நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 02, 2023

தேங்காய்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று 
பங்குனி 19
ஞாயிற்றுக்கிழமை


தேங்காய்
உலகின் தூய்மையான நீரைத் தன்னுள்ளே வைத்திருப்பது.

இயற்கையின் அதிசயம்
 இளநீர்!..


தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இதைவிடச் சிறந்த ஒன்று இல்லை.

மருத்துவத் துறைக்கு அதிசயம்!..

பாரத நாட்டின் பண்பாட்டோடு ஒன்றியிருப்பது தென்னையும் தேங்காயும்..


பாளை, ஓலை, மட்டை, கீற்று, குறும்பை, இளநீர், வழுக்கை, தேங்காய், நார், நெற்று, சிரட்டை, கொப்பரை, எண்ணெய், பிண்ணாக்கு - என்று எல்லாமே வாழ்வின் அற்புதம்!..

தென்னங்குரும்பை 
தேறாமல் காயாகவே  சூம்பிப் போயிற்று என்றால் அதற்குப் பெயர் தான் ஒல்லி!..


ஹிந்துக்களின் எல்லா வழிபாடுகளிலும் தவறாமல் இடம் பெறுவது தேங்காய்..

தேங்காயைத் தரையில் அடித்து உடைப்பதால், அகங்காரத்தை அழித்துக் கொள்வதாக ஐதீகம்.

விநாயகருக்கு அருணகிரிநாதர் சமர்ப்பிக்கும் நிவேதனங்களில் இளநீரும் ஒன்று..

காய் - என்று சொல்லப்பட்டாலும் தாவர இயலின்படி  பழம்.

தேங்காயில் புரோட்டீனும் குளுகோஸும் அதிகம்.

தேங்காயில் மாங்கனீஸ், பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், இரும்பு, துத்தநாகம், நார்ச்சத்து முதலான  சத்துக்கள் நிறைந்துள்ளன. 

ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச் 
சத்துக்களும்  உள்ளன..
 

சமையலில்  இடம் பெறும் முக்கியப் பொருட்களில்  தேங்காயும் ஒன்று. தேங்காய் இல்லாமல் சமையல் பூரணமாவது இல்லை..

உணவில் அடிக்கடி தேங்காயை சேர்த்தால் உடற் சூடு குறையும். 

தேங்காயில் காணப்படும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியன வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கின்றன..


வாய் வேக்காளம் வயிற்றுப் புண்ணுக்கு தேங்காய்ப்பால் ஒன்றே அருமருந்து.. 

தேங்காய்  நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து  கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கின்றது. இதய நலத்தை மேம்படுத்தி இதயத்தில்  பிரச்னைகள் வராமல் தடுக்கின்றது..

தேங்காயை சேர்த்து கொள்பவர்களின் கொலஸ்ட்ரால் அளவு சீராக இருப்பதாகவும் தேங்காய்  இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கின்றதாகவும் தெரிய வந்துள்ளது...

ஆனாலும்,
நல்லதா கெட்டதா என்று தேங்காயைக் குறித்து மேலை நாட்டில் தடுமாறிக் கொண்டே இருக்கின்றனர்..

உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி கூந்தல், மேனி பராமரிப்பிலும் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கின்றது..

தேங்காயைக் குறித்து நமது இலக்கியங்கள் நிறையவே பேசுகின்றன..


இயற்கையை கூர்ந்து நோக்கி நம்மவர்கள் அணுகிய விதத்திற்கு ஔவையாரின் இந்தப் பாடலே சான்று..

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி 
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் 
தலையாலே தான் தருதலால்..
(மூதுரை) 


வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம்..
(பழமொழி நானூறு)

பிறருக்கு வழங்காதவனிடம் இருக்கும் செல்வமானது நாயிடத்தே உள்ள தேங்காயைப் போன்றது - என்று பழமொழி நானூறில்  சொல்கின்றார் முன்றுறை அரையனார்..

திரு ஐயாற்றை அடுத்துள்ள தென் குரங்காடுதுறை கோயிலில் தென்னை தல விருட்சம்.. 

இறைவனின் திருப்பெயர் குலை வணங்கு நாதர்..

தமிழை வணங்கும் தமிழர்களின் இறையறமும் இல்லறமும் தேங்காயுடனே பின்னிப் பிணைந்துள்ளன..

என்றாலும், இரத்த அழுத்தம் முதலான உடல் நலக் குறைவு உள்ளவர்கள் அளவறிந்து சேர்த்துக் கொள்வதே நல்லது..


உலக தேங்காய் தினம் (2009 முதல்) வருடந்தோறும் செப்டம்பர் இரண்டாம் நாள்.. 

அரை மூடி தேங்காய்த் துருவலுடன் இரண்டு கையளவு அவல் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறி வைத்திருந்து சற்று நேரம் கழித்து சாப்பிட்டுப் பாருங்கள்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்!..
***