நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 19, 2024

நந்தியம் பெருமான்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 6
செவ்வாய்க்கிழமை


மங்கல மேளங்கள் முழங்க -
திருஐயாற்றிலிருந்து பொற்பல்லக்கில் ஆரோகணித்து -

கடுவெளி, வைத்யநாதன் பேட்டை  வழியாக கொள்ளிடம் ஆற்றைக் கடந்து - திருமழபாடிக்கு எழுந்தருளிய -
ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகியையும் நந்தீசனையும் - 

சந்தனம் தாம்பூலம் வழங்கி -  
எதிர் கொண்டு நல்வரவு கூறி வரவேற்றனர் - அங்கே முன்னதாகவே ஊர் மக்களுடன் கண்ணாடிப் பல்லக்கில் சென்று காத்திருந்த சுந்தராம்பிகையும் வைத்யநாதப்பெருமானும்!..

அனைத்தையும் முன்பே உணர்ந்திருந்த வியாக்ரபாதர் - அனைவரையும் வரவேற்று இன்முகத்துடன் உபசரித்தார். 

வியாக்ர பாதரின் மகன் உபமன்யு, மாப்பிள்ளை நந்தீசனை எதிர்கொண்டு  - மாலை அணிவித்து வரவேற்றான். 

இந்த உபமன்யு பச்சிளம் பாலகனாக , பசி தாளாது அழுதபோது தான் - ஈசன் இரக்கங்கொண்டு பாற்கடல் ஈந்து அருள் புரிந்ததாக திருக்குறிப்பு உள்ளது..


வேத மந்த்ர கோஷங்களும் மங்கல வாத்தியங்களும் முழங்க - மணப் பந்தலினுள் கம்பீரமாக நந்தீசன் நுழைந்ததும் - இல்லத்தினுள் தனியறையில் தோழியர் மத்தியில் இருந்த - சுயம்பிரகாஷினி தேவிக்கு செய்தி மின்னலெனச் சென்றது.

''..கொள்ளை அழகு மாப்பிள்ளை.. கொடுத்து வைத்தவள் நீ!..'' - தோழியர் மாப்பிள்ளையைச் சுட்டிக் காட்டினர்.  

மண் பொதிந்த மரபின் வழி வந்த நாணத்தால் முகம் சிவந்தாள் இளங்கன்னி சுயசை.. 

இந்த தேவி - சுயசாம்பிகா எனவும் அழைக்கப்படுவாள். 

மணப்பந்தலில் குழுமி இருந்த அனைவரது முகங்களிலும் ஆனந்தப் பரவசம். 

" என்ன அழகு மாப்பிள்ளை முகத்தில்.. இப்படியொரு தேஜஸை இதுவரை எங்கும் கண்டதில்லையே!.. "  - என்று ஒவ்வொருவரும் வியப்பு எய்தினர்..

அந்த அளவில் மங்கல நிகழ்வுகள் தொடங்கின..

பங்குனி புனர்பூச நட்சத்திரங் கூடியதான - சுபதினத்தின் சுபயோக  சுபவேளையில் - 

விநாயகனும் வேலவனும் அருகிருக்க,
முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவகணங்களும் மகரிஷிகளும் சூழ்ந்திருக்க, 
பஞ்சபூத , அக்னி சாட்சியாக -


அறம் வளர்த்த நாயகியும் ஐயாறப்பனும் முன்னிருக்க - வேதியர்கள் திருமுழுக்கு முதலான வைபவங்களை நிகழ்த்தினர்.. 


சுபயோக  சுபவேளையில் - 
ஸ்ரீநந்தீசன் - ஸ்ரீ சுயம்பிரகாஷினி தேவிக்கு திருமாங்கல்யம் அணிவித்தார்..


சகல தேவதா மூர்த்திகளும் நல்லாசி வழங்கி மகிழ்ந்தனர்.
அஷ்ட மங்கலங்கள் பொலிந்தன.
எட்டுத் திக்கிலும் சிவகண வாத்யங்கள் முழங்கிட பூமாரி பொழிந்து அனைவரும் மகிழ்ந்தனர்.

இந்த ஆனந்த வைபவம் - 
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் மற்றும் அகிலத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் கண்குளிரக் காணும்படிக்கு இனிதே நடந்தேறியது...

திருமாங்கல்ய தாரணம் நிகழ்ந்தேறிய அளவில் - 
ஸ்ரீநந்திகேஸ்வரர் சுயம்பிரகாஷினி தேவியுடன் வளர்த்த தாய் தந்தையர்க்கும் ஆதிகாரணராகிய அறம் வளர்த்த நாயகிக்கும் ஐயாறப்பனுக்கும் பாதபூஜைகள் செய்து பணிந்தார். வலஞ்செய்து வணங்கினார்.. 

இளந்தம்பதியர் இருவரும் திருமணக் கோலத்தில் - ஸ்ரீசுந்தராம்பிகை சமேத வைத்யநாதப் பெருமானை வலஞ்செய்து வணங்கினர்.. 


மாட வீதிகளில் வலம் வந்த தம்பதியர்க்கு - திருமழபாடியின் மக்கள் அனைவரும் மாவிலைத் தோரணம் மங்கலச் சின்னங்களுடன் வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்..

விசேஷத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களைப் பணிந்து வணங்கி இன்புற்றனர்..

ஐயாற்றிலிருந்து எம்பெருமானுடன் கூடி வந்த அனைவரும்  மணமக்களை தத்தமது ஊர்களுக்கு வந்தருளுமாறு வேண்டி விரும்பி அழைத்தனர்..  

சித்ரா பௌர்ணமியை  அடுத்து வரும் விசாக நட்சத்திரத்தன்று - தாமே மணமக்களை அழைத்து வருவதாக அம்மையும் அப்பனும் அவர்களுக்கு வாக்களித்தனர்..

அனைவருக்கும் மனம் நிறையும்படி  அன்னமும் சொர்ணமும் வழங்கி அருள் பாலிக்கப்பட்டது..


இந்த அளவில், 
அனைவரும் இன்புற்றிருக்க வேண்டி   - ஸ்ரீ நந்திகேஸ்வரர் சுயம்பிரகாஷினி தேவியுடன் திருக்கயிலாயத்தில் இனிதே நிலை பெற்றனர்..

சிவதாஜதானியாகிய திருக்கயிலாய மாமலையில் - 
நெற்றிக்கண் இலங்கும் ரிஷப முகத்துடன் அதிகார நந்தி எனத் திருத்தோற்றங் கொண்டு,

வலத் திருக்கரத்தினில் மழுவும் இடத் திருக்கரத்தினில் மானும் ஏந்தி, பொற்பிரம்பு  தாங்கி  திருக்குறிப்பு காட்டி - திருத்தொண்டு புரிந்து இன்புற்றனர்..


இந்த அளவில் - என் தந்தையினும் தந்தையாய், எங்கள் குல தெய்வமாய் விளங்கும்  -
ஸ்ரீ நந்திகேஸ்வரர் சுயசாம்பிகை தேவி திருமண வைபவம் சிந்திக்கப்பட்டது. 

நந்தீசர் திருமண வைபவத்தினைக் கேட்டவர்க்கும் படித்தவர்க்கும் சிந்தித்தவர்க்கும் மனை மங்கலம் சிறக்கும் என்பது திருக்குறிப்பு.. 


திரு ஐயாறு கோயிலில் தரிசனம்
நந்தியம்பெருமான் திருமணத்தைத் தரிசித்தால் - திருமணத் தடைகள் உடைபட்டு திருமணம் கைகூடி வரும் என்பது நிதர்சனமான உண்மை..

இதனால் தான் - நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்.. - எனும் சொல்வழக்கு வழங்குகின்றது..

திரு ஐயாறு சிவகணங்கள் வழங்கிய படங்கள் பதிவில் உள்ளன.. அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..

நந்தியம்பெருமான் சிவவழிபாடு செய்து சிறப்பு எய்திய விவரம் கீழுள்ள பெரியபுராணத் திருப்பாடலால் விளங்கும்

நங்கள் நாதனாம் நந்தி தவஞ்செய்து
பொங்கு நீடருள் எய்திய பொற்பது
கங்கை வேணி மலரக் கனல்மலர்
செங்கையாளர் ஐயாறுந் திகழ்வது.. 45
(பாயிரம் பெரிய புராணம்)
-: சேக்கிழார் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***