நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 30, 2016

வாழ்க நின் புகழ்..

இன்று காந்திஜி அமரத்வம் எய்திய நாள்..

அண்ணலின் சத்திய சோதனையின் 
இறுதி அத்தியாயத்திலிருந்து 
சில துளிகள்..  
***


என்னுடைய சத்திய சோதனைகள் அதிக மதிப்பு வாய்ந்தவை என்று நான் கருதுகின்றேன்..

(ஆனால்) அந்த மதிப்பு நன்றாகப் புலப்படும்படியாகச் செய்திருக்கின்றேனா என்பதை நான் அறியேன்..

உள்ளதை உள்ளபடியே எடுத்துக் கூறுவதற்கு என்னால் இயன்றவரை சிரமம் எடுத்துக் கொண்டிருக்கின்றேன் என்று மாத்திரமே நான் கூற முடியும்..

எந்தவிதமாக நான் சத்தியத்தைக் கண்டு கொண்டேனோ, அதே விதமாக அதை விவரிப்பதே எனது இடையறாத முயற்சியாக இருந்து வந்திருக்கின்றது..


சத்தியத்தைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை ஒரே மாதிரியான அனுபவங்கள் எனக்கு உறுதியாக உணர்த்தியிருக்கின்றன..

சத்தியத்தை தரிசிப்பதற்குள்ள ஒரே மார்க்கம் அஹிம்சை தான்!.. - என்பதை,

இந்த அத்தியாயங்களின் ஒவ்வொரு பக்கங்களும் (வாசகருக்கு) உணர்த்தவில்லை எனில்,

இந்த அத்தியாயங்களை எழுதுவதற்கு நான் எடுத்துக் கொண்ட சிரங்கள் எல்லாம் வீணாயின - என்றே கொள்வேன்..


சத்தியத்தின் தோற்றத்தை, நான் அவ்வப்போது கணநேரம் கண்டு கொண்டது மட்டுமே - சத்தியத்தின் விவரிக்க ஒண்ணாத பெருஞ்சோதியைத் தெரிந்து கொண்டதாக ஆகாது..

பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய வடிவத்தினை - நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின் -

மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப் போலவே நேசிக்க முடிந்தவராக இருத்தல் வேண்டும்..

ஆசாபாசங்கள் இன்னும் என்னுள்ளத்தினுள்ளே மறைவாக தூங்கிக் கிடக்கின்றன.. அவை இன்னும் என்னிடம் இருக்கின்றன என்பதான எண்ணம் என்னைத் தோலிவியுறச் செய்துவிடவில்லையாயினும் அவமானப்படும்படி செய்கின்றது..

அனுபவங்களும் சோதனைகளுமே என்னை நிலைபெறச் செய்து,
ஆனந்தத்தை அளிக்கின்றன..


ஆனால் -

இன்னும் நான் கடக்க வேண்டிய மிகக் கஷ்டமான பாதை எனக்கு முன்னால் இருக்கின்றது என்பதனை அறிவேன்..

என்னை நான் அணுவிற்கும் அணுவாக ஆக்கிக் கொண்டுவிட வேண்டும்..

தன்னுடன் உயிர் வாழ்வன எல்லாவற்றிற்கும் கடையனாகத்
தன்னைத் தானே விருப்பத்துடன் ஆக்கிக் கொள்ளாத வரையில்
ஒரு மனிதனுக்கு விமோசனமே கிடையாது என்பதையும் நான் அறிவேன்..
***


வாழ்கநீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா.. நீ வாழ்க வாழ்க!.. 
-: மகாகவி பாரதியார் :- 

அண்ணலின் பாதக் கமலங்களுக்கு
எளியேனின் அஞ்சலி.. 
*** 

செவ்வாய், ஜனவரி 26, 2016

இனிய பாரதம்..

எங்கள் பாரத தேசம் என்று 
தோள் கொட்டுவோம்!..



அனைவருக்கும் 
குடியரசு தின நல்வாழ்த்துகள்!..
***



எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..
***







Sukhoi Su-30-MKI

வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்!.. 
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் - எங்கள்
பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!.. 

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்!..

கங்கை நதிபுறத்துக் கோதுமைப் பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்!..
***
Reena Devi, Contingent Commander

Army Contingent- led by Captain Divya Ajith
Navy Contingent  Led by  Lt.Commander Sandhya
Air Force Contingent  led by Squadran Leader  Sneha  Shehavath
Madras Regiment

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களி படைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா!...


தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல நடையினாய் வா வா வா!..

இளைய பாரதத்தினாய் வா வா வா
எதிரிலா வலத்தினாய் வாவா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயிறொப்பவே வா வா வா!..

வெற்றி கொண்ட கையினாய் வா வா வா 
விநயம் நின்ற நாவினாய் வா வா வா 
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்முகத்தினாய் வா வா வா!.. 
- மகாகவி பாரதியார் - 


சத்ய மேவ ஜயதே!.. 
வாய்மையே வெல்லும்!.. 
(முண்டக உபநிஷத்) 

பாரத தேசத்தின் சுவாசமே இதுதான்!.. 
அதனால் தான்,

வெளியிலிருந்து வந்த விஷக்கிருமிகள் 
வெருண்டோடிப் போயின!..
உடன் பிறந்த நோய்கள் 
உருக்குலைந்து ஒழிய இருக்கின்றன!..


  
நின்று விளங்கும்.. 
பாரதம் 
என்றும் விளங்கும்!..

ஜய் ஹிந்த்!.. 
* * *

ஞாயிறு, ஜனவரி 24, 2016

தைப் பூசத் திருநாளில்..

இன்று மகத்தான தைப் பூசத் திருநாள்..

சகல சிவாலயங்களிலும் முருகப் பெருமானின் திருக்கோயில்களிலும் ஆரவாரத்துடன் அன்பர்கள் குழுமி இறைவழிபாடு இயற்றும் நன்னாள்..

திருக்கார்த்திகை, மார்கழித் திருஆதிரை, பங்குனி உத்திரம் -

- எனும் புண்ணிய நாள்களைப் போலவே -
பல நூறு ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருவது தைப் பூசத் திருநாள்..


குறிப்பாக - தமிழகத்தின் பலபகுதிகளில் இருந்தும்
பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரையாக ,
பக்தி சிரத்தையுடன் காவடிகளைச் சுமந்தபடி -

வழிநெடுக ஆடல் பாடல் என கோலாகலத்துடன்
பழனியம்பதிக்குச் சென்று நேர்த்திக் கடன் செலுத்துகின்றார்கள் எனில்,

அவர்களின் மெய்யான பக்திக்கு வேறொன்றைச் சொல்வது என்பது கடினம்..

தமிழகம் மட்டுமின்றி - இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் - என பல நாடுகளிலும் பக்திபூர்வமாக கொண்டாடப்படுவது தைப்பூசம்..


பத்துமலை - மலேஷியா
மலேஷியா, சிங்கப்பூரில் தமிழர்களோடு சீனர்களும் பக்திப் பரவசத்துடன் முருகப்பெருமானை வழிபட்டு நிற்கின்றனர்..

அங்கெல்லாம் தைப்பூசம் விடுமுறை நாள் என்பது குறிப்பிடத்தக்கது..

தைப்பூச வைபவம் நிகழும் திருத்தலங்கள் பலவாயினும் - அவற்றுள்  முதன்மையானது - திருஇடைமருதூர்..

ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி
ஸ்ரீ பெருநலமாமுலையாள்
திருஇடைமருதூர்

இறைவன் - ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ பெருநலமாமுலையாள்
தீர்த்தம்
காவிரி, ஐராவத தீர்த்தம் முதலான
32 தீர்த்தங்கள்
தலவிருட்சம் - மருத மரம்

பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈச னெம்பெரு மான்இடை மருதினிற்
பூச நாம்புகு தும்புன லாடவே!.. (5/14)

- என்று, தாம் திருஇடைமருதூரில் தைப் பூச நாளன்று நன்னீராடியதைத் திருப்பதிகம் வாயிலாக நமக்கு உரைக்கின்றார் - அப்பர் பெருமான்..

வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே
தேசம்புகுந் தீண்டியோர் செம்மையுடைத்தாய்
பூசம்புகுந் தாடிப் பொலிந்து அழகாய
ஈசனுறை கின்ற இடைமருது ஈதோ!.. (1/32)

வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீராலேத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாப் புக்கீரே!.. (2/56)

- என்று, திருஞானசம்பந்த மூர்த்தியும் திருஇடைமருதூரில் நிகழ்ந்த தைப்பூச நன்னாளைக் குறித்துப் போற்றுகின்றனர்..

பூசநீர் பொழியும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாசநீர் குடைவார் இடர்தீர்க்கும் வலஞ்சுழி.. (2/2)

பலவகையான மலர்களின் நறுமணம் கமழ்ந்திடப் பெருகி வரும் பொன்னி நதியில் பூச நன்னாளன்று நீராடுவார் வினைகளைத் தீர்க்கும் திருவலஞ்சுழி!..

- என திருவலஞ்சுழி தலத்தையும் பொன்னி நதி தீர்த்தத்தையும் ஒருங்கே புகழ்ந்துரைக்கும் திருஞானசம்பந்தர் -

திருமயிலையில் சிவநேசஞ் செட்டியாரின் திருமகளான பூம்பாவையை அஸ்திக் கலசத்திலிருந்து எழுப்புதற்குப் பாடியருளிய திருப்பதிகத்தில் -

நெய்ப்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காண...

வருவாய் பூம்பாவாய்!.. - என அழைத்தருள்கின்றார்..

சிவாலயங்கள் பலவற்றிலும் சிறப்புடன் நிகழ்த்தப்படும் தைப்பூசம் -
மேலும் சிறப்புடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது திருமுருகன் உறையும் திருத்தலங்களில்..

அவற்றுள் முதன்மையான தலங்கள் - பழனி மற்றும் சுவாமிமலை..


கடந்த ஞாயிறன்று கிராம தேவதை மற்றும் பூமி பூஜைகள் நிறைவேறிய நிலையில் திங்கட்கிழமை (18/1) காலை திருக்கொடியேற்றம் நிகழ்ந்தது பழனியம்பதியில்..



திரு. குணா அமுதன் அவர்களுக்கு நன்றி

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரங்களுடன்
ஸ்ரீ முத்துக் குமர ஸ்வாமி - வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக் கிடா , தந்தப் பல்லக்கு, தங்கக் குதிரை, தங்க மயில் என - பல்வேறு வாகனங்களில் - திருவீதி எழுந்தருளினன் ..

நேற்று , சனிக்கிழமை மாலை திருக்கல்யாண வைபவம் நிகழ்த்தப் பெற்றது..

மாங்கல்யதாரணத்திற்குப் பின் -
ஆயிரக்கணக்கான அன்பர்கள் கண்டு களிக்கும் வண்ணம்
வெள்ளி ரதத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனையுடன் நகர்வலம் வந்தருளினன்..

இன்று மாலை பழனியம்பதியில் - தைப்பூச திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெறவுள்ளது..

எதிர்வரும் புதனன்று (27/1) தெப்பத் திருவிழா..
அதனைத் தொடர்ந்து கொடியிறக்கம்..

அத்துடன் - திருவிழா மங்கலகரமாக நிறைவடைகின்றது..


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
தாமும் வாடி மனம் வருந்தி இளைத்து
அவர்தம் வாட்டம் தனைத் தீர்ப்பதற்கு
வழிவகை தேடிய வள்ளல் பெருமானாகிய

அருட்திரு இராமலிங்க ஸ்வாமிகள் ஜோதியாகிய நாள் - தைப்பூசம்..

திருமுருகனின் திவ்ய திருக்கோலத்தினை -
நிலைக்கண்ணாடியில் தரிசித்தவர் வள்ளலார்..

ஸ்ரீ முக ஆண்டு - தை 19 (1874 ஜனவரி 30) புனர்பூசமும் பூசமும் கூடிய நிறைநிலா நாளில் ஸ்வாமிகள் ஒளி தேகத்தினை எய்தினார்கள்..

வள்ளல் பெருமான் சித்தியடைந்த வடலூரிலும் தைப்பூசப் பெருந்திருவிழா நிகழ்கின்றது..

தைப் பூசத்திற்கு மூன்றாம் நாளன்று - ஸ்வாமிகள் சித்தியடைந்த அறையினை ஜன்னல் வழியாகத் தரிசிக்கலாம்..

சக உயிர்களிடத்தே காட்டும் அன்புதான்
இறைவனிடத்தில் நம்மை இட்டுச் செல்லும்!..

 - என, நல்வழி காட்டியவர் வள்ளலார் ஸ்வாமிகள்..

வள்ளல் பெருமான் அருளிய அன்பு வழியில் நடந்து
சக உயிர்களிடத்தில் தயை கூர்ந்து
அவனியை அன்பு மயமாக்கிட விழைவோம்..


அருளார் அமுதே சரணம் சரணம் 
அழகா அமலா சரணம் சரணம்
பொருளா எனையாள் புனிதா சரணம்
பொன்னே மணியே சரணம் சரணம்
மருள்வார்க் கரியாய் சரணம் சரணம்
மயில்வா கனனே சரணம் சரணம்
கருணாலயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்
- வள்ளலார் ஸ்வாமிகள் -


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருண அருட்பெருஞ்சோதி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
* * *

செவ்வாய், ஜனவரி 19, 2016

பயணங்கள் முடிவதில்லை

1981 நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தின் ஒருநாள்..

சென்னை மீனம்பாக்கத்திலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் முதன்முதலாக சிங்கப்பூருக்கு பயணம்..

அங்கு இருந்தபோது (50 + 50) 100 கி.மீ., கடலில் பயணம்..

மேலும், சந்தோஷா தீவுக்கு தொங்கு தொட்டிலில் (Cable Car) பயணம்..

வாழ்க்கையில் இன்று வரைக்கும் எத்தனையோ பயணங்கள் -

பெட்ரோல் டேங்கர், லாரி, பேருந்து, சிற்றுந்து, சைக்கிள், மாட்டு வண்டி!..

ரோடு ரோலரில் - கூட பயணித்திருக்கின்றேன்..

ஆனாலும் -

ரயில் பயணம் தான் எப்போதுமே மகிழ்ச்சியானது!..

அன்றைய நாட்களில், கரிப்புகையுடன் -

ஜிகு.. ஜிகு.. ஜிகு.. ஜிகு.. க்கூகூ.. ஊ!.. - என, ஓடிய புகை வண்டி தான் மனதில் நிறைந்து நிற்பது..

இடையில் ஆற்றுப் பாலங்களைக் கடக்கும்போது,
தடக்.. தடக்.. தடங்..தடங்!.. - என்று பேரிரைச்சல் வேறு..

அவ்வப்போது,  ....ப்ப்பூஸ்!.. - என்று நீராவியின் வெளியேற்றம்..

என்னதான் நவீன வசதிகளுடன் புதிய ரயில்கள் வந்தாலும் - மனதிற்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது - பழைய புகை வண்டிதான்!..


சில தினங்களுக்கு முன்னால் - 

மகிழ்நிறை தளத்தில் திருமிகு மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்கள் தொடர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்..

நம்மை யார் அழைக்கப் போகின்றார்களோ!..  - என, நினைத்துக் கொண்டேன்..

இரு பொழுதுகளுக்குள் - அபுதாபியிலிருந்து அழைப்பு..

தண்ணீர் நிற்பதற்குள் பிடித்துக் கொள்ள வேண்டும்!.. - என,
தெருக் குழாயடியில் குடங்கள் இடித்துக் கொள்வதைப் போல - 

இங்கே, இணைய இணைப்பு - மிகவும் இழுவையாக இருக்கின்றது..

இருந்தாலும், பற்பல இடையூறுகளுக்கு இடையில்,
பதிவுகளை வழங்குவது இனிமையாகவும் இருக்கின்றது...

தொடர் பதிவினை ஆரம்பித்து வைத்த -
திருமிகு மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும்

தொடர் பதிவினுக்கு அழைப்பு விடுத்த -
திருமிகு தேவகோட்டை கில்லர் ஜி அவர்களுக்கும்

பயணங்கள் முடிவதில்லை என,  என்னுடன் பயணித்து
(இனிய!) கருத்துரை வழங்கக் காத்திருக்கும் அனைவருக்கும்
உளமார்ந்த நன்றி..
* * *

1 உங்களது முதல் பயணம் எப்போது என நினைவில் இருக்கின்றதா?..

பரிசல்..

அதில் தான் முதல் பயணம்..

அந்தப் பயணம் ஐந்து வயதில்.. இன்றும் நினைவில் உள்ளது..

தஞ்சை அரியலூர் சாலையில் திருவையாற்றைக் கடந்ததும் கொள்ளிடம் ஆறு.. ஆற்றில் பாலம் கிடையாது..


அந்த காலகட்டத்தில் கொள்ளிடத்தைக் கடந்து அக்கரைக்குச் செல்ல வேண்டுமானால் பரிசல் ஒன்றே உற்றதுணை..

கொள்ளிடத்தின் தென்கரையில் விளாங்குடி - தஞ்சை மாவட்டம்..
வடகரையில் திருமானூர்.. தற்போது அரியலூர் மாவட்டம்..

நீர் வறண்டிருக்கும் காலத்தில் மாட்டு வண்டிகளில் ஆற்றைக் கடக்கலாம்.. சுமை ஏற்றப்பட்ட வண்டிகள் என்றால், பெருத்த சிரமம்..

தஞ்சையிலிருந்து அரியலூர் பெரம்பலூர் பகுதிகளுக்கு நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்பவர்கள் - விளாங்குடியில் மூட்டைகளை இறக்கி பரிசலுக்கு மாற்றி -  கொள்ளிடத்தைக் கடந்ததும் - திருமானூர் கரையில் பரிசலில் இருந்து மூட்டைகளை இறக்கி மீண்டும் வண்டியில் ஏற்றிச் செல்வார்களாம்..

2 மறக்க முடியாத மகிழ்ச்சியான பயணம் எது?..

மணமகனாகச் சென்று மனைமங்கலம் கொண்டு -
இனியவளோடு இல்லந்திரும்பிய நாள்!..

வாழ்க்கைப் பயணம்!..
அன்றைய மகிழ்ச்சிக்கு ஈடு இணை - இப்புவியில் இனியும் உண்டோ!..

3  எப்படிப் பயணிக்கப் பிடிக்கும்?..

அவ்வப்போது அமையும் சூழ்நிலைகள்.. இதுதான் என்றில்லை..

4  பயணத்தில் கேட்க விரும்பும் இசை?..

பின்னோக்கி ஓடும் இனிய காட்சிகளில் ஆழ்ந்திருப்பதே - சந்தோஷம்..

புறப்படும் இடம் பேருந்து நிலையம் எனில் -
பாட்டு போட்டு - மகிழ்ச்சிக்கு வேட்டு வைக்கும் பேருந்துகளில் ஏறுவதில்லை..

5  விருப்பமான பயண நேரம்?..

இளந்தென்றல் தவழும் இனிய விடியற்காலை..


ஆனால்,
அடுத்தவர்களின் சூழ்நிலைகளை மனதில் கொள்ளாமல் -
விடியற்காலைப் பொழுதிலும் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் செல்லும் -
ஈவு இரக்கமற்ற ஓட்டுநர்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவர்கள்..

6  விருப்பமான பயணத் துணை?..

வேறு யார்!.. மனைமங்கலம் தான்!..

7  பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்?..

பயணத்தின் போது புத்தகங்கள் வாசிப்பதில்லை...
கண்களைக் கருத்துடன் காக்க வேண்டாமா!..

8  விருப்பமான Ride அல்லது Drive ?..

என்றென்றும் விருப்பமானது - சைக்கிள்!..



ஆனால்,
சாலையில் நடந்து செல்வதே ஆபத்தாக இருக்கும் சூழல் இப்போது!..
எனவே - நெரிசலுக்கு இலகுவாக - TVS 50 XL Super..

சிற்றுந்து ஓட்டுதற்குத் தெரியும்.. வெகுதூரம் பயணித்ததில்லை..

9  பயணத்தின் போது முணுமுணுக்கும் பாடல்?..

சைக்கிள் பயணத்தின் போது - பாடலை முணுமுணுக்கும் வேலையெல்லாம் இல்லை..

கிராமத்தின் சாலைகள் தானே!..
மனம் மகிழ்ந்து - மடை திறந்தாற்போல பாடிக்கொண்டே செல்வேன்..

அப்படிப் பாடும் பாடல்கள் ஏராளமாக இருக்கின்றன..

ஆனாலும்,

ரத்தினம் - நவரத்தினம் போல சில வரிகள்..

இதோ உங்களுக்காக!..

பாடல்கள் - பயணக் காட்சிகளாக இருக்கும் என்பதை,
கனம் கோர்ட்டார் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டுகின்றேன்!..

1)
ஒதிய மரங்கள் பெருத்திருந்தாலும்
உத்திரமாகாது
உருவத்தில் சிறியது கடுகானாலும்
காரம் போகாது
பழிப்பதனாலே தெளிவுள்ள மனசு
பாழ்பட்டுப் போகாது
பாதை விட்டு விலகிய கால்கள்
ஊர்போய்ச் சேராது..

காற்றைக் கையால் பிடித்தவனில்லை
தூற்றித் தூற்றி வாழ்ந்தவனில்லை..

ஓஹோஹோ.. மனிதர்களே..
ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி
பொய்களை விற்று
உருப்பட வாருங்கள்.. ஓஹோஹோ!..

2)_
எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே - உன்னை
இடர வைத்துத் தள்ளப் பார்க்கும் குழியிலே..
அத்தனையும் தாண்டி காலை முன் வையடா..
நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா..

சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா..
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா!..



3)
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே
குலமகளே வருக..
எங்கள் கோயிலில் வாழும் காவல் தெய்வம்
கண்ணகியே வருக..
மங்கலச் செல்வி அங்கயற்கண்ணி
திருமகளே வருக..
வாழும் நாடும் வளரும் வீடும்
வளம் பெறவே வருக..

ஒளிமயமான எதிர்காலம் 
என் உள்ளத்தில் தெரிகிறது..
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை
காதில் விழுகிறது..

4)
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றதாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே!..

வந்தநாள் முதல் இந்தநாள் வரை
வானம் மாறவில்லை வான்மதியும்
மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும்
கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை..

மனிதன் மாறிவிட்டான்..
மதத்தில் ஏறிவிட்டான்...


5)
கருவினில் வளரும் மழலையின் உயிரில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம்பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை..

அச்சம் என்பது மடமையடா..
அஞ்சாமை திராவிடர் உரிமையடா!..

6)
புதிய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
இமயத்தில் இருக்கும் குளிர் காற்று
எந்தன் இதயத்தைத் தொடுகிறது
அன்று இமயத்தில் சேரன் கொடிபறந்த
அந்தக் காலம் தெரிகிறது..
அந்தக் காலம் தெரிகிறது..

புதிய வானம்.. புதிய பூமி..
எங்கும் பனிமழை பொழிகிறது..
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது..

7)
காற்றும் நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே..
வானம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே..

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்..

அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்..
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்...

8)
கொஞ்சநேரம் காற்றடித்து ஓய்ந்து போகலாம்
வானில்கூடி வரும் மேகங்களும் கலைந்து போகலாம்
நேற்றுவரை நடந்ததெல்லாம் இன்று மாறலாம்
நாம் நேர்வழியில் நடந்து சென்றால் நன்மை அடையலாம்...

ஒன்னா இருக்கக் கத்துக்கணும் -இந்த
உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..
காக்கா கூட்டத்தைப் பாருங்க - அதுக்குக் 
கத்துக் கொடுத்தது யாருங்க?..

9)
காட்டில் ஒருவன் எனைக் கண்டான்
கையில் உள்ளதைக் கொடு என்றான்
கையில் எதுவும் இல்லை என்று
கண்ணில் இருந்ததைக் கொடுத்து விட்டேன்..

ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி
சலசல எனச் சாலையிலே..
செல்செல் செல்லுங்கள் காளைகளே
சேர்ந்திட வேண்டும் இரவுக்குள்ளே..


10 கனவுப் பயணம் ஏதாவது?..

உண்மையில் கனவுப் பயணம் என்றெல்லாம் ஏதும் இல்லை..
ஏனெனில், வாழ்க்கையே ஒரு பயணம் தான்!..


பயணங்கள் முடிவதில்லை..
முடிவதேயில்லை!..

வாழ்க நலம்.. 
***

ஞாயிறு, ஜனவரி 17, 2016

கன்னித் தமிழ்ப் பொங்கல்

அக்கா!..

வாம்மா.. தாமரை!.. வா.. வா!..

பொங்கல் நல்வாழ்த்துகள்!.. நல்லாயிருக்கீங்களா அக்கா?.. 

நல்லா இருக்கேன் தாமரை.. உனக்கும் நல்வாழ்த்துகள்.. நீ எப்படி இருக்கிறாய்!..

நலந்தான் அக்கா.. அதென்ன கூடையில.. மூட்டை முடிச்சு மாதிரி தெரியுது?..

ஆமாம்... தாமரை.. அதெல்லாம் கட்டு சாத மூட்டை.. சாயுங்காலமா பெரிய கோயிலுக்குப் போறோம்.. இன்னிக்கு கன்னிப் பொங்கல் இல்லையா!.. கோயில்ல சாமி கும்பிட்டுட்டு.. அப்படியே பிரகாரத்தில இருந்து எல்லோருமா சாப்பிட்டு வருவோம்.. அதுக்காகத் தான் உன்னையும் வரச் சொல்லி அனுப்பினேன்..

அதுதானா விஷயம்!.. நானும் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்!.. அக்கா.. எனக்கொரு சந்தேகம்?..

என்னம்மா.. என்ன சந்தேகம்.. கேளேன்!..


கன்னிப் பொங்கலா.. காணும் பொங்கலா?.. இல்லே.. கனுப் பொங்கலா!..

எல்லாமும் ஒன்றுதான்.. அவங்க அவங்க வழக்கத்தைத் தான் இப்படி எல்லாம் சொல்றாங்க!..

எப்படி?.. 

கனுப்பொங்கல்..ங்கறது ஒரு சாரார் அவங்க குடும்பத்துக்குள்ள அண்ணன் தம்பி நல்லாயிருக்கணும்..னு வேண்டிக்கிட்டு நோன்பு இருந்து காப்பு கட்டி சாமி கும்பிடுவாங்க..

சரி!.. 

இன்னொன்னு காணும் பொங்கல்..ன்னு.. இது இவங்களா ஒரு புது அர்த்தம் சொன்னது.. ஒருத்தரை ஒருத்தர் போய்ப் பார்த்து நலம் விசாரிக்கிற நாள்.. அப்படின்னு புதுசா பேர் சொல்றாங்க.. சென்னையில உள்ள ஜனங்களுக்கு கடற்கரையில பெருந்திரளாக் கூடுவது சந்தோஷம்..

ஓ!.. 

ஆனா.. நம்ம ஊர்ப்பக்கம் எல்லாம் கன்னிப் பொங்கல்..ன்னு சொல்லி செய்ற வழக்கம் தான் பழைமையானது..

அது எப்படிக்கா!?.. எங்க கிராமத்தில பசங்களுக்கு மஞ்சு விரட்டு.. பொண்ணுங்களுக்கு கோலம் போடுறது.. அது இது..ன்னு விளையாட்டுப் போட்டிகளா நடக்கும்.. கன்னிப் பொங்கல் ..ன்னு தனியா செய்ததில்லை. .

இருந்திருக்கும் தாமரை.. கால சூழ்நிலையில நாமே நம்ம பாரம்பர்யத்தை ஒழித்துக் கட்டுகிறோம் இல்லையா.. அதனால மறைஞ்சு போயிருக்கும்!..

நீங்க சொல்லுங்க அக்கா!.. கன்னிப் பொங்கல்..ன்னா என்னான்னு!.. அது சரி.. அத்தானும் பிள்ளைகளும் எங்கே?.. 

அவங்க எல்லாம்.. மஞ்சு விரட்டு பார்க்கப் போயிருக்காங்க!..

எவனாவது கொண்டு போயிறப் போறான்..
மஞ்சு!. மாட்டை பத்திக்கிட்டு வாம்மா!..

அதான் நடத்தக் கூடாதுன்னு தடை போட்டிருக்காங்கள்..ல!..

அது ஜல்லிக்கட்டுக்கு!.. இது மஞ்சு விரட்டு!..


என்னக்கா.. சொல்றீங்க!.. எல்லாம் ஒன்றுதானே!.. 

இல்லேம்மா.. வேற.. வேற!..

என்னவோ போங்க!.. 
அந்தப் பக்கம் >>> குமார் அண்ணன் ஒன்னு சொல்றார்.. 
இந்தப் பக்கம் >>> இளங்கோ ஐயா ஒன்னு சொல்றாங்க..  
இங்கே நீங்க ஒன்னு சொல்றீங்க.. எனக்கு தலை சுத்துது!.. 

ஓ.. வலைப்பூவெல்லாம் படிக்க ஆரம்பித்தாயிற்றா!..  

எல்லாம் நீங்க பழக்கி வைத்தது!.. 

அதுசரி... உங்க இல்லத்தரசு தீபாவளிக்கும் வரவில்லை.. பொங்கலுக்கும் வரவில்லை.. என்ன சேதி!..

அதையேங் கேக்கிறீங்க... கூட வேலை செஞ்ச எகிப்துக்காரன் போட்டுட்டு ஓடிட்டானாம்.. அதனால வேலைப்பளு அதிகமா ஆயிடிச்சாம்.. ஒருவழியா சித்திரையில குலதெய்வம் கொடைவிழாவுக்கு வர்றாங்களாம்... 

ஓ.. சித்திரையா!.. அப்ப நித்திரை?..

அக்கா.. அக்கா.. நீங்க கன்னிப் பொங்கலைப் பத்தி சொல்லுங்களேன்... 

இது பொதுவா நம்ம தஞ்சாவூர் கிராமங்கள்..ல நடக்கிறது.. மற்றபடி ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பழக்கம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்..

சொல்லுங்க.. அக்கா!.. 

இந்த கன்னிப் பொங்கல் வழக்கமா தை மூணாம் நாள் அப்படின்னாலும் மார்கழி முதல் தேதியிலயிருந்தே ஆரம்பமாயிடும்..



எப்படி?.. 

அதான் வாசல்ல கோலம் போட்டு விளக்கேற்றி பசுஞ்சாணத்தில பூசணிப் பூ வைக்கிறார்களே அப்போதே ஆரம்பித்து விடுகின்றது..

என்னக்கா.. சொல்றீங்க!.. 

ஆமாம்மா!.. அப்போதெல்லாம் பொண்ணுங்க பெரியவளாகி விட்டதுமே - படிப்பு நின்னுடும்.. வீடே கதின்னு.. கிடப்போம்.. ஆனாலும் சும்மா இல்லே.. அடுத்த வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும் அத்துப்படியாயிடும்..

இந்த வீட்டுல பெண்கள் இருக்காங்க.. அப்படிங்கிறதை ரசனையோட சொல்றதுதான் வாசல்ல மாக்கோலமும் பூசணிப் பூவும்!..

அடடா.. இப்படியொரு உத்தியா!.. 

அதுவரைக்கும் தெருவில விளையாடிட்டு இருந்த பொண்ணுங்க வீட்டுக்குள்ள உட்கார்ந்ததும் - பசங்களுக்கு இருப்பு கொள்ளாது..

இப்படியும் அப்படியுமா தாவுவானுங்க.. சைக்கிள்..ல பாய்வானுங்க.. கன்னுகுட்டிய விரட்டிக்கிட்டு ஓடுவானுங்க...

இலை மறைவு காய் மறைவு.. இல்லையா!.. 

கிளித் தோப்பு பொங்கல் எப்போதடா வரும் ..ன்னு பேய் மாதிரி அலைவானுங்க!..

அதென்ன கிளித்தோப்பு பொங்கல்?.. 

இது தான்.. மாட்டுப் பொங்கல் கழித்த மறுநாள் ஊரே கலகலப்பாயிடும்... அது ஒரு பெரிய இலுப்பைத் தோப்பு..   இலுப்பை மரத்தில மரங்கொத்தி ஏகப்பட்ட பொந்து போட்டு வெச்சிருக்கும்.. இலுப்பை மரப் பொந்து, இலுப்பைப் பழம் இதெல்லாம் கிளிக்கு ரொம்ப இஷ்டம்.. அதனால நூற்றுக் கணக்கான மரத்தில ஆயிரக்கணக்கான கிளிகள்..

இனி அந்த சந்தோஷம் என்றைக்கும் வராது.. இல்லையா!.. 

இந்த இலுப்பைத் தோப்பு தான் கன்னிப் பொங்கல் அன்றைக்கு இளம்பெண்கள் கூடும் இடம்..

சரி.. ஊர்ல.. இப்படி ஏதாவது தோப்பு இல்லேன்னா?.. 

கோயில் மந்தை, குளத்தங்கரை, ஆற்றங்கரை... இப்படி ஏதாவது ஒரு இடம் இல்லாத ஊர்கள் ஏது தாமரை!..

அட.. ஆமா.. இல்லே!.. 

எங்களோட விரதம் இருக்கறவங்களும் வருவாங்க.. உச்சிக்கு அப்புறம் சூரியன் இறங்கற வேளையில எல்லாருமே கிளித் தோப்புக்கு வந்துடுவாங்க..
பொங்கலுக்கு வேண்டியதும் பூஜைக்கு வேண்டியதும்..ன்னு எல்லாவற்றையும் கணக்கா கொண்டு போய்விடுவோம்..

அங்கே - வயதான சுமங்கலிகள் எல்லாரும் கூடி மண்ணால மேடை கட்டி அதில பூங்கரகம் மாதிரி செஞ்சு வைப்பார்கள்.. கிளித் தோப்புக்கு பக்கத்திலயே பொன்னளந்த மாரியம்மன் கோயில்!.. கோயிலுக்கு எதிரே பெரிய தாமரைக் குளம்!..

அதென்னக்கா.. பொன்னளந்த மாரியம்மன்?.. 

மக கல்யாணத்துக்குன்னு யாராவது பூ அளவுக்கு வரங்கேட்டா - மகமாயி மனமிரங்கி பொன்னளந்து கொடுத்து கல்யாணத்தை நடத்தி வைப்பாளாம்.. அதனால தான் பொன்னளந்த மாரி!..

எல்லா ஊர்லயும் இப்படி இருந்தா எப்படி இருக்கும்!.. 

புது செங்கல்லால அடுப்பு.. புதுப்பானையில பச்சரிசி கழுவிப் போட்டு கோயில் குளத்தில தண்ணீர் எடுத்து - அதில தேங்காய உடைச்சி ஊத்தி தயாரா இருப்போம்.. கோயில் திருவிளக்கில இருந்து ஜோதி எடுத்து வருவார் பூசாரியார்.. முதல் அடுப்பை ஏற்றி அதிலயிருந்து ஒவ்வொரு அடுப்பாக தீ மூட்டி பொங்கல் வைப்போம்..

இதுவரைக்கும் யார் கண்ணுலயும் படாம இருந்த எங்களை நேருக்கு நேராப் பார்த்ததும் விடலைகளுக்கு குஷி பிய்த்துக் கொண்டு போகும்!..

அப்படிப் போடுங்க அருவாளை!.. 

பாவாடை தாவணி.. ரெட்டை ஜடை.. குஞ்சம் வைத்த பின்னல்.. மருதாணி, நெத்திச் சுட்டி, வளையல், கொலுசு அப்படின்னு பொண்ணுங்க அழகைப் பாத்ததும் ஏகத்துக்கும் தவிச்சுப் போய்டுவானுங்க..

அந்தப் பக்கம் இந்தப் பக்கம்.. ன்னு சுத்திச் சுத்தி வருவானுங்க.. ஆனா - எங்க கூட வந்திருக்கிற கிழவிங்க விடமாட்டாங்க...

அடடா!..

இவளுங்களும் சும்மா இருக்க மாட்டாளுங்க..  ஊஞ்சலாடுறது அம்மானை விளையாடுறது கோலாட்டம் ஆடுறது கண்ணைக் கட்டிக்கிட்டு தேடுறது அப்பப்பா!.. மருதாணி போட்ட கையைக் காட்டி காட்டி ஒரே களேபரம் தான்!..   

ஓஹோ.. இது வேறயா?.. 

புது மஞ்சளைக் குடைஞ்சி அதுக்குள்ள இத்தினுயூண்டு சுண்ணாம்பை வெச்சதும் அது ஒரு மாதிரியான சிவப்பாகி விடும்.. அதை கால்..ல செம்பஞ்சுக் குழம்பு மாதிரி பூசிக்கிட்டு லேசா கொலுசு தெரியிற மாதிரி இங்கிட்டும் அங்கிட்டும் நடந்தாளுங்க..ன்னா.. பசங்க மயக்கம் போட்டு விழுந்திடுவானுங்க!..

சும்மா சொல்லக் கூடாது.. அக்கா.. உங்களையெல்லாம்!..

போங்கடா அந்த பக்கம்!.. ந்னு துரத்திக்கிட்டு போனால் - எவனாவது ஒருத்தன் - ஏ.. கிழவி!.. உனக்கும் தாத்தா இப்படித்தானே கொக்கி போட்டு இருப்பாரு!.. - அப்படின்னு கூச்சல் போடுவான்!...

அதான்.. சரி!.. 

இவங்களும் அவனுங்களை விரட்டுற மாதிரி விரட்டுவாங்க.. அவனுங்களும் போற மாதிரி போய்ட்டு வந்துடுவானுங்க.. திரும்பி வந்து எங்களைப் பார்த்து சிரிப்பானுங்க!..

அவ்வளவு பேரழகு.. நீங்கள்..லாம்!.. இல்லையாக்கா!.. 

இல்லயா.. பின்னே!..

ஆமாங்க்கா!.. உங்க அழகெல்லாம் எங்களுக்கு வரவே வராது!.. பாருங்க இந்த வயசிலயும் உங்களுக்கு தலைமுடி எவ்வளவு ஆரோக்யமா!.. 

இதற்கெல்லாம் காரணம் இயற்கையடி தாமரை!.. இயற்கை!..

நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.. பாருங்கள் என் தலையில்!.. கண்ட கண்ட எண்ணெயையும் தேய்த்து கரிக்குருவி வால் மாதிரி!.. 

அதுக்கும் வைத்தியம் இருக்குதடி தங்கம்.. அப்புறமா சொல்கின்றேன்.. நீ இப்போ கதையைக் கேளு!..

சொல்லுங்க அக்கா!.. 

கிளித்தோப்பு பொங்கல்..ன்னு வளையல், ரிப்பன், குஞ்சம், சோப்பு, சீப்பு, கண்ணாடி இதெல்லாம் கூட ஜோரா வியாபாரம் ஆகிட்டு இருக்கும்.. ரங்க ராட்டினம் போட்டிருப்பாங்க.. பலூன் காத்தாடி.. ன்னு ஒரு திருவிழாவே நடக்கும்..

கண்ணைக் காட்டினா போதும்.. பசங்க கிட்ட இருக்கிற நாலணா எட்டணா எல்லாம் - வளையல் ரிப்பன் குஞ்சமா மாறி பொண்ணுங்க கைக்கு வந்திருக்கும்.. இதை எல்லாம் இந்தக் கிழவிங்க பார்த்தும் பார்க்காத மாதிரி கமுக்கமா இருப்பாங்க!..

ஓஹோ.. அந்த காலத்திலேயே இந்த வேலை எல்லாம் உண்டா!.. உங்களுக்கு யாரும் குஞ்சம் ரிப்பன் எல்லாம் கொடுக்கலையா!.. 

கொடுத்தாங்களே!...

யாரு?.. 

வேற யாரு!.. உங்க அத்தான் தான்!..

ஓ.. இதுவும் பால் குடித்த பூனை தானா!.. 

நீ கேளம்மா. கதையை!.. பொங்கல் பொங்கி வந்ததும் அலங்காரமா இருக்கிற பொங்கல் மேடையில் பூங்கரகத்தைச் சுற்றி தலைவாழையில் பானையோடு வைத்து குத்து விளக்கை ஏத்தி வைப்போம்.. வயசான பெரியவங்க கும்மி பாட்டு பாடுவாங்க வந்திருக்கிற சுமங்கலிகளும் பாடுவாங்க.. நாங்கள்...லாம்.. பூங்கரகத்தைச் சுத்தி வந்து கும்மி கொட்டுவோம்..

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் - கன்னிப் பொண்ணுங்கள்..ல யார் மேலயாவது சாமி இறங்கிடும்.. பெரியவங்க ஓடி வந்து தாங்கிப் பிடித்து மேடையில உட்கார வைப்பாங்க.. மாலை போட்டு கூந்தல்ல பூ வெச்சு... சந்தனம் மஞ்சள்..ல்லாம் பூசி குங்குமம் தீட்டுவாங்க.. வளையல் போட்டு விடுவாங்க.. நேர்ந்துகிட்டு இருக்கிறவங்க வெள்ளிக் கொலுசும் போட்டு விடுவாங்க..

அப்படின்னா.. பொண்ணுங்க யார் மேலயாவது சாமி வரும் ..ன்னு முன்னாலேயே தெரியும் இல்லையா!.. 

ஆமாம்.. தெரியும்.. முதல் வருஷம் அம்மன் அருள் வந்த பொண்ணு இந்த வருஷம் கல்யாணமாகி சுமங்கலியா இருப்பா.. அவள் வந்து - இந்தப் பொண்ணுக்கு மாலை போட்டு தேங்காய் பழம் கொடுத்து சேதி கேட்பாள்..

முதல் சேதி அவள் கேட்டதும் - மற்ற எல்லாரும் தொடர்ந்து கேட்பார்கள்..

எந்த திசையிலயிருந்து மாப்பிள்ளை வருவான்.. சொத்து சுகம் இருக்குமா.. இந்த வருஷம் செய்யலாமா.. சொந்த மாப்பிள்ளை குடிகாரனா இருக்கான்.. திருந்துவானா.. இல்லே வேற இடம் பார்க்கலாமா.. அப்படின்னு எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்குவாங்க!..

யாரும் கேட்டு இருக்க மாட்டாங்களே.. எம்பொண்ணை மேல படிக்க வைக்கலாமா.. ன்னு!.. 

எம்மகளை படிக்க வைக்க உத்தரவு கொடும்மா.. ந்னு கேட்டவங்களும் இருக்காங்க.. ஆனா.. அம்பாள் வரங்கொடுத்தும் சொந்தக்காரனுங்க வரம் கொடுக்கல.. வரன் தான் கொடுத்தானுங்க!..

அப்ப.. அந்த சொந்தக்காரனுங்க கண்ணை அம்பாள் குத்தலையா?. ஏன்டா பிள்ளைங்க வாழ்க்கைய கெடுக்கிறீங்க..ன்னு!.. 

அதெல்லாம் நடந்திருக்கு தாமரை.. சொல்லணும்..னா நாலு நாள் வேணும்!..

உங்களுக்கு ஒன்னும் கேட்கலயா!.. 

கேட்டாங்களே!.. குஞ்சம் கொடுத்தவனே குங்குமம் கொடுப்பான்..ன்னு சொன்னா மகமாயி!.. அப்ப தான் எங்க விவகாரமே வீட்டுக்கு தெரிஞ்சது!..  அத்தோட எங்க அப்பத்தாவுக்கு ரெண்டு பாட்டு கிடைச்சது.. இதுதான் நீ புள்ளய பாத்துக்கிட்ட லட்சணமா..ன்னு..

அப்புறம்?.. 

அப்புறம் என்ன.. ஆத்தா கொடுத்த வாக்குன்னு அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணப் பந்தல் தான்.. கெட்டி மேளம் தான்.. மஞ்சக் கயிறு தான்!..

பால் பழந்தான்.. பன்னீர் சாரல்தான்!.. பவளமல்லி பந்தல் தான்!.. 
ஆகா.. அக்காவுக்கு வந்த வெட்கத்தைப் பாருங்களேன்!.. 

அதுக்கப்புறம் சாமி மலையேறி விடும்.. மக்களெல்லாம் சந்தோஷமா ஒருத்தருக்கொருத்தர் பொங்கல் கொடுத்துக்குவாங்க.. வந்திருக்கிற எல்லாருக்கும் வித்தியாசம் இல்லாம சந்தனம் தேங்காய் பழம் தாம்பூலம் கொடுப்பாங்க.. வேட்டி துண்டு புடவை கொடுக்கிறதும் உண்டு!..

அந்தப் பூங்கரகம்.. சாமி வந்த பொண்ணு.. 

பூங்கரகத்தை மூன்றாம் நாள் ஆற்றில் விட்டு விடுவார்கள்.. அந்தப் பொண்ணு அந்த ஒரு வருஷத்துக்கும் எல்லா நல்ல காரியத்திலயும் முன்னால இருப்பா.. கல்யாணப் பொண்ணுக்கு எல்லாம் பூச்சூட்டி மஞ்சள் பூசி வளையல் போட்டு விடுவா..

சரி.. இதையெல்லாம் அவங்க தான் செய்யணும்.. இவங்க தான் செய்யணும்.. அப்படின்னு ஏதாவது.. 

அடடா.. அந்த மாதிரியெல்லாம் ஏதும் கிடையாது.. ஊர் ஜனங்க எல்லாரும் ஒன்னா இருந்து தான் கொண்டாடுவார்கள்.. கன்னிப் பொங்கல் என்றால் தான் இத்தனை குதூகலங்கள்.. காணும் பொங்கலுக்குள் இதெல்லாம் ஏது?..

உண்மைதான் அக்கா.. நீங்கள் சொல்வது!.. ஆனாலும் நாம் ஏன் கன்னிப் பொங்கலைக் கைவிட்டோம்?.. 

சில சம்பிரதாயங்கள் மாறுபாடு ஆனாலும் தஞ்சாவூர் கும்பகோணம் பக்கம் சில கிராமங்களில் இன்னும் இந்தப் பழக்கம் இருக்கின்றது.. ஆனாலும் -
அந்த நாட்கள் எல்லாம் கனவாகிப் போனதடி தாமரை.. கனவாகிப் போனது!..

அந்த நாட்கள் இனியும் வருமோ.. அக்கா!.. 

தெரியவில்லையம்மா!..

சரி. அக்கா.. கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள்.. நான் வீட்டுக்குப் போய் விட்டு வருகின்றேன்.. சாயுங்காலம் எல்லாருமாக கோயிலுக்குப் போகலாம்!.. 

ஆகட்டும் தாமரை.. நேற்று பெரிய கோயில்..ல சங்கராந்தி விழா.. எனக்குப் போக இயலவில்லை..








ஆனாலும், தவறாமல் படங்கள் வந்து விட்டன..
அவர்களுக்கு எல்லாம் நெஞ்சார்ந்த நன்றி.. நீ சீக்கிரம் வந்து விடு தாமரை!..

சரி அக்கா!.. இதோ.. வந்து விடுகின்றேன்!..

அப்படியே.. >>> தேவகோட்டை கில்லர்ஜி  எதையோ தேடிக்கிட்டு இருக்கார்.. என்னான்னு பார்த்து சொல்லிட்டுப் போம்மா!..

ஆகட்டும் அக்கா!.. போய்ட்டு வர்றேன்!.. 

கன்னிப் பொங்கல் வாழ்க!..

கன்னிப் பெண்களும் சுமங்கலியாகி 
காலமெல்லாம் வாழ்க!..

அன்பின் 
நல்வாழ்த்துகள்!..  
* * *