீ சங்கரநாராயண ஸ்வாமி
ஸ்ரீ பாலாம்பிகை 
ஸ்ரீ சங்கர நாராயணப்பெருமாள் 
வடக்கு ராஜவீதி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயிலின்
ஸ்ரீ சிவேந்திரர் சந்நிதி தரிசனம்..





ஸ்ரீ சிவேந்திரர் கோயிலில் அக்னி கேசம் நெற்றிக் கண் விளங்க
ஸ்ரீ சக்கரத்தில் ஈசன் எழுந்தருளியுள்ளார்...

இருபுறமும் தேவியர் விளங்குவதால் நாராயண அம்சம் என்கின்றனர்...
ஸ்வாமிக்கு முன்பாக ரிஷபம், குதிரை, யானை - என வாகனங்கள் விளங்குகின்றன..

இவ்வாறாக சிறிதும் பெரிதுமான சக்கரங்கள் பத்திற்கும் மேல் விளங்குகின்றன...

இக்கோயில் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி திருக்கோயில் எனப்பட்டாலும்
மூலவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ஸுதர்சனப்பெருமாள்...


ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோயிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள பிரம்மாண்டமான அஷ்டபுஜ துர்கையும் ஸ்ரீ காளியும்...


ஸ்ரீ பகளாமுகி அம்மன் 

ஸ்ரீ பகளாமுகி அம்மன் 
இங்குள்ள காளி - ஸ்ரீ பகளாமுகி எனப்படுகின்றாள்...

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் இக் கோயிலில் படங்கள் எடுத்திருக்கின்றேன்..
ஆனால் அவை எனது கோப்பில் எங்கே இருக்கின்றன என்று தெரியவில்லை..

படங்களை Fb ல் வழங்கியவர் திரு. தஞ்சை ஞானசேகரன் அவர்கள்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

பெரிய கோயிலில் நிகழ்ந்த அபிஷேக அலங்கார தரிசன காணொளி..
Youtube ல் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது..

ஸ்டூடியோவினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...





நம்புவார் அவர் நாவில் நவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது
செம்பொனார் திலகம் உலகுக் கெலாம்
நம்பன் நாமம் நம சிவாயவே..(3/49)
-: திருஞான சம்பந்தர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
ஃஃஃ 

வெள்ளி, பிப்ரவரி 21, 2020

ஸ்ரீ மஹாசிவராத்திரி

இன்று மகா சிவராத்திரி..

மாசி மாதத்தின் தேய்பிறை திரயோதசி.. பிரதோஷ நாள்..

இத்துடன் மஹாசிவராத்திரி
புண்ய காலமும் கூடி இருக்கின்றது..


இன்றிரவு அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால சிறப்பு வழிபாடுகள் நிகழ்வுறுகின்றன..

முதல் கால பூஜையை ஸ்ரீ நான்முகனும்
இரண்டாம் கால பூஜையை ஸ்ரீ மஹாவிஷ்ணுவும்
மூன்றாம் கால பூஜையை ஸ்ரீ பராசக்தி அம்பிகையும்
நான்காம் கால பூஜையை முப்பத்து முக்கோடி தேவர்களும் மகரிஷிகளும் சித்தர்களும் நிகழ்த்தியதாக ஐதீகம்..

இந்த நான்கு காலங்களிலும் ஈ எறும்பு முதற்கொண்டு மனிதர் வரை எண்ணாயிரங்கோடி ஜீவராசிகளும் வழிபட்டு உய்வடைவதாக ஆன்றோர் வாக்கு..

முதல் கால பூஜை மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள்ளாக நிகழும்..

இரண்டாம் கால பூஜை மாலை ஒன்பது மணியிலிருந்து நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குள்ளாக நிகழும்..

மூன்றாம் கால பூஜை மாலை நள்ளிரவு பன்னிரண்டு மணியிலிருந்து பின்னிரவு மூன்று மணிக்குள்ளாக நிகழும்..

மூன்றாம் காலத்தின் மத்திய பொழுது (ஒன்றரை மணி) -
லிங்கோத்பவ காலம் என்று குறிக்கப்படுகின்றது..

இவ்வேளையில் தான் ஈசன் எம்பெருமான் அடிமுடி அறியவொண்ணா
அனல் மலையாகத் தோன்றினன் என்பது திருக்குறிப்பு..

நான்காம் கால பூஜை பின்னிரவு மூன்று மணியிலிருந்து அதிகாலை ஆறு மணிக்குள்ளாக நிகழும்..


நான்கு கால பூஜைகளிலும் 
சிறப்பான அபிஷேக அலங்கார ஆராதனைகள் நிகழ்த்தப்படுகின்றன..

சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்பல.. ஆனாலும்,
நேரிய நினைவுகள் நிறைந்திருந்தால் நெஞ்சகமே கோயிலாகின்றது..

எம்பெருமானின் திருமுடியை அலங்கரித்ததால் ஆணவமுற்ற நாகராஜன் பாதாளத்தில் வீழ்ந்தான்..

தலை கீழாக அதள பாதாளத்தில் வீழ்ந்ததால்
அவனது தலை ஆயிரம் பிளவுகளாகச் சிதறிப் போனது..

தானுற்ற பழியினின்று நீங்குதற்காக -

முதற்காலத்தில் திருக்குடந்தை
இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரம்
மூன்றாங் காலத்தில் திருப்பாம்புரம்
நான்காம் காலத்தில் திருநாகைப்பட்டினம்

- ஆகிய திருத்தலங்களில் நாகராஜன் சிவபூஜை செய்ததாக ஐதீகம்..

ஆணவம் நீங்கப் பெற்று ஈசனைச் சரணடைதலே
சிவராத்திரியின் மகத்தான தத்துவம்..

இந்நிலைக்கு 
எல்லாம் வல்ல சிவம் நம்மையும் உய்விக்குமாக!..
 ***

இன்றைய பதிவில்
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிச் செய்த 
திருக்கடவூர்த் திருப்பதிகம்..


ஏழாம் திருமுறை
இருபத்தெட்டாவது திருப்பதிகம்



பொடியார் மேனியனே புரிநூலொருபாற் பொருந்த
வடியார் மூவிலைவேல் வளரங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என்னமுதே எனக்கார் துணை நீயலதே..01

பிறையாருஞ் சடையாய் பிரமன்தலை யிற்பலிகொள்
மறையார் வானவனே மறையின்பொரு ளானவனே
கறையாரும் மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
இறைவா என்னமுதே எனக்கார் துணை நீயலதே..02


அன்றாலின் நிழற்கீழ் அறம் நால்வர்க்கருள் புரிந்து
கொன்றாய் காலனுயிர் கொடுத்தாய்மறை யோனுக்குமான்
கன்றாருங் கரவா கடவூர்திரு வீரட்டத்துள்
என்றாதை பெருமான் எனக்கார் துணை நீயலதே..03

போரா ருங்கரியின் உரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்
வாராரும் குழலாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே
காராரும் மிடற்றாய் கடவூர்தனுள் வீரட்டானத்
தாரா என்னமுதே எனக்கார் துணை நீயலதே..04



மையார் கண்டத்தினாய் மதமாஉரி போர்த்தவனே
பொய்யா தென்னுயிருள் புகுந்தாய் இன்னம் போந்தறியாய்
கையார் ஆடவா கடவூர்தனுள் வீரட்டத்தெம்
ஐயா என்னமுதே எனக்கார்துணை நீயலதே..05

மண்ணீர் தீவெளிகால் வருபூதங்களாகி மற்றும்
பெண்ணோ டாணலியாய்ப் பிறவாவுரு ஆனவனே
கண்ணாருண் மணியே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அண்ணா என்னமுதே எனக்கார்துணை நீயலதே..06


எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே
நரியாருஞ் சுடலை நகுவெண்தலை கொண்டவனே
கரியார் ஈருரியாய் கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அரியாய் என்னமுதே எனக்கார் துணை நீயலதே..07

வேறா உன்னடியேன் விளங்குங் காதுடையாய்
தேறேன் உன்னையல்லால் சிவனே என்செழுஞ்சுடரே
காறார் வெண்மருப்பா கடவூர் தனுள் வீரட்டத்துள்
ஆறார் செஞ்சடையாய் எனக்கார் துணை நீயலதே..08



அயனோ டன்றரியும் அடியும்முடி காண்பரிய
பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே
கயமா ருஞ்சடையாய் கடவூர்த் திருவீரட்டத்துள்
அயனே என்னமுதே எனக்கார் துணைநீயலதே..09

காராரும் பொழில்சூழ் கடவூர்திரு வீரட்டத்துள்
ஏராரும் இறையைத் துணையாஎழில் நாவலர்கோன்
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் உரைத்த தமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத்திருப்பாரே..10


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

திங்கள், மார்ச் 04, 2019

சிவ புராணம்

இன்றைய இரவுப் பொழுது ஸ்ரீ மகா சிவராத்திரியாக மலர்கின்றது..

சிவ நெறியைச் சார்ந்தவர்களுக்கு மகத்தான நன்னாள்...

சிவ ராத்திரிக்கு என பற்பல புராணங்களில் இருந்து திருக்குறிப்புகள் காட்டப்படுகின்றன...

இரவு முழுதும் சிவாலயத்தில் இருந்து தரிசனம் காண்போர் அதிகம்..

நான்கு கால பூஜைகளில் லிங்கோத்பவ காலம் எனப்படும் மூன்றாம் கால பூஜை விசேஷமானது...

லிங்கோத்பவ காலத்தில் அம்பிகையே ஈசனை வழிபாடு செய்வதாக ஐதீகம்..

இந்த இரவுப் பொழுதில் உபவாசம் இருந்து
ஈசன் எம்பெருமானின் புகழ் பரவுதலே வாழ்வின் நலம் கூடும் என்பர் ஆன்றோர்...

அவரவர்க்கு இயன்ற அளவில் திருக்கோயிலுக்கு அபிஷேக ஆராதனைப் பொருள்கள் வழங்குவதோடு தேவார திருவாசக பாராயணம் செய்வதும் நல்லது..

ஈசனைச் சிந்தித்திருக்க இனிதாகும் வாழ்வு...

இந்தப் பொழுதில் வந்தித்திருப்பதும் சிந்தித்திருப்பதும் பூர்வ ஜன்ம புண்ணியம்...

ஸ்ரீ மஹா சிவராத்திரியாகிய நன்னாளில் -

சோழநாட்டில் காவிரிக்கு வடகரைத் தலமாகிய
சாயா வனம் எனப்படும் திருச்சாய்க்காடு எனும் திருத்தலத்தில் 
அப்பர் பெருமான் அருளிச் செய்த திருப்பதிகம் - நமது தளத்தில்...

திருப்பதிகத்தின் திருப்பாடல் ஒவ்வொன்றிலும்
ஈசன் எம்பெருமானின் பெருஞ்செயல் ஒன்று பயின்று வருகின்றது..

எல்லார்க்கும் விளங்கும்படியான இனிய தமிழில் அத்திருப்பதிகம்...

பொருள் உணர்ந்து சிவ வழிபாடு
நிகழ்த்தி வாழ்வின் நலங்களை எய்துவோமாக!... 

திருத்தலம்
திருச்சாய்க்காடு

ஸ்ரீ சாயாவனேஸ்வரர்  
இறைவன் - சாயாவனேஸ்வரர், சாய்க்காட்டு நாதன்..
அம்பிகை - குயிலினும் நன்மொழியாள்


குயிலினும் நன்மொழியம்மை
தீர்த்தம் - காவிரி, ஐராவத தீர்த்தம்..
தலமரம் - சாயை எனும் கோரைப்புல் 


வில்லேந்திய வேலவன் - சாயாவனம்.. 
அப்பர் பெருமான் அருளிய தேவாரம்
நான்காம் திருமுறை
அறுபத்து ஐந்தாம் திருப்பதிகம்

தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண்டேயன்
வீடுநாள் நெருங்கிற்றென்று மெய்கொள்வான் வந்த காலன்
பாடுதான் செல்லுமஞ்சிப் பாதமே சரணம் என்னச்
சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே..(01)

வடங்கெழு மலை மத்தாக வானவர் அசுரரோடு
கடைந்திட எழுந்த நஞ்சங்கண்டு பல்தேவர் அஞ்சி
அடைந்து நும்சரணம் என்ன அருள்பெரிது உடையராகித்
தடங்கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே.. (02)

அரணிலா வெளிய நாவல் அருள் நிழலாக ஈசன்
வரணிய லாகித் தன்வாய் நூலினாற் பந்தல் செய்ய
முரணிலாச் சிலந்தி தன்னை முடியுடை மன்னனாக்கித்
தரணி தான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே.. (03)

அரும்பெருஞ் சிலைக்கை வேடனாய் விறற்பார்த்தற் கன்று
உரம்பெரிது உடைமை காட்டி ஒள்ளமர் செய்து மீண்டே
வரம் பெரிது உடையனாக்கி வாளமர் முகத்தின் மன்னுஞ்
சரம்பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.. ( 04)

இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களோடு
மந்திர மறையதோதி வானவர் வணங்கி வாழ்த்தத்
தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று
சந்திரற்கருள் செய்தாரும் சாய்க்காடு மேவினாரே.. (05)

ஆமலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து
பூமலி கொன்றைச் சூட்டப் பொறாத தன் தாதை தாளைக்
கூர்மழு ஒன்றால் ஓச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாம நற் சண்டிக்கீந்தார் சாய்க்காடு மேவினாரே.. (06)

மையறு மனத்தனாய பகீரதன் வரங்கள் வேண்ட
ஐயமில் அமரர் ஏத்த ஆயிர முகமதாகி
வையகம் நெளியப் பாய்வான் வந்திழி கங்கை என்னுந்
தையலைச் சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே.. (07) 

குவப்பெருந் தடக்கை வேடன் கொடுஞ்சிலை இறைச்சிப் பாரம்
துவர்ப்பெரும் செருப்பால் நீக்கி தூய வாய்க் கலசம் ஆட்ட
உவப்பெருங் குருதி சோர ஒருகணை இடந்தங்கு அப்ப
தவப்பெருந் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே..(08)

நக்குலா மலர்பன்னூறு கொண்டுநன் ஞானத்தோடு
மிக்க பூசனைகள் செய்வான் மென்மலரொன்று காணா
தொக்குமென் மலர்க் கண்ணென்றங் கொருகணை இடந்தும் அப்பச்
சக்கரங் கொடுப்பர் போலுஞ் சாய்க்காடு மேவினாரே.. (09)

புயங்கள் ஐஞ்ஞான்கும் பத்து மாயகொண்டு அரக்கன் ஓடிச்
சிவன் திருமலையைப் பேர்க்கத் திருமலர்க் குழலி அஞ்ச
வியன்பெற எய்திவீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே
சயம்பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே.. (10)

-: திருச்சிற்றம்பலம் :-


சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை..
என்பது ஔவையார் அருளிய அமுதவாக்கு..

நினைப்பவர் மனமே கோயிலாக் கொள்ளும் ஈசன்
இந்த நிலையில் தான் 
இமைப்பொழுதும் இதயத்திலிருந்து நீங்காத பேற்றினை
ஆன்மாக்களுக்கு அருள்கின்றான்..

அவ்வண்ணமாக எவ்வேளையும் 
சிந்தித்திருக்கும்படிக்கு
ஈசன் எம்பெருமான் எல்லாருக்கும்
நல்லருள் புரிவானாக..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ