நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

பங்குனி உத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பங்குனி உத்திரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 14, 2024

பங்குனி

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி முதல் நாள் 
வியாழக்கிழமை


பங்குனி

தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் ஆண்டு நிறைவாகின்ற  மாதமாகும் பங்குனி.. 

ஜோதிடத்தின்படி சூரியன் மீன ராசிக்குச் செல்கின்றார்.. 

கணவனின் ஆயுள் விருத்திக்கும் ஆரோக்கியத்திற்கும்  உறுதுணையான கௌரி விரதம் மாதத்தின் முதல் நாளில் வருகின்றது.

சிறப்பு வாய்ந்த உத்திரம், ராம நவமி,  யுகாதி போன்ற நல்ல நாட்கள் இம்மாதத்தில் தான்..

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தை ஒட்டி வருகின்ற நிறைநிலா நாளில்  உத்திரத் திருவிழா..


ஸ்ரீ ஹரிஹர புத்திர ஸ்வாமியின் அவதார நாள் பங்குனி மாத உத்திர நட்சத்திரம்..


சிவபெருமான் பார்வதியின் திருமண நாளும் முருகப்பெருமான் தெய்வானையின் திருமண நாளும் பங்குனி உத்திரமே..


பங்குனியின் எட்டாம் நாள் வியாழனன்று திரு ஆரூர் ஆழித்தேரோட்டம் நிகழ இருக்கின்றது..

பங்குனி 12 திங்கட்கிழமை (25/3) உத்திரத்திருநாள்..

முருகப்பெருமானின்
அறுபடை வீடுகளிலும் இந்த பங்குனி உத்திரம் மிகச் சிறப்பாக  கொண்டாடப் படுகின்றது..


பார்க்கவ மஹரிஷிக்கு மகளாக பார்கவி என்ற பெயருடன் ஸ்ரீ மகாலக்ஷ்மி பூமியில் தோன்றிய நாள் பங்குனி உத்திரம்..

தெய்வத் திருமணம் என்பது  பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாகிய தத்துவம்..

திருமயிலையில் - விஷக்கடியினால் மாண்டு சாம்பலாகி அஸ்தி கலசத்தில் இருந்த பூம்பாவையை  உயிருடன்  மீண்டும் அழைக்கும் போது - 
பங்குனி உத்திர ஒலி விழா காண்பதற்கு வருவாயாக!.. - என்று அழைக்கின்றார் ஞானசம்பந்தப் பெருமான்..


திருமயிலாப்பூர் 
ஸ்ரீ கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனியில் நிகழும் அறுபத்து மூவர் திருவிழா தமிழகத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று..


திரு ஐயாற்றை அடுத்துள்ள அந்தணக் குறிச்சியில் - சிலாத முனிவருக்கு நந்தியம் பெருமான் மகனாகத் தோன்றியதும்
அவருக்கு அதிகார நந்தி - என பட்டம் வழங்கப் பெற்றதும்
திருமழபாடியில்  வியாக்ரபாத முனிவரின் மகளான சுயம்பிரகாஷிணி தேவியுடன் திருமணம்  நிகழ்வதுவும் பங்குனியில் தான்..


இதன்படி,
நிகழாண்டில் பங்குனி 5 திங்கட்கிழமை (18/3)  நந்தி ஜனன வைபவம்..
பங்குனி 6 செவ்வாய்க்கிழமை 
(19/3) நந்தி  திருக்கல்யாணம் நடைபெறுகின்றது..


புனிதவதியாகிய காரைக்கால் அம்மையார் திரு ஆலங்காட்டில் முக்தி நலம் பெற்றது பங்குனி சுவாதி..

அனைத்து சுபகாரியங்களுக்கும் உகந்தது பங்குனி உத்திரம்..

பங்குனி உத்திரத்தில்
திருமாங்கல்யத்திற்கு பொன் உருக்குதல், மரக்கன்றுகள் நடுவது, புதிய பொருட்கள் வாங்குதல், புதிய வியாபாரம் தொடங்குவது முதலான சுப காரியங்களை மேற்கொள்வது மரபு..


அடுத்து வருகின்ற புத்தாண்டில் சித்திரை 4 புதனன்று ஸ்ரீ ராம நவமி நிகழ்கின்றது..
 

ஓம் ஹரி ஓம்
 ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், மார்ச் 21, 2019

பங்குனிச் சேர்த்தி

அன்று - ஆயில்யம்!..
சோழ வளநாட்டின் உறையூருக்கு
உலக நாயகன் - உலகளந்த நாயகன் வருகின்றான்!..

அதிகாலையில் இருந்தே ஒவ்வொருவர் வீட்டிலும் பரபரப்பு!...

இருக்காதா...பின்னே!... கமலவல்லியின் காதல்  மணாளன், காவிரியின் கரையைக் கடந்து வருகிறான்!.. - என்றால்....

இதைத்தான் கரை கடந்த வெள்ளம் என்பதா!..

அதுவும் கமல வல்லியின்  பிறந்த நாளான ஆயில்யத்தன்று உறையூருக்கு வருகின்றான் என்றால் சும்மாவா!... என்ன பரிசு கொண்டு வருகின்றானோ!...

திரு அரங்கன் 
பரிசா... அது எதற்கு?... அவனே ஒரு பரிசு ..
அவன் வருகையே பெரும் பரிசு!...

வழி நெடுகிலும் - இந்த மண்ணுக்கே உரிய பச்சைப் பசேல் என மின்னும் வாழை மரங்கள்  - தோரணங்கள் கட்டியாகி விட்டது!.

வீதியெல்லாம் நீர் தெளித்து வீட்டின் வாசலில் மாக்கோலம் போட்டு, வண்ண மலர்களைத் தூவி அலங்கரித்து நடுவில் குத்து விளக்கும் ஏற்றியாகி விட்டது.

நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளை வருகின்றார்  - என மங்கலத்துடன் மகிழ்ச்சி ஆரவாரம்!..

ஸ்ரீரங்கத்தில் இருந்து  பல்லக்கில் புறப்பட்ட நம்பெருமாள்  - அம்மா மண்டபம் வழியாக  காவிரியைக் கடந்து, உறையூரை நெருங்கி  வருகிறார்.

வருகிறார்.. வருகிறார்.. இதோ வந்து விட்டார்!..
வாண வேடிக்கைகள் ஒருபுறம்!.. மங்கல வாத்தியங்களின் இன்னிசை மறுபுறம்!..

வாங்க.. மாப்பிள்ள!.. வாங்க!.. - என்று சிறப்பான வரவேற்பு...
ஏழ்தலம் புகழ் காவிரிக்கரை வரவேற்பு என்றால் கேட்கவும் வேண்டுமா!..

ஸ்ரீரங்கனின் சிந்தை குளிர்கின்றது.. வேண்டுவோர்க்கு வேண்டியதெல்லாம் ப்ரசாதித்துக் கொண்டு, உறையூருக்குள் - வழி மாறிப் பாய்ந்த காவிரி வெள்ளம் போலப் பிரவாகித்த மக்களின் ஊடாக - ஸ்ரீரங்கனின் பல்லக்கு மிதக்கின்றது...

ஆயிற்று.. ஒரு வழியாக கமலவல்லி நாச்சியாரின் ஆலயத் திருவாசலை அடைந்தாயிற்று!..

கோயிலுக்கு வந்து விட்டார் ஸ்வாமி. மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார்... அன்னம் போல தாயார் மெல்ல வருகிறாள்..

கண்கள் கசிகின்றன காதலால்,

நலம்.. நலமறிய ஆவல்!.. - என,  ஏககாலத்தில் விழிகளால் பரிமாறிக் கொள்கின்றனர் இருவரும் .

அப்படியே ஓடி வந்து கட்டித் தழுவிக் கண்ணீரால் நீராட்ட, கைகள் பரபரத்தாலும் ...

இந்த நாணம் என்ற ஒன்று இருக்கின்றதே!.. அது தடுக்கின்றது!.. 

ஆயிரமாய்க் கூடியிருக்கும் பிள்ளைகளின் முன்பாகவா!..

ஐயனைக் கண்டு - அன்னையின் கண்களில் ஆனந்தம்... அத்துடன் ஆதங்கம்..

ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் - உறையூர் 
என்ன இது!.. இளைத்த மாதிரி இருக்கிறீர்கள்!.. ஓடி ஓடி ஊருக்கு உழைத்தாலும், நேரத்துக்கு ஒருவாய் சாப்பிட வேண்டாமா!..

குறை ஒன்றுமில்லை!.. கொடியேற்றத்திலிருந்து - இந்த வாகனம் மாறி அந்த வாகனம்!.. அந்த வாகனம் மாறி இந்த வாகனம்!.. வழி எல்லாம் வலியாக  அல்லவா இருக்கின்றது - குண்டுங்குழியுமாக!.. அன்றைக்குக்கூட வழி நடையாய் ஜீயபுரத்தில் ஆஸ்தான மண்டப சேவை!..

- என்று மொழிந்த ஸ்வாமியை, மனங்குளிர்ந்து முகம் மலர்ந்து -   வரவேற்றாள் - கமலவல்லி...

மங்கல வாத்தியங்கள் முழங்க ஆலயத்தினுள் பிரவேசித்து பிரகாரத்திலுள்ள சேர்த்தி மண்டபத்திற்கு ஸ்வாமி செல்ல, நாச்சியாரும் பின் தொடர்ந்து -  இருவரும் மணக்கோலத்தில் வீற்றிருந்து சேர்த்தி சேவை சாதிக்கின்றனர்...

மாதவனின் கழுத்திலிருந்த மாலையை மதுசூதனக் காமினி கமலவல்லி அணிந்து கொள்கிறாள்... 

அவளது கழுத்திலிருந்த மாலையை அணிந்து கொண்டு அரங்கன் ஆனந்திக்கின்றான்.

யாரும் பார்க்கவில்லை என்ற எண்ணத்தில்,
விரலிலிருந்த கணையாழியைத் தன் அன்பின் அடையாளமாக அணிவிக்கின்றான் அரங்கன்..

கார்மேகனும் கமலவல்லியும்

இதைவிட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?.. என் பிறந்த நாளும் அதுவுமாக நீங்கள் என் பக்கத்தில் இருப்பதை விட..  -  அன்னை இப்படி ஆனந்திக்க,
'உனது பிறந்த நாளில் உன் பக்கத்தில் இருப்பதை விட, எனக்கு வேறு என்ன வேலை இருக்கிறது?... - என்று ஐயன் குதுகலிக்க,

பொழுது போய்க் கொண்டிருந்தது.

கண்டு கொள்!.. - எனக் கண்டதால் மனம் நிறைந்தது...
உண்டு கொள்!.. -  என உவந்ததால் உயிரும் இனித்தது.

இரவாகி விட்டது. இப்போது -  மணி பத்தரைக்கு மேல்!..

தாயார் தன் மூலஸ்தானத்திற்குத் திரும்பவேண்டும். ஸ்வாமியும் - ஸ்ரீரங்கம் செல்லவேண்டும். பிரியாவிடை பெற்றுக் கொள்கின்றார். மறுபடியும் சந்திக்க  இன்னும் ... ஒரு வருடமா!.. - அடுத்த சேர்த்தி பற்றி நினக்கின்றது உள்ளம்.

உன் பங்கு நான்.. என் பங்கு நீ.. இதோ.. விரைவில் அடுத்த பங்குனி...
போய் வரவா!..பூமகளே!?...

ம்.. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்!.. வேளாவேளைக்குச் சாப்பிடுங்கள்!...

கமலவல்லி மூலஸ்தானத்திற்குத் திரும்ப -
ஸ்வாமியின் பல்லக்கு ஸ்ரீரங்கம் நோக்கி விரைகின்றது!..

அதற்கு முன்னரே,  அரங்கன் இருப்பது உறையூரில் என்று -
தூபம் இடப்பட்டது -  அரங்கநாயகி சந்நிதியில்!..

எங்கு செல்வது!..  - அழகிய மணவாளனின் முகத்தில் ஆயிரம் சிந்தனைகள்!..

நேராக கண்ணாடி மண்டம் .. அதுதான் சரி.. அங்கே ஓய்வு!.

அதன்பிறகு,  வையாளியில் ஆரோகணித்து - ஸ்ரீரங்கன் சித்திரை வீதியில் சுற்றிக் களித்திருந்த போது ,  எதிர் வந்து நின்றது - உத்திரம்!..

ஆஹா!.. அரங்க நாயகியின் திருநட்சத்திரம்!..
அவளைக் காண வேண்டுமே!..

இப்படி இவன் நினைத்தாலும்  -
அவள் இவனைக் காண வேண்டுமே  - என்பது தான் பிரதான நோக்கம்!..

ஓடோடி  வந்த அரங்கனுக்கு திடுக்கென்றது!.

கைவிரலில் இருந்ததே..எங்கே.. போயிற்று?.. கணையாழி!..
அவளுக்குத் தெரிந்தால்.. அவள் முதலில் விரலைத் தானே பார்ப்பாள்!..
என்ன செய்வது?...

திரும்பவும் உறையூருக்கா!.. வேறு வினையே வேண்டாம்!..

அரங்கனின் பதற்றத்தைக் கண்டு - ஒருவர் சொன்னார் - 
..நான் கூட பார்த்தேனே!..

கணையாழி காணாமல் போன விஷயம் இப்படியே பரவி - உடன் வந்தவர்கள் தேடிப் பார்த்துக் களைப்பதற்குள், சந்நிதியில் யாருடைய காதில் விழ வேண்டுமோ - அவர் காதில் சரியாகச் சென்று சேர்ந்து விட்டது.

வேறு வழியின்றி வேர்த்து விறுவிறுத்து -
அரங்கநாயகியைத் தேடி - உள்ளே நுழைந்தால் - அந்த நேரம் பார்த்து,

அடையா நெடுங்கதவு அடைத்துக் கொண்டது - படார் என்று!..

பழைய காலத்துக் கதவாயிற்றே - என்றுகூட கருணை காட்டப்படவில்லை!..

அத்தனை கோபம்.. அரங்கநாயகிக்கு!..

உறையூருக்குப் போனது தப்பு இல்லை!.. கமலவல்லியின் கரங்களைப் பற்றியது கூட தப்பு இல்லை!.. கணையாழி காணாமல் போனதுதான் தப்பு!.. என்ன கஷ்டமடா சாமீ!.. அது அவள் பாற்கடலில் தோன்றினாள் அல்லவா!.. அப்போது தாய் வீட்டுச் சீதனமாகக் கொண்டு வந்த கணையாழி!.. அது தான் இத்தனைக்கும் காரணம்!..

இப்படிப் போற இடத்தில எல்லாம் பொறுப்பில்லாமல் எதையாவது தொலைத்து விட்டு வந்தால் சும்மா இருக்க முடியுமா!..

- ஒரே கூச்சல்!.. ஆரவாரம்!..

ஆஹா!.. யாரது இவங்க எல்லாம்!..

பொண்ணு வீட்டுக்காரங்களாம்.. பேச வந்திருக்காங்க!...

ஏன்.. அவங்க வீட்டுப்  பொண்ணுக்குப் பேசத் தெரியாதுன்னா?..

சரி.. சரி.. விடுங்கப்பா.. நம்ம பக்கமும் தப்பு இருக்கு!...

அரங்கன் திகைத்தான்...

என்ன சொல்கின்றான் இவன்!..  என்னிடமா.. தப்பு!..

அதற்குள் மணிக்கதவம் ஒரு புறமாகத் திறக்கின்றது...
உள்ளேயிருந்து அரங்க நாயகியின் குரல்!..
தேனாகத் தித்தித்தது அரங்கனின் திருச்செவிகளில்!..

என்ன சொல்கின்றாள்.. ஆர்வத்துடன் உற்றுக் கேட்டான்!..

அதென்ன.. திருமார்பு எங்கும் கீறலாமே!.. 
திருஅதரங்கள் அதீதமாய் வெளுத்தும் திருநேத்ரங்கள்  சிவந்தும் கிடக்கின்றதாமே!..
கார்மேகனின் கருங் குழற்கற்றைகள் கலைந்து காணச் சகிக்க வில்லையாமே!..

அரங்கன் மறுபடியும் அதிர்ந்தான்..

உடன் இருக்கும் உளவாளி யார்?..

இதெல்லாம் யார் உனக்குச் சொன்னது?..

யாரும் தனியா வந்து சொல்லணுமாக்கும்?.. அதான் ஊரே பார்த்து ரசிக்கின்றதே!..

இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?..
நீதான் படிதாண்டா பத்னியாயிற்றே!.. 

எப்படியோ தெரியும்.. இனிமேல் இங்கே வேலை இல்லை..
உறையூரிலேயே இருந்து கொள்ளும்!..

உறையூரோ.. மறையூரோ!..  உன் உள்ளம் தானே -
நான் உவந்து உறையும் ஊர்!.

ஆகா.. இந்தக் கள்ளம் எல்லாம் வேண்டாம்..
நீர் அங்கேயே போய் இருந்து கொள்ளும்!..

வார்த்தைகளோடு வேறு பலவும் உள்ளிருந்து - ஆலம் விழுது என -   அன்பின் விழுது என -  அரங்கனின் மேல் வந்து விழுந்தன...

நெடுங்கதவு மறுபடியும் அடைத்துக் கொண்டது...

பூக்களையும் வெண்ணெய் உருண்டைகளையும் காய்களையும் பழங்களையும் எடுத்து வீசியது கூட பரவாயில்லை..

திருக்கதவைச் சாத்தியது கூட சரிதான்!.. 

கையில் கிடைத்த வாழை மட்டையால் சாத்தலாமா!..

அரங்கன் பரிதவித்துப் போனான்!..

அந்த நேரம் பார்த்து - அருகில் ஒரு பல்லக்கு வந்து நிற்கிறது.   உள்ளிருந்து பதைபதைப்புடன் இறங்கினார் நம்மாழ்வார்! அவருக்கு மனசு தாங்கவில்லை.

நம்மாழ்வார்
அரங்கனைக் காணவேண்டி அல்லவோ அண்டபகிரண்டமும் - காத்துக் கிடக்கின்றது...

அத்தகையவன் - தன் திருமேனி முழுதும் வியர்த்து அழகெல்லாம் கலைந்து, ஒரு குழந்தையைப் போல விக்கித்து நிற்பதுவும் சரியா!..

அரங்கனுக்கா இந்த நிலை!..
ஆராவமுதனுக்கா இந்த நிலை?..

விறுவிறு - என நடந்து,  பிராட்டியாரின் வாசல் திருக்கதவைத் தட்டுகிறார்.

பத்மினி நீ.. பத்ம தள வாசினி நீ.. பத்மநாப பத்னி நீ!..
ஆயிரம்தான் இருந்தாலும் இதைப்போல செய்யலாமா நீ!..
கமலவல்லியின் கரம் பிடிக்க மனம் உவந்தவளும் நீ!..
ஓங்கி உலகளந்த உத்தமனின் உள்ளத்துள் உவந்து இருப்பவளும் நீ!.. இப்போது உன் முகங்காட்ட மறுத்து மட்டையால் அடிப்பவளும் நீ!..
நீ இன்றி அவனில்லை!.. அவனின்றி நீ இல்லை!..
அனைத்தும் அறிந்த நீ அரங்கனை அல்லல்படுத்தலாமா?..
இது நியாயமா?.. அம்மா?..

ஆழ்வாருக்குத் தொண்டையை அடைத்தது.

உறையூரில் கமலவல்லி கரத்தினைப் பற்றியிருந்த வேளையில் கூட,
உன் நினைவையும் அல்லவா அரங்கன் பற்றியிருந்தான்!..
அந்த நினைவுக்கு நீ தரும் பரிசு இதுதானா?.. 

கணையாழி தொலைந்த இடம் எது என்று உனக்குத் தெரியாதா!..
சற்றே எண்ணிப் பார்.. உன் நினைவில் பால்பழங்கூட கொள்ளாமல்,
உன்னை எண்ணி ஓடி வந்தவனின் முகத்தைப் பார்.. 

உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.. ஆனால்
தொண்டருக்கெல்லாம் தொண்டன் -  உண்ணாமல் உறங்காமல் மயங்கி இருப்பதைப் பார்!..

உன் பத்ம விழிகளைக் கொண்டு பரந்தாமனைப் பார்!...

இதற்குமேல் தாங்கிக் கொள்ளமுடியவில்லை அரங்கநாயகிக்கு...

இதை அப்பவே சொல்றதுக்கென்ன!.. இன்னும் சாப்பிடலைன்னு!..
கணையாழி போனாப்  போறது!.. நீங்க வாங்க!..

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்! அதனால்- தாள் எல்லாம் தூள் ஆனது!

அரங்கநாயகி திருவாய் மலர்ந்தாள் -

இதுக்காக யாராவது பெரியவங்களைத் தொந்தரவு செய்வார்களோ?..
சரியான பைத்தியம்!...

அரங்கன் புன்னகைத்தான்!..  அரங்கநாயகி புன்னகைத்தாள்!..

ஆழ்வாரும் புன்னகைத்தார்...
அவர்களுடன் அனைத்துலகும் புன்னகையாய் பூத்தது!..

அரங்கனும் நாச்சியாரும் சேர்த்தியாய் நம்மாழ்வாருக்கு மரியாதை செய்தார்கள்!..

அன்பினில் குழைந்த அக்கார அடிசில்
அமிழ்தினும் இனிதாக நிவேதனம் ஆகின்றது.

அரங்கனும் அரங்கநாயகியும்
அன்பினில் கலந்த இருவரும், அகளங்கன் திருச்சுற்றில் வில்வ மரத்தடியில் மல்லிகைப் பந்தலின் கீழ், சேர்த்தி மண்டபத்தில் ஒன்றாக எழுந்தருளி பக்தர்களை ஆசீர்வதித்து இன்புற்றனர்..

அவர்தம் அன்பினில் அனைத்துலகும் இன்புற்றது.

* * *

திருஅரங்கத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவின் ஒரு வைபவம் தான் அது..

பின்வந்த நாட்களில் ஸ்ரீ ராமானுஜர் - இந்த சேர்த்தி வேளையில் தான் சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுந்த கத்யம் (கத்ய த்ரயம்) பாடியருளி அரங்கனைச் சேவித்தார்.

இது - இன்றும் அரையர் சேவையில் நிகழ்வுறுகின்றது.

பங்குனி உத்திரச் சேர்த்தி அன்று -  18 முறை விடிய விடிய திருமஞ்சனம்  நடைபெறுகிறது. ஒருமுறைக்கு ஆறு  என  மொத்தம் 108 கலசங்கள்.

திருமஞ்சனத்திற்குப் பின் திவ்ய தரிசனம்.  திருத்தேருக்கு எழுந்தருள நேரம் நெருங்குகின்றது. கண்கள் கசிகின்றன. உறையூரில் கமலவல்லியிடம் சொன்ன அதே வார்த்தைகள் - மீண்டும்!..

உன் பங்கு நான்.. என் பங்கு நீ!.. இதோ.. விரைவில் அடுத்த பங்குனி!..

பத்தாம் நாள் காலையில் பங்குனித் தேரோட்டம்.
மங்கல மாவிலைத் தோரணங்கள் மகிழ்ந்தாடும் சித்திரை வீதியில்
திவ்ய ப்ரபந்தத் திருப்பாசுரங்களைக் கேட்டவாறே அரங்கன் அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றான்.

மறுநாள் ஆடும் பல்லக்கு. அடுத்து துவஜ அவரோகணம்.
மங்களகரமான பங்குனி உத்திரப் பெருவிழா இனிதே நிறைவுறுகின்றது!..

* * * 
அது சரி... காணாமல் போன  கணையாழி கிடைக்கவே.. இல்லையா!..

அது எப்போது காணாமல் போனது ?.. இப்போது கிடைப்பதற்கு!.. அரங்கனும் அரங்கநாயகியும் சேர்ந்து நடத்திய நாடகம் தானே மட்டையடி!.. 


அந்தக் கணையாழி - கமலவல்லி விரலிலும்  அரங்க நாயகி விரலிலும், 
அதே சமயம் - அரங்கனின் விரலிலும் பத்திரமாக உள்ளது!..

* * * 

இன்று பங்குனி உத்திரம்.
அவரவர் சக்திக்கேற்ப - வெண்ணெய், கல்கண்டு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் சேர்த்த திருஅமுது  நிவேதனம் செய்வது மரபு.

ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பதிவு - சில திருத்தங்களுடன் மீண்டும்!..

அரங்கனின் நினைவே ஆனந்தம்!..  

அடியவர் குழாமும் வாழ்க!...அரங்க மாநகரும் வாழ்க!...
அரங்கனும் வாழ்க!... அன்னையும் வாழ்க!...
அவர் தம் அன்பினில் அவனியும் வாழ்க!..
ஃஃஃ 

வெள்ளி, ஏப்ரல் 03, 2015

உத்திரத் திருவிழா

ஆதியில் -

திருக்கயிலாய மாமலை கல்யாணத் திருக்கோலம் கொண்டது ஒரு பங்குனி உத்திர நாளில் தான்!..

சர்வேஸ்வரனாகிய சிவபெருமான் -

ஆயிரத்தெட்டு அண்டங்களில் நூற்றெட்டு யுகங்களுக்கு ஆட்சி உரிமையை வரமாகப் பெற்றிருந்த மாயையின் மகனான சூர பத்மனையும் அவனது கூட்டத்தாரையும் பூண்டோடு அழித்து சங்கரிக்கும் பொருட்டு -

திருக்குமரன் ஒருவனைத் தம்முள்ளிருந்து தோற்றுவிப்பதாக அருளியிருந்தார்.

அப்படி - அருளியிருந்த சிவம் - சனகாதி முனிவர்களுடன் ஞானத் தவத்தில் அமர்ந்திருந்தது.

அது விழித்தெழும் வரைக்கும் அமைதி காக்க - அறியாத தேவர்கள் மன்மதனை ஏவி விட்டனர் - தவத்தைக் கலைக்குமாறு!..

ஆனால் - மலர்க்கணை ஏவிய மன்மதன் வெந்து சாம்பலாகிப் போனான்!..

மகரிஷிகளின் உபசாரங்களினால் - மனம் இளகினார் மகேஸ்வரன்!..


சகல லோகங்களையும் காத்தருளும் பொருட்டு - இமவானின் திருமகளாக வளர்ந்த அம்பிகையின் திருக்கரத்தினைப் பற்றி கல்யாண சுந்தரனாகத் திருக்காட்சி நல்கினார்.

அந்த மங்கல வைபவம் நிகழ்ந்தது - பங்குனி மாதத்தில்!..

அதனால் புனிதம் அடைந்த நட்சத்திரம் - உத்திரம்!..

அதன்பின் பங்குனி உத்திர நாள் - அடைந்த பெருமைகள் எண்ணற்றவை!..

சிவ பார்வதியின் வேளையில் தான் - ரதி தேவி தனது காதல் மணாளனாகிய மன்மதனை மீண்டும் அடைந்து இன்புற்றாள்!..

தேவர்களின் பகடைக் காயாக உருண்ட மன்மதனின் மனதிலும் ஆணவம் முளைத்தெழுந்தது - ஈசன் மீதும் மலர்க்கணையை எய்கின்றோம்!.. - என்று..

அவன் கொண்ட ஆணவம் அவனது அங்கத்தை அழித்தது. கர்வ பங்கம் ஆன நிலையில் - ரதி தேவியின் கண்ணீருக்காக அனங்கனாக மீண்டெழுந்தான்!..

அனங்கனாக அவன் மீண்டெழாவிட்டால் - பூவுலகில் மோக பரிபூரணம் ஆகியிருக்குமா!?..

பின்னும் -


மதுரையம்பதியில் - மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சன மாலைக்கும் மகவாகத் தோன்றி - அவர் தம் மடியில் தவழ்ந்து விளையாடிய - இளங்கொடி
மீனாள் - கயற்கண்ணியின் திருக்கரத்தினை சோமசுந்தரன் பற்றியதும் -

பங்குனி உத்திர நன்னாளில் தான்!..


மயிலாகத் தோன்றிய அம்பிகை - புன்னை வனத்தில் சிவபூஜை செய்து மீண்டும் ஈசனின் திருக்கரம் பற்றியதும்

பங்குனி உத்திர நன்னாளில் தான்!..

அதனால் தான் -  மயிலையே கயிலை!.. கயிலையே மயிலை!.. - என்றானது.

ஸ்ரீமஹாலக்ஷ்மி - ஸ்ரீஹரிபரந்தாமனுக்கு மாலையிட்டதும் -

பங்குனி உத்திர நன்னாளில் தான்!..

தசரத ராமனின் தோள்களில் ஜானகி மணமாலை சூட்டியதும் -

பங்குனி உத்திர நன்னாளில் தான்!..

ஜனக மகாராஜனின் அரண்மனையில் ஸ்ரீ ராமனுடன் வைதேகி, லக்ஷ்மணனுடன் ஊர்மிளை பரதனுடன் ஸ்ருதி கீர்த்தி சத்ருக்கனனுடன் மாண்டவி - என அன்புச் சகோதரர்கள் திருமணக்கோலங்கொண்டு நிற்க -

பெருமை கொண்டது பங்குனி உத்திர நன்னாள்!..

கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி
அரங்கநாயகியுடன் சேர்த்தி
பங்குனியின் ஆயில்யத்தன்று - உறையூரில் கமலவல்லித் தாயாருடன் சேர்த்தி கண்டருளிய பின் -

திருஅரங்கத்தில் - மட்டையடி வைபவத்திற்குப் பின் - அரங்க நாயகித் தாயாருடன் நம்பெருமாள் சேர்த்தி கண்டருள்வதும்

பங்குனி உத்திர நன்னாளில் தான்!..

காஞ்சி மாநகரில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் -  தாயார் சந்நிதியில் - ஸ்ரீதேவி பூதேவி, சேரநாச்சியார்,ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயாருடன் தரிசனம் நல்குவதும் -

பங்குனி உத்திர நன்னாளில் தான்!..

காலங்கள் கடந்த பின்னரும் -

ஸ்ரீவில்லிபுத்தூரில் - பெரியாழ்வார் கண்டு மகிழும் வண்ணம் - சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின் திருக்கரங்களை ஸ்ரீரங்கமன்னார் பற்றிக் கொண்டதும் -

பங்குனி உத்திர நன்னாளில் தான்!.


பூத நாதனாகிய - ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம் நிகழ்ந்ததும்

பங்குனி உத்திர நன்னாளில் தான்!..

மண்ணும் விண்ணும் மகிழும் பொருட்டல்லவோ - மணிகண்டனாக - தர்மம் பூமியில் தவழ்ந்தது!..

அறத்தினைப் பரிபாலிக்க அல்லவோ - அத்தனை செல்வங்களையும் உதறித் தள்ளி விட்டு அடர்ந்த வனத்தினுள் - தவநிலை கொண்டு அமர்ந்தது!..

அற வடிவாகிய ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருநாள் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த 24/3 அன்று மாலை திருநடை திறக்கப்பட்டு ஸ்ரீ கொடிப்பட்டம் சமர்ப்பிக்கப் பெற்றது.

மறுநாள் மேளதாளங்கள் முழங்க திருக்கொடியேற்றம் நிகழ்ந்தது.

நேற்று (ஏப்ரல்/ 2) இரவு - சரங்குத்தியில் பள்ளிவேட்டை .

இன்று காலை ஒன்பது மணியளவில் ஸ்வாமி யானையின் மீது பம்பைக்கு எழுந்தருளுவார். மதியம் பம்பை நதியில்ஆராட்டு.

பம்பை திரிவேணி சங்கமத்தில்  - மங்கலத் திரவியங்கள் மலர்களுடன் நீராடுவார்.

மாலையில் சந்நிதிக்கு எழுந்தருள - இரவு கொடியிறக்கத்துடன் - பங்குனித் திருநாள் நிறைவுறும்..


அறுபடை வீடுகளுள் மூன்றாவதான பழனியம்பதியில் கடந்த மார்ச்/28 அன்று கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கியது. 

கொடுமுடி தீர்த்தக் காவடிகள் பங்குனித் திருவிழாவின் சிறப்பு அம்சம்!.. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக் காவடிகளைச் சுமந்தபடி 110 கி.மீ தொலைவினை பாத யாத்திரையாகக் கடந்து வருவது பக்தியின் உச்சம்!..

தீராத வினைகளைத் தீர்த்தருளும் திருக்குமரனுக்கு காவிரித் தீர்த்தத்தால் அமிஷேகம் சிறப்பாக நடைபெறுகின்றது.

விழா நாட்களில் - நாளும் - முத்துக் குமரஸ்வாமி - வள்ளி தேவயானையுடன் - வெள்ளி ஆட்டுக் கிடா, தங்கமயில், வெள்ளி யானை, தங்கக்குதிரை என பல்வேறு வாகனங்களில் திருவீதி எழுந்தருளினன்.

நேற்று வெள்ளித் தேர். திருக்கல்யாண வைபவம்.

பழனியம்பதியில் இன்று ஏப்ரல்/3 திருத்தேரோட்டம்.


அறுபத்து மூவர் உலா
கோலவிழி அம்மன்
மயிலையே கயிலை..
தருமமிகு சென்னையின் மயிலாபுரியில் - கடந்த 26/3 அன்று கொடியேற்றம்.

சிறப்பு மிகும் பங்குனித் தேரோட்டம் - ஏப்ரல் முதல் நாள் நடந்தது.

காலை 7.15 மணியளவில் ஸ்ரீ விநாயகர் தேர் முதலில் புறப்பட - அதனைத் தொடர்ந்து வடம் பிடித்து இழுக்கப்பட்டது - ஸ்ரீ கபாலீஸ்வரர் திருத்தேர்.

மாடவீதிகளில் வெகு சிறப்பாக அன்னதானம் செய்யப்பெற்றது.

நேற்று (ஏப்ரல்/ 2) காலை -  ஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளி பூம்பாவையை உயிர்ப்பித்து அருளினார். மதியம் சீரும் சிறப்பும் மிக்க அறுபத்து மூவர் உற்சவம் கோலாகலமாக நிகழ்ந்தது.

நம்முள் மலிந்து கிடக்கும் ஆணவ மாய கன்மங்களை யாசகமாகக் கேட்டு - இன்று (ஏப்ரல்/ 3) பிக்ஷாடனர் திருக்கோலம்.

நாளை காலையில் ஆடல்வல்லான் திருக்காட்சி.
புன்னை மரத்தடியில் அம்பிகை சிவபூஜை தரிசனம்.

ஸ்ரீ கபாலீஸ்வரன் - கற்பகவல்லி
தொடர்ந்து - உமாதேவியின் திருக்கல்யாணம் - கயிலாய வாகனத்தில் திருவீதியுலாவுடன் தீர்த்தவாரி. பங்குனித் திருவிழா மங்கலமாக நிறைவடைகின்றது.

பங்குனித் திருவிழா தமிழகம் எங்கும் சிறப்பாக நடந்துள்ளது.

எங்கும் அமைதியும் ஆனந்தமும் தவழ வேண்டும் என்பதே நமது வேண்டுதல்!.

அறநூல்கள் வகுத்துக் கூறும் அறச்செயல்களுள் ஒன்றான அன்னதானம் பல தலங்களிலும் - திருவிழா சமயத்தில் சிறப்பாக நிகழ்ந்துள்ளது.

அன்னதானத்தின் சிறப்பினை வேறொரு சமயத்தில் விரிவாகப் பேசுதற்கு ஈசன் திருவருள் புரியட்டும்!..

இயற்கை மலிந்த சுற்றுச் சூழலில் 
சிற்றுயிர்களுடனும் சக மனிதர்களுடனும் 
கூடி வாழ்வோமாக!..

அதுவே ஊர்கண்டு மகிழும் 
திருவிழாக்களின் உயரிய நோக்கம்!..

அத்தகைய திருவிழாக்களில் தான் - 
ஐயனும் அம்பிகையும் 
நம்முடன் கலந்து மகிழ்கின்றார்கள்!..

சிவாய திருச்சிற்றம்பலம்..
* * *

வெள்ளி, ஏப்ரல் 04, 2014

பங்குனிப் பெருவிழா

ஸ்ரீ விஜய வருடம் மங்கலகரமாக  - விடைபெறும் வேளை இது!..

அனைவருக்கும் அவரவர் பூர்வ ஜன்ம புண்ணிய வாசகப்படி -  ஆண்டளக்கும் ஐயனின் கருணையினால் அனைத்தும் அளக்கப்பட்டிருக்கும்.


இவ்வேளையில் - பங்குனி மாத நிறைவு நாட்களில் மிகச்சிறப்பான உத்திர திருவிழாக்கள் கோலாகலமாகத் தொடங்குகின்றன.


அம்பிகை இமவான் மகளாகத் தோன்றியபோது, பார்வதி - பரமேஸ்வரன் திருமணமும், ஆதியில் மீனாக்ஷி சுந்தரேசர் திருமணமும்,  தெய்வயானை - திருமுருகன் திருமணமும், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் - ரங்கமன்னார் திருமணமும் - பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்ததாகக் கூறுவர்.

வள்ளியம்மையின் திருநட்சத்திரமும் ஸ்ரீ ஹரிஹரசுதனின் திருநட்சத்திரமும் உத்திரமே!..

மிதிலையில்,  ஸ்ரீராமன் -  ஜானகியின் கைத்தலம் பற்றியதும் பங்குனி உத்திர நன்னாளில் தான். லக்ஷ்மணன், பரதன், சத்ருகனன் ஆகியோர் ஜானகியின் சகோதரிகளான ஊர்மிளா, மாண்டவி, ச்ருதகீர்த்தி ஆகியோருடன் மனையறம் ஏற்றதும் இந்நாளில் தான்!..

குமரன் உறையும் திருக்கோயில்களில்  எல்லாம் - சிறப்புற விசேஷங்கள் நிகழ்வதும் பங்குனி உத்திரத்தில் தான்!..


தஞ்சையை அடுத்துள்ள திருப்பரிதி நியமம் என்னும் பரிதியப்பர் திருக் கோயிலில் நிகழும் பங்குனித் திருவிழா மிகச்சிறப்பானது. திருமுருகன் பேர் பாடி ஆயிரமாய் பால் காவடிகள் ஆடி வரும் அழகே அழகு!..

பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள - உளூர் கிராமத்திலிருந்து உள்புறமாக மூன்று கி.மீ தொலைவில் உள்ளது -  பரிதியப்பர் திருக்கோயில்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்துகள் இயங்குகின்றன.

சபரிமலையில் பங்குனி உத்திரத் திருவிழா .


பத்து நாட்கள் நடைபெறும் ஆராட்டு விழா  இன்று (ஏப்ரல் 4) துவங்குகிறது. 

இதற்காக - நேற்று (ஏப்ரல் 3) மாலை  5:30 மணி அளவில் திருநடை திறக்கப் பட்டது. 

அப்போது விசேஷ பூஜைகள் எதுவும் இல்லை. 
விபூதித் திருக்காப்பில் ஐயப்பனின் திவ்ய தரிசனம் மட்டுமே.

சபரிமலையில் பங்குனி உத்திரத் திருவிழா, இன்று (ஏப்ரல் 4) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 

அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் வழக்கமான சிறப்பு பூஜைகள்.

அதன் பின், காலை 9:30 அளவில் கொடியேற்றம் நடக்கிறது.

விழா நாட்களில் -

வழக்கமான - கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை ஆகியவற்றுடன்,

உத்சவ பலி, சிறப்பு பூஜைகளான படி பூஜை, உதயஸ்தமன பூஜை, நெய்யபிஷேகம் போன்றவையும் நடைபெறும்.

 ஏப்ரல்-12 இரவு சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடக்கிறது.
 
மறுநாள் அதிகாலையில்  சந்நிதானத்தில் இருந்து - யானை மீது ஐயன் ஆரோகணித்து பம்பைக்கு எழுந்தருள்வார்.


பம்பா நதியில் திரிவேணி சங்கமத்தில் சுவாமி ஐயப்பனுக்கு ஆராட்டு நிகழும்.
 
அன்று இரவு 10 மணிக்கு ஸ்ரீகோயில் திருநடை அடைக்கப்பட்டு  திருவிழா நிறைவடைகிறது.

பின்னர் சித்திரை விஷுவை முன்னிட்டு ஏப்ரல் 14  திருநடை திறக்கப்பட்டு வழக்கமான வழிபாடுகள் நடைபெறுகின்றன.   

மறுநாள் (15 செவ்வாய் ) விஷு பண்டிகை.  காலை 4 மணி முதல் 7 மணி வரை விஷு கனி தரிசனம்.  

தந்திரி, மேல் சாந்தி ஆகியோர் பக்தர்களுக்கு விஷு கைநீட்டம் வழங்குவர்.

தொடர்ந்து  வழக்கமான வழிபாடுகள். ஏப்ரல் 18 இரவு 10.30 மணிக்கு ஹரிவாசனம்  இசைக்கப்பட்டு திருநடை அடைக்கப்படும்.

பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் பங்குனித் திருவிழா!...


வைணவத் திருத்தலங்கள் நூற்றெட்டினுள் முதன்மையானது - ஸ்ரீரங்கம்,

அயோத்தியில் ஸ்ரீராமசந்திர மூர்த்தியால் பூஜித்து வணங்கப்பட்ட திருமேனி விளங்கும் திருத்தலம்.

அரங்கநாதர் திருக்கோயிலில் பங்குனித் தேர்த் திருவிழா வருகிற ஐந்தாம் தேதி தொடங்குகிறது.

ஸ்ரீரங்கத்தில் பங்குனி மாதம்  நடைபெறும் ஆதி பிரம்மோற்சவம் விபீஷணனால் தொடங்கப்பட்டது என்கிறது புராணம்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் நிகழும் முக்கிய வைபவமான உத்திரச் சேர்த்தி பங்குனித் திருவிழாவின் போது தான்!..  

எதிர்வரும் ஐந்தாம் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி பதினைந்தாம் தேதி முடிய பங்குனித் திருவிழா நடைபெறுகின்றது.

வருகிற ஐந்தாம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு கொடியேற்ற மண்டபம் சென்றடைகிறார். அப்போது கருடன் திருவடிவம் எழுதப்பட்ட கொடியும் எடுத்துச் செல்லப்படுகின்றது.

அதிகாலை ஐந்து மணியளவில் கொடியேற்றம். கொடி மண்டபத்திலிருந்து  காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடாகி 7 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.

அன்று மாலை  நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பாடாகி சித்திரை வீதிகள் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு சந்தன மண்டபம் சென்று அங்கிருந்து யாகசாலை சேருகிறார்.

திருமஞ்சனம் கண்டருளிய பின்னர் அங்கிருந்து புறப்பாடாகி - நள்ளிரவு ஒரு மணியளவில் கண்ணாடி மண்டபம் சென்றடைகிறார்.

பதினோரு நாட்கள் நடைபெறும்  விழாவில், இரண்டாம் திருநாளன்று - ஜீயர் புரம் எழுந்தருளல்.
 
நான்காம் திருநாள் (8/4)  கருட சேவை.

ஆறாம் திருநாளன்று நம்பெருமாள் உறையூருக்குப் புறப்பாடாகி - ஸ்ரீகமல நாச்சியாருடன் சேர்த்தி வைபவம்.


ஒன்பதாம் திருநாள் (13/4 ) பங்குனி உத்திர சேர்த்தித் திருவிழா.

பத்தாம் திருநாள் - பங்குனி தேரோட்டம்.

நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து  காலை 5.45 மணி அளவில் தேருக்கு எழுந்தருளி 7.15 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது.

ஆயிரமாயிரம் பக்தர்கள் வடம் பிடித்து  இழுக்க -  பெருமாள் மனங்கனிந்து தேரினில் பவனி வரும் திருக்காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும்.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா.

தமிழகத்தில் விளங்கும் சக்தி பீடங்களில் சமயபுரம் மாரியம்மன் திருக் கோயில் புகழ் பெற்றதாகும்.
 
கடந்த மாசி - கடைசி ஞாயிறன்று (மார்ச்-9)  அம்பாள் பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டாள். அது முதற்கொண்டு -  நான்கு வாரங்களும் ஞாயிற்றுக் கிழமைகளில் பூச்சொரிதல் வைபவம் தொடந்து நிகழ்ந்தது.

வருகிற பங்குனி கடைசி ஞாயிறன்று (6/4) அம்மனின் பச்சைப் பட்டினி விரதம் நிறைவடைகின்றது. 


எனவே - அன்று காலை ஏழு மணி அளவில் சித்திரை தேர்த் திருவிழாவிற்காக கொடியேற்றப்படுகிறது.

இரவு 7.30 மணிக்கு - அம்பாள் கேடயத்தில் திருவீதி உலா.  அதன் பின், 

கண்ணாரக் கண்டு தரிசிக்கும் முகமாக - தினமும் வெவ்வேறு வாகனங்களில் கோலாகலமாகத் திருவீதி  எழுந்தருள்கின்றாள் - சமயபுரத்தாள்!..

திருவிழாவின் பத்தாம் நாளான ஏப்ரல் 15 அன்று காலை 10.31 மணிக்கு சித்திரை தேரோட்டம்.  ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுக்கிறார்கள்.  ஏப்ரல் 18 - பதின்மூன்றாம் திருநாளன்று தெப்ப உற்சவம்.

பின் - மஞ்சள் நீராட்டுடன் மங்கலகரமாக - திருவிழா நிறைவு பெறும்.

திருவிழாக்கள் சமுதாய ஒற்றுமைக்காக நிகழ்வன. 
ஊர்கூடித் தேர் இழுப்பது உயிர்க் குலத்தின் உயர்வினுக்காக!..

உயிர்க் குலம் வாழ்வதற்கும் ஊர் வளம் ஓங்குதற்கும்
உள்ளிருந்து ஒளிரும் உயர் பொருள் அருள்க!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்