நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 28, 2017

முதல்வர் வாழ்க!..

என்னை மன்னித்தருள வேண்டுகின்றேன்.. ஐயனே!..

கடலாடும் கொற்கையின் முத்துக்களாலும்
கவிபாடும் ஈழத்தின் மாணிக்கங்களாலும்
அலங்கரிக்கப்பட்ட மணிமுடி இதோ!..

செல்வமலி தென்னாட்டை செம்மையுடன்
நடாத்திய செங்கோல் - இதோ தங்களது திருவடிகளில்!..

ஆயினும் -

கொண்டல்களைக் குலவி வந்த
குளிர் நிலவின் தண்நிழலாய் வெண்கொற்றக் குடை!..
பகை வென்று புகழ் கொண்டு
பனிமலை தொட்டு வந்த நல்லோர் வீற்றிருந்த கொற்றத் தவிசு!..

இவையிரண்டும் -
அரங்கேறித் தமிழ் விளையாட
காற்றேறி மீன் விளையாடும்
கூடல் மாநகரின் மாபெரும் அரண்மனையில்!..

அனைத்தையும் ஏற்றுக் கொண்டு
இம்மாநிலத்தைத் தாங்கள் அரசாட்சி செய்திட வேண்டுகின்றேன்..

பெரியீர் தங்களுக்கு இச்சிறியேன் இழைத்த
அநீதிகளைப் பொறுத்தருளல் வேண்டும்!..

இனி இந்நாடு தங்களுடைமை..
நான் தங்களது பணியேற்கும் ஏவலன்..
தங்கள் ஆசிகளை வேண்டி நிற்கும் இரவலன்!..

கை கட்டி வாய் பொத்தி நின்றான் அரிமர்த்தன பாண்டியன்...

அவன் பின்னே - அவனது அரசு அலுவலர்களும் மற்றவர்களும்...

சற்று முன்னர் - சீறிச் சினந்து பொங்கிப் பெருகிப் பாய்ந்து கொண்டிருந்த வைகை நளினத்திலும் நளினமாக நெளிந்து கொண்டிருந்தது..



இதுவரை நடந்ததெல்லாம் கனவா!.. நினைவா?..
- எனத் திகைத்து நின்றிருந்தனர் பாண்டி நாட்டின் மக்கள்...

இன்று காலை வரை பிட்டு விற்றுக் கொண்டிருந்த 
பெருமாட்டி வந்தி - பெரும் புண்ணியத்திற்கு உரியவள்!.. -
என்பதை அறியாமற் போனோமே!..

எதன் பொருட்டு இத்தனை நாடகமும்!?..

எடுத்து ஆடும் திருவடியின் பேரழகை
வைகை மாநதியும் கண்டு மகிழட்டும் என்பதற்காகவோ!..

பாகம் பிரியாளின் பாகம் பிரிந்து வந்தது -
வந்தியம்மையின் கையால் வாங்கி 
உதிர்ந்த பிட்டு உண்பதற்காகவோ!...


எந்தை சொக்கநாதன் தலையில் சும்மாடு கட்டி வந்தது -
வந்தியம்மைக்கு வாழ்வளிப்பதற்காகவோ!...

கையில் கூடையுடன் மண் கொட்டும் தாங்கி, 
கூலியோ.. கூலி!.. - என்று கூவி வந்தது
வந்தியின் பிறவிக் கடன் தீர்ப்பதற்காகவோ!..

நாம் இவற்றையெல்லாம் அறியாதிருந்து விட்டோமே!..

மாமதுரையின் மக்கள் வருந்தினார்கள்...

பின்னும் இந்தத் திருவிளையாடல் எல்லாம் -

மக்களின் வரிப்பணம் கொண்டு குதிரைகளை வாங்குவது
கொடும் போர் நடாத்தி அப்பாவி மக்களை அழித்தொழிப்பதற்கா?..
இனியும் வேண்டாம்.. இந்தக் கொடுமை!..
இதிலிருந்து மாநிலத்தைக் காப்பது நமது கடமை!..

- என்று முனைந்து,

அருட்கோயில் எனும் அறக்கோயிலை அமைத்த
மாண்புமிகு முதல்வர் திருவாதவூரரைக் காப்பதற்காக அன்றோ!..

குதிரை வாங்குவதற்காகக் கொண்டு சென்ற 
பொருளைக் கொண்டு கோயில் ஒன்றைக் கட்டினார்!..

உண்மைதான்!..

ஆனாலும் - ஆய்ந்தறியாத மன்னன் அரிமர்த்தனன்
அடுத்துக் கடுத்திருந்தோர் தம் சொல்லுக்குச் செவி கொடுத்தனன்...

மனம் இலாதார் சொல்லிய சொல் கேட்டதனால் 
திருவாதவூரரை சுடுமணற் பரப்பில் நிறுத்திக் கடுமையாக ஒறுத்தனன்..

அவனையும் மீட்டு அவன் பிழைதனையும் பொறுத்து 
அறவழியில் சேர்ப்பதற்காக அன்றோ -
குதிரையாளாக ஐயன் வந்ததும் 
கூலியாளாக மண் சுமந்ததும்!..

மதுரையின் மக்கள் மனம் திருந்தினார்கள்!..

இத்தனை நடந்தும் -

சித்தம் எல்லாம் சிவமயமே!..

- என்றிருந்த, திருவாதவூரர் முன்பாக அரிமர்த்தனன் பணிந்து நின்றான்..

தாங்கள் முன்போலவே தங்களது புவியெலாம் காவல் பூண்டு 
குற்றம் துடைத்து ஆள்வது ஆக வேண்டும்!..

- என்று,  இரந்து நின்றான்..

ஐயனே!.. நாட்டின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு
எம்மைச் சீரிய வழிதனில் நடாத்த வேண்டும்!..

- என்று மக்களும் பெருங்குரலெடுத்துக் கூவினார்கள்..

அதுவரையில் அமைதியாக இருந்த திருவாதவூரர் - திருவாய் மலர்ந்தார்..

அரிமர்த்தன பாண்டியனே!.. எமது நோக்கம் அதுவன்று!..

அங்கும் இங்கும் புரள்கின்ற அலைகளைக் கொண்ட ஆழி சூழ்ந்த உலகம் அனைத்தையும் ஆட்சி கொண்டு ஆயிரங்கண் கொண்ட இந்திரனைப் போல வீற்றிருப்பீராக..

நாயகனாகிய சோமசுந்தரப் பெருமான் அருளியபடியே நயந்து நின்று நல்லாட்சி செய்வீராக!..

நான் உம்மை அடைந்த தன்மையால் உலக நடை, வேத ஒழுக்கம் ஆகிய இரண்டும் நன்கு தெளியப் பெற்றது.. அங்ஙனம் தெளியப் பெற்றதால் மனத் தூய்மை உண்டாகியது.. அதனால் சிவபெருமானிடத்து அன்பு விளைந்தது..

மந்தரம், கயிலை, மேரு, பருப்பதம், வாரணாசி எனும் திருத்தலங்களில் எழுந்தருளியிருக்கும் ஞானத் திருவாகிய இறைவன் -

எம்மைப் போன்றோரின் மனம் புறத்தே செல்லாமல் திருத்தி அதில் வீற்றிருக்கின்றான்..

அவனே - தனது அருள்வெளியாகிய பொன்னம்பலம் என்னும் தில்லைத் திருத்தலத்திற்குப் போகும்படிக்குப் பணித்தான்..

தாமும் அதற்கு உடன்படக் கடவீராக!..

- என்று, இனிமையுடன் உரைத்தார்.. 

அதைக் கேட்ட மன்னனும் மக்களும் மனம் நெகிழ்ந்தனர்..

கண்ணீர்ப் பெருக்குடன் - 
திருவாதவூரராகிய மாணிக்கவாசகப் பெருமானுக்கு விடை கொடுத்தனர்...

அந்த அளவில் விடை பெற்றுக் கொண்ட மாணிக்கவாசகர் வடதிசை நோக்கித் தனது திருப்பயணத்தைத் தொடர்ந்தார்..

மாண்புமிகு முதல்வர் வாழ்க!..
திருவாதவூரர் திருத்தாள் வாழ்க!..
மாணிக்கவாசகப் பெருந்தகை வாழ்க.. வாழ்க!..

- எனும் முழக்கத்தால் விண்ணும் மண்ணும் அதிர்ந்தன...

சிராப்பள்ளி, ஐயாறு, ஆரூர், அண்ணாமலை முதலான
திருத்தலங்களைத் தரிசித்த வண்ணம் 
தில்லை மூதூரை வந்தடைந்தார் - மாணிக்க வாசகர்...

ஆங்கே பற்பல அற்புதங்கள் அவரால் நிகழ்ந்தது..

ஈசன் எம்பெருமானே அவரை ஆட்கொள்ள வந்து
திருக்கோவையார் பாடும்படிக்கு அருளினன்...

மாணிக்கவாசகரை - நாடி வந்த தில்லை வாழ் அந்தணர் 
திருக்கோவையாரின் பொருளை வேண்டி நின்றனர்...

அது கேட்ட மாணிக்கவாசகர் புன்னகைத்தார்...

மெல்ல எழுந்து - பொன்னம்பலத்தினை நோக்கி நடந்தார்..

அம்பலத்தரசன்!.. அவனே இதற்குப் பொருள்!.. 

- என்றவாறு ஆனந்த நடமிடும் ஐயனுடன் ஜோதியாகக் கலந்தார்..

மாசறு மணிபோற் பன்னாள் வாசகமாலை சாத்திப்
பூசனை செய்து பன்னாட் புண்ணிய மன்றுள் ஆடும்
ஈசனது அடிக்கீழ் எய்தி ஈறிலா அறிவா னந்தத்
தேசொடு கலந்து நின்றார் சிவனருள் விளக்க வந்தார்..
-: திருவிளையாடற்புராணம் :-



மாணிக்கவாசகப் பெருமான் அண்டப் பெருவெளியை விவரிக்கின்றார்..
கருப்பையினுள் உயிர்க்கும் உயிரணுவின் வளர்ச்சியை உரைக்கின்றார்..

புல் முதற்கொண்டு தேவர் வரையிலான பிறவிகளைத் தொகுக்கின்றார்...
மானுடர் வாழ்வாங்கு வாழ்வதற்கான வாழ்வியல் நெறியை வகுக்கின்றார்..

மாணிக்கவாசகர் தம் திருவாக்கு
திருவாசகம் என்று போற்றப்படுகின்றது..

பன்னிரு திருமுறைகளுள்
எட்டாவதாக இலங்குகின்றது..

திருவாசகத்திற்கு உருகாதார் 
ஒருவாசகத்திற்கும் உருகார்!.. 
- என்பது ஆன்றோர் வாக்கு


இன்று ஆனி மகம்.. 
மாணிக்கவாசகப் பெருமான் 
இறைவனுடன் கலந்த நாள்..

தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!..

எனும் இத்திருமுழக்கம்
ஆலயங்கள் தோறும் முழங்கப்படுவது ..
இதனைத் தந்தவர் மாணிக்கவாசகப் பெருமான்..

மாணிக்கவாசகப் பெருமான் - ஆவுடையார்கோயில்
பெருமான் அருளிய வழிநின்று வையகம் சிறக்கட்டும்!..

பெரும்பகையும் அழியட்டும்.. பேரழிவும் ஒழியட்டும்!..
ஊர் கொண்ட நாடெல்லாம் சீர் கொண்டு பொலியட்டும்!..

மன்னவனும் திருந்தட்டும்..
மாநலமும் பெருகட்டும்!..
மன்னுயிரும் தழைக்கட்டும்..
மாநிலமும் செழிக்கட்டும்!...

மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!.. 
*** 

திங்கள், ஜூன் 26, 2017

வருக.. வருக.. வராஹி

அன்னை!..

அவளிடமிருந்து தான் இந்த பிரபஞ்சம் தோன்றியது..


புவனம் பதிநான்கைப் பூத்தவளும் இவளே..
பூத்த வண்ணம் காத்தவளும் இவளே..
புன்னகை ததும்பக் காப்பவளும் இவளே!..

இத்தகையவள் தான் -
வானகமும் வையகமும் உய்வடையும் பொருட்டு
ஸ்ரீவராஹி எனத் திருக்கோலங்கொண்டனள்..

மருந்தினும் நயந்த சொற்பைங்கிளி
தென்னகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் சோழவளநாட்டின்
தனிப்பெருந் தலைநகராக விளங்கும் தஞ்சை மாநகரின்
அதிபதியாகத் திகழ்பவள் - ஸ்ரீ வராஹி!..

மாமன்னன் ராஜராஜ சோழனின் வழித்துணை ஸ்ரீ வராஹி!..

குமரி முதல் நர்மதை வரை மட்டுமல்லாமல் 
கடல் கடந்த தேசங்களிலும் கலம் செலுத்தி
மாபெரும் வெற்றிகளை எளிதாக சாதித்ததற்கு
பெருந்துணையாகத் திகழ்ந்தவள் - ஸ்ரீ வராஹி!..  


சோழவளநாட்டின் தனிப்பெருந் தலைநகர்  தஞ்சை மாநகரில்  - 
தண்ணருள் பொழிபவள் ஸ்ரீ வராஹி!..

இன்றும் - 
தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில்  கைகூப்பி வணங்கும் 
பல்லாயிரம் பக்தருக்கும் உற்றதுணை - என வருபவள் ஸ்ரீ வராஹி!..

அருள்மிகும் பெருவுடையார் திருக்கோயிலில் -
அருளாட்சி புரியும் ஸ்ரீ வராஹி அன்னைக்கு சிறப்பான முறையில்
இந்த ஆண்டும் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படுகின்றது..

தமிழகத்தின் சிவாலயங்கள் பலவற்றிலும் 
சப்தகன்னியர் திருமேனிகள் திகழ்ந்தாலும்  -

காசியம்பதிக்கு அடுத்து - 
தஞ்சை பெரியகோயிலில் தான் -
தனி சந்நிதியில் விளங்குகின்றனள் ஸ்ரீ வராஹி ...

பெரியகோயிலின் தெற்கு திருச்சுற்றின் பிரகார மண்டபத்தில் 
சப்த கன்னியருக்கும் மாமன்னன் திருமேனிகளை வடித்து வழிபட்டனன்..

ஆனால் - காலவெள்ளத்தின் ஓட்டத்தில்
நமக்கு கிடைத்திருப்பவள் ஸ்ரீ வராஹி மட்டுமே!..

எஞ்சிய திருமேனிகள் என்னவாயின - என்பதைக் கூறுதற்கில்லை..  


அளவற்ற சக்தியுடன் விளங்குபவள் - ஸ்ரீவராஹி..
அதிலும் ஆதார சக்தியாகத் திகழ்பவள் - ஸ்ரீ வராஹி!..

நெஞ்சின் நல்ல எண்ணங்களை நிறைவேற்றித் தருபவள் - ஸ்ரீ வராஹி!..
நேர்மையான கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பவள் - ஸ்ரீ வராஹி!..

வேண்டுவோர்க்கு வேண்டியவற்றை அருளும் கருணை உடையவள்.

வளமைக்கும் செழிப்புக்கும் பச்சைப் பசுமைக்கும் அதிபதியானவள்..  
வேளாண்மை செழித்து ஓங்குவதே ஒரு நாட்டின் மேன்மைக்கு அடையாளம்!.. 

ஆதியில் இருந்தே விவசாயம் தான் அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குவது. 

உலகிலுள்ள கருவிகளுள் மேன்மையாகத் திகழ்வது - ஏர்!..
வேளாண் கருவிகளுள் முதலாவதாக விளங்குவது - ஏர்!..

சுழன்றும் ஏர் பின்னது உலகம்!.. - என்பார் வள்ளுவப் பெருமான்!..

இந்த ஏர் - தனைக் கையில் கொண்டு விளங்குபவள் - ஸ்ரீ வராஹி!.. 

வளமையும் செழிப்பும் ஆனி மாதத்திலிருந்தே தொடங்குகின்றன..

ஆடியில் புது வெள்ளம் பெருகி வந்து குளம் குட்டைகள் நிறைந்து
வயலில் நீர் பாய்வதற்கு முன்  - கோடையில் காய்ந்து கிடந்த நிலங்களில்
எரு விட்டு உழவு செய்து ஆயத்தப்படுத்திக் கொள்வது ஆனி மாதத்தில்!..

எனவேதான்  - விவசாயம் பல்கிப் பெருகி, நாடு நலம் பெற வேண்டும் - என ஆஷாட நவராத்திரி நாட்களில் ஸ்ரீ வராஹி - ஆராதிக்கப்படுகின்றாள்.

வேளாண்மையின் ஆதார தெய்வம் - ஸ்ரீ வராஹி!..  


தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு -
கடந்த அமாவாசை தினத்தன்று (ஆனி 09/ ஜூலை 23) காலை மஹாகணபதி ஹோமத்துடன்  ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாகத் தொடங்கியது.

தொடர்ந்த நாட்களில் -

காலைப் பொழுதில் திருச்சுற்று மண்டபத்தில் -
அஷ்டபுஜ வராஹி அம்மன் உற்சவத் திருமேனியளாக எழுந்தருளினாள்..

மூல மந்த்ரத்துடன் யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி..

தொடர்ந்து - சந்நிதியில் மஹாஅபிஷேகம்.
மாலையில் சிறப்பு அலங்காரம்... மகா தீபாராதனை தரிசனம்..

23/6 வெள்ளியன்று இனிப்புகளால் அலங்காரம்
24/6 சனிக்கிழமையன்று மஞ்சள் அலங்காரம்
25/6 ஞாயிறன்று குங்கும அலங்காரம் 
- என, நடைபெற்றது.. தொடர்ந்து,

26/6 திங்களன்று சந்தன அலங்காரம்
27/6 செவ்வாய்க்கிழமை தேங்காய்ப் பூ அலங்காரம்
28/6 புதனன்று மாதுளை முத்துகளால் அலங்காரம்
29/6 வியாழன்று நவதானிய அலங்காரம்
30/6 வெள்ளியன்று வெண்ணெய் அலங்காரம்
01/7 சனிக்கிழமை கனிகளால் அலங்காரம்
02/7 ஞாயிறன்று காய் வகைகளால் அலங்காரம்
- என, நிகழ இருக்கின்றது..

03/7 திங்களன்று காலையில் பூச்சொரிதல்..
தொடர்ந்து மாலை ஆறு மணியளவில் ராஜவீதிகளில் திருவுலா..

நாதஸ்வர மங்கலத்துடன் கூத்தொடு பறையொலி தவிலொலியும் கொண்டு -
சிவகண திருக்கயிலாய மற்றும் செண்டை வாத்திய மேளதாளங்கள் முழங்க கரகாட்டம் ஒயிலாட்டம் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் அலங்கார ரதத்தில் எழுந்தருள்கின்றாள்.. 

ஜூலை 01 (ஆனி 14) அன்று பஞ்சமி.. அன்றைய தினத்தில் ஆயிரம் பேருக்கு மேல் நிவேதனப் பிரசாத அன்னதானம் வழங்கப்பட உள்ளது..


ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் அங்குசத்திலிருந்து தோன்றியவள் ஸ்ரீ வராஹி!..
ஸ்ரீ லலிதாம்பிகையின் படைகளுக்குத் தலைவியானவள் ஸ்ரீ வராஹி!..

சதுரங்கசேனா நாயகி எனும் திருப்பெயர் கொண்டவள் - ஸ்ரீ வராஹி!..
சப்த கன்னியருள் ஐந்தாவதாக விளங்குபவள் - ஸ்ரீ வராஹி!..

பஞ்சமி எனும் ஐந்தாம் கலைக்கு அதிபதியானவள் - ஸ்ரீ வராஹி!..
அதனால் வளமைக்கும் செழுமைக்கும் உரியவள் - ஸ்ரீ வராஹி!..
  
நம் உடலில் இலங்கும் ஆறு ஆதார சக்கரங்களில் -
ஐந்தாவதாக நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்தின் அதிபதி - ஸ்ரீ வராஹி..

வேளாண்மைக்கு உரியதான கலப்பையையும் 
தொழிலுக்கு உரியதான உலக்கையையும் 
திருக்கரங்களில் தாங்கியிருப்பவள் ஸ்ரீ வராஹி!..

ஆனி மாதத்தில் ஆஷாட நவராத்திரியும்,
புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும்,
தை மாதத்தில் சியாமளா நவராத்திரியும்,
பங்குனி மாதத்தில் வசந்த நவராத்திரியும் -

ஆன்றோர்கள் வகுத்தளித்த வைபவங்களுள் சிறப்பானவை. 

இவற்றுள் - ஆனி மாதத்தின் அமாவாசையை அடுத்து வரும் நாட்களில் கொண்டாடப்படும் ஆஷாட நவராத்திரிக்கு உரியவள் - ஸ்ரீ வராஹி!..


அன்னை ஸ்ரீ வராஹி  - எதிர்ப்புகளை தகர்ப்பவள்.
வேளாண் தொழில்களில் மேன்மையை அருள்பவள்.
இல்லங்களில் தன தான்ய மழையினைப் பொழிவிப்பவள்.
கொடுமை கொடுவினைகளை வேரோடு அழிப்பவள்.

ஸ்ரீ வராஹி குடியிருக்கும் இல்லத்தை
பஞ்சமும் பிணியும் நெருங்காது..
நம்மிடம் நேர்மை இருக்கும் பட்சத்தில் - 
நமக்கு உற்ற துணையாகி நல்வழி காட்டுபவள்..  

நியாயமான செலவுகளுக்காக வாங்கிய கடனை - 
திருப்பிக் கொடுக்க இயலாத சூழ்நிலையிலும், 
நம்பிக்கையுடன் கொடுத்த கடன் - 
எதிர்பார்த்தபடி திரும்பக் கிடைக்காத சூழ்நிலையிலும்,

அளப்பரிய அன்புடன்  - நமக்குக் கை கொடுப்பவள் ஸ்ரீ வராஹி. 



ஆன வராக முகத்தி பதத்தினில் 
ஈனவராகம் இடிக்கும் முசலத்தோடு 
ஏனை எழுபடை ஏந்திய வெண்ணகை 
ஊனம் அற உணர்ந்தார் உளத்தோங்குமே!.. 
திருமந்திரம் 4/5/28. 

ஸ்ரீவராஹியின் திருப்பாதங்களுக்கு 
என்றென்றும் எங்களது நன்றிக்கடன் உரியது.. 

எங்களது நன்றிக்கடன் 
இத்துடன் முடிந்து விடக்கூடிய ஒன்றல்ல!..

எத்தனை எத்தனையோ பிறவிகளுக்குத் தொடரக்கூடியது!..
தொடர வேண்டும்.. அதுவே எங்கள் தவம்!..


அன்புள்ளம் ஒன்று போதும் - அவளை வழிபடுவதற்கு..

ஸ்ரீ வராஹி அம்மனை வழிபடுதற்கு எல்லா நாளும் ஏற்றவை..
எனினும் - வளர்பிறையின் பஞ்சமி நாள் மிகவும் ஏற்றது.. 

நமக்கு இயன்ற அளவில் - 
பூஜையறையில் அல்லது சாமி மாடத்தின் முன்பாக 
நெல் அல்லது பச்சைப் பயிறு கொண்டு கோலமிட்டு, 
நெய் விளக்கேற்றி வைத்து வழிபடலாம்..

தாமரை, ரோஜா, மல்லிகை, முல்லை போன்ற நறுமண மலர்களும்
வில்வம், மருக்கொழுந்து போன்ற பத்ரங்களும் உகந்தவை..

அதிக இனிப்புடன் கூடிய கனி வகைகள் 
பாயசம்,கேசரி, ஜிலேபி போன்ற பட்சணங்கள்
இவற்றுள் நம்மால் இயன்றதை அன்புடன் 
நிவேதனம் செய்து ஸ்ரீ வராஹி அம்மனை வழிபடுங்கள்..

யான் பெற்ற பேற்றினை 
அனைவரும் பெற வேண்டும்!..

உங்கள் இல்லத்திற்கும்
வராஹி வருவாள்!..
வரங்கள் பல தந்து
வளமும் நலமும் நல்கிடுவாள்!..


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்ச பாணி வஞ்சர் 
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே!..(77) 
-: அபிராம பட்டர் :-

அம்பா சூலதனு கசாங்குஸதரி அர்த்யேந்து பிம்பாதரி
வாராஹி மதுகைடப ப்ரஷமனி வாணி ரமா ஸேவிதா
மல்லாத்யாசுர மூகதைத்ய மதனி மாஹேஸ்வரி சாம்பிகா
சித்ரூபி பரதேவதா பகவதி ஸ்ரீராஜராஜேஸ்வரி..

வரந்தரும் வாராஹி வருக.. வருக..
வளந்தரும் வாராஹி வாழ்க.. வாழ்க!..
* * *