நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஸ்ரீவராஹி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீவராஹி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூலை 18, 2024

வராஹி வைபவம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி 2 
வியாழக்கிழமை

தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவின் போது செய்விக்கப்பட்ட அலங்கார தரிசனம்.

அலங்கரித்தவர் : திரு. கணேச சிவாச்சாரியார் அவர்கள்..
ஒளிப்படங்கள் :
' தஞ்சையின் பெருமை ' fb

இனிப்பு அலங்காரம்

மஞ்சள் அலங்காரம்

குங்கும அலங்காரம்

சந்தன அலங்காரம்

தேங்காய்ப்பூ அலங்காரம்

மாதுளை அலங்காரம்

நவதானிய அலங்காரம்

வெண்ணெய் அலங்காரம்

கனிகள் அலங்காரம்

காய்கள் அலங்காரம்

மலர் அலங்காரம்

திருவீதி எழுந்தருளல் 
 


நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.. 50
-: அபிராமி பட்டர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், ஜூன் 29, 2020

ஸ்ரீ வராஹி வாழ்க

நாடும் வீடும் நலம் பெறவேண்டும்
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஆனி மாதத்தின் அமாவாசையை அடுத்து
அனுசரிக்கப்படுவது ஆஷாட நவராத்திரி...

இந்த நவராத்திரி
ஸ்ரீ வராஹி அம்மனுக்கு
உரியதாகும்...

ஆஷாட நவராத்திரி இல்லங்களில்
கடைப்பிடிக்கப்படுவது அவரவர் விருப்பம் என்ற நிலையில்
சாக்த சம்பிரதாய மடங்களில்
அனுசரிக்கப்படுகின்றது..

சிவாலயங்களில்
சப்த கன்னியருள் விளங்கும்
ஸ்ரீ வராஹி அம்மனுக்கு
சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
நிகழ்கின்றன...


ஸ்ரீ வராஹி அம்மன்
காசி மாநகருக்கு அடுத்ததாக
தஞ்சை பெரிய கோயிலில் தான்
தனி சந்நிதியில்
கொலு வீற்றிருக்கின்றாள்
என்கின்றனர் ஆன்றோர்..

தற்சமயம்
தனிப்பட்ட அறக்கட்டளைகளைச்
சார்ந்த கோயில்களில்
ஸ்ரீ வைரவர், ஸ்ரீ வராஹி, 
ஸ்ரீ பிரத்தியங்கிரா - என
பிரதிஷ்டை செய்திருக்கிறனர்..
அவை இந்தக் கணக்கில்
சேர மாட்டாது...

இந்த அளவில்
தஞ்சையில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு
ஆஷாட நவராத்திரி
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது..

அந்த வைபவத்தின்
திருக்கோலங்கள் 
இன்றைய பதிவில்..

படங்களை வழங்கிய
திரு. ஞானசேகரன் அவர்களுக்கு
நன்றி..



வரம் தந்து வளம் தந்து
வளர்கின்ற நலம் தந்து
வாழ்விக்கும் அன்னையே
வாராஹி போற்றி.. போற்றி..

படை கொண்டு களம் கண்டு
பகை வென்று முடி கொண்டு
புகழ் கொண்ட சோழனின்
தோள் நின்ற தேவி போற்றி...

துணை என்று தமிழ் கொண்டு
தூ மலர் இதழ் கொண்டு
துதிக்கின்ற முகம் கண்டு
துயர் தீர்க்கும் அன்னை போற்றி..

நிலம் கண்டு நீர் கொண்டு
நிறைகின்ற நலம் கொண்டு
நிமிர்கின்ற மனம் கண்டு
மகிழ்கின்ற வாராஹி போற்றி...

வருகின்ற துயர் கண்டு
பயங்கொண்ட முகம் கண்டு
நான் உண்டு என வந்து
நலம்  காட்டும் அன்னை  போற்றி..

துயர் கொண்டு வழிகின்ற
விழி கண்டு முன் நின்று
பிணி மாற்றி அருள் கின்ற
வாராஹி அன்னை போற்றி..

அனல் கொண்ட வினை என்று
தளர் கின்ற நிலை கண்டு
புனல் கொண்ட முகில் என்று
வருகின்ற வாராஹி போற்றி..

சஞ்சலம் என்று வரும்
நெஞ்சகம் வாழ்ந்திட
அஞ்சல் என்றருள் கின்ற
தஞ்சையின் வாராஹி வாழ்க.. 


ஸ்ரீ வராஹி வாழ்க.. வாழ்க..
ஸ்ரீ வராஹி வாழ்க.. வாழ்க..
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

வெள்ளி, ஜூலை 12, 2019

வாழ்க வராஹி

வானகமும் வையகமும் உய்வடையும் பொருட்டு அன்னை நிகழ்த்திய திருவிளையாடல்களும் - மேற்கொண்ட திருக்கோலங்களும் அனந்தகோடி!...


அப்படிப்பட்ட திருக்கோலங்களுள் ஒன்றுதான் - ஸ்ரீவராஹி.

அம்பிகையை ஆராதிக்க அனைத்து நாட்களும் சிறந்தவைகளே!..
எனினும் -  அமாவாசையை அடுத்த ஒன்பது நாட்களும் சிறப்பானவை
என்று ஒரு திருக்குறிப்பு உண்டு...

அந்த வகையில்  -
ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரியும்,
புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும்,
தை மாதத்தில் சியாமளா நவராத்திரியும்,
பங்குனி மாதத்தில் வசந்த நவராத்திரியும் - சிறப்பானவை. 

ஆனால் - நாம் இல்லத்தில் கொண்டாடுவது சாரதா நவராத்திரியைத் தான்.

இருப்பினும் பாரதத்தின் பல தலங்களில் இந்த விசேஷமான நவராத்திரி வைபவங்கள் அனுசரிக்கப்படுகின்றன.

இவற்றுள் முதலாவதாக இடம் பெறும் ஆஷாட நவராத்திரி - ஆனி மாதத்தின் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் கொண்டாடப்படுவது.

இந்த ஆஷாட நவராத்திரியின் நாயகி - ஸ்ரீ வராஹி!..
அளவற்ற சக்தியுடன் விளங்குபவள் ஸ்ரீவராஹி..

தேவி புராணங்களில் சிறப்பாக வர்ணிக்கப்படுபவள்.
வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அருளும் கருணை உடையவள்.

ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத்தளபதியாகத் திகழும் வராஹி - 
ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் அங்குசத்தில் இருந்து தோன்றியவள்..  

சப்த கன்னியருள் ஐந்தாவதாக விளங்குபவள் - ஸ்ரீ வராஹி.
அதனாலேயே - பச்சைப் பசுமைக்கு அதிபதியானவள்..    

ஆதியில் இருந்தே ஆதாரத் தொழிலாக விளங்குவது விவசாயம் தான்... 
வேளாண்மை செழித்து ஓங்குவதே ஒரு நாட்டின் மேன்மைக்கு அடையாளம்!.. 

''..சுழன்றும் ஏர் பின்னது உலகம்!..'' - என்பார் வள்ளுவப் பெருமான்!..

உலகிலுள்ள கருவிகளுள் மேன்மையாகத் திகழ்வது - ஏர்!..
வேளாண் கருவிகளுள் முதலாவதாக விளங்குவது - ஏர்!..

ஏர் கொண்ட உழவன் இன்றி போர் செய்யும் வீரன் ஏது?.. - என்றார் கவியரசர்..

இந்த ஏர் - தனைக் கையில் கொண்டு விளங்குபவள் - ஸ்ரீ வராஹி!.. 

ஸ்ரீ வராஹி  - வேளாண்மையின் ஆதார தெய்வம்!..  

ஆகவேதான்  - விவசாயம் பல்கிப் பெருகி, நாடு நலம் பெற வேண்டும் - என ஆஷாட நவராத்திரி நாட்களில் ஸ்ரீ வராஹி - ஆராதிக்கப்படுகின்றாள்.

வளமைக்கும் செழிப்புக்கும் இந்த மாதமே தொடக்கம்..
உயிர்களின் பசிப் பிணிக்கு மருந்தாகும் வேளாண்மையின் தொடக்கம் இந்த மாதத்தில் தான்.

ஆடியில் புது வெள்ளம் பெருகி வந்து குளம் குட்டைகள் நிறைந்து வயலில் -  நீர் பாய்வதற்கு முன்  - கோடையில் காய்ந்து கிடந்த நிலங்களில் எரு விட்டு உழவு செய்து ஆயத்தப்படுத்திக் கொள்வது ஆனியில் தான்!.. 

அதன்படியே - 

தென்னகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும்
சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகராக விளங்கும் தஞ்சை மாநகரில்  -

ஸ்ரீராஜராஜேஸ்வரம் எனப்படும்  -
ஸ்ரீ பெருவுடையார் திருக்கோயிலில் -
அருளாட்சி புரியும் ஸ்ரீ வராஹி அன்னைக்கு
சிறப்பான முறையில் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகின்றது!..

தமிழகத்தில் சிவாலயங்கள் பலவற்றிலும்
சப்தகன்னியர் திருமேனிகள் விளங்கினாலும்  -

காசியம்பதிக்கு அடுத்து - தஞ்சை பெரிய கோயிலில் தான் -
ஸ்ரீ வராஹி தனி சந்நிதியில் விளங்குகின்றனள்.  

ஸ்ரீ மஹாவிஷ்ணு வராக உருக் கொண்டு -
இவ்வுலகை அசுரர்களிடம் இருந்து மீட்டபோது
அவரிடம் விளங்கிய சக்தி - ஸ்ரீ வராஹி என்பது  திருக்குறிப்பு!..


நம் உடலில் இலங்கும் ஆறு ஆதார சக்கரங்களில் ஐந்தாவதாக
நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்தின் அதிபதி - ஸ்ரீ வராஹி.

பிரதமை முதல் சதுர்த்தசி வரையிலான நாட்களில்
ஐந்தாவது நாளாகிய பஞ்சமி  - ஸ்ரீ வராஹிக்கு உரிய நாள்.

வேளாண்மைக்கு உரியதான ஏர்
தொழிலுக்கு உரியதான உலக்கை
ஆகிய இரண்டும் ஸ்ரீ வராஹி அன்னையின்
திருக்கரங்களில் விளங்குகின்றன!..

ஸ்ரீ வராஹி மிகச் சிறந்த வரப்ரசாதி!..

ஸ்ரீ வராஹிக்கு சதுரங்கசேனா நாயகி எனும் திருப்பெயர் உண்டு.  
ஸ்ரீ லலிதாம்பிகையின்  நால்வகைப் படைகளின் தலைவி இவளே!..

நெஞ்சின் நல்ல எண்ணங்களை நிறைவேற்றித் தருபவள் - ஸ்ரீ வராஹி!..
நேர்மையான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பவள் - ஸ்ரீ வராஹி!..


மாமன்னன் ராஜராஜசோழனின் இஷ்ட தெய்வம் ஸ்ரீவராஹி.

ஸ்ரீவராஹியின் துணை கொண்டே -   குமரி முதல் நர்மதை வரை அரும்பெரும் வெற்றிகளை எளிதாக சாதிக்க முடிந்தது.

சோழ வளநாடு, இப்புகழினை எய்தியதற்கு -   ஸ்ரீ வராஹி அம்மனின்  பெருந் துணையே காரணம்  என்பதை எளிதாக உணரலாம். 

கடல் கடந்தும் வெற்றிகளைக் குவித்திட  - மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு உறுதுணையாக இருந்தவள் ஸ்ரீ வராஹி!..

சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகர்  தஞ்சை மாநகரில்  - தண்ணருள் பொழிபவள் ஸ்ரீ வராஹி!..


இன்றும் - தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலில்  கைகூப்பி வணங்கும் பக்தருக்கெல்லாம் உற்றதுணையாய் வருபவள் ஸ்ரீ வராஹி!..

மிகுந்த இனிப்புடன் கூடிய பொங்கல், கேசரி, பாயசம், ஜிலேபி போன்ற நிவேத்யங்கள் அம்பிகைக்கு மிகவும் உகந்தவை.  

மருக்கொழுந்து, வில்வம், கிருஷ்ணதுளசி மற்றும் மல்லிகை, முல்லை இவற்றால் அர்ச்சிக்க - அல்லல்கள் அடியோடு அழிவதை உணரலாம்.

தீராத பிரச்னைகள் தீர்வதற்கு கருநீலம் அல்லது கரும்பச்சை வண்ணத்தில் புடவை சாத்தி நேர்ந்து கொள்ள அன்னையின் அருள் பரிபூரணமாகக்  கிட்டும். 

திருக்கரங்களில் ஏர்கலப்பையும் உலக்கையும் தங்கி விளங்குவதால் -  ஸ்ரீவராஹி அம்மனை வணங்குபவர் வீட்டில் உணவுக்குப் பஞ்சமே வராது!.

தவிரவும் - வீட்டில் நிலவும் கடன், நோய் போன்ற பிரச்னைகள் தொலைந்து போகும்!.

வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் ஆரோக்கியமும் ஆயுளும் பொங்கிப் பெருகும்!..


ஆன வராக முகத்தி பதத்தினில் 
ஈனவராகம் இடிக்கும் முசலத்தோடு 
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை 
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே!.. 
திருமந்திரம் 4/5/28. 

- என,  ஸ்ரீ வராஹியின் பராக்கிரமத்தினை - திருமூலர் புகழ்கின்றார்.

சங்கு, சக்கரம், ஏர், உலக்கை (முசலம்), அங்குசம், பாசம் தாங்கிய திருக் கரங்களுடன் திகழும் ஸ்ரீ வராஹி அபயமும் வரதமும் அருள்பவள்.. 

(ஈனவராகம் = ஈனவர் ஆகம்.. இழிந்தவர் தேகம்)

ஆறு குளங்களை அழித்தல், காடு மலைகளை ஒழித்தல்,
ஊர் சொத்தைக் கொள்ளையடித்தல், மங்கையரை மானபங்கம் செய்தல்
முதலான இழி குணம் மிக்க ஈனர்களின் தேகத்தினை 
இடித்து நசுக்குவதற்கு உலக்கையைத் தாங்கியிருக்கின்றாளாம் வராஹி...

தங்கள் துன்பங்கள் தீர வேண்டும்!.. 
என்று தியானித்து உணர்பவர் தம் உள்ளங்களில்
என்றென்றும் ஓங்கி ஒளியாக விளங்குகின்றாள்!..
- என்பது திருமூலரின் திருவாக்கு!..


''..மருந்தினும் இனிய சொற்பைங்கிளி வராஹி!.''
என்று புகழ்பவர் - அபிராமபட்டர்!

இங்கே, மருந்து எனக் குறிப்பிடப்படுவது - அமிர்தம்!..
அமிர்தத்தினை விட இனிய சொற்களைப் பேசுபவளாம் அன்னை!..


தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு -
ஆனி மாத அமாவாசைக்கு முதல் நாள் (1/7) ஸ்ரீ மஹாகணபதி ஹோமத்துடன் ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாகத் தொடங்கியது..


விழா நாட்களின் காலைப் பொழுதில் திருச்சுற்று மண்டபத்தில் -
அஷ்டபுஜ வராஹி அம்மன் உற்சவத் திருமேனியளாக எழுந்தருளினாள்..

காலையில் மூல மந்த்ரத்துடன் யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி..
தொடர்ந்து மதியப் பொழுதில் - சந்நிதியில் மஹாஅபிஷேகம்.

மாலையில் சிறப்பு அலங்காரம்... மகா தீபாராதனை தரிசனம்..

அன்னையின் ஆராதனையில் அன்னதான வைபவமும் இன்னிசை,
கலை நிகழ்ச்சிகளும்  - குறிப்பிடத்தக்கவாறு நிகழ்ந்துள்ளன..


இத்திருவிழாவில் - 
இனிப்பு வகைகள், மஞ்சள், குங்குமம், சந்தனம் - எனும் மங்கலங்களால் அலங்கரிக்கப்பட்டாள்...

அடுத்தடுத்த நாட்களில்  -
தேங்காய் பூவினாலும், மாதுளை முத்துக்களாலும், நவதானியங்களாலும்,
பசு வெண்ணெயினாலும் அலங்காரம் கொண்டு திகழ்ந்தாள்.



கனிகளாலும், காய்களாலும் மலர்களாலும் திருக்கோலங்கொண்ட
வராஹி அன்னைக்கு நேற்று (11/7 ஆனி 26 தசமி) காலையில் பூச்சொரிதல்!..

மாலைப் பொழுதில் - கோலாகலமாக
நாதஸ்வர மங்கலத்துடன் கூத்தொடு பறையொலி தவிலொலியும் கொண்டு -
சிவகண திருக்கயிலாய மற்றும் செண்டை வாத்திய முழக்கங்களுடன் -
அலங்கார ரதத்தில் எழுந்தருளி - ராஜவீதிகளில் பவனி கண்டருளினாள். 


அன்னை ஸ்ரீ வராஹி  - எதிர்ப்புகளை தகர்ப்பவள்.
வேளாண் தொழில்களில் மேன்மையை அருள்பவள்.

இல்லங்களில் தன தான்ய மழையினைப் பொழிவிப்பவள்.
கொடுமை கொடுவினைகளை அடியோடு அழிப்பவள்.

நம்மிடம் நேர்மை இருக்கும் பட்சத்தில் - 
நமக்கு உற்ற துணையாகி நல்வழி காட்டுபவள்.  

நியாயமான செலவுகளுக்காக வாங்கிய கடனை - 
திருப்பிக் கொடுக்க இயலாத சூழ்நிலையிலும், 

நம்பிக்கையுடன் கொடுத்த கடன் - 
எதிர்பார்த்தபடி திரும்பக் கிடைக்காத சூழ்நிலையிலும்,

அளப்பரிய அன்புடன்  - நமக்குக் கை கொடுப்பவள் ஸ்ரீ வராஹி. 


என் அன்பு மகளின் திருமண வைபவத்தை நடத்திக் கொடுத்தவள் - இவளே..

அவ்வப்போது ஸ்ரீ வராஹி அம்மனுக்கு புதுப்பட்டு சமர்ப்பித்து,
அபிஷேக அலங்கார ஆராதனை - என, நன்றிக்கடன் செலுத்தி நிற்கின்றோம்..

அம்பிகைக்கு செலுத்தும் நன்றிக்கடன் இத்துடன் முடிந்து விடக்கூடிய ஒன்றா!..

எத்தனை எத்தனையோ பிறவிகளுக்குத் தொடரக்கூடியது!..
தொடர வேண்டும்.. அதுவே எங்கள் விருப்பம்!..

இயன்ற போதிலெல்லாம், வீட்டில் - நெல் அல்லது பச்சைப்பயறு கொண்டு கோலமிட்டு, நெய் விளக்கேற்றி வைத்து,

அதிக இனிப்புடன் கூடிய (பாயாசம்,கேசரி, ஜிலேபி போன்ற) பட்சணங்களை நிவேதனம் செய்து ஸ்ரீ வராஹி அம்மனை வழிபடுங்கள்..

உங்கள் இல்லத்திற்கும்
வரந்தர வராஹி வருவாள்!..
வரங்கள் பல தந்து
வழித்துணை ஆகவும் வருவாள்!..
யான் பெற்ற பேற்றினை அனைவரும் பெறுங்கள்!..


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர் 
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே!..(77) 
-: அபிராம பட்டர் :-

அம்பா சூலதனு கசாங்குஸதரி அர்த்யேந்து பிம்பாதரி
வாராஹி மதுகைடப ப்ரஷமனி வாணி ரமா ஸேவிதா
மல்லாத்யாசுர மூகதைத்ய மதனி மாஹேஸ்வரி சாம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீராஜராஜேஸ்வரி..

வரந்தரும் வராஹி
வாழ்க.. வாழ்க!..
* * *

திங்கள், ஜூன் 26, 2017

வருக.. வருக.. வராஹி

அன்னை!..

அவளிடமிருந்து தான் இந்த பிரபஞ்சம் தோன்றியது..


புவனம் பதிநான்கைப் பூத்தவளும் இவளே..
பூத்த வண்ணம் காத்தவளும் இவளே..
புன்னகை ததும்பக் காப்பவளும் இவளே!..

இத்தகையவள் தான் -
வானகமும் வையகமும் உய்வடையும் பொருட்டு
ஸ்ரீவராஹி எனத் திருக்கோலங்கொண்டனள்..

மருந்தினும் நயந்த சொற்பைங்கிளி
தென்னகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் சோழவளநாட்டின்
தனிப்பெருந் தலைநகராக விளங்கும் தஞ்சை மாநகரின்
அதிபதியாகத் திகழ்பவள் - ஸ்ரீ வராஹி!..

மாமன்னன் ராஜராஜ சோழனின் வழித்துணை ஸ்ரீ வராஹி!..

குமரி முதல் நர்மதை வரை மட்டுமல்லாமல் 
கடல் கடந்த தேசங்களிலும் கலம் செலுத்தி
மாபெரும் வெற்றிகளை எளிதாக சாதித்ததற்கு
பெருந்துணையாகத் திகழ்ந்தவள் - ஸ்ரீ வராஹி!..  


சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகர்  தஞ்சை மாநகரில்  - 
தண்ணருள் பொழிபவள் ஸ்ரீ வராஹி!..

இன்றும் - 
தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில்  கைகூப்பி வணங்கும் 
பல்லாயிரம் பக்தருக்கும் உற்றதுணை - என வருபவள் ஸ்ரீ வராஹி!..

அருள்மிகும் பெருவுடையார் திருக்கோயிலில் -
அருளாட்சி புரியும் ஸ்ரீ வராஹி அன்னைக்கு சிறப்பான முறையில்
இந்த ஆண்டும் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகின்றது..

தமிழகத்தின் சிவாலயங்கள் பலவற்றிலும் 
சப்தகன்னியர் திருமேனிகள் திகழ்ந்தாலும்  -

காசியம்பதிக்கு அடுத்து - 
தஞ்சை பெரியகோயிலில் தான் -
தனி சந்நிதியில் விளங்குகின்றனள் ஸ்ரீ வராஹி ...

பெரியகோயிலின் தெற்கு திருச்சுற்றின் பிரகார மண்டபத்தில் 
சப்த கன்னியருக்கும் மாமன்னன் திருமேனிகளை வடித்து வழிபட்டனன்..

ஆனால் - காலவெள்ளத்தின் ஓட்டத்தில்
நமக்கு கிடைத்திருப்பவள் ஸ்ரீ வராஹி மட்டுமே!..

எஞ்சிய திருமேனிகள் என்னவாயின - என்பதைக் கூறுதற்கில்லை..  


அளவற்ற சக்தியுடன் விளங்குபவள் - ஸ்ரீவராஹி..
அதிலும் ஆதார சக்தியாகத் திகழ்பவள் - ஸ்ரீ வராஹி!..

நெஞ்சின் நல்ல எண்ணங்களை நிறைவேற்றித் தருபவள் - ஸ்ரீ வராஹி!..
நேர்மையான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பவள் - ஸ்ரீ வராஹி!..

வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அருளும் கருணை உடையவள்.

வளமைக்கும் செழிப்புக்கும் பச்சைப் பசுமைக்கும் அதிபதியானவள்..  
வேளாண்மை செழித்து ஓங்குவதே ஒரு நாட்டின் மேன்மைக்கு அடையாளம்!.. 

ஆதியில் இருந்தே விவசாயம் தான் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குவது. 

உலகிலுள்ள கருவிகளுள் மேன்மையாகத் திகழ்வது - ஏர்!..
வேளாண் கருவிகளுள் முதலாவதாக விளங்குவது - ஏர்!..

சுழன்றும் ஏர் பின்னது உலகம்!.. - என்பார் வள்ளுவப் பெருமான்!..

இந்த ஏர் - தனைக் கையில் கொண்டு விளங்குபவள் - ஸ்ரீ வராஹி!.. 

வளமையும் செழிப்பும் ஆனி மாதத்திலிருந்தே தொடங்குகின்றன..

ஆடியில் புது வெள்ளம் பெருகி வந்து குளம் குட்டைகள் நிறைந்து
வயலில் நீர் பாய்வதற்கு முன்  - கோடையில் காய்ந்து கிடந்த நிலங்களில்
எரு விட்டு உழவு செய்து ஆயத்தப்படுத்திக் கொள்வது ஆனி மாதத்தில்!..

எனவேதான்  - விவசாயம் பல்கிப் பெருகி, நாடு நலம் பெற வேண்டும் - என ஆஷாட நவராத்திரி நாட்களில் ஸ்ரீ வராஹி - ஆராதிக்கப்படுகின்றாள்.

வேளாண்மையின் ஆதார தெய்வம் - ஸ்ரீ வராஹி!..  


தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு -
கடந்த அமாவாசை தினத்தன்று (ஆனி 09/ ஜூலை 23) காலை மஹாகணபதி ஹோமத்துடன்  ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாகத் தொடங்கியது.

தொடர்ந்த நாட்களில் -

காலைப் பொழுதில் திருச்சுற்று மண்டபத்தில் -
அஷ்டபுஜ வராஹி அம்மன் உற்சவத் திருமேனியளாக எழுந்தருளினாள்..

மூல மந்த்ரத்துடன் யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி..

தொடர்ந்து - சந்நிதியில் மஹாஅபிஷேகம்.
மாலையில் சிறப்பு அலங்காரம்... மகா தீபாராதனை தரிசனம்..

23/6 வெள்ளியன்று இனிப்புகளால் அலங்காரம்
24/6 சனிக்கிழமையன்று மஞ்சள் அலங்காரம்
25/6 ஞாயிறன்று குங்கும அலங்காரம் 
- என, நடைபெற்றது.. தொடர்ந்து,

26/6 திங்களன்று சந்தன அலங்காரம்
27/6 செவ்வாய்க்கிழமை தேங்காய்ப் பூ அலங்காரம்
28/6 புதனன்று மாதுளை முத்துகளால் அலங்காரம்
29/6 வியாழன்று நவதானிய அலங்காரம்
30/6 வெள்ளியன்று வெண்ணெய் அலங்காரம்
01/7 சனிக்கிழமை கனிகளால் அலங்காரம்
02/7 ஞாயிறன்று காய் வகைகளால் அலங்காரம்
- என, நிகழ இருக்கின்றது..

03/7 திங்களன்று காலையில் பூச்சொரிதல்..
தொடர்ந்து மாலை ஆறு மணியளவில் ராஜவீதிகளில் திருவுலா..

நாதஸ்வர மங்கலத்துடன் கூத்தொடு பறையொலி தவிலொலியும் கொண்டு -
சிவகண திருக்கயிலாய மற்றும் செண்டை வாத்திய மேளதாளங்கள் முழங்க கரகாட்டம் ஒயிலாட்டம் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் அலங்கார ரதத்தில் எழுந்தருள்கின்றாள்.. 

ஜூலை 01 (ஆனி 14) அன்று பஞ்சமி.. அன்றைய தினத்தில் ஆயிரம் பேருக்கு மேல் நிவேதனப் பிரசாத அன்னதானம் வழங்கப்பட உள்ளது..


ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் அங்குசத்திலிருந்து தோன்றியவள் ஸ்ரீ வராஹி!..
ஸ்ரீ லலிதாம்பிகையின் படைகளுக்குத் தலைவியானவள் ஸ்ரீ வராஹி!..

சதுரங்கசேனா நாயகி எனும் திருப்பெயர் கொண்டவள் - ஸ்ரீ வராஹி!..
சப்த கன்னியருள் ஐந்தாவதாக விளங்குபவள் - ஸ்ரீ வராஹி!..

பஞ்சமி எனும் ஐந்தாம் கலைக்கு அதிபதியானவள் - ஸ்ரீ வராஹி!..
அதனால் வளமைக்கும் செழுமைக்கும் உரியவள் - ஸ்ரீ வராஹி!..
  
நம் உடலில் இலங்கும் ஆறு ஆதார சக்கரங்களில் -
ஐந்தாவதாக நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்தின் அதிபதி - ஸ்ரீ வராஹி..

வேளாண்மைக்கு உரியதான கலப்பையையும் 
தொழிலுக்கு உரியதான உலக்கையையும் 
திருக்கரங்களில் தாங்கியிருப்பவள் ஸ்ரீ வராஹி!..

ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரியும்,
புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும்,
தை மாதத்தில் சியாமளா நவராத்திரியும்,
பங்குனி மாதத்தில் வசந்த நவராத்திரியும் -

ஆன்றோர்கள் வகுத்தளித்த வைபவங்களுள் சிறப்பானவை. 

இவற்றுள் - ஆனி மாதத்தின் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரிக்கு உரியவள் - ஸ்ரீ வராஹி!..


அன்னை ஸ்ரீ வராஹி  - எதிர்ப்புகளை தகர்ப்பவள்.
வேளாண் தொழில்களில் மேன்மையை அருள்பவள்.
இல்லங்களில் தன தான்ய மழையினைப் பொழிவிப்பவள்.
கொடுமை கொடுவினைகளை வேரோடு அழிப்பவள்.

ஸ்ரீ வராஹி குடியிருக்கும் இல்லத்தை
பஞ்சமும் பிணியும் நெருங்காது..
நம்மிடம் நேர்மை இருக்கும் பட்சத்தில் - 
நமக்கு உற்ற துணையாகி நல்வழி காட்டுபவள்..  

நியாயமான செலவுகளுக்காக வாங்கிய கடனை - 
திருப்பிக் கொடுக்க இயலாத சூழ்நிலையிலும், 
நம்பிக்கையுடன் கொடுத்த கடன் - 
எதிர்பார்த்தபடி திரும்பக் கிடைக்காத சூழ்நிலையிலும்,

அளப்பரிய அன்புடன்  - நமக்குக் கை கொடுப்பவள் ஸ்ரீ வராஹி. 



ஆன வராக முகத்தி பதத்தினில் 
ஈனவராகம் இடிக்கும் முசலத்தோடு 
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை 
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே!.. 
திருமந்திரம் 4/5/28. 

ஸ்ரீவராஹியின் திருப்பாதங்களுக்கு 
என்றென்றும் எங்களது நன்றிக்கடன் உரியது.. 

எங்களது நன்றிக்கடன் 
இத்துடன் முடிந்து விடக்கூடிய ஒன்றல்ல!..

எத்தனை எத்தனையோ பிறவிகளுக்குத் தொடரக்கூடியது!..
தொடர வேண்டும்.. அதுவே எங்கள் தவம்!..


அன்புள்ளம் ஒன்று போதும் - அவளை வழிபடுவதற்கு..

ஸ்ரீ வராஹி அம்மனை வழிபடுதற்கு எல்லா நாளும் ஏற்றவை..
எனினும் - வளர்பிறையின் பஞ்சமி நாள் மிகவும் ஏற்றது.. 

நமக்கு இயன்ற அளவில் - 
பூஜையறையில் அல்லது சாமி மாடத்தின் முன்பாக 
நெல் அல்லது பச்சைப் பயிறு கொண்டு கோலமிட்டு, 
நெய் விளக்கேற்றி வைத்து வழிபடலாம்..

தாமரை, ரோஜா, மல்லிகை, முல்லை போன்ற நறுமண மலர்களும்
வில்வம், மருக்கொழுந்து போன்ற பத்ரங்களும் உகந்தவை..

அதிக இனிப்புடன் கூடிய கனி வகைகள் 
பாயசம்,கேசரி, ஜிலேபி போன்ற பட்சணங்கள்
இவற்றுள் நம்மால் இயன்றதை அன்புடன் 
நிவேதனம் செய்து ஸ்ரீ வராஹி அம்மனை வழிபடுங்கள்..

யான் பெற்ற பேற்றினை 
அனைவரும் பெற வேண்டும்!..

உங்கள் இல்லத்திற்கும்
வராஹி வருவாள்!..
வரங்கள் பல தந்து
வளமும் நலமும் நல்கிடுவாள்!..


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர் 
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே!..(77) 
-: அபிராம பட்டர் :-

அம்பா சூலதனு கசாங்குஸதரி அர்த்யேந்து பிம்பாதரி
வாராஹி மதுகைடப ப்ரஷமனி வாணி ரமா ஸேவிதா
மல்லாத்யாசுர மூகதைத்ய மதனி மாஹேஸ்வரி சாம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீராஜராஜேஸ்வரி..

வரந்தரும் வாராஹி வருக.. வருக..
வளந்தரும் வாராஹி வாழ்க.. வாழ்க!..
* * *