நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

ஆடல் காணீரோ - 1

ஆவணி மூலத் திருவிழா

மாமதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் - நிகழும் ஆவணித் திங்கள்  (ஆகஸ்ட்/21) வியாழனன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


மதுரையம்பதியில் சோமசுந்தரப் பெருமான் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை மையமாக வைத்து நடத்தப்பெறுவது - ஆவணி மூலத் திருவிழா -

ஆவணி மூலத் திருவிழா தான் - திருக்கோயிலின் பிரதான விழா.

திருமலை நாயக்கர் செய்த மாற்றத்தினால் - சித்திரைத் திருவிழா பிரசித்தி ஆகி விட்டது.

எனினும் திருக்கோயிலின் திருவிழாக்களில் சித்திரைப் பெருவிழாவிற்கு அடுத்து - மிக சிறப்பாக நடத்தப்படுவது ஆவணி மூலத் திருவிழா.  

இன்றைய பதிவில் அமுதத் தமிழில்  ஒரு இனிய காணொளி!..

திரைப்படம் - மதுரை வீரன். 
பாடலை இயற்றியவர் - உடுமலை நாராயண கவி.
இசையமைப்பு - G. ராமநாதன்.


நிகழும் வருடத்தின் ஆவணி மூலத் திருவிழாவினை முன்னிட்டு, ஸ்வாமி சந்நிதி - கம்பத்தடி மண்டபத்தின் அருகே புனிதநீர் நிறைந்த பதினோரு கலசங்களுக்கு சிறப்பு  பூஜைகள் நடத்தப்பட்டன.

கம்பத்தடி மண்டபத்தில் ஸ்வாமியும் பிரியாவிடையும்  அன்னை மீனாட்சியும்  பல்லக்குகளில் எழுந்தருளிய வேளையில் - அவர்தம் முன்னிலையில் - தங்கக் கொடிமரத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

கடந்த ஆண்டு இதே சமயத்தில் நிலை நிறுத்தப்பட்ட புதிய தங்கக் கொடி மரத்தில் காலை 10.35 மணிக்கு மேளதாளம் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க ஆவணி மூலத் திருவிழாவின் கொடி ஏற்றப்பட்டது.

அப்போது பக்தர்கள் பூக்களைத் தூவி வழிபட்டனர். வைபவங்களை காப்புக் கட்டியிருந்த ஸ்தானிக  சிவாச்சாரியார்  நடத்தினார்.

பின் ஸ்வாமியும் அம்மனும் சந்நிதி வளாகத்தில் எழுந்தருள தீபாராதனை நிகழ்ந்தது.


அன்று முதற்கொண்டு ஆகஸ்ட்/26 வரை தினமும் திருக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் சந்திரசேகர் புறப்பாடு நடைபெற்றது.

ஆவணி மூலத் திருவிழாவின் ஊடாக - ஸ்ரீ விநாயக சதுர்த்தி!..


திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமுக்குறுணிப் பிள்ளையாருக்கு மகா அபிஷேகங்களுடன் வெள்ளிக் கவச அலங்காரம்.

18 படி அரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைத்து சிறப்பு பூஜைகள் நிகழ்ந்தன.

திருவிழாவில் தொடர்ந்து திருவிளையாடல்களைக் குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அதன்படி,
ஆகஸ்ட்/27 அன்று எம்பெருமான் கருங்குருவிக்கு உபதேசம் செய்தருளினார்.
இரவு - கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்வாமியும் - வெள்ளி சிம்ம வாகனத்தில் மீனாட்சியும் எழுந்தருளினர்.

கருங்குருவிக்கு உபதேசம்
நாரைக்கு முக்தி
ஆகஸ்ட்/28 அன்று நாரைக்கு முக்தி கொடுத்தருளினார்.
இரவு - பூத வாகனத்தில் பெருமானும் - அன்ன வாகனத்தில் கயற்கண்ணியும் எழுந்தருளினர். 

ஆகஸ்ட்/29 அன்று வணிகனாக வந்து மாணிக்கம் விற்று விளையாடினார்.
இரவு - கயிலாய பர்வத வாகனத்தில் ஸ்வாமியும் - காமதேனு வாகனத்தில் அங்கயற்கண்ணியும் எழுந்தருளினர்.

ஆகஸ்ட்/30 அன்று புலவனாக வந்து தருமிக்குப் பொற்கிழி தந்தருளினார்.
இரவு - தங்க சப்பரத்தில் ஸ்வாமியும் - யானை வாகனத்தில் மரகதவல்லியும் எழுந்தருளினர்.


படங்கள் - சிவனடியான்
இன்று (31/8) - செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருந்த அன்பனுக்கு என்றும் குறையாத உலவாக்கோட்டை அருளினார்.


இரவு - நந்தி வாகனத்தில் ஸ்வாமியும் - யாளி வாகனத்தில் மீனலோசனியும் எழுந்தருள்கின்றனர்.

நாளை (செப்டம்பர்/1) அகங்கெட்ட பாணனின் அங்கங்களை வெட்டித் தள்ளி தண்டிக்கின்றார்!..

எல்லாமே அருளியதாக இருக்கையில் நாளை மட்டும் ஏன் தண்டித்தல்?..

திருவிளையாடல் புராணத்தில் இருபத்தேழாவதாகக் குறிக்கப்படும் நிகழ்வு.

அந்த காலத்தில் மதுரையில் - மதர்த்துத் திரிந்திருந்தான் இளைஞன் ஒருவன். அவன் பெயர் பாணன். கொடூர எண்ணங்களுக்கு இருப்பிடமானவன்.

பெண் ஒருத்தியைக் கண்டு அவள் மீது தகாத எண்ணங்கொண்டான் அவன்.

ஆனால் -  அவள் திருமணமானவள். பெயர் மாணிக்க மாலை.

அவளுடைய கணவரோ - சற்று வயதானவர். விரும்பி வருவோர்க்கு வாள் பயிற்சி அளிப்பவர்.

அவனுக்கு அது வசதியாக ஆனது. அவரை நாடி மாணவனாக நின்றான்.

மூர்க்கனின் மனம் அறியாத அவர் அவனுக்கு கலைகளைப் பயிற்றுவித்தார். ஒருநாள் மாலை - குருநாதர் மீனாட்சி சுந்தரேசரைத் தரிசிக்கச் சென்றிருந்தார்.

குருபத்தினியோ தனித்திருந்தாள்.

அந்த வேளையில், பாணன் - விடங்கொண்ட நாகம் போல அவளை நெருங்கினான். 

வீடு தேடி வந்தவன் தீவினையாளன் எனத் தெரிந்து கொண்ட - அவள், அந்த வஞ்சகனிடமிருந்த சாதுர்யமாகத் தப்பித்து - வீட்டிற்குள் புகுந்து கதவைத் தாழிட்டுக் கொண்டாள். கண்ணீர் விட்டு கதறி நின்றாள்.

தஞ்சமென்று உன்சரண் புகுந்தேனையும்
அஞ்சலென்று அருள் ஆலவாய் அண்ணலே!..

- என  ஈசனை சரணடைந்து நின்றாள்.

திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை எனத் தொழுத அபலையின் குரல் கேட்டு ஆங்காரத்துடன் எழுந்த பெருமான்  - குருவின் வடிவம் தாங்கி வந்தார்.

வஞ்சகன் பாணனை வலிய வம்புக்கு இழுத்து அவனுடன் சண்டையிட்டு - தகாதன பேசிய நாவை அறுத்தெறிந்தார்.

பிறன் மனையாளைத் தீண்டத் துடித்த கைகளையும் பிறன்மனையைத் தேடி வந்த கால்களையும் ஊரார் முன்னிலையில் வெட்டித் தள்ளினார். 

வந்த வேலை முடிந்ததும் வழக்கம் போல தன்னுரு கரந்தார்.

குருவுக்கும் மாணவனுக்கும் சண்டை என வேடிக்கை பார்த்த மக்கள் திகைத்து நின்றனர். அவ்வேளையில் கோயிலுக்குச் சென்றிருந்த குருநாதரும் திரும்பி வந்தார்.

உண்மையை உணர்ந்த அனைவரும் ஆலவாய் அண்ணலின் அருளை வியந்து போற்றி நின்றனர்.

இது - பெண்களின் மீது கொடுஞ்செயல் புரிவோர்க்கான பாடம்!..
அனுதினம் நாட்டில் எத்தனையோ கொடுமைகள் நடக்கின்றன.
ஆனால் - அன்றைக்கு வந்தவன் ஏன் இன்றைக்கு வரவில்லை!..

ஆள்வோர் தவறினாலும் ஆண்டவன் தவறுவதே இல்லை!..
தகாதன செய்வோர் தண்டிக்கப்படுகின்றார்கள்!.. 
நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்!..

வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்
சுடர்த்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மை யானைத்
தலையாய தேவாதி தேவர்க் கென்றுஞ்
சேயானைத் தென்கூடல்திருஆ லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!..(6/19)
திருநாவுக்கரசர்.

சிவாய திருச்சிற்றம்பலம்.
* * *

வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014

ஸ்ரீகணேச தரிசனம்

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!..

தத்துவ உருவமே முத்தமிழ் கணபதி!..
தனக்கு மேல் தலைவன் இல்லாத குணநிதி!..

ஆயினும், முழுமுதற் பொருளான விநாயகர் தாய் தந்தையரைப் பணிவதிலும் தகவுடையார்க்கு தோள் கொடுத்துத் துணையிருப்பதிலும் தனித்துவமாக விளங்குகின்றார்.

ஆற்றங்கரையிலும் குளத்தங்கரையிலும் தெருக்கோடியிலும் முச்சந்தியிலும் எளிமைக்கு எளிமையாய் விருப்புடன் கோயில் கொண்டு வீற்றிருப்பவர்.   


வீட்டில் விளக்கு மாடத்தில் பிள்ளையார் வைத்து வழிபடுவது நமது மரபு.

பசுஞ்சாணத்தையோ, மஞ்சளையோ - கையால் பிடித்து அருகம் புல் சாற்றினால் அங்கே பிள்ளையார் வந்து அமர்ந்து விடுகின்றார். 

நமது வாழ்வில் தடையாக இருக்கும் விக்னங்களை அகற்றும் வல்லமை உடையவர் விநாயகர். அவருக்காக மேற்கொள்ளும் விசேஷ விரதம் தான் சதுர்த்தி விரதம்.

இந்த விரதத்தையும் வழிபாட்டையும் செய்வதற்கு பல வழிமுறைகளைக் கூறுகின்றார்கள். இருப்பினும், நமது சிந்தனையில் -

அவரவர் உடல் நிலைக்கு ஏற்றபடி சதுர்த்தி விரதம் இருப்பதே நல்லது!.. 

சதுர்த்தியன்று அதிகாலையில் எழுந்து வீட்டைத் தூய்மை செய்து மாக்கோலமிட்டு  நீராடிய பின் பூஜை அறையில் மனைப் பலகையை பீடமாகக் கொண்டு அதன்மேல் தலை வாழையிலையை நுனி வடக்குப் புறமாக இருக்கும்படி வைத்து அதில் பச்சரிசி அல்லது புது நெல் பரப்ப வேண்டும்.

அரிசியின் மேல் வலதுகை மோதிர விரலால் பிள்ளையார் சுழியிட்டு, ஐங்கோண சக்கரம் வரைந்து அதில் ஓம் எனும் பிரணவம் எழுத வேண்டும். மனைப் பலகையின் இருபுறமும் நெய் நிறைத்த குத்து விளக்கு வைக்க வேண்டும்.


களிமண்ணால் செய்யப்பட்ட வலஞ்சுழி விநாயகருக்கு திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு தொப்பையில் காசு வைக்க வேண்டும். பிள்ளையாருக்கு வஸ்திரம் அணிவித்து பூச்சரங்களுடன் அறுகம்புல் மாலை சாற்றி மனைப் பலகையில் இருத்த வேண்டும்.

பிள்ளையாருக்கு குடை வைத்து விளக்குகளை ஏற்றி வாழைப்பழம் தாம்பூலத்துடன் தூப தீபம் காட்டி விரதத்தினைத் தொடங்க வேண்டும்.

பகல் பொழுதில் விநாயகரைப் போற்றும் எளிய தமிழ்ப் பாடல்களுடன் விநாயகர் அகவல் பாராயணம் அவசியம்.

மாலையில் வீட்டில் விளக்கேற்றியபின் - அவல் பொரி, கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், வடை முதலிய நிவேதனப் பட்சணங்களுடன் இளநீர், கருப்பஞ்சாறு, வாழைப்பழம், நாவல் பழம், விளாங்கனி, மாம்பழம், மாதுளம் பழம் முதலிய பழங்களைச்  சமர்ப்பித்து -

நறுமண மலர்களுடன் வில்வம், அருகு, வன்னி, மா, திருநீற்றுப் பச்சிலை முதலான பத்ரங்கள் கொண்டு வழிபட்டு தூப தீபஆராதனை செய்ய வேண்டும்.

கொழுக்கட்டை, மோதகம், அதிரசம், அப்பம், வடை முதலிய நிவேதனப் பட்சணங்கள்  - 21 எனும் எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு என்கின்றார்கள்.

இருபத்தோரு வகை மலர்களும் இலைகளும் கொண்டு வழிபடவேண்டும் என்கின்றார்கள். அப்படிச் செய்ய  இயலாவிட்டாலும் நம்மால் முடிந்ததைக் கொண்டு முழுமனதுடன் பூஜை செய்வதே சிறப்பு!..

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் கம் கணபதயே
வர வரத ஸர்வ ஜனம்மே வஸமானய ஸ்வாஹா
 
எனும் மூல மந்திரத்தை ஜபம் செய்வதுடன்  விநாயகர் அகவல் பாராயணம் செய்வது அவசியம்.

பூஜை முடிந்ததும் குழந்தைகளுக்கு நிவேதன பட்சணங்களை வழங்கி திருநீறு இட்டு வாழ்த்த வேண்டும். வீட்டில் பூஜை முடிந்ததும் ஆலயம் சென்று விநாயகரை வணங்கலாம்.

அருகிலுள்ள  ஏழைப் பிள்ளைகளுக்கு நிவேத்ய பிரசாதங்களை வழங்குவது மிக மிக சிறப்பு!..

சதுர்த்தி பூஜைக்குப் பின், விநாயகர் சிலையை விசர்ஜனம் செய்யும் வரை காலை - மாலை இருவேளையும் பூஜை செய்வது அவசியம்.

விநாயகர் சிலையை ஒற்றைப் படை நாளில் ஆற்றிலோ குளத்திலோ விசர்ஜனம் செய்யவேண்டும்.

வாழையிலையில் பரப்பிய அரிசியினை - அரிசி பாத்திரத்தில் இட குன்றாத தான்ய விருத்தியும் தொப்பையில் வைத்த காசினை பணம் வைக்கும் இடத்தில் வைக்க - குறையாத தன விருத்தியும் ஏற்படும்.


பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.  (1/123)
திருஞானசம்பந்தர்

கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலும் (6/53)
திருநாவுக்கரசர்

கயாசுரன் என அப்பர் பெருமானால் குறிக்கப்படுபவன் - கஜமுகாசுரன்.

கஜமுகாசுரனைத் தொலைப்பதற்காகவே - வேழமுகத்துடன் விநாயகப் பெருமானை - ஈசன் படைத்தார் என்பது திருநாவுக்கரசரின் திருவாக்கு.

கால நேரம் கூடி வந்த வேளையில் விநாயகர்  - கஜமுகாசுரனை வெற்றி கொண்டார். ஆணவம் மிகுத்துத் திரிந்த அவன் விநாயகரின் திருவடி தீட்சையால் மூஷிகமாகி நின்றான். அவனையே தன் வாகனமாகக் கொண்டார்.  

கஜமுகாசுரனுடன் போர் புரிந்தபோது அவனுடைய குருதி பூமியில் படிந்து செங்காடாக ஆனது. அதனால் ஊர்  - திருச்செங்காட்டங்குடி.

கஜமுகாசுர வெற்றிக்கு பின் -  திருச்செங்காட்டங்குடியில் -  சிவலிங்கத்தினை ஸ்தாபித்து கணபதி வழிபட்ட திருக்கோயிலின் பெயர் - கணபதீச்சரம்.

கணபதி அக்ரஹாரம்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
கபிலதேவர்.

மகா முனிவராகிய அகஸ்தியரின் வடிவினைக் கண்டு - கர்வத்துடன் துடுக்காக நடந்து கொண்டாள் காவிரி. விளைவு!..

அவரது கமண்டலத்தினுள் சிறைப்பட்டாள். நீரின்றி வறண்டது பூமி!..

பிரச்னை நீங்க வேண்டி காக ரூபமாக வந்து கமண்டலத்தைக் கவிழ்த்து சிறைப்பட்ட காவிரியை விடுவித்தவர் - கணபதி!..

காக்கையைக் கண்டு வெகுண்ட அகத்தியருக்கு சிறுவனாகக் காட்சியளித்தார். சினங்கொண்ட அகத்தியர் சிறுவனின் தலையில் குட்டினார்.

விநாயகர் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தந்து தன்னுரு கரந்தார்.

அகத்தியருக்குக் காட்சி தந்த திருத்தலம் - கணபதி அக்ரஹாரம். இந்த ஊரில் சதுர்த்தியன்று  வீட்டில் பூஜை செய்யாமல் கோயிலில் கூடி கும்பிடுகின்றனர்.


கடுந்தவம் புரிந்த இராவணனுக்கு இலங்கை சென்று சேரும் வரை கீழே வைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆத்ம லிங்கத்தை வழங்கினார் சிவபெருமான். அதன்படி இலங்கை திரும்பிக் கொண்டிருந்தான் இராவணன்.

அவன் தனது  தலைநகரில் ஆத்மலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து விட்டால் அவனை வெல்வது கடினம் என தேவர்கள் அஞ்சினர். அவர்களுக்கு அபயம் அளித்தவர் கணபதி.

சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என - இராவணன் யோசித்த வேளையில் சிறுவனாக அவன் முன் தோன்றினார்.

அவனும் சிறுவனாக வந்த விநாயகரிடம், சற்று நேரம் வைத்துக் கொள்!..  எனக் கூறி ஆத்மலிங்கத்தைத் தந்தான். விநாயகரும் மூன்று வரை எண்ணி விட்டு  ஆத்ம லிங்கத்தைத் தரையில் வைத்து விட்டார்.  லிங்கம் அங்கேயே பிரதிஷ்டை ஆனது.

விக்ரகத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றான் இராவணன். ஆனால் இயலவில்லை. பசுவின் காது போலக் குழைந்தது. சினமுற்ற அசுர வேந்தன் ஐங்கரனின் தலையில் குட்டினான். விநாயகர் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தந்து தன்னுரு கரந்தார்.

அத்தலமே கர்நாடக மாநிலத்திலுள்ள திருக்கோகர்ணம்.

அங்குள்ள கணபதி தலையிலும் இராவணன் குட்டிய வடுவினைக் காணலாம்.

உச்சிப்பிள்ளையார்
இதேபோன்ற ஒரு நிகழ்வை விபீஷணனிடமும் நிகழ்த்தினார் பிள்ளையார்.

அயோத்தியில் பட்டாபிஷேகம் இனிதே நிறைவேறிய பின் -  இலங்கைக்குப் புறப்பட்ட விபீஷணன் ஸ்ரீராமரிடம் ரங்கநாதர் விக்ரகத்தை வேண்டி நின்றான். கீழே வைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன்,  தான் வழிபட்ட ஸ்ரீரங்கநாத விக்ரகத்தை விபீஷணனுக்குக் கொடுத்தார் - ஸ்ரீராமர்.

அதைப் பெற்றுக்கொண்டு இலங்கை நோக்கி வந்த விபீஷணன் சந்தியா வந்தனம்  செய்ய எண்ணிய வேளையில் அன்றைக்கு நிகழ்த்திய அதே திருவிளையாடலை நிகழ்த்தினார்.

ஸ்ரீரங்கநாதர் விக்ரகம் காவிரிக் கரையிலேயே நிலை கொண்டு விட்டது. விக்ரகத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றும் இயலவில்லை.

அண்ணனைப் போலவே அவனும் ஆத்திரத்தில் சிறுவனின் தலையில் ஓடிப்போய் குட்டினான். விநாயகர் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தந்து தன்னுரு கரந்தார். 

உண்மையறிந்த விபிஷணன் வணங்கிச் சென்றான்.

சிரசில் குட்டுப்பட்ட தழும்புடன் இருப்பவர் - திருச்சி  உச்சிப் பிள்ளையார்.


மேருமலையில் - வியாசருக்காக மகாபாரதத்தைத் தன் கொம்பினை ஒடித்து வரைந்தளித்தவர் கணபதி!..

முருகனுக்கு வள்ளியை மணம் முடித்து வைத்தவர் கணபதி!..

ஔவைக்கு கலைஞானத்தை வழங்கியவர்  - கணபதி!..

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர் நந்தனார் ஸ்வாமிகள்.

அவருக்காக திருப்புன்கூரில் திருக்குளம் வெட்டிக்கொடுத்தவர் பிள்ளையார்.

சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் விருத்தாசலம் மணிமுத்தாற்றில் போட்ட பொற்காசுகளை உரசிப் பார்த்து - தரம் கூறியவர் திருஆரூர் மாற்றுரைத்த பிள்ளையார்.

காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிய போது - சுந்தரரின் ஓலத்துடன் தாமும் ஓலமிட்டு காவிரி விலகி ஓடுமாறு செய்தவர் - திருஐயாறு ஓலமிட்ட பிள்ளையார்.

நம்பிக்கு நல்லருள் புரிந்து - ராஜராஜ சோழனின் வேண்டுகோளுக்கு இணங்க திருமுறைச்சுவடிகள் இருக்கும் இடத்தைக் காட்டியவர் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார்.

திருவலஞ்சுழி விநாயகர்
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனிநுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.
ஔவையார். 

கடலைக் கடைந்து அமுதத்தினை எடுக்கப் போகின்றோம் என்ற ஆணவத்தில் ஐங்கரனைத் துதிக்க மறந்தான் - தேவேந்திரன். முடிவில் - ஆலகாலம் விளைந்து தேவர்களை அல்லல்படுத்தி அலைக்கழித்தது.

தனது அவலம் தீர வேண்டி - கடல் நுரை கொண்டு இந்திரன் ஸ்தாபித்து வணங்கிய மூர்த்தி தான் - திருவலஞ்சுழியில் விளங்கும் ஸ்வேத விநாயகர்.

கடல் நுரையால் ஆன கணபதி என்பதால், இவருக்கு எந்த அபிஷேகமும் கிடையாது. வஸ்திரம் கூட சாத்துவதில்லை. அலங்காரமும், பூஜைகளும் மட்டுமே செய்யப்படும்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட இத்திருக்கோயிலில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த வியாழன்று காலையில் கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

விழா நாட்களில் காலை, மாலை இருவேளையும்  விநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

நேற்று (ஆகஸ்ட்/27)  வியாழன் மாலை திருக்கல்யாண வைபவம்.

சதுர்த்தி தினமான இன்று காலை ஏழு மணிக்கு தேவேந்திர பூஜையும், காலை ஒன்பது மணிக்கு மேல் பத்து மணிக்குள் திருத்தேரோட்டமும் மறுநாள் தீர்த்தவாரியும் நிகழ்கின்றது.

பிரளயம் காத்த விநாயகர்
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
கபில தேவர்.

வருணன் செருக்குடன் கிருதயுகத்தில் மஹா பிரளயத்தை ஏற்படுத்தினான்.  அச்சமயம் ஓங்காரப் பிரயோகத்துடன்   வருணனின் செருக்கையும் ஏழு கடல் பெருக்கையும் ஒரு கிணற்றுக்குள் அடக்கியருளினார்.

செருக்கு அடங்கிய  வருணன் சப்த சாகரங்களிலிருந்து - சங்கு,  கிளிஞ்சல், கடல்நுரை இவற்றால் விநாயகரை உருவாக்கி பிரளயம் காத்த விநாயகர் என போற்றி நின்றான்.

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள  திருப்புறம்பியம்  ஸ்ரீசாட்சி நாதர் திருக் கோயிலில் விளங்கும் பிரளயம் காத்த விநாயகரின் திருமேனியில் நிறைய கிளிஞ்சல்கள் உள்ளதை இன்றும் காணலாம்.

இந்த விநாயகருக்கு ஆண்டுக்கு ஒருமுறை விநாயக சதுர்த்தியன்று இரவு மட்டும் தேனாபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் எந்த அபிஷேகமும் கிடையாது.

அபிஷேகத்தின்போது தேன் முழுதும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப் படுவது விசேஷம்.

மஹாகணபதி - தஞ்சை
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேனே!..

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த அதிதீரா
அத்துயரது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே!..
திருப்புகழ்.

மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிற் பொருளெல்லாம் எளிதில் முற்றுற
கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.
கந்த புராணம். 

ஓம் கம் கணபதயே நம:
* * *

புதன், ஆகஸ்ட் 27, 2014

திருமுறை தந்த கணபதி

விடிவதற்கு இன்னும் சிறு பொழுது தான் இருக்கின்றது.

இன்னும் ஒரு முடிவுக்கு வர அவரால் இயலவில்லை.

அவர் - அனந்தேச குருக்கள்.


நாளும் தவறாது முப்போதும் திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் தம் திருமேனி தீண்டி  பூஜா கைங்கர்யங்களைச் செய்து வரும் சிவநேசச் செல்வர்.

வாசல் தெளித்துக் கோலமிட்டு விட்டு மாடத்தில் திருவிளக்கேறி வணங்கிய பின் அகத்தினுள் நுழைந்த - அவரது இல்லத்தரசி கல்யாணி - அனந்தேச குருக்களை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.

ஏன்னா!.. நீங்க இன்னுமா கிளம்பலை!?..

நம்பி சின்னக் குழந்தைடி!.. அவன் எப்படி பூஜை செய்வான்னு தான்!..

அவனுக்கும் நாலு விஷயம் தெரிய வேண்டாமோ!.. எல்லாம் சரியாகச் செய்வான். மனசைப் போட்டுக் குழப்பிக்காம -  நீங்க புறப்படுங்கோ!..

அந்த வேளையில் கிணற்றடியில் குளித்து விட்டு ஓடி வந்தான் நம்பி..

நம்பி!.. - என்றார் அனந்தேச குருக்கள்.

என்னப்பா!..

பிள்ளையாருக்கு பூஜை எல்லாம்... -

நீங்க ஒன்னும் கவலைப்பட வேணாம்!.. நான் ஸ்லோகம் எல்லாம் சரியா சொல்லி பூஜை செஞ்சிடுவேன் அப்பா!..

மகனின் மொழி கேட்டு தந்தைக்கு நிம்மதியாயிற்று.  உச்சி பொழுதிற்குள் வந்து விடுவதாக  - அந்த விடியற்காலைப் பொழுதில் அடுத்திருந்த ஊருக்குப் புறப்பட்டார்.

கூவின பூங்குயில். கூவின கோழி. குருகுகள் இயம்பின. இயம்பின சங்கம்!..

திருநாரையூர் திருக்கோயில்
நம்பீ!.. இதோ இருக்கிறது பிரசாதமெல்லாம்!.. அப்பா மாதிரி கவனமாக பூஜை செய்யணும் .. தெரியறதா!..

தாயின் அறிவுறுத்தலைக் கேட்ட மகன் - சரி அம்மா!.. - என்றான்.

வழி நெடுக, நம்பியின் மனதில் - கணேச சிந்தனைதான்!..

பொள்ளாப் பிள்ளையாரின் சந்நிதியை அடைந்தான்.

இதோ.. வந்துட்டேன்!.. - குடத்தை எடுத்துக் கொண்டு கிணற்றடியை நோக்கி ஓடினான்.

குறுக்குக் கட்டையில் உட்கார்ந்திருந்த சிட்டுக் குருவிகள் எல்லாம் நம்பியைக் கண்டதும் விருட்டென எழுந்து அவன் தலையைச் சுற்றிப் பறந்து விட்டு செம்பருத்திச் செடிக்குள் புகுந்து கொண்டன.

கர கர  - என்று கிணற்று நீரை இழுத்தான்.  திருக்கோயிலின் வாசலை சுத்தம் செய்தான். சின்னதாக கோலமிட்டு ஒரு பூவை வைத்தான்.

மீண்டும் குடத்தை நிரப்பிக் கொண்டு சந்நிதிக்குள் ஓடினான்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே..

- என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டான்.


கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பு பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்..


தோத்திரங்களைச் சொல்லியபடி குளிர்ந்த நீரால் விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்தான்..

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் காப்பு செய்து திரவியப் பொடியாலும் மஞ்சள் பொடியாலும்  நீராட்டினான்.

கையில் கொண்டு சென்ற - காராம் பசுவின் பாலைக் கொண்டு கற்பக மூர்த்திக்கு திருமஞ்சனம் செய்வித்தான்.  கருவறைக்குள் சந்தனப் பொடி இருந்தது. சந்தனத்தைக் கரைத்து அபிஷேகித்தான். நெற்றியில் திலகம் வைத்து கற்பூர தீபம் காட்டினான்.

மீண்டும் சுத்த நீரால் பெருமானை நீராட்டினான் - நம்பி.

பெருமானின் அருகிருந்த நாகராஜனும் எதிரில் இருந்த மூஷிகமும் சுறுசுறுப்பாக நீராடிக் கொண்டனர். பலி பீடத்திலும் ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றினான்.

கணபதியின் மேலிருந்த பழைய வஸ்திரத்தைக் களைந்து விட்டு புதிய வஸ்திரத்தை அணிவித்தான்.

வக்ர துண்ட மஹாகாய கோடி சூர்ய ஸமப்ரப
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷூ ஸர்வதா..

பக்தி சிரத்தையுடன் ஸ்லோகத்தைச் சொல்லியபடி திருநீறு சாற்றி சந்தனம் குங்குமம் அணிவித்தான்.


தென்னங்குடலையில் இருந்த பூமாலையை சூட்டினான். பூச்சரங்களைத் திருமேனியில் சாற்றினான். திருவிளக்குகளுக்கு எண்ணெயிட்டு திரிகளைத் தூண்டி விட்டான்.

சந்நிதி ஒளிமயமாக இருந்தது கண்டு நம்பிக்கு ஏக சந்தோஷம்.

ஓம் ஸுமுகாய நம:
ஓம் தூம கேதவே  நம:
ஓம் ஏக தந்தாய நம:
ஓம் கணாத்யக்ஷாய நம: 
ஓம் கபிலாய நம:
ஓம் பாலசந்த்ராய  நம:
ஓம் கஜகர்ணாய  நம:
ஓம் கஜானனாய நம:

ஓம் லம்போதராய  நம:
ஓம் வக்ரதுண்டாய  நம:
ஓம் விகடாய  நம:
ஓம் சூர்ப்ப கர்ணாய  நம:
ஓம் விக்னராஜாய  நம:
ஓம் ஹேரம்பாய  நம:
ஓம் கணாதிபாய  நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித  பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

தேங்காயை உடைத்தான். பிரசாதங்களை வெல்லம், பழங்கள், தாம்பூலம் இவற்றுடன் நிவேதனம் செய்து தீர்த்தம் கொடுத்து - தூப தீப ஆராதனைகளைச் சமர்ப்பித்தான் நம்பி!..

ஆர்வம் மீதூற பிள்ளையாரின் திருமுகத்தையே பார்த்திருந்த நம்பியின் கண்களில் சற்றைக்கெல்லாம் நீர் திரண்டது.

ஏன் இன்னும் பிள்ளையார் சாப்பிடவில்லை!.. - பிஞ்சு மனம் பேதலித்தது.

அம்மா அன்புடன் செய்து கொடுத்த நைவேத்தியம்தானே இது!.. இத்தனை நாள் தந்தையின் கையினால் நிவேத்யம் சாப்பிட்ட பிள்ளையார் இன்று ஏன் இன்னும் வரவில்லை?..  - மனம் குழம்பினான்.

பெருமானை சாப்பிடும்படி வேண்டினான். நேரம் தான் ஆனது. பிள்ளையார் வந்து சாப்பிடக் காணோம்.

கண்கள் பெருக்கெடுத்தன. 

தான் ஏதோ தவறு செய்து விட்டதால்தான் - தான் படைத்த உணவை பிள்ளையார் ஏற்க மறுக்கிறார் என்று எண்ணினான் நம்பி. வேதனை மிகவானது. மன்றாடினான். தரையில் விழுந்து புரண்டு அழுதான். தொழுதான்.

இத்தனை நாழி ஆகியும் நீ வந்து சாப்பிடலைன்னா என்ன அர்த்தம்?.. பகவான் வந்து பிரசாதமெல்லாம் சாப்பிட்டுட்டார்ன்னு அப்பா சொன்னது பொய்யா?.. இத்தனை நாள் அப்பா செஞ்ச பூஜைக்குப் பழியாயிடுத்தே.. என்னால கெட்ட பெயர் வந்துடுத்தே!.  நீ சாப்பிடாத பட்சணங்களோட ஆத்துக்குப் போனா அடிப்பாளே!.. ஆத்துக்குப் போய் அடி வாங்கறதை விட - இங்கேயே உன் காலடியிலேயே முட்டிக்கிறேன்!..   - என்றபடி கல்லில் முட்டிக் கொண்டான்.

அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் -  ஐங்கரனின் மனம் இளகியது.


தன் திருவடிகளில் முட்டிக் கொண்ட நம்பியைத் தம் திருக்கரத்தால் தாங்கிக் கொண்டார்.

நம்பி பொறு!.. - எனக் கூறியபடி நிவேத்யங்களை அனுக்கிரகித்தார்.

துதிக்கையை வலஞ்சுழித்த வண்ணம் வள்ளல் பெருமான் உண்பதைக் கண்ட நம்பி தன்னையே மறந்தான்.

தன்யன் ஆனேன் ஸ்வாமி!.. - என்றபடி வலம் வந்து விழுந்து வணங்கினான்.

மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பினான் நம்பி. தாய் ஆவலுடன் கேட்டாள்.

நம்பி!.. நிவேத்ய பாத்ரம் இங்கே இருக்கின்றது. நிவேத்யம் எல்லாம் எங்கேயடா?..

அதான் நிவேத்யம் ஆகிடுச்சே!.. அம்மா!..

நிவேத்யம் ஆகிடுச்சு.. சரி!.. நிவேத்யம் எங்கேயடா!..

நிவேத்யம் தான் ஆகிடுச்சே.. அம்மா!..

எப்படிடா.. ஆகும்!.. நிவேத்ய பட்சணமெல்லாம் எங்கே!?..

நிவேத்ய பட்சணமா!.. அதான் பிள்ளையார் வந்து தின்னுட்டாரே!..

என்னது பிள்ளையார் வந்து தின்னுட்டாரா?. மயக்கம் வந்தது அந்தத் தாய்க்கு!.

என்னடா.. சொல்றே!.. கோயில்ல எதையாச்சும் பார்த்து பயந்துட்டாயா?..

விஷயத்தைத் தாயிடம் சொன்னான். அவளால் நம்ப முடியவில்லை. தன் அன்பு மகனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்றே அஞ்சினாள்.

உச்சி வெயிலில் அரக்கப் பரக்க வந்த அனந்தேச குருக்கள் - மகனின் பூஜா விதானத்தைக் கேட்டு அயர்ந்து விட்டார்.

மகனின் காதைப் பிடித்து இழுத்து செல்லமாக முதுகில் தட்டினார்.

பிள்ளையாரைப் பூஜிக்கிறவா பொய் சொல்லப்படாது!.. எங்கே மறுபடி சரியாச் சொல்லு!..  நிவேத்ய பட்சணமெல்லாம் எங்கே?.. கீழே போட்டு விட்டாயா?...

இல்லை.. அப்பா!. நான் பொய் சொல்லலை!.. ஸ்வாமி வந்து இன்னும் சாப்பிடலயேன்னு நான் அழுதேனா!. அப்ப பிள்ளையார் வந்து - நம்பி அழாதேடா.. அப்படின்னு சொல்லிட்டு பட்சணம் எல்லாத்தையும் சாப்பிட்டு விட்டார்!.. - என்றான்.

தந்தைக்கும் தாய்க்கும் தலை சுற்றியது.

தினந்தோறும் நைவேத்தியத்தைக் கோயிலில் விநியோகம் செய்து விட்டு பிரசாதம் கேட்கும் பிள்ளையிடம், பிள்ளையார் சாப்பிட்டு விட்டார் என்று சொன்னேனே!.. அதை அப்படியே மனதில் வைத்துக் கொண்டானோ!.. ஸ்வாமியாவது வந்து சாப்பிடுவதாவது!..- தவித்தார் குருக்கள்.

அதற்குள்ளாக  குருக்கள் மகனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று ஊர் திரண்டு வந்து விட்டது.

ஒருவழியாக இரவாகி பொழுதும் விடிந்தது. குருக்கள் ஒரு முடிவெடுத்தார்.

திருநாரையூர் கணபதி
அதன்படி மறுநாள் காலையில் மீண்டும் - நம்பியின் கைகளில் நிவேத்ய பட்சணங்கள் கொடுக்கப்பட்டன.  துள்ளிக் கொண்டு செல்லும் செல்லப் பிள்ளையைப் பின் தொடர்ந்தனர் பெற்றோர். குருக்கள் மகனுக்கு உண்மையில் என்ன ஆயிற்று எனத் தெரிந்து கொளும் ஆவலுடன் ஊரும் பின் தொடர்ந்தது.

கோயிலைத் திறந்து சந்தோஷமாக அபிஷேக ஆராதனைகளைச் செய்தான் நம்பி. சந்நிதிக்குத் திரையிட்டான். சாம்பிராணி வாசம் எங்கும் கமழ்ந்தது. தேங்காய் உடைபடும் சத்தம் கேட்டது. கண கண என மணியோசையும் கேட்டது. சற்று நிசப்தம்!..

ஆவலுடன் பிள்ளையாரை வரவேற்கும் நம்பியின் குரல் கேட்டது.

ஊரும் உறவும் ஆவலுடன் ஒளிந்திருந்து நோக்குவதைக் கண்டு நகைத்த விநாயகப் பெருமான் - ஒரு கணம் அனைவருக்கும் தரிசனம் தந்து மறைந்தார்.

தன் பிள்ளை சமர்ப்பித்த நிவேத்யத்தை  தலைப்பிள்ளை உண்டு மகிழ்வதைக்  கண்டு பெற்ற மனம் குளிர்ந்தது. மகனைக் கட்டியணைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர் தாயும் தந்தையும்.

அற்புதம் நிகழ்ந்ததைக் கண்ட மக்கள் ஆரவாரித்தனர். அகமகிழ்ந்து கொண்டாடினர்.

நம்பியின் அன்புக்கு இரங்கிய விநாயகப் பெருமான் - சகல கலைகளையும் நம்பிக்குப் பிரசாதித்தார்.

என்னை நினைந்தடிமை கொண்டுஎன் இடர்கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் - புன்னை
விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண்
அரசுமகிழ் அத்திமுகத் தான். 

நம்பி - விநாயகரைப் போற்றி இரட்டை மணிமாலை பாடினார். மேலும் பல ஞானப் பனுவல்களையும் இயற்றினார்.

நம்பியும் - நம்பியாண்டார் நம்பி என புகழப்பட்டார்.

நாளடைவில் விஷயம் நாடாண்ட வேந்தனுக்குச் சென்றது. ஒருகணம் திகைத்த மன்னவன் பெருமகிழ்ச்சியுடன் ஆனந்தக் கூத்தாடினான்.

அவன் - திருச்சிற்றம்பலமுடைய சிவபெருமானுக்கு தக்ஷிண மேரு எழுப்பிய சிவபாத சேகரன் - ஸ்ரீராஜராஜ சோழ மாமன்னன்!..


வண்டி வண்டியாக - பழங்களையும் பல்வகையான பட்சணங்களையும் பொன் மணி முத்து என சீர்வரிசைகளையும் ஏற்றிக் கொண்டு தஞ்சையில் இருந்து திருநாரையூருக்கு வந்தான்.

நம்பியாண்டார் நம்பியைப் பணிந்த மும்முடிச் சோழ வேந்தன்  பிள்ளையாரை வணங்கி நின்றான்.

பெருமான் திருவமுது செய்தருளல் வேண்டும்!.. - மன்னன் வேண்டிக் கொண்டான். பிள்ளையார் பெருங்கருணையுடன் அனுக்கிரகித்து அருளினார்.

மாமன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மனம் நிறைந்து நின்றான்.

ஐயனே!.. என் ஆவல் ஒன்றினை நிறைவேற்றித் தருதல் வேண்டும்!..

சக்ரவர்த்தியின் விண்ணப்பம் பெருமானின் முன் சமர்ப்பிக்கப்பட்டது.

மன்னனின் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்த விநாயகப்பெருமான் -

நீ தேடி வந்த திருமுறைச் சுவடிகள் - தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் தென் மேற்கு மண்டபத்தில்  கிடைக்கும்!.. -  என திருவாக்கு அருளினார்.

திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தப்பெருமானும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் பாடியருளிய தேவாரத் திருப்பதிகங்கள் பற்றிய செய்திகளைத் தேடி வந்த மன்னனுக்கு நல்லருள் புரிந்தவர் நாரையூர் பிள்ளையார். 

பின்னும் - தில்லைத் திருக்கோயிலின் உள்ளே  தென்மேற்கு மண்டபத்தில் எந்த அறையில் என்று தெரியாமல் திகைத்தபோது மீண்டும் விநாயகர் அடையாளம் காட்டியருளினார்.

இன்றும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் மேற்கு பிரகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி விளங்குகின்றது.

அதற்குப் பிறகு பலவாறு போராடி - பூட்டிக் கிடந்த அறைக்குள் செல்லரித்துக் கிடந்த ஏடுகளைக் கண்ணீருடன்  சேகரித்த இராஜராஜ சோழன், திருநாரையூர் நம்பியைக் கொண்டு அவற்றைத்  திருமுறைகளாய்த் தொகுக்கச் செய்தான்.

இன்று நாம் பாடி மகிழும் தேவாரத் திருப்பதிகங்கள் நமக்குக் கிடைக்கக் காரணமானவர் -  திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார்.

தவறு செய்த கந்தர்வன் நாரை வடிவம் பெற்று சாபம் தீர சிவபூஜை செய்த திருத்தலம் - திருநாரையூர்.

இறைவன் ஸ்ரீ சௌந்தர்யேஸ்வரர். அம்பிகை  ஸ்ரீ திரிபுரசுந்தரி.
தல விருட்சம் - புன்னை. தீர்த்தம்  காருண்ய தீர்த்தம்.


ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார்.

பொள்ளாப் பிள்ளையார் எனில் உளி கொண்டு செதுக்கப்படாத - சுயம்பு என்பது பொருள்.

ஆனால்  - நல்லது செய்த பிள்ளையாருக்கு நம்மால் ஆன காணிக்கை - என்று பொல்லாப் பிள்ளையார் என தவறாக திரித்துச் சொல்கின்றனர்.

ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் சுவாமிகளும் தொழுது வணங்கிய தலம். 

கிழக்கு நோக்கிய கம்பீரமான மூன்று நிலை இராஜகோபுரத்துடன் கூடிய திருக்கோயில்.

சுவாமி சந்நிதி மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுடன் - நம்பி, நாரை, இராஜராஜ சோழன் திருமேனி கொண்டு விளங்குகின்றனர்.

பொள்ளாப் பிள்ளையார் மகாமண்டபத்தில் நம்பியாண்டார் நம்பியும், இராஜராஜ சோழனும் காட்சி தருகிறார்கள்.

கோயிலுக்கு அருகில் நம்பியாண்டார் நம்பி அவதரித்த இல்லம் இருந்த இடத்தில் நம்பியாண்டார் நம்பியின்  சந்நிதி விளங்குகின்றது.

ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார்
விநாயகப் பெருமானுக்கு - நம்பி திருஅமுதளித்த நிகழ்வினைப் போற்றி வள்ளலார் ஸ்வாமிகள்  - திருஅருட்பாவில் புகழும் திருப்பாடல் இதோ!..

நாரையூர் நம்பி அமுதுகொண் டூட்ட நற்றிரு வாய்மலர்ந் தருளிச்
சீரைமே வுறச்செய் தளித்திடும் நினது திருவருள் நாள்தொறும் மறவேன்
தேரைஊர் வாழ்வும் திரம்அல எனும்நற் றிடம்எனக் கருளிய வாழ்வே
வாரைஊர் முலையாள் மங்கைநா யகிஎம் வல்லபைக் கணேசமா மணியே!.

தினசரி ஐந்துகாலப் பூஜைகளுடன் - சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி, நவராத்திரி, கிருத்திகை, கந்த சஷ்டி , பிரதோஷம், மகா சிவராத்திரி  முதலிய விசேஷங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. 

திருநாரையூர் எனும் திருத்தலம், சிதம்பரம் – காட்டுமன்னார் கோவில் சாலையில் உள்ளது.

வையகத்தோர் ஏத்த மதில்நாரை யூர்மகிழ்ந்து
பொய்யகத்தார் உள்ளம் புகலொழிந்து - கையகத்தோர்
மாங்கனிதன் கொம்பு அண்டம் பாசமழு மல்குவித்தான்
ஆங்கனிநம் சிந்தையமர் வான்.

அன்பினுக்கு இரங்கும் அருட்கடல்!.. 
ஐங்கரனின் திருக்கழல் சிந்தை செய்வோம்!..

ஓம் கம் கணபதயே நம:
* * *

திங்கள், ஆகஸ்ட் 25, 2014

அருள்மொழி அரசு

படித்தவர் முதல் பாமரர் வரை அனைத்துத் தரப்பினரும்  அவருடைய இனிய கதாபிரசங்கங்களைக் கேட்பதற்குக் காத்துக் கிடப்பதில் இன்புற்றனர்.

அவரது இலக்கியச் சொற்பொழிவுகளைக் காதாரக் கேட்டு இன்புற்றோர் ஆயிரம் ஆயிரம்!.. 

அவர் சொல் கேட்டு தம்முடைய வாழ்வினைத் திருத்திக் கொண்டவர் ஆயிரம் ஆயிரம்!..

அவர் தம் நல்லுரைகளைச் செவிமடுத்து - தம் வாழ்விவினைச் செம்மைப் படுத்திக் கொண்டவர் ஆயிரம் ஆயிரம்!..


திரு முருக எனும் உயர்ந்த திருப்பெயரினால் - சிறப்பிக்கப்பட்ட தமிழ்க்கடல்!..

அந்தத் தமிழ்க் கடலைத் தான் தமிழ் கூறும் நல்லுலகம் அருள்மொழி அரசு என்றும் திருப்புகழ் ஜோதி என்றும் சிறப்பித்துப் பாராட்டி மகிழ்ந்தது!..

திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்!..

ஸ்வாமிகளின் திருப்பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே ஐம்புலன்களிலும் ஆனந்த வெள்ளம் பாயும்!..

அப்போதெல்லாம் - இந்த அளவிற்கு கல்யாண மண்டபங்கள் எங்கும் கிடையாது.

பெரும்பாலும் ஆலய வளாகங்களே அவரது சொற்பொழிவுகளுக்குக் களங்களாயின.  நாளும் ஏதாவது ஒரு ஊரின் மாலைப் பொழுது  அவரால் மங்களகரமானது என்றே கூற வேண்டும்!..

இன்னிசைச் சொற்பொழிவினைக் கேட்கத் திரண்டிருக்கும் மக்கள் -  ஸ்வாமிகளின் வருகையினைக் கண்டு, மழை முகம் கண்ட பயிர் போல மகிழ்வார்கள் என்றால் அதில் வியப்பில்லை.

சுவாமிகள் - திருமுருகாற்றுப்படை, தேவாரம், திருவாசகம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களைத் தட்டுத் தடங்கல் இன்றி இசையோடு பாடி விரிவுரை வழங்கும் போது - கூடியிருக்கும்  மக்கள் ஆனந்தத் தேன் உண்ட வண்டு என மெய்மறந்து கேட்டுப் பரவசம் எய்தியதை - இன்னும் தமிழுலகம் மறந்திருக்காது.

வேழமுடைத்து மலைநாடு மேதக்க
சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல் தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து.


- என்பது ஔவையார் திருவாக்கு. அவ்வண்ணமே ,

தொண்டை நன்நாட்டில் காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையிலுள்ள காங்கேயநல்லூரில் அவதரித்தார்.

தந்தை சிவத்திரு மல்லையதாசர். இசையிலும் இயலிலும் வல்லவர். தாயார் கனகவல்லி அம்மையார். செங்குந்த வீர சைவ மரபினர்.

ஸ்வாமிகளின் பிறந்த நாள் -  ஆகஸ்ட் 25 1906.

பெற்றோர் இட்ட பெயர் - கிருபானந்தவாரி என்பதாகும்.

மூன்று வயதளவில் தந்தையே குருவாக இருந்து எழுத்தறிவித்தார். பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பாடங்களைக் கற்பித்தார்.


பன்னிரண்டு வயது நிரம்பியபோதே தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பதினாயிரம் பாடல்கள் மனப்பாடம் ஆகிவிட்டது என்றும், அவை தான் தம் வாழ்நாளில் அமைந்த பெருஞ்செல்வம் என்றும் வாரியார் ஸ்வாமிகள் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்வாமிகள்  வெண்பாக்கள் இயற்றுவதில் வல்லவர்.

தன் தந்தையின் வழியில் வாரியார் ஸ்வாமிகள் தமது பதினைந்தாம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். பத்தொன்பது வயதிலிருந்தே தனியாகப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார்.

ஸ்வாமிகள்  விரிவுரை செய்யும் பொழுது தேவார திருவாசக - திருப்புகழ் பாடல்களை  இன்னிசையுடன் பாடுவது எத்தனை ஆயிரம் முறை கேட்டாலும் தித்திப்பது.

ஸ்வாமிகளுக்கும் உரிய வயதில் திருமணம் நிகழ்ந்தது. இல்லத்தரசியார் - அமிர்தவல்லி அம்மையார்.

ஸ்வாமிகளை ஆட்கொண்ட வள்ளல் - குமார வயலூர் முருகன்!..


வயலூர் முருகனின் திருப்பெயரைச் சொல்லியபடிதான் ஸ்வாமிகள் பேருரைகளைத் தொடங்குவார்.

பற்பல திருக்கோயில்களுக்கும் திருப்பணி செய்து அரும்பணியாற்றினார்.

ஸ்வாமிகளின் காலத்திலேயே - வயலூர் ராஜ கோபுரத்தில் ஸ்வாமிகள் முருகப்பெருமானை வணங்கும் நிலையில் சுதை சிற்பம் அமைக்கப்பட்டது.

இன்றும் வயலூர் திருக்கோயிலின் முன்மண்டபத்தில் ஸ்வாமிகளின் பெரிய திரு உருவப்படத்துடன் கூடிய தியான மண்டபம் விளங்குகின்றது.

அவரது சீரிய முயற்சியினால் - பலநூறு திருக்கோயில்கள் மீண்டும் பொலிந்து நின்றன.

பேசுவதற்கு மேற்கொண்ட பொருள் எதுவானாலும்  அதனுடன் -

திருக்குறள், ஔவையின் அருந் தமிழ், சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திவ்ய பிரபந்தம், நீதிநெறி விளக்கம், நாலடியார்  - என அனைத்து ஞான நூல்களின் சாறெடுத்து வழங்கிய ஞானச்சுடர்!..

ஸ்வாமிகளுடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் எளிய மக்களை ஒட்டியே அமைந்திருந்தது. அதன் காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவர் ஆனார்.

ஸ்வாமிகளின் சொற்பொழிவுகளினால் பாமரர்களுக்கும் ஆன்மிகம்  புரிந்தது.

வேத வேதாந்த சித்தாந்தக் கருத்துகளின் நுணுக்கங்களை எளிமையாக  வழங்குவதில் அவருக்கு ஈடு இணையில்லை!..


தமிழோடு சைவ சித்தாந்தத்தில் பெரும் புலமை பெற்று விளங்கிய ஸ்வாமிகள் - அற்புதமான நினைவாற்றலும் நாவன்மையும் பெற்றவர்.

ஸ்வாமிகள் நகைச்சுவையுடன் நடைமுறைச் செய்திகளை நயம்படச் சொல்வதில் வல்லவர்.

அனைவரையும் கவரும் விதமாக சொற்பொழிவுகளின் ஊடாக அவர் கூறும் சின்னச் சின்னக் கதைகள் ரசனையானவை.


வாரியார் ஸ்வாமிகள் இசையில் வல்லவர். வீணை வாசிப்பதில் தேர்ச்சி பெற்றவர்.

சிவாகம விதிப்படி தீட்சை பெற்றுக் கொண்டவர். தம் வாழ்வில் தகுதியுடைய பலருக்கும் சிவதீட்சை வழங்கியிருப்பதாக அறிய முடிகின்றது.

வெறும் கதைகளை மட்டும் அவர் மக்களிடம் பரப்பவில்லை. எளிய மக்களையும் சிந்திக்கத் தூண்டினார்.   

அவருடைய சொற்பொழிவுகளால் மக்களுக்குள் தெய்வ பக்தி வளர்ந்தது.

மக்கள் ஞான மார்க்கத்தில் செல்வதற்குத் தலைப்பட்டனர். 
 
ஸ்வாமிகள் திருப்புகழ் அமிர்தம் எனும் திங்கள் இதழினை நடத்தினார்

அந்த இதழில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரை, கந்தர் அலங்காரம், இறை நெறிக் கதைகள், அறநெறிக் கட்டுரைகள்  - என  ஸ்வாமிகள் வெளியிட்டார்.

வாரியார் ஸ்வாமிகள் - ஓரளவு படிக்கத் தெரிந்த எளிய மக்களுக்கும் புரியும் படியான இலக்கியத் தரம் வாய்ந்த ஆன்மிகக்  கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார்.

வாரியார் ஸ்வாமிகளின் தமிழ் நடை தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போல தென்மலைத் தென்றல் போல இனிய நடையில் அமைந்தவை. அவற்றுள் இராமயணம், மகாபாரதம், கந்தபுராணம் மற்றும் பெரிய புராணக் கதைகள்  சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.


சிறு குழந்தைகளும் படித்து இன்புற - புராண இதிகாச நீதி நெறிக் கதைகளை எளிமையாக அவர்வழங்கினர்.

சண்முகப்பெருமானை நேரில் தரிசித்த மகான்  - பாம்பன் சுவாமிகள்.  அவர்தம் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் ஸ்வாமிகள் எழுதியுள்ளார்.

காதாரக் கேட்டு இன்புறுவதற்கு காவியச் சொற்பொழிவுகள், மனமாரப் படித்து இன்புறுவதற்கு கதை, கட்டுரை  என  இலக்கிய இன்பத்தை இறை இன்பமாக வழங்கியவர் வாரியார் ஸ்வாமிகள்!..

வாரியார் ஸ்வாமிகள் நல்லதொரு ஞானாசிரியர்.
பல புராண நூல்களுக்கு விளக்கவுரை எழுதிய நூலாசிரியர்.
மிகச்சிறந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர். இலக்கியப் பேருரையாளர்.

வாரியார் சுவாமிகள் நிகழ்த்திய  திருப்புகழ் விரிவுரைகளைச் செவிமடுத்து இன்புற்ற மக்களுள்  எளியேனும் ஒருவன்!..


வளரும் காலத்தில் ஸ்வாமிகளின் இலக்கியப் பேருரைகளை - தொடர் சொற் பொழிவுகளை அருகிருந்து கேட்டதாலேயே - மனம் பண்பட்டது. வாழ்க்கை மேம்பட்டது.

அப்போதெல்லாம் தஞ்சை இராஜராஜ சமய சங்கத்தினரால் - தஞ்சை பெரிய கோயிலில் ஸ்வாமிகளின் இலக்கியப் பேருரைகள் தொடர் சொற்பொழிவுகள் என நிகழும்.

தஞ்சை ராஜா சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் பயின்ற காலம் அது.
இனிய மாலைப் பொழுதுகள் எல்லாம் பெரிய கோயிலிலேயே!..

ஸ்வாமிகள் எழுதிய நூல்களில் - ஸ்வாமிகளின் கையொப்பம் பெற்றதும் எளியேன் முருகனைப் பற்றி எழுதிய பாடலைப் படித்துப் பார்த்து ஆசி கூறி கையொப்பமிட்டதும் என்றும் பசுமையான நினைவுகள்..

ஸ்வாமிகளின் பாதம் தொட்டு வணங்கி - அவர்தம் திருக்கரத்தினால் - எளியேன் திருநீறு பெற்றது பெரும் பேறு!..

என் மகளுக்கும் ஸ்வாமிகள் திருநீறு இட்டு வாழ்த்தி இருக்கின்றார்!..

அமுதத் தமிழை அள்ளி வழங்கிய ஸ்வாமிகளைப் பற்றி இன்னும் எழுதிக் கொண்டே இருக்கலாம்.

அதற்குக் காலம் துணை செய்ய வேண்டும்.

ஸ்வாமிகளின் பிறந்தநாள் இன்று!..
தமிழ் கூறும் நல்லுலகில் அவர்தம் திருப்பெயர் 
என்றென்றும் நிலைத்திருக்கும்!..
குருநாதர் திருவடிகள் போற்றி!.. போற்றி!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..
* * *

ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014

அதிபத்த நாயனார்

செயற்கரிய செய்து சீர் பெற்றோரை  நாயன்மார்கள் என்றனர் பெரியோர்.

அந்த வகையில் சைவம் குறிக்கும்  நாயன்மார்கள் அறுபத்து மூவர்.  

அத்தகைய பெருமக்களுள் ஒருவர் - அதிபத்த நாயனார்.

விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்!.. - என்று சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்  திருத் தொண்டர் திருத்தொகையில் இவரைப் போற்றுகின்றார். 

ஏன் !.. எதனால்!.. 


பொன்னி நதி நலம் கொழிக்கும் சோழ வளநாட்டில் காவிரியின் கரைகளில் தேவாரப் பதிகம் பெற்று விளங்கும் தலங்களுள் திருநாகைக் காரோணமும் ஒன்று. 

திருநாகைக் காரோணம் காவிரியின் தென்கரைத் திருத்தலம் ஆகும். 

மிகப் பழமையானது. பல்வேறு புராண வரலாறுகளைக் கொண்டது.

நாகராஜன் வழிபட்ட சிறப்புடையதால் நாகப்பட்டினம் என்பதும், ஊழிக் காலத்தில் அனைத்தும் இங்கு ஒடுங்குவதால் இத்தலம் சிவராஜதானி என்பதும் தலபுராணக் குறிப்பு.


காஞ்சி, கும்பகோணம், நாகை ஆகிய மூன்று தலங்களில் மட்டுமே -  காயாரோகணர் என்ற திருப்பெயருடன் - ஈசன் திகழ்கின்றனன்.


கருந்தடங்கண்ணி எனப் புகழப்படும் அன்னை ஸ்ரீ நீலாயதாக்ஷியின் சந்நிதி சக்தி பீடங்களுள் ஒன்றென விளங்குவது.

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, ஆரூர் கமலாயதாட்சி, நாகை நீலாயதாட்சி - என்பது சொல்வழக்கு.

திருநாகைக் காரோணம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. நாகையில் சுந்தர விடங்கர். வீசி நடனம்.

தீர்த்தம் - புண்டரீக தீர்த்தம். தலவிருட்சம் - மாமரம்.

சுந்தர மூர்த்தி நாயனார் - குதிரை, நவரத்னங்கள், பொன்மணிகள், முத்து மாலை, பட்டு ஆடைகள் முதலிய ஐஸ்வர்யங்களை வேண்டிப் பெற்ற தலம்.

நாகப்பட்டினம் என்று தற்போது வழங்கப் பெறும் - கடல் நாகைக் காரோணம் சோழர்களின் துறைமுகப் பட்டினமாக விளங்கிய சிறப்பினை உடையது.

யானைகளையும் மணிகளையும் முத்துக்களையும் மயிற்தோகைகளையும் அகில் சந்தனம் மிளகு ஏலம் - என இவற்றை வாங்குதற் பொருட்டும் உயர் இன குதிரைகள், கண்கவர் பட்டுத் துகில்  இவற்றை விற்பதன் பொருட்டும் எழுந்த ஒலியினால் மகிழ்ந்திருந்தது  - நாகை.

வலைகளைக் கடலுக்கு இழுத்துச் செல்வோர்கள் எழுப்பிய ஒலியினாலும் கடலினின்று கரைக்கு ஏற்றிய வெண்ணிறச் சங்குகளையும் சிறந்த மீன்களை விலை கூறி விற்பவர்கள் எழுப்பிய ஒலியினாலும் நிறைந்திருந்தது - நாகை.

இத்தகைய அரும்பெரும் சிறப்புகளை உடைய கடல் நாகைக் காரோணத்தின் கடற்கரையோரத்தில் செழுமையுடன் விளங்கிய மீனவர் குப்பங்களுள் ஒன்று நுளைப்பாடி.

அங்கே - மீனவப் பெருங்குலத்தில் பிறந்தவர் - அதிபத்தர்.

அதிபத்தர்  இளமை முதற்கொண்டே சிவபக்தி உடையவராக விளங்கினார். 

நாகையில் ஆலயம் கொண்டு விளங்கும் பெருமானிடம் அளவற்ற அன்பு கொண்டு நாளும் பல நல்லறங்கள் புரிந்தார்.  

தனக்கு விதிக்கப்பட்ட வாழ்கையினின்று வழுவாது நேர்மையுடன்  தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைத்தார்.

பல மீனவக் குடும்பங்களுக்குத் தலைவராக விளங்கினார் அதிபத்தர்.

வலை வீசிப் பிடித்த மீன்களைக் குவித்து -  அவற்றைத் தரம் பிரித்து - நாடி வருவோர்க்கு நியாயமாக விற்பனை செய்து, நேரிய வழியில் பொருளீட்டி பெருஞ்செல்வத்தினை உடையவராய் - அது கொண்டு தன்னைச் சார்ந்தவர் பலரையும் ஆதரித்து அதனால் உயர்ந்தவராய் விளங்கினார்.


நாளும் தன் கூட்டத்தினருடன் கடலோடி வலை வீசி மீன் பிடிக்குங்கால் - வலையினில் அகப்படும்  முதல் மீனை சிவார்ப்பணம் என்று கடலிலேயே விட்டு விடுவது அவரது பழக்கமாக இருந்தது. 

அது சாதாரண மீனாக இருந்தாலும் சரி.. உயர்தர மீனாக இருந்தாலும் சரி!.. 

மீன்பாடு அதிகமானாலும் குறைந்தாலும் தனது பழக்கத்தில் வழுவாதவராக விளங்கினார் - அதிபத்தர்.

இளமையிலிருந்து இவரைப் பற்றி அறிந்திருந்த உற்றாரும் மற்றோரும் இவரது பக்தியைக் கண்டு வியந்து  - நம் குலத்தில் இப்படியோர்  மகன் பிறக்க நாம் என்ன தவம் செய்தோமோ!.. என்று மகிழ்ந்திருந்தனர்.

ஒருகட்டத்தில் இவரது பக்தியை சோதிக்க முனைந்தது எல்லாம்வல்ல சிவம்.

அதன் விளைவு - கடலில் மீன்பாடு குறைந்தது. 

விரிந்து பரந்து விளங்கிய கடலில் நீரோட்டம் உணர்ந்து ஆங்காங்கே சென்று வலைகளை வீசினாலும் - ஒற்றை மீன் மட்டுமே கிடைத்தது.

அச்சமயத்தில் அந்த மீனையும் சிவார்ப்பணம் என்று கடலில் விட்டு விட்டு வெறும் கையோடு கரைக்குத் திரும்பும்படி ஆயிற்று. 

வளங்கொழித்து விளங்கிய மீனவர் குடும்பங்கள் வறுமையில் வாடின. அதிபத்தர் தனது பக்தியை சற்றும் விட்டுக் கொடுக்காதவராகி - தனது கைப் பொருளைக் கொண்டு - தன்னைச் சார்ந்திருந்த மக்களை வாழவைத்தார். 

இதை அறிந்த ஏனைய குப்பத்தினர் - ஏளனஞ்செய்து நகைத்து மகிழ்ந்தனர்.

மனந்தளராத அதிபத்தர் வழக்கம் போல கடலுக்குச் சென்று வலை வீசினார். 

அன்று வழக்கத்துக்கு மாறாக -  தங்க மீன் ஒன்று வலையில் சிக்கியது.  

பசும் பொன்னாலும் ஒளி மிக்க மணிகளாலும் ஆனதோ - இது!.. - என காண்பவர் திகைக்கும் வண்ணமாக இருந்தது அந்த மீன்.

பல நாள் பஞ்சத்தில் தவித்திருந்த மீனவர்கள் - இன்றுடன் நம் கவலைகள் எல்லாம் தீர்ந்தன!.. - என ஆனந்தம் கொண்டனர். ஆனால் -

இந்த மீனுக்கு ஈடாக இவ்வுலகில் யாதொன்றும் இல்லை!.. என அந்தப் பொன் மீனைக் கையிலேந்தி மகிழ்ந்தார் அதிபத்தர் . 

இப்பொன்மீன் எம்மை ஆளுடைய நாயகனின் பொற்கழல் சேர்க!.. - என்று அதனை கடலில் விடுதற்கு முனைந்தார். 

உடனிருந்த மீனவர்கள், வறுமையால் தளர்ந்திருக்கும் வேளையில் இதனைக் கடலில் விட வேண்டாம்!.. -  எனக் கூறித் தடுத்தனர். 

ஆனால் -  சிவம் எனும் செம்மையில் ஒன்றியிருந்த அதிபத்தர் சிவார்ப்பணம் என்று சொல்லி, அந்தத் தங்க மீனைக் கடலில் விட்டு விட்டார். 


அந்த வேளையில் - அவரது பக்திக்கு இரங்கிய சிவபெருமான் அம்பிகையுடன் விடை வாகனத்தில் திருக்காட்சி நல்கி முக்தி அளித்தார்.

செயற்கரிய செய்வார் பெரியர்  - எனும் வேத வாக்கின் படி - பின்னாளில் அதிபத்தரைப் போற்றி வணங்கினார் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்.

நாமும் கைகூப்பி வணங்கிட -  நாயன்மார்களுள் ஒருவராக இடம் பெற்றார் அதிபத்தர்.

அதிபத்தர் குருபூஜை விழா - ஆவணி மாத ஆயில்ய நட்சத்திரம். 

அதன்படி இன்று (ஆகஸ்ட்/24) நாகையில் அதிபத்தர் குருபூஜை நடக்கிறது.

இன்று அதிபத்தர் உற்சவராக ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளி, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வார். அப்போது மீனவர்கள் இரண்டு தங்க மீன்களை வலையில் வைத்து கடலில் பிடித்ததைப் போல பாவனை செய்வர்.

நன்றி - நாகை சிவம்
அவ்வேளையில்  சிவபெருமான், கடற்கரையில் எழுந்தருள - அவருக்கு அதிபத்தர் வலையில் கிடைத்த தங்க மீனைச் சமர்ப்பித்து வழிபடுவார்.

நன்றி - நாகை சிவம்
அந்த வேளையில்  சிவபெருமான் ரிஷப வாகனத்தில்  திருக்காட்சி நல்குவதாக  வைபவம் நிகழும்.

மாலை நேரத்தில் - நாகை கடற்கரையில் நிகழும் விழாவின் போது மட்டுமே தங்க மீனை பார்க்க முடியும்.

அதிபத்தர் வாழ்ந்த நுளைப்பாடி இன்று நம்பியார் நகர் என விளங்குகின்றது.

 
நாகை எல்லைக்குள்,  - புராணச் சிறப்பும், பழமையும் வாய்ந்த பன்னிரண்டு சிவாலயங்கள் உள்ளன.

ஸ்ரீ நீலாயதாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ காயாரோகண ஸ்வாமி,
மஹாவிஷ்ணு வழிபட்ட அழகேஸ்வரர்,
நான்முகன் வழிபட்ட மத்யபுரீஸ்வரர்,
இந்திரன் வழிபட்ட அமரேந்திரேஸ்வரர்,

மீனாட்சிசுந்தரேஸ்வரர் (அக்கரைக் குளம்), 
புண்டரீக முனிவர் வழிபட்ட ஆதி காயாரோகணேஸ்வரர்,
ஆதிசேஷன் வழிபட்ட நாகேஸ்வரர்,
வீரபத்ரர் வழிபட்ட விஸ்வநாதர்,

அகஸ்தியர் வழிபட்ட அகஸ்தீஸ்வரர் (வெளிப்பாளையம்)
தேவர்கள் வழிபட்ட அமிர்தகடேஸ்வரர்,
பராசரர் வழிபட்ட கயிலாய நாதர்,
வேதங்கள் வழிபட்ட காசி விஸ்வநாதர்,

மகாசிவராத்திரியின் போது மேற்குறித்த பன்னிரண்டு ஆலயங்களையும் ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர்  தரிசிப்பர். 

ஸ்ரீ காயாரோகண ஸ்வாமி திருக்கோயிலில் அதிபத்தருக்கு சந்நிதி உள்ளது. 

திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் - என தேவார மூவராலும் பாடல் பெற்ற திருத்தலம்.

ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச்
சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான்
பேணி வழிபாடு பிரியாது எழுந்தொண்டர்
காணுங் கடல்நாகைக் காரோ ணத்தானே!..(1/84)
திருஞான சம்பந்தர்.

அதிபத்த நாயனார் போல வாழ நம்மால்  இயலாவிடினும்  - உண்ணும் போது முதற்கவளத்தினை சிவார்ப்பணம் செய்து வழிபடுவோம்.

சீர் கொண்ட சிவம் சிந்தையில் சுடராக நிற்கும்!..

விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க்கு அடியேன்!..
அதிபத்தர் திருவடிகள் போற்றி!.. போற்றி!..
சிவாய திருச்சிற்றம்பலம்
* * *

வெள்ளி, ஆகஸ்ட் 22, 2014

முருகனுக்குத் திருநாள்

ஆண்டுதோறும் திருவிழாக்கள் நிறைந்து காணப்படும் திருக்கோயில்களுள் திருச்செந்தூரும் ஒன்று.

ஐப்பசி மாத சஷ்டிப் பெருவிழாவுடன், ஆவணியிலும் மாசியிலும் சிறப்புடன் திருவிழாக்கள் நிகழ்கின்றன.

ஆவணி மற்றும் மாசி மாத திருவிழாக்களின் போது ஷண்முக நாதன் மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சியருள்கின்றான். 

விழாவின் ஏழாம் நாளன்று மாலையில்  சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமானாகவும்  மறுநாள்  அதிகாலையில் வெண் பட்டு அணிந்து நான்முகனாகவும் திருக்காட்சி அருள்கின்றனன்.

மதிய வேளையில் பச்சைப் பட்டு  சாத்தி பெருமாள் அம்சத்தில் திருக்காட்சி அளிக்கின்றான். 


முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கை தொழுவேன் நான். 
நக்கீரர் - திருமுருகாற்றுப்படை.

அம்மையப்பனின் ஆசிகளுடன் - சூரபத்மனுடன் போர் புரிய வந்த முருகன் சிவ பூஜை செய்த திருத்தலம். 

பின்னும் முருகப்பெருமான் சூரனை வென்று ஆட்கொண்டபின்பு - மீண்டும் சிவபூஜை செய்தான். 

இந்த கோலத்திலேயே முருகன் திருமூலஸ்தானத்தில் திகழ்கின்றான். 


சிவயோகி போல ஜடாமகுடம் தரித்திருக்கும் முருகன் வலது கையில் தாமரை மலரும் சக்தி ஆயுதமும் ஜபமாலையும் கொண்டு விளங்குகின்றான்.

முருகன் வழிபட்ட  சிவலிங்கம் கருவறையின் இடது புறம் பின்புற சுவரில் திகழ்கின்றது.

மூலவரான ஸ்ரீசுப்பிரமணியன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் திகழ்கின்றார்.

தெற்கு நோக்கி தனி சந்நிதியில்உற்சவர் ஸ்ரீசண்முக நாதன். மூலவருக்குரிய பூஜை மற்றும் மரியாதைகள் இங்கு செய்யப்படுகின்றது.

திருக்குமரனின் படை வீடுகளுள் திருச்செந்தூர் மட்டுமே  கடற்கரையில் விளங்குகின்றது. 

ஆனாலும் - திருச்செந்தூரும்   மலைக்கோயிலே ஆகும். 


திருக்கோயில் கடற்கரையில் இருக்கும் சந்தன மலையில் தான் இருக்கிறது.

காலவெள்ளத்தில் சந்தன மலை மறைந்து விட்டது. ஆயினும் திருக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் பெருமாள் பள்ளி கொண்டிருப்பது சந்தன மலையில் தான்!.. 

திருக்கோயிலுக்கு வடபுறம் விளங்கும் சந்தன மலையில் தான் வள்ளி குகை அமைந்துள்ளது. ஒருவர் மட்டுமே நுழைந்து செல்லும் சிறு வழியினைக் கொண்ட சிறு குகைக்குள் வள்ளியம்மை விளங்குகின்றாள். நாளும் இவளுக்கு வழிபாடுகள் நடக்கின்றன. 

எங்கள் குடும்பம் கடந்த பத்து வருடங்களாக  - வருடந்தோறும் சென்று வழிபடும் திருத்தலங்களுள் திருச்செந்தூரும் ஒன்று. 

குலதெய்வம் வீற்றிருக்கும் உவரி திருத்தலத்திற்குச் செல்வதற்கு முன் - அதிகாலையில் திருச்செந்தூர் கடலிலும் நாழிக் கிணற்றிலும் நீராடி ஷண்முகனின் சந்நிதியில் வழிபட்டு வள்ளி தெய்வயானை சந்நிதிகளில் சாம்பிராணி தூபமிட்டு வணங்குவதே பெரும் பேறு!.  


சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
வேல்பட்டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
கால்பட்டழிந்தது இங்குஎன் தலைமேல் அயன் கையெழுத்தே!..
அருணகிரிநாதர் - கந்தரலங்காரம்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா - இம்மாதம் பதினாறாம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக நடைதிறக்கப்பட்டு - மூலவருக்கு விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும்,  உதயமார்த்தாண்ட தீபாராதனையும் நடைபெற்றன.

அதிகாலையில் கொடிப்பட்டமானது வெள்ளிப் பல்லக்கில் வைத்து ஒன்பது சந்நிதிகளின் வழியாக கொண்டு வரப்பட்டு பஞ்சவாத்தியங்கள் முழங்க, வேத பாராயணங்களுடன் திருக்கோயில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.

அன்று மாலை - அப்பர் சுவாமிகள் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப் பணி செய்து - இரவில் ஸ்ரீபலிநாயகர் அஸ்திர தேவருடன் தந்தப் பல்லக்கில் எழுந்தருளி ஒன்பது சந்நிதிகளில் முறை செய்து  திருவீதி உலா  நிகழ்ந்தது.


ஆகஸ்ட்/20 ஐந்தாம் திருநாள். மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது. சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா  எழுந்தருளினர்.

ஆகஸ்ட்/21 ஆறாம் திருநாள். காலையில் கோரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா நடைபெற்றது.

இன்று ஆகஸ்ட்/22.  ஏழாம் திருநாள். அதிகாலை ஐந்து மணிக்கு மேல்  சண்முகப் பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்ந்து -  ஆறுமுகப் பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் தரிசனம் அருளி, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை அடைகிறார்.

அங்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை. மாலை நாலரை மணிக்குமேல் ஸ்ரீஷண்முகப் பெருமானுக்கு - சிவப்பு சாத்தி தங்கச் சப்பரத்தில்  எழுந்தருளி வீதி உலா வருகின்றார்.

சூர சம்ஹாரப் பெருவிழா
ஆகஸ்ட்/23 எட்டாம் திருநாளன்று காலை ஐந்து மணிக்கு சண்முகர் வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி எழுந்தருள்வார்.  திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து மேலக்கோயில் வந்தடைகிறார்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்புத் தீபாராதனை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குமேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோயில் வந்து சேர்கிறார்.

ஆகஸ்ட்/24 ஒன்பதாம் திருநாள். சுவாமி தங்கக் கைலாய பர்வதத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதி உலா எழுந்தருள்வர். 

ஆகஸ்ட்/25 பத்தாம் திருநாள். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத் தேரோட்டம்.  காலை ஆறு மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்குகிறது.

திருவிழாவில் மாப்பிள்ளை ஸ்வாமியாகிய ஸ்ரீகுமரவிடங்கப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளுவார்.  பிள்ளையார் ரதம் முன்னே செல்ல - ஸ்வாமி, அம்மன் தேர்கள் திருவீதி வலம் வந்து நிலையை அடையும்.

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்..
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!..

திருச்செந்தூர் - நம்முடைய தீவினைகளைத் தீர்க்கும் திருத்தலம். 

வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே
செந்திநகர் சேவகா என்று திருநீறு
அணிவார்க்கு மேவ வராதே வினை!.. 
* * *