நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 27, 2014

ஸ்ரீ மஹாசிவராத்திரி - 2

திருக்கயிலை மாமலையின் பொன் முகடு.

அம்மையும்  அப்பனும் அருள் வடிவாக வீற்றிருந்தனர்.


அருகில் விநாயகரும் வேலவனும் விளையாடிக்கொண்டிருந்தனர்.  

சிறகைக் கோதியபடி மயில் ஒருபுறம் இருக்க - மறுபுறம் மூஷிகம் கிடைத்ததைக் கொறித்துக் கொண்டிருந்தது.
பொற்பிரம்பினைத் தாங்கியவராக நந்தியம்பெருமான் சேவகம் சாதிக்க - 

முப்பத்து முக்கோடி தேவரும் முனிவரும் கணங்களும் வித்யாதரர்களும் யட்சர்களும் நாகர்களும் கின்னரர்களும் ஐயனின் திருவடிகளில் விழுந்து வணங்கி மகிழ்வதற்கு பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த வேளை அது.


எம்பெருமானின் திருமுடிமேல் வெண்கொற்றக்குடை என  படம் விரித்திருந்த நாகராஜன் மெல்ல அசைந்து கொண்டிருந்தான். 

அவனுக்குள் சட்டென ஒரு நினைப்பு.

''... நமக்கும் சேர்த்துத் தானே... இந்த மதிப்பும் மரியாதையும்!...''

அவன் இறுமாப்பு எய்திய  அந்தக் கணமே - அதள பாதாளத்தில் தலைகீழாக விழுந்தான். விழுந்த வேகத்தில், அழகிய தலை ஆயிரமாக சிதறிப் போனது.

ஜயகோஷத்துடன் ஆரவாரித்துக் கொண்டிருந்த பெருங்கூட்டம் அதிர்ச்சி அடைந்து  பின் வாங்கி நின்றது. 

'' ஈசனின் சிரசில் இருந்தவனுக்கு புத்தி பேதலிக்கலாமா!.. இனி அவன் கதி என்ன  ஆகுமோ?.. '' - என அனைவரும் நடுங்கினர்.

கண்ணீரும் செந்நீருமாக கயிலை மாமலையின் அடிவாரத்தில் நின்று கதறினான்  நாகராஜன்.

''... ஐயனே!... அகந்தையினால் அறிவிழந்து விட்டேன்... என் பிழைதனைப் பொறுத்தருளுங்கள்... ஸ்வாமி!..''

பாதாளத்திலிருந்து மெல்ல மேலேறிய அவனுக்கு, எம்பெருமானின் சந்நிதியில் வருவதற்கு அச்சம்!...

அம்பிகை ஐயனை ஏறிட்டு நோக்கினாள். அதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். எம்பெருமானும் புன்னகைத்தார்.  

நடந்ததை கவனித்துக் கொண்டிருந்த பிள்ளையார், நாகராஜனிடம் சென்று -

'' சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் எம்பெருமானை வழிபட்டு பாவம் நீங்கப் பெறுவாயாக!...'' - என்று வழிகாட்டினார்.

'' உத்தரவு... ஐயனே!...'' என வணங்கிய நாகராஜன், நூலாக நைந்து தொங்கிய தலைகளைத் திரட்டிக் கொண்டு சென்றான். 


பின்னிப் பிணைந்திருந்த, வேம்பு அரசு - விருட்சங்களின் நிழலில் இருந்து விநாயகரைக் குறித்துத் தவம் செய்தான். 

பேரொளியுடன் பிரசன்ன விநாயகர் எதிர் நின்றார். அவரிடம் -

சிவராத்திரியின் நான்கு காலத்திலும்  வழிபடும் முறைகளைக் கேட்டறிந்து, அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டான். 

மண்டையில் வைத்துக் கொண்டால் தான் -  கனமாகி விடுகிறதே!...

தான் செய்த பிழைக்குப் பிராயச்சித்தம் தேடவேண்டும். அதற்கு ஆதிசேஷன் தலைமையில்  மாநாடு கூட்டினான் - நாகராஜன்.

அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய அனைவருடைய ஆதரவினையும் வேண்டினான்.

''சிவதரிசனம் செய்த மாதிரியும் இருக்கும். ஊர் சுற்றிப் பார்த்த மாதிரியும் இருக்கும்'' - என்று அனைவரும் உடனே தலைகளை ஆட்டி சம்மதித்தனர். 

ஆனால், அவர்களுக்குத் தெரியாது - இரவில் சிவபூஜை செய்யப் போவது!....  

தலை சிதறிய வேதனையிலும் - மகிழ்ச்சியடைந்த நாகராஜன், தன் இனத்தின் அத்தனை தலைகளையும் உடன் அழைத்துக் கொண்டு, ஆதிசேஷன் தலைமையில் -  காவிரியின் தென்கரைக்கு விரைந்தான்.

மகா சிவராத்திரியை நோக்கி அத்தனை பேருடன் தவமிருந்தான்.  

அவனை நல்ல காலம் நெருங்கியது.

சிவராத்திரியின் முதல் காலம்
(மாலை 6 மணி முதல் முன்னிரவு 9 மணி வரை)


விநாயகர் குறித்துக் கொடுத்தபடி - காவிரியில் நீராடினான். தலைக்காயம் கொஞ்சம் ஆறியிருந்தது. நதிக்கன்னியர் நீராடிய திருக்குளத்தில் மீண்டும் நீராடினான். 

தன்னை மறந்த நிலையில் தன் பிழை தீர - சிவபூஜை செய்தான். மனம் நிறைவாக இருந்தது.

கண்களில் நீர் வழிய நெடுங்கிடையாக விழுந்து வணங்கினான்.

இரண்டாம் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

சிவராத்திரியின் இரண்டாம் காலம்
(இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)

முதற்கால பூஜையினை நிறைவு செய்த நாகராஜன் தன் கூட்டத்தாருடன் விரைவாக வந்து சேர்ந்த திருத்தலம் செண்பக மரங்கள் அடர்ந்திருந்த சண்பகாரண்யம்.

அங்கே ஆதியில் சூரியனும் சந்திரனும் சிவபெருமானை வணங்கியபோது உண்டாக்கியிருந்த சூரிய புஷ்கரணி  நீர் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது.

பயணக் களைப்பு தீர - நன்றாக முழுகிக் குளித்தனர் எல்லோரும்!...

இரண்டாங்காலத்தில்  இறைவனை வழுத்தி வணங்கி நின்றான் நாகராஜன்.

''தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி!... 
தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி!... ''

- என்று தொழுது நின்றான். நினைவில் சேர்ந்த அழுக்கு தீர அழுது நின்றான்.

மூன்றாம் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

சிவராத்திரியின் மூன்றாம் காலம்
(நள்ளிரவு  12 மணி முதல் பின்னிரவு 3 மணி வரை)

நள்ளிரவு. இருளில் தட்டுத் தடுமாறினாலும் - தடம் மாறாமல் விநாயகர் அருளிய திருக்குறிப்பின்படி வந்து சேர்ந்தாகி விட்டது.

இனி தாமதிக்க நேரமில்லை. நலிந்திருந்த நாகராஜனுக்குத் துணையாக ஆதிசேஷன் தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்தான். குறைகள் தீரும் வண்ணம் குளித்தாகி விட்டது.


ஆலம் விழுதில் அகத்திப் பூக்களைத் தொடுத்து ஐயனுக்குச் சாற்றி -

 ''..அகந்தை அழித்த அருட்சுடரே!..'' - எனப் பணிந்து வணங்கினான் நாகராஜன்.

கண்களில் நீர் வழிய மெய்மறந்து நின்ற நாகராஜனிடம் - நான்காம் காலம் நெருங்குவது நினைவூட்டப்பட்டது.

சிவராத்திரியின் நான்காம் காலம்
(பின்னிரவு 3 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை)

பிழை பொறுத்து அருளும் பெருமான் உறையும் திருத்தலம் அல்லவா!.. 

பரபரப்புடன் ஓடி வந்தனர். மெய் சோர்ந்தது. கண்கள் பெருகி வழிந்தன. 

சாப விமோசனம் நிகழும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் நாகராஜனுக்கு அழுகையும் ஆற்றமையும் அடக்க முடியாமல் பொங்கிப் பீறிட்டு வந்தன.

ஆதிசேடன் அருகிருந்து ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.

புண்டரீக மாமுனிவர் அமைத்திருந்த தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தான் நாகராஜன்.


அங்கே விநாயகர் எழுந்தருளி - கருணையுடன் நாகராஜனை வாழ்த்தினார். அவருடைய திருவயிற்றில் உதரபந்தனமாக நாகம் ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.

நாகாபரணப் பிள்ளையாரின் திருப்பாதங்களில் விழுந்த நாகராஜன் ''ஓ'' எனெக் கதறி அழுதான்.  

நாகராஜனின் சிரத்தில் கை வைத்து தேற்றினார் விநாயகர். அவருடைய அனுமதியுடன் திருத்தலத்தினுள் பிரவேசித்தான்.

கால்கள் தள்ளாடின. கண்களில் நீர் சுரந்து பெருகி பார்வையை மறைத்தது.

கரங்களைத் தலைக்கு மேல் தூக்கி வணங்கியபடி - சிவலிங்க பீடத்தில்  தன் கூட்டத்தாருடன் விழுந்தான்.

''...குற்றமே செய்த கொடிய மகன். ஆனாலும் புத்திர வாஞ்சையுடன் என்னைப் பொறுத்தருள்க!.. எம்பெருமானே!..''

குமுறி அழுத நாகராஜனின் கண்கள் கூசின.

அவன் செய்த வழிபாட்டின் பெரும்பயனாக - பேரொளிப் பிழம்பென,


கவலைகளை எல்லாம் தீர்த்தருளும் கருந்தடங்கண்ணி அம்பிகையும் கருநீலகண்டனாகிய காயாரோகண ஸ்வாமியும் தோன்றியருளினர்.

அவர்தம் பாதாரவிந்தங்களைப் பற்றித் தொழுதான். தன் பிழை பொறுத்தருள வேண்டினான்.

அம்மையும் அப்பனும் புன்னகைத்தனர்.

பாவம் நீங்கிய நாகராஜனும் முன் போலவே திருக்கயிலை மாமலையில் ஐயனின் அடி போற்றி பணி செய்து கிடக்கும் பெருவாழ்வுதனைப் பெற்றான்.

*  *  *

நாகராஜன் தவமாய்த் தவமிருந்து - வழிபட்ட திருத்தலங்கள்

முதல் காலம் 
நலம் தரும் திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஸ்ரீ பிரஹந்நாயகி சமேத ஸ்ரீநாகேஸ்வரன் திருக்கோயில்.

ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோயில்

சித்திரை மாதம் 13,14,15 - ஆகிய நாட்களில் சூரிய  பூஜை நிகழும் திருத்தலம்.

இரண்டாம் காலம் 
தனம் தரும் திருநாகேஸ்வரம் 
ஸ்ரீ கிரிகுஜாம்பிகை சமேத ஸ்ரீநாகநாத ஸ்வாமி திருக்கோயில்.

ஸ்ரீ நாகநாதஸ்வாமி திருக்கோயில்

சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்தலை  அரவின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச்சரவரே!..(5/52)
                                                                        
திருநாவுக்கரசு சுவாமிகள், நாகராஜனை - ஐந்தலை அரவு - எனக் குறிப்பிட்டு  பாடுகின்றார்.

காலப்போக்கில் திருக்கோயிலின் வெளித்திருச்சுற்றில் நாகராஜனுக்கு - நாககன்னி, நாகவல்லி - எனும் தேவியருடன் சந்நிதி  எழுப்பப் பட்டது.

இந்தத் திருக்கோலத்தைத் தான், ராகு பகவான் என - பிழையாகக் கொண்டு தவறான வழிகாட்டுதல்களுடன் - வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மூன்றாம் காலம்  
அருள் தரும் திருப்பாம்புரம் 
ஸ்ரீ வண்டார்குழலி சமேத ஸ்ரீசேஷபுரீஸ்வரர் திருக்கோயில்.

ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்

திருப்பாம்புரம் திருக்கோயிலினுள் யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்யாதபடி - நாகங்கள் உரிமையுடன் உலாவுவதை நாம் காணலாம்.

நான்காம் காலம்  
வளம் தரும் திருநாகப்பட்டினம்  
ஸ்ரீ நீலாயதாட்சி சமேத ஸ்ரீகாயாரோகணேஸ்வரர் திருக்கோயில்.

ஸ்ரீகாயாரோகணேஸ்வரர் திருக்கோயில்

முசுகுந்த சக்ரவர்த்தி தேவலோகத்திலிருந்து கொணர்ந்து அமைத்த விடங்கத் திருத்தலங்கள் ஏழினுள் - சுந்தர விடங்கத் தலம்.

நாகராஜனுக்கு அருளிய நாகாபரண விநாயகர் திருக்கோயிலின் முதலில் வீற்றிருக்கின்றார்.

நாகம் என்பது யோக நூல்களில் குண்டலினியாக உருவகப்படுத்தப்படுவது. குண்டலினி நமது ஜீவசக்தி. மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் உயிர் சக்தி.

இப்போது இவற்றை ஒன்றுபடுத்திப் பாருங்கள்!...

அகங்காரத்தினால் சிதறிப் போகின்றது ஜீவசக்தி. 
நாம் ஒன்றிய மனத்துடன் சிவபூஜை செய்து - 
இதை ஒருங்கிணைத்தால் பெறுதற்கு 
அரிய பெருவாழ்வினை மீண்டும்  பெறலாம் .

இதுவே - சிவராத்திரியன்று நிகழ்த்தும் சிவவழிபாட்டின் தத்துவம்!..


இந்த புனிதமான பொழுதில், உங்களோடு என்னையும் திருத்தலங்களைத் தரிசிக்கும்படித்  தண்ணருள் செய்த - எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் தலை வைத்து வணங்குகின்றேன்!..

''ஓம் நம சிவாய... சிவாய நம ஓம்''
''திருச்சிற்றம்பலம்''

புதன், பிப்ரவரி 26, 2014

ஸ்ரீ மஹாசிவராத்திரி - 1

மஹா சிவராத்திரி 
வியாழக்கிழமை
மாசி -  15 (27.02.2014)

திருஞான சம்பந்தப்பெருமான் 
அருளிய 
பஞ்சாட்சரத் திருப்பதிகம் .

மூன்றாம் திருமுறை
திருப்பதிக எண்  - 22.


துஞ்சலுந் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும்
வஞ்சகம் அற்றுஅடி வாழ்த்த வந்தகூற்று
அஞ்சஉ தைத்தன அஞ்செ ழுத்துமே.

உறங்கும் பொழுதிலும் விழித்திருக்கும் பொழுதிலும்  ஒருமுகமாக  -  வஞ்சம் முதலிய தீய குணங்களில் இருந்து நீங்கி - மனம் கசிந்துருகி நாளும் நமசிவாய எனும் திரு ஐந்தெழுத்தை நினைத்து இறைவனைப் போற்றுக!.. 

தன் உயிரினைப் பறிக்க வந்த - கூற்றுவன் அஞ்சி அலறும்படி உதைத்துக் காத்தருளிய  எம்பெருமானின் திருவடிகளை நினைத்து - மார்க்கண்டேயன் போற்றியது - நமசிவாய  எனும் திருஐந்தெழுத்தே!..

மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
  

மந்திரங்களாகவும் , நான்கு மறைகளாகவும் விளங்கி தேவர்களின் சிந்தையில் நின்று அவர்களை ஆட்கொண்டு அருள்வது நமசிவாய  எனும் திரு ஐந்தெழுத்தே ஆகும் . 

தீமைகளுக்கு செந்தழல் - என, மனதினை வளர்த்து செம்மை நெறியில் நிற்கும்  அனைவரும் வேதியர் என - அந்திசந்தி வேளைகளில் தம்நெஞ்சில் தியானிக்கின்ற மந்திரம் - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..


ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர்
ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத்து
ஏனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே. 

உடம்பில் பிராணாயாமத்தால் உயிர்ப்புச் சக்தியை ஒடுக்கி ,  ஒண்சுடராகிய ஞானவிளக்கினை ஏற்றி ஐம்புலன்கள் எனும் நன்புலன்களால் மெய்யறிவை நாடி இறைவனைப் போற்றுபவர்கட்கு ஏற்படும் துன்பங்களைக் கெடுத்து அவர்களைக் காத்து நிற்பன - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..

நல்லவர் தீயரெ னாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்லந மன்தமர் கொண்டு போமிடத்து
அல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே.  

நல்லவர் தீயவர் என்ற வேறுபாடு இன்றி விரும்பித் துதிப்பவர்கள் எவரேயாயினும் அவர்களுடைய வினைகளை நீக்கிச் சிவமுத்தி அளிப்பது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!.. 

யமதூதர்கள் வந்து உயிரைக் கொண்டு செல்லும்  வேளையில் ஏற்படக் கூடிய துன்பத்தைப் போக்குவன - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!.. 


கொங்கலர் மன்மதன் வாளி ஐந்தகத்து
அங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில்
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.

மன்மதனின் பாணங்கள் தேன் நிறைந்த  ஐந்து மலர்கள்.  நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என்பன ஐம்பூதங்கள். மணம் கமழ  விளங்கும் பொழில்களும் ஐந்து. நல்லரவின் படமும் ஐந்து.  பிறர்க்கு உதவும் கரத்தின் விரல்களும் ஐந்து. 

இவ்வாறு ஐவகையாக விளங்குவன அனைத்திற்கும் மேலாக விளங்குவது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!.. 

தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.  

தும்மல் , இருமல் தொடர்ந்த பொழுதும் , கொடிய நரகம் போல துன்பத்தை அனுபவிக்க நேர்ந்த  பொழுதும் , முற்பிறப்புக்களில் நாம் செய்த வினை இப்பிறவியில் வந்து வருத்தும் பொழுதும், 

இடையறாது - ஈசனை சிந்தித்திருந்தால் -  மறுபிறவியிலும் நம்முடன் வந்து நமக்குத் துணையாவது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..  

வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி உகப்பன அஞ்செ ழுத்துமே. 

இறப்பு , பிறப்பு இவை நீங்கும்படியாக சிவமந்திரத்தைத் தியானிப்பவர்களின் துன்பங்களை நீக்குவதும், நாள்தோறும் சகல செல்வங்களைக் கொடுப்பதும்,

சீர்மிகும் நடமாடி மகிழும் எம்பெருமானின் - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..   

 
வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டையி ராவணன் பாடி உய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்கு
அண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.  

வண்டு மொய்க்கும் பூக்களைச் சூடியவளான ஏலவார்குழலி சிந்தித்திருப்பது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!.. 

திருக்கயிலாய மாமலையைப் பெயர்த்து எடுக்க முயன்று அதன் கீழேயே சிக்கிக்கொண்ட இராவணன் உயிர் பிழைத்து உய்தல் வேண்டிப் பாடியது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!.. 

தம் சிந்தையில் வைத்து வந்தித்தவர்க்கு அண்டங்களையெல்லாம் அள்ளிக் கொடுப்பது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..


கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு
ஆர்வண மாவன அஞ்செ ழுத்துமே. 

திருமாலும் நான்முகனும் காண இயலாத சிறப்புடைய பெருமானின் திருவடிச் சிறப்புகளை  நாளும் பேசிக் களிக்கும் பக்தர்களின்  ஆர்வமாக விளங்குவது நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..

புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்கு
அத்திர மாவன அஞ்செ ழுத்துமே. 
 

புத்தர் , சமணர் -  வார்த்தைகளைக்  கருத்தில் கொள்ளாதவராகி, பொய் இல்லாத சித்தம் கொண்டு தெளிந்து தேறியவர் தம் கருத்தில் விளங்குவது -  நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..

ஞானமாகிய திருநீற்றை அணிபவருடைய - வினை எனும் பகை தனை, அழித்தொழிக்கும் கூரிய அம்பாக விளங்குவது - நமசிவாய எனும் திருஐந்தெழுத்தே!..

நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய
அற்றமில் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லவர் உம்ப ராவரே. 

நற்றமிழும் நான்மறைகளும் கற்று - ஈசனின் பெருமைகளைத் தியானித்து - சீர்காழி மக்களின் மனதில் உறைபவனாகிய ஞானசம்பந்தன் பாடிய - திருவைந்தெழுத்து மாலை - வாழ்வில் கேடுகள் வாராமல் தடுக்கும்.  

திருஐந்தெழுத்து மாலையின் பத்துப் பாடல்களையும் 
சிந்தித்திருக்க வல்லவர் வானவர் ஆவர் - என்பது 
திருஞான சம்பந்தப்பெருமானின் திருவாக்கு.

திருச்சிற்றம்பலம்.

ஞாயிறு, பிப்ரவரி 23, 2014

பொன்மாலைப் பொழுது

கடந்த பிப்ரவரி 19. புதன்கிழமை.

மாலைப் பொழுது. நேரம் - 5.30 மணி.


''.. ஐயா வணக்கம்!.. நான் விஷ்ணு கம்ப்யூட்டர்ஸ் செல்வராஜூ பேசுகின்றேன். தங்களைச் சந்திக்க வேண்டும். தற்சமயம் தாங்கள் எங்கே இருக்கின்றீர்கள்!?.. வீட்டிலா... வெளியிலா!..''


அந்தப் பக்கம் - அன்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.

''..வணக்கம்.. நலமாக இருக்கின்றீர்களா!.. எப்பொழுது குவைத்தில் இருந்து வந்தீர்கள்!?..''

''..மகளின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் வந்தேன்.. எல்லாமே அவசரகதியில் நடந்ததால்  - தங்களுக்கெல்லாம் அழைப்பிதழ் கொடுக்க இயலாமல் போய்விட்டது. திருமண அழைப்பிதழை வலைப் பதிவில் கூட பதிவு செய்ய இயலவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்.. ஐயா!.. தங்களை நேரில் பார்த்து பதில் பேசாமல் என் மனம் ஆறாது.. சொல்லுங்கள்.. உடனே அங்கு...''

''..நம்ம..  முத்து நிலவன்  அவர்களைத் தெரியுமா!..''

''.. தெரியுமே!..''

''.. அவர்கள் இன்று தஞ்சைக்கு வருகின்றார்கள்!..''

''..அப்படியா!..''
நன்றி - கரந்தை ஜெயக்குமார்

''..சாமியப்பா கேம்பஸ்ல - புத்தகக் கண்காட்சி நடக்கின்றதல்லவா.. அங்கே சிறப்புரையாற்ற வருகின்றார்கள். நான் அவர்களை அழைத்து வரச் செல்கின்றேன்.. நீங்கள் அங்கே வந்து விடுங்கள்.. இடம் தெரியுமல்லவா?!..''

''.. தெரியும்.. இதோ...  வந்து விட்டேன்!..''

கரும்பு தின்னக் கூலியா!.. 

அடுத்த அரை மணிநேரத்தில் நான் - தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள சாமியப்பா கூட்டுறவு  மேலாண்மைப் பயிற்சி நிலைய வளாகத்தில் இருந்தேன். 

சாமியப்பா கூட்டுறவு  மேலாண்மைப் பயிற்சி நிலைய வளாகம்   - பரந்து விரிந்து விளங்குவது.

நன்றி - FB.,

அங்கே தான், Rotary Club Of Thanjavur Kings  அமைப்பினர் ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்புடன் நடத்தி வரும் - புத்தகக் கண்காட்சி,

புத்தகத் திருவிழாவாக - பிப்ரவரி 14 முதல் பிப்ரவரி 23 வரை தினமும் மாலை வேளையில் சிறப்புச் சொற்பொழிவுகளுடன் நடந்து கொண்டிருக்கின்றது. 

மாலை வேளையில் வண்ண வண்ண விளக்குகள் தோரணங்களாக ஒளிர  - 

அங்கே நூற்றுக் கணக்கானவர்கள். புத்தகங்களை வாங்குவதற்கும் நல்லோர் தம் சொற்பொழிவுகளைக் கேட்பதற்கும்!..

நீண்டு விளங்கிய அரங்கினுள் - இருபுறமும் தமிழகத்தின் புகழ் பெற்ற பதிப்பகங்களின் கடைகள்.  கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
 
வளாகத்தின் பரந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், 


அப்போது தான் - நம் அனைவருடைய அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு. முத்து நிலவன்  அவர்கள் தனது சிறப்புரையைத் தொடங்கியிருந்தார்கள். 

அவர்களுடைய நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது அதுவே முதன்முறை. 

மேடைக்கு எதிரில் - முதல் வரிசையில், அன்பின் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களும்,


முனைவர் ஜம்புலிங்கம்  - ஆகிய வலைத் தளங்களை  நடத்தி வரும் -


சித்தாந்த ரத்தினம் திரு. முனைவர் B. ஜம்புலிங்கம்  (கண்காணிப்பாளர், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை) அவர்களும் அமர்ந்திருந்தனர்.

அங்கே - மடை திறந்த வெள்ளம் என  - ஐயா முத்து நிலவன் அவர்களின் செந்தமிழ்ப் பெருக்கு.

அதனிடையே அமிழ்ந்தவாறு - அரங்கில் திரண்டிருந்த மக்களின் ஊடாக நானும் அமர்ந்து கொண்டேன்.

அன்றைய நாள் - பிப்ரவரி பத்தொன்பதாம் நாள். 

19.2.1855 - 28.4.1942

தமிழ் கூறும் நல்லுலகம் பெருமையுடன் கொண்டாடும் தமிழறிஞர் உ.வே.சா. அவர்களின் பிறந்த தினம்.  

ஓலைச் சுவடியில் அழியும் நிலையில் இருந்த தமிழ் இலக்கியங்களை மீட்டு பதிப்பித்து அளித்த உ.வே.சா. அவர்களுக்கு  நிகராக வேறு எவரும் இல்லை. 


தனது வாழ்நாளில் மூன்றாயிரத்துக்கும் அதிகமான ஓலைச் சுவடிகளைச் சேகரித்தார். தொண்ணூற்றுக்கும் அதிகமான புத்தகங்களை அச்சிட்டுப் பதிப்பு செய்தார்.

தமது தளராத உழைப்பினால் தமிழின் அருமை பெருமைகளை தமிழர் அறியும் படிக்குச் செய்தவர் - உ.வே.சா. அவர்கள்.

ஆதலால், அன்பின் திரு. முத்து நிலவன் அவர்கள் எடுத்துக் கொண்டிருந்த தலைப்பு -  

உ. வே.சா. அவர்களின் சமயம் கடந்த தமிழ்ப் பணிகள்!.. 

அடடா!.. 

எடுத்துக் கொண்ட தலைப்புக்கு ஏற்றதாக - 

எத்தனை எத்தனை விளக்கங்கள்!.. 

எத்தனை எத்தனை  சொல் நயங்கள்!.. 

அத்தனையும் அழகு!..

தமிழ்த் தாத்தா என அன்புடன் அழைக்கப்படும் - உ.வே.சா. அவர்களின் ஆசிரியராகிய மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றி விவரித்த பாங்கு சிறப்புடையது!..

அதுவரையிலும் சிற்றிலக்கியங்களை மட்டுமே பயின்றிருந்த உ. வே. சா. அவர்கள் -

தனது நண்பர் சேலம் திரு. இராமசாமி முதலியார் - ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான - சீவக சிந்தாமணியைப் பற்றி அறிமுகம் செய்த பின்,

சமய வேறுபாட்டினால் புறக்கணிக்கப்பட்டிருந்த சமண காப்பியமாகிய - சீவக சிந்தாமணியின் சுவடிகளைத் தேடிப் புறப்பட்டதையும்

அரும்பாடுபட்டு, அந்த ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடித்து - பதிப்பித்து வெளியிட்டதையும் திரு. முத்து நிலவன்  அவர்கள் மெய்சிலிர்க்க விவரித்தார்.


முத்து நிலவன் ஐயா அவர்கள் - தனது சிறப்பான சொற்பெருக்கினால் அனைவரையும் கட்டிப் போட்டார் என்பதே உண்மை..

பலத்த கரகோஷங்களுக்கிடையே திரு. முத்து நிலவன் அவர்கள் தனது சிறப்புரையினை நிறைவு செய்தபோது,

இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருக்கலாமே!..  - என்று என் மனம் ஏங்கியது .

மேடையில் இருந்து திரு. முத்து நிலவன் அவர்கள் கீழே இறங்கியதும் நான் சென்று - 

அன்பின் திரு. ஜெயக்குமார் அவர்களை அணுகி எனது வணக்கத்தினைச் சொன்னேன். 

பாசப்பெருக்குடன் எனது கரங்களைப் பற்றிக் கொண்டார் திரு. ஜெயக்குமார் அவர்கள்.

அருகிருந்த முனைவர் திரு. ஜம்புலிங்கம் அவர்களிடம் என்னையும் ஒரு பொருட்டாக அறிமுகம் செய்து வைத்தார். 

அத்துடன் - அன்பின் திரு. முத்து நிலவன் அவர்களிடமும் -

''..தஞ்சையம்பதி எனும் அழகிய வலைத் தளத்தை நடத்துபவர்!..'' - என்று,

என்னை அறிமுகம் செய்து வைத்தபோது என் மனம் நெகிழ்ந்தது.


அன்பின் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களுடனும் 
அன்பின் திரு. ஜம்புலிங்கம் அவர்களுடனும் 
அன்பின் திரு. முத்து நிலவன் அவர்களுடனும் 
- நான் பேசிக் கொண்டிருந்த நேரம் பொன்னானது.

இரவுப் பொழுது.  நேரமும் ஆகி விட்டது. 


எவருக்கும் - அங்கிருந்து - புத்தகத் திருவிழாவிலிருந்து பிரிவதற்கு மனம் இல்லை.

ஆயினும் என்ன செய்ய!?.. 

ஒருவருக்கொருவர் அன்பின் பரிமாற்றங்களுடன் விடை பெற்றுக் கொண்டோம்.

அன்பின் திரு.  முத்து நிலவன் அவர்கள் அன்பும் ஆதரவும் கொண்டு என்னிடம் உரையாடிய நிமிடங்கள் மறக்க இயலாதவை.

மனதிற்கு நெருக்கமான மகிழ்ச்சியான தருணங்கள் அவை. 

அனைவருக்கும் இத்தகைய 
பொன்மாலைப் பொழுதுகள் கிடைக்க வேண்டிக் கொள்கின்றேன்.

நல்லாரை காண்பதுவும் நன்றே; நலம் மிக்க 
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் 
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு 
இணங்கி இருப்பதுவும் நன்றே!..

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

மாசி மகம்

எல்லாம் வல்ல இறைவனின் தனிப்பெருங்கருணையினாலும் அன்பு நிறை நெஞ்சங்களின் நல்லாசிகளினாலும் எனது அன்பு மகளின் திருமணம் - சிவகாசி நகரில் - பிப்ரவரி ஒன்பதாம் நாள் ஞாயிறன்று இனிதே நிகழ்ந்தது.

அந்த நிகழ்வுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முன்பாக இனியதொரு பதிவு..

சூரியன் கும்ப ராசியிலும் தேவகுரு ஆகிய பிரகஸ்பதி வருடாந்திர சுழற்சியாக ஒரு ராசியிலும் இருக்க - மக நட்சத்திரத்தில் சந்திரன் நிறை நிலவாகக் கூடும் திருநாள் - மாசி மகம். 

சூரியன் கும்ப ராசியிலும் தேவகுரு ஆகிய பிரகஸ்பதி சிம்ம ராசியிலும் இருக்க - மக நட்சத்திரத்தில் சந்திரன் நிறை நிலவாகக் கூடும் திருநாள் - மகாமகம்.  


வியாழ வட்டம் எனப்படும் சுழற்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும்.

மகாமகம் எனப்படும் திருநாள் எதிர்வரும்  2016 - ல் நிகழ இருக்கின்றது. 

ஆயினும் - இப்போது மிதுன ராசியில் குரு விளங்க - வழக்கம் போல மாசி மகம் அனுசரிக்கப்படுகின்றது.

இன்று பிப்ரவரி 15. மாசி மகம்.

முன்னொரு சமயம் - 

ஊழிப் பெருவெள்ளம் கொண்டு  உலகைப் புனரமைக்க விரும்பிய ஈசன் - நான்முகனை அழைத்து சிருஷ்டிக்கான ஜீவ அமுதத்தினை ஒரு கும்பத்தில் நிறைத்து வழங்கினார்.

அதனை ஊழிப் பெருவெள்ளம் ஏற்படும் போது அதில் மிதக்க விட்டு - அந்தக் கும்பம் எவ்விடத்தில் தங்குகின்றதோ அங்கே அதைப் பிரதிஷ்டை செய்து வழிபடும்படி ஆணையிட்டார்.

பிரம்மனும் அவ்வாறே செய்ய  - ஈசன் வேட வடிவங்கொண்டு எய்த அம்பினால்   - கும்பம் உடைந்து அதிலிருந்த அமுதம் பூமியில் பரவி ஓரிடத்தில் திரண்டு நின்றது. 

அதுவே - மகாமகத் தீர்த்தம். கும்பம் தங்கிய திருத்தலம் - கும்பகோணம்.

அமுதம் ஊறிக் கிடந்த மண்ணில் இருந்து  சுயம்புவாகத் தோன்றிய லிங்க வடிவத்தினுள் - உலகம் உய்யும் படிக்கு ஈசன் ஜோதி வடிவாக நிறைந்தார்.


எனவே, ஈசன்  - ஸ்ரீகும்பேஸ்வரர் என  விளங்குகின்றார்.

அம்பிகை சர்வ மங்களங்களையும் அருளும் ஸ்ரீ மங்களாம்பிகை.

பின்னொரு சமயம் -

மக்களின் பாவங்களை சுமந்ததால் - களையிழந்த நதிகள் அனைத்தும் கங்கையின் தலைமையில் காசி விஸ்வநாதரிடம் முறையிட்டன. 

கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரை, கிருஷ்ணை, சரயு -

எனும் நவ கன்னியரின் அல்லலைப் போக்குதற்கு - சிவபெருமான் தாமே அவர்களை அழைத்து வந்து அடையாளங்காட்டியருளிய தீர்த்தம் - மகாமகத் தீர்த்தம். 

ஐயன் அருளியபடி,  அவர்கள்  தீர்த்தத்தில் நீராடி தமது பாவங்களைத் தொலைத்த நாள்  - மகாமகத் திருநாள்.

இந்தத் திருநாள் - திருக்குடந்தையில் சகல சிவாலயங்களிலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றது

சிலவருட இடைவெளிக்குப் பின் - இந்த வருடம் மாசி மகத்தின் போது தஞ்சையில் இருக்கும் பேற்றினைப் பெற்றேன். 

இன்று மாலையில் கும்பகோணம் சென்று -

ஸ்ரீ உச்சிப் பிள்ளையார் திருக்கோயில்,
ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயில், 
ஸ்ரீ தேனார்மொழி சோமசுந்தரி சமேத ஸ்ரீவியாழ சோமேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ பிரஹந்நாயகி  சமேத ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில், 
ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில், 
ஸ்ரீ அமிர்தவல்லி சமேத ஸ்ரீஅபிமுகேஸ்வரர் திருக்கோயில் 

- என  ஆலய தரிசனம் செய்து அனைவருடைய நலனும் வாழ்க என்று வேண்டிக் கொண்டு மகாமகத் திருக்குளத்தை வலஞ்செய்து வணங்கினேன்.

அப்போது எடுக்கப்பட்ட படங்கள் சில - இன்றைய பதிவில்!..

பதிவில் உள்ள படங்கள் கைத்தொலைபேசியின் மூலம் எடுக்கப்பட்டவை.

ஸ்ரீ கும்பேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ சார்ங்கபாணி தெப்போற்சவம்
ஸ்ரீ வியாழ சோமேஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில்
ஸ்ரீ உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்
ரிஷப வாகனத்தில் பெருமான்
ஸ்ரீ விநாயகர்
ஸ்ரீ வடிவேல் குமரன்
வெள்ளி விமானத்தில் பெருமான்





திருக்கயிலாய சிவகண வாத்ய முழக்கத்துடன் , மகாமகக் குளக்கரையில் பெருமான் வலம் வந்தருளிய போது -

அப்பகுதியே - சிவலோகம் என விளங்கியது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் - என மூன்றினாலும் சிறந்து விளங்கும் திருத்தலம்  - கும்பகோணம்.

திருக்குடந்தையைக் கண்டு தொழும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

சிவாய திருச்சிற்றம்பலம்!..

புதன், பிப்ரவரி 05, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 16





ஐயப்பா சரணம்

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..



"..நீ எதை நாடி வந்தாயோ அது நீயாகவே உள்ளாய்!.." - என்பதை உணர்த்துவேன்!.. அனைவருக்கும் மங்கலம் உண்டாகட்டும்!..

மணிகண்டன் ஜோதி வடிவாக எங்கும் நிறைந்தவன் ஆனான்.   

ஐயா சரணம்!.. அப்பா சரணம்!..  
ஐயப்பா சரணம்!..
சுவாமியே சரணம் ஐயப்பா!..


திங்கள், பிப்ரவரி 03, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 15




தெய்வ மகன்

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..


ஓம் ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

சனி, பிப்ரவரி 01, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 14




புலி வாகனன்..

பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது..

ஓம் ஹரிஹரசுதனே சரணம்!.. சரணம்!..