நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திருநாவுக்கரசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருநாவுக்கரசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 03, 2024

சிவஜோதி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 20
சதய நட்சத்திரம்
 வெள்ளிக்கிழமை

திருநாவுக்கரசர்
சிவஜோதியுள் கலந்த நாள்


' புறச்சமயப் படுகுழியினின்றும் எடுத்தாள வேண்டும்.. ` - என்று திலகவதியார் செய்து கொண்ட  விண்ணப்பம் கேட்டு  எம்பெருமான் சூலை எனும் வயிற்று வலியினைக் கொடுக்க, காஞ்சியிலிருந்து நள்ளிரவுப் போதில் புறப்பட்டு திரு அதிகைப் பதியினை அடைந்து சகோதரியின் கால்களில் விழுந்தார் தருமசேனராக இருந்த மருள் நீக்கியார்.. 

திலகவதியார் திருநீறு கொடுக்க - 
 " கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நானறியேன்...
எனத் திருப்பதிகம் பிறந்தது..
 
திருப்பதிகம் பிறந்த அளவில் சூலை நோயும் பறந்தது..

வானில் இருந்து,
நாவுக்கரசு - எனும் திருப்பெயரும் எழுந்தது..

சகோதரனின் கையில் உழவாரப் படையினைக் கொடுத்தார் திலகவதியார்.. 
சகோதரியை வலம் வந்து பணிந்த நாவுக்கரசர் - திருநாவுக்கரசர் உழவாரப் படையினைக் கொண்டு உடையானின் ஊர்ப்பணி செய்வதற்கு நடந்தார்..

புறச்சமயத்தினரின் சொல் கேட்டு - அவரைச் சிறை பிடித்த மகேந்திர பல்லவன் பலவித இன்னல்களுக்கு ஆளாக்கினான்..

' நாமார்க்கும் குடியல்லோம்.. ' என்று சிவமயமாகி இருந்தவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது.. அதிலிருந்து மீண்டு வந்த நாவுக்கரசர் சுண்ணாம்புக் காளவாயில் அடைக்கப்பட்டார்.. 

சுண்ணாம்புக் காளவாயும் பூஞ்சோலையாகிப் போக - மதம் கொண்டிருந்த யானையை  அவிழ்த்து விட்டனர்.. 

அது நாவுக்கரசரை வலம் வந்து வணங்கி விட்டு ஓடிப் போனது..


ஆத்திரமுற்றோர் அறிவழிந்து
கருங்கல்லினொடு நாவுக்கரசரைக் கட்டி கடலுக்குள் தள்ளினர்..
அந்தக்கல்லும் மிதந்து திருப்பாதிரிப்புலியூரில் கரை ஒதுங்கியது..


மெய்யறிவு பெற்ற மகேந்திர பல்லவன் நாவுக்கரசரின் கால்களில் விழுந்து சிவ சமயத்தைத் தழுவினான்..

அதன்பின், திருப்பெண்ணாகடத் தலத்தில் சூல இடபக் குறிகளைப் பெற்றுக் கொண்ட நாவுக்கரசர் தில்லையம்பதி முதலான திருத்தலங்களைத் தரிசித்த வேளையில் காழிப்பதியில் நிகழ்ந்த அதிசயம் கேட்டு அங்கு விரைந்தார்.. 

ஞானசம்பந்தர் எனும் அந்தக் குழந்தை - " வாருங்கள் அப்பரே.. " என்று அழைத்து எதிர் கொண்டது.. 


ஊர்கள் தோறும் நடந்த அப்பர் - திங்களூர் எனும் தலத்தில் அப்பூதி அடிகள் எனும் மெய்யடியாரைக் கண்டு இன்புற்றார்.. அவர் பொருட்டு ஆங்கொரு அற்புதம் நிகழ்ந்தது.. 

நாவுக்கரசருக்கு அமுது படைக்க என்று வாழையிலை அரிந்த போது நாகம் தீண்டி இறந்த பாலகன் அப்பர் ஸ்வாமிகளின் திருப்பதிகத்தால் உயிர் கொண்டு எழுந்தனன்..

காலம் நடத்திய வழியில் திரு ஆரூரில் தியாகேசனை வணங்கி, ஆழித்தேர் கண்டு மகிழ்ந்து திருப்புகலூர் ஏகிய போது திருப்புகலூரில் மீண்டும் திருஞானசம்பந்தர் எதிர் கொண்டார்.. 

இருவருமாக தலயாத்திரை செய்து திருவீழிமிழலையில் படிக்காசு பெற்று பஞ்சத்தினால் விளைந்த
பசிப்பிணி போக்கி - திருக்கடவூரில் கலய நாயனார் மடத்தில் தங்கியிருந்து திருமறைக்காடு ஏகி திருக்கோயிலின் கதவுகளைத் திறக்கவும் அடைக்கவும் செய்தனர்..  

அதுசமயம் பாண்டிய நாட்டில் இருந்து மங்கையர்க்கரசியார் அழைப்பு விடுக்க - திருஞானசம்பந்தர் ஆலவாய்க்குச் சென்றார்..

மக்கட் பணியைத் தொடர்ந்தார் அப்பர் ஸ்வாமிகள்..

அதன்பின் திருநாவுக்கரசர்
திருப்பைஞ்ஞீலி தலத்திற்குச் செல்லும் வழியில் இறைவன் பொதி சோறு கொணர்ந்தளித்து எதிர்கொண்டனன்..

அதன் பின் திருக்காளத்தியைத் தரிசித்த ஸ்வாமிகள் அங்கிருந்து திருக்கயிலைக்கு நடந்தார்.. கால்கள் தேய்ந்ததால் ஊர்ந்து சென்ற அவரை சிவயோகியாக வந்த இறைவன் கயிலாயத்தின் தடாகத்தில் மூழ்குமாறு பணித்தனன்.. 

அங்கே மானசரோருவ தீர்த்தத்தில் மூழ்கிய திருநாவுக்கரசர் இங்கே திரு ஐயாற்றின் சூரிய தீர்த்தத்தில் எழுந்தார்.. 

அப்போது - அம்மையப்பன்  தோன்றி பற்பல ஜீவராசிகளாகத் திருக்காட்சி நல்கினர்..


அப்பர் திருமடம் திருப்பூந்துருத்தி

திரு ஐயாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி ஏகிய
 அப்பர் ஸ்வாமிகள் அங்கே திருமடம் அமைத்துத் தங்கியிருந்த போது

திருஞானசம்பந்தர் மதுரையில் இருந்து சோழ நாட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.. 

அஃதறிந்த அப்பர் ஸ்வாமிகள் ஊர் எல்லையில் ஞானசம்பந்தரை எதிர் கொண்டு அழைத்து மகிழ்ந்தார்..

அதன்பின் பாண்டி நாட்டுத் தலங்களைத் தரிசித்து மீண்ட திருநாவுக்கரசர் -

காலம் கனிந்த வேளையில் தமது எண்பத்தொன்றாவது வயதில் - சித்திரைச் சதய நாளில்  திருப்புகலூரில் சிவகதியடைந்தார்..

மகேசன் தொண்டுடன் மக்கட் தொண்டும் ஆற்றிய புண்ணியர்  - திருநாவுக்கரசர்..

இராஜராஜசோழன் எழுப்பிய தஞ்சை  ராஜராஜேஸ்வரத்தில் தென்னவன் மூவேந்த வேளான் என்பவர் (கி. பி. 1013 -14) திருநாவுக்கரசர் திருவுருவத்தை எழுந்தருளுவித்ததாக கல்வெட்டுச் செய்திகள் உள்ளன..

திருநாவுக்கரசர் அருளியவை என்று சொல்லப்படுகின்ற (4900) திருப்பதிகங்களில் நமக்குக் கிடைத்திருப்பவை 312 மட்டுமே..

திருநாவுக்கரசர் அருளிச் செய்த திருப்பதிகங்கள் அகச் சான்றுகள் நிறைந்திருப்பவை.. 


இவைகளே தேவாரம் எனப்பட்டவை.. 

ஸ்ரீ ராஜராஜ சோழர் பெருமுயற்சி செய்து
தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறைக்குள் கிடந்த சுவடிகளை மீட்டு,  திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அவர்களைக் கொண்டு தொகுத்தளித்தார்...

திருநாவுக்கரசர் அருளிச்செய்த திருப்பதிகங்கள் - பன்னிரு திருமுறைகளுள் 4,5,6 எனும் மூன்று தொகுதிகளாகத்  திகழ்கின்றன..

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்   
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்  
தன்கடன் அடியேனையுந் தாங்குதல்   
என்கடன் பணி செய்து கிடப்பதே.. 5/19/9
-: திருநாவுக்கரசர் :-
**
திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி..
 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், மே 02, 2024

வாழை வனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 19
வியாழக்கிழமை

சித்திரை மாதத்தின் ஒருநாள்..

வழிநடையில் சோலை வனமாக நிழல் தரும் மரங்கள் பல இருந்தும் -  வெம்மை குறையவில்லை..

பறந்து திரிவதற்கு அஞ்சிய பறவைகள் -
கூட்டுக்குள் அடைந்தவாறு பழைய கதைகளைப் பேசிக் கொண்டிருந்தன.

ஆனாலும், அந்தக் கொடும் வெயிலில் - குளிர் நிழல்தனைக் கண்டு ஒதுங்கி இளைப்பாறாமல் - ஒரு புண்ணிய ஆத்மா அந்த வழியில் வந்து கொண்டிருந்தது..

அது - சிவனே என்று வந்தாலும் - சிவனே என்று வராமல் -

வழிநடையில் போவோர் வருவோர்க்கு இடையூறாக  இருமருங்கிலும் முளைத்து தழைத்திருந்த - காரை, கற்றாழை, நாயுருவி, நெருஞ்சி போன்ற முட்செடிகளை தன் கையிலிருந்த உழவாரத்தினால் அப்புறப்படுத்திக் கொண்டு வந்தது.

அந்தப் புண்ணியர் - திருநாவுக்கரசர்..


வழித்தடத்தில் முட்செடிகள் பரவிக் கிடந்தால் - வழி நடப்பதற்கு அஞ்சுவரே மக்கள்.. மூலிகைச் செடிகளாக இருந்தாலும் அவை பல்கிப் பெருகி காடாகக் கிடப்பின் - விஷமுடைய உயிரினங்களுக்கு புகலிடமாகி விடுமே!. அங்ஙனம் ஆயின் அது பலருக்கும் அல்லலாக அமையுமே!..

- என்று ஆருயிர்களின் மீது கொண்ட அன்பு தான் இந்த அருஞ்செயலுக்கு அடிப்படை.

தள்ளாத வயதிலும் - தளராத உள்ளத்துடன் - தவப்பணி செய்து கொண்டு வந்த திருநாவுக்கரசரைக் கண்டதும் - மரங்களின் ஊடாக அமர்ந்திருந்த புள்ளினங்கள் பேச்சற்று இருந்தன..

பெருமானே!.. எம்மை ஆளுடைய ஐயனே!.. அருந்தொண்டாற்றி வரும் இந்த அடியவரின் அல்லலைக் களைந்தருள்வீராக!..

சற்று தொலைவில் திருக்கோயில் கொண்டிருந்த - வாழை வன நாதனை மனமுருகி வேண்டிக் கொண்டன..

ஆதவனின் அருங்கிரணங்களால் தடம் தகித்தது. அடியவரின் அடி சுட்டது.

பகலவனின் வெங்கதிர்களால் உடம்பு வியர்த்து.
மேனியிலிருந்த வெண்ணீறு கரைந்து பாலாக வழிந்தது..

அதற்கு மேலும் அவரால் தாள முடியவில்லை.

அருகிருந்த விருட்சத்தினை நோக்கி நடந்தார். கால்கள் சோர்ந்தன.

திருக்கயிலை நோக்கி நடந்த நாட்கள் அவரது நினைவில் வந்தன!..

பசியும் தாகமும் மேலிட்டன..

உமையொரு பாகனை உளங்கொண்டு வணங்கினார்...
அன்றொரு நாள் - கடம்பூரில் தொடுத்த பாமாலை நினைவுக்கு வந்தது...

அதிலிருந்து ஒரு பாவினை
 - தனது திருநாவினால் - மீண்டும் மொழிந்தார்...

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையுந் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே!..

அருகே தாமரைத் தடாகம் தென்பட்டது.
ஆயினும் அருகே செல்ல இயலவில்லை..

கண்கள் இரண்டும் மயங்கின.
கையொடு கால்களும் தளர்ந்தன.

அதற்கு மேல் இயலாமல் மயக்கமுற்றார்..
திருநாவுக்கரசரின் திருமேனி நோகாமல் பூமகள் தாங்கிக் கொண்டாள்..

' இந்தப் புண்ணியரைத் தாங்கிட என்ன புண்ணியம் செய்தனமோ!..

எல்லாம் வல்ல சிவம் - உம்மைக் கொண்டு ஒரு திருவிளையாடலை நிகழ்த்த இருக்கின்றதே..

பெரியீர்!.. தம்மைப் போல அறச் செயல்களைச் செய்தார் வேறு யார் உளர்?!.

தாய் தந்தையரை இழந்த வேளையில் -
ஆதரவற்று மனம் தளர்ந்திருந்தாலும் நீரும் உமது தமக்கையும் இயற்றிய அறப்பணிகள் அளவிடற்கரியன... இல்லத்தில் நிறைந்திருந்த பொன்னையும் பொருளையும் வறியவர்க்கென வாரி வாரி வழங்கினீர்..

எல்லாவற்றிலும் மேலானது கோடையில் நீர்ப்பந்தல் அமைத்து வருவோர் தமக்கு சோறும் நீரும் அளித்து அருங்கொடை ஆற்றினீர்.. 

செய்தார்க்கு செய்த நலம் அல்லவோ!.. சற்றே இங்கு இளைப்பாறும்!..
'

- என்று பூமகள் புன்னகையுடன் கருணை கொண்டாள்..

சில விநாடிகளுக்கெல்லாம் பன்னீர் சாரல் பொழிந்தது.
நல்ல மலர்களின் நறுமணம் அங்கு கமழ்ந்தது.

உணர்வு வரப்பெற்ற திருநாவுக்கரசர் - மெல்ல கண்விழித்தார்.

எதிரில் - ஞான சூரியனைப் போல அந்தணர் ஒருவர்..

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்..

- என்று வள்ளுவப் பெருந்தகை வரையறுத்ததைப் போல - அருள் தோற்றம்..

அவரது தோளில் ஒரு மூட்டை.. கையில் நீர் நிறைந்த சுரைக்குடுக்கை..

ஐயா.. எழுந்திரும்!..

அன்புக் கட்டளை..

தள்ளாத வயதில் எதன் பொருட்டு இந்த கொடும் வெயிலில் வழிப்பயணம்!?..

புன்னகையுடன் வினா ஒன்று வெளிப்பட்டது..

தன்னையும் நாடி வந்து ஒருவர் கேட்கின்றாரே..
அவரை ஆற்றுப்படுத்துவோம்!.. 
- என எண்ணியபடி - கைகளை ஊன்றி எழ முயன்றார் - திருநாவுக்கரசர்.

இரும்.. இரும்!.. இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் இன்புற்று இரும்!.. இருந்தவாறே விளம்பும்!..

அன்பு வழிந்தது - அந்தணரின் பேச்சில்!..

காண்டற்கரிய கடவுள் கண்டாய்!..
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்!..
- என,  காசினியில் உள்ளோருக்கெல்லாம்
கயிலாய நாதனை - காட்டிச் செல்கின்றேன்.. காட்டச் செல்கின்றேன்..

அங்ஙனமாயின் நீர் கண்டதுண்டோ கயிலாய நாதனை!..

கண்டேன்.. அவர் திருப்பாதம்!.. கண்டறியாதன கண்டேன்!..

நீர் கண்டதை எமக்கும் காட்ட இயலுமோ!?..

மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சியுள்ளான்
காளத்தியான் அவன் என் கண்ணுளானே!..

அடேங்கப்பா!.. பெரிதினும் பெரிதாய் விளக்கம் காட்டுகின்றீர்... ஆயினும் அங்கெல்லாம் போய்த் தேடுவது எங்ஙனம்?.. ஆகவே அருகில் உள்ளதாய் காட்டுக!..

பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண்..
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான் காண்!..

இங்கெல்லாம் கண்டிருக்கின்றீரோ!..

கண்டிருக்கின்றேன் ஐயா.. மலையான் மடமங்கை மகிழ்ந்து உடன் இருக்க பழனஞ்சேர் அப்பனைக் கண்டிருக்கின்றேன்.. சீர்வளர் செல்வி ஏலவார் குழலியுடன் பராய்த்துறை மேவிய செல்வனைக் கண்டிருக்கின்றேன்!..

அதுசரி.. பைஞ்ஞீலியானை!..

அவனைத் தான் - தேடிச் சென்று கொண்டிருக்கின்றேன்!..

தேடல் முடிந்திடுமா!..

தேடலும் முடிந்திடுமோ!?.. அதுவும் எம்பெருமானின் சித்தம்!..

பைஞ்ஞீலியை அறிவீரோ - நீர்!..

அறியேனே!.. இவ்வழியே செல்லுங்கள்.. பைஞ்ஞீலியை அடைவீர்!.. -  என்று ஆங்கொருவர் அடையாளங் காட்டினார்.. எனவே இவ்வழியில் அடியேன் தொடர்ந்து வருகின்றேன்.. ஆகட்டும் ஐயா.. இவ்வளவும் கேட்கின்றீரே.. தாம் யார்?.. தம்மைப் பற்றியும் கூறுகவே!..

யான் என்னைப் பற்றிக் கூறுவது இருக்கட்டும்..
முதலில் நீர் இருந்து பசியாறும்...
நீர் அருந்திக் களைப்பாறும்.... மிகுந்த சோர்வுடன் இருக்கின்றீர்...

அல்லலுற்ற ஆருயிர்களின் பசிப்பிணி நீக்குதல் - இதுவோ நும் பணி!..

ஆம்.. இவ்வழிச் செல்லும் அனைத்துயிர்களுக்கும்!.. அது மனிதர் என்னும் நல்லுயிர் தொட்டு பூத்துக் கிடக்கும் புல்லுயிர் வரைக்கும்!..

ஓ!.. இவ்வழி என்பது எங்கே செல்கின்றது?.. - திருநாவுக்கரசர் வினவினார்.

இவ்வழி சென்று முடிவதை இதுவரைக்கும் யாரும் அறிந்திலர். ஆயினும்,
இவ்வழி என்பது செவ்வழி!.. அறிந்திடுக - இதில் செல்வது யார்க்கும் எளிதல்ல!..

அதனால் தான் -  ஆங்காங்கே - முளைத்திருக்கும் முள்ளையும் கல்லையும் நீக்கிச் செல்கின்றேன்!..

செவ்வழி என்பது சிவன் வழி!.. - அந்தணர் புன்னகைத்த வண்ணம்
தலை வாழையிலையை விரித்து அதில் தயிரன்னத்தைப் பரிமாறினார்....

ஓ!... அப்படியும் ஒரு பொருள் உளதோ!..
அருஞ்சொல் கூறி அருஞ்செயல் ஆற்றுகின்றீர்..
அன்னம் பாலிக்கும் ஐயன் தில்லைச் சிற்றம்பலவனைப் போல!..
நீவிர் வாழ்க!.. நின் மனையாள் வாழ்க!.. 
மக்கள் சுற்றம் மாடு மனை மங்கலங்கள் யாவும் வாழ்க.. வாழ்க!..


தலைவாழை இலையில் பாலிக்கப்பட்ட தயிர் சோற்றைக் கையிலெடுத்து வணங்கி முகமன் கூறியவாறு உண்டார் திருநாவுக்கரசர்..

அவர் உண்பதைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தணர்.

தாமரைத் தடாகத்தில் சேந்திய குளிர்ந்த நீர்.. அருந்தி மகிழும்!..

ஆகட்டும் ஐயனே!..

இதோ செங்கீரை.... உப்பிலிட்ட மாவடு!...

ஆகா.. அமிர்தம்.. அமிர்தம்.. இந்த அன்னத்தை ஆக்கிக் கொடுத்தனளே - உம் இல்லக் கிழத்தி!.. அவள் நித்ய சுமங்கலி - வடு வகிர்கண்ணியாக வாழ வேணும்!..

உண்ணும் உண்ணும்.. உவப்புடன் உண்ணும்!..

ஐயா.. தாம் யாரோ.. எவரோ.. உண்ணீர்.. உண்ணீர் என உவந்து ஊட்டுகின்றீர். இன்முகங்காட்டி உப்பிடுகின்றீர்!..
உலகில் உப்பை முதலில் அறிந்தவன் தமிழன்!..
கடலில் கலம் செலுத்தி அதன் அக்கரையைக் கண்டவன் தமிழன்!..
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.. - என்று மொழிந்தவன் தமிழன்!..
யான் உம்மை உள்ளளவும் மறவேன்!..

அதனால்தான், 
எம்மை - 
ஆரியன் கண்டாய்!.. தமிழன் கண்டாய்!.. 
முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்!.. 
- என்று, திருமறைக்காட்டில் அடையாளங் காட்டினீரோ!..

ஆ!.. அது உமக்கு எப்படித் தெரியும்?.. அங்ஙனமாயின்.. நீர்!?.. 
- திகைத்தார் - திருநாவுக்கரசர்...

கையில் எடுத்த கவளம் அப்படியே நின்றது..
பசியுந்தாகமும் பறந்தே போயின...

புன்னகை பூத்த திருமுகத்துடன் பொலிந்த அந்தணர் தன்னுரு கரந்தார்..

தேவ துந்துபிகள் முழங்கின... வானிலிருந்து பூமாரி பொழிந்தது...
எட்டுத் திக்கிலும் சிவகண வாத்தியங்கள் அதிர்ந்தன...

திருநாவுக்கரசரின் வினாவுக்கு விடை
- விடை வாகனத்தின் மீது பொலிந்தது..


அம்மையும் அப்பனும்!.. அருகே ஐங்கரனும் கந்தக் கடம்பனும்...

வெள்ளியங்கிரியைப் போல் ஒளிர்ந்த ஆனந்த நந்தி -
கழுத்து மணிகள் குலுங்க அப்படியும் இப்படியுமாக நடம் பயின்றது..

திருநாவுக்கரசரே!.. நிலைத்த புகழுடன் நீடூழி வாழ்க!...

எல்லாஞ் சிவன் என நின்ற எம்பெருமானே!.. என்னை ஆளுடைய கோவே!.. என் பொருட்டு சோறும் நீரும் தாங்கி வந்தனையே!..
எனையாள வந்த எளிமையை என்ன என்று சொல்லுவேன்!..
வண்டார்குழலி ஒரு பாகமாக வந்து வாடிய வாட்டம் தவிர்த்த வள்ளலே!.. நின்னையும் மறந்து உய்வனோ!..

தண்டனிட்டு வணங்கினார்- திருநாவுக்கரசர்..

மாதர்பிறைக் கண்ணியானை -
மலையான் மகளொடும் கண்ட ஆனந்தம் அவருக்குள் பொங்கியது.

மனம் ஆறாது - கண்ணீர் வழிந்தது.. 
வலஞ்செய்து வணங்கினார்..

வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்..

ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்றும்
அடியவர்கட்கு ஆரமுதம் ஆகித் தோன்றும்..

படைமலிந்த மழுவாளும் மானுந்தோன்றும்
பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை தோன்றும்..

ஆரொருவர் உள்குவார் உள்ளத் துள்ளே
அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்..

வாருருவப் பூண்முலைநன் மங்கைதன்னை
மகிழ்தொருபால் வைத்துகந்த வடிவுந்தோன்றும்..

- என்று, பரமனையும் பரமேஸ்வரியையும் ஐங்கரனையும் அறுமுகனையும் பலவாறு பரவித் தொழுது போற்றினார்..

கண்ணெதிரில் பேரொளிப் பிழம்பாகத் திகழ்ந்த - திருப்பைஞ்ஞீலி திருக்கோயிலினுள் புகுந்து அம்மையப்பனைப் போற்றி வணங்கி இன்புற்றார்...


திருப்பைஞ்ஞீலியில் - அப்பர் பெருமானுக்கு சோறும் நீரும் அளித்த வைபவம் - 

சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரத்தன்று நிகழ்கின்றது.


இறைவன் ஸ்ரீவாழைவன நாதன் 
அம்பிகை 
ஸ்ரீவிசாலாட்சி அம்பிகை

தலவிருட்சம் - வாழை (ஞீலி)
தீர்த்தம் - அப்பர் தீர்த்தம்.

காருலா மலர்க் கொன்றையந் தாரினன்
வாருலா முலை மங்கையோர் பங்கினன்
தேருலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியெம்
ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்மினே!.. (5/41)
-: அப்பர் பெருமான் :-
**
திருநாவுக்கரசர்
திருவடி போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஏப்ரல் 16, 2023

சதயம்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 3
ஞாயிற்றுக்கிழமை

இன்று 
திருநாவுக்கரசர் குருபூஜை


திருநாவுக்கரசர் அருளிச் செய்த திருப்பதிகங்கள் 4900 என்றொரு கணக்கு உண்டு..

அவற்றுள்
நமக்குக் கிடைத்திருப்பவை 312 திருப்பதிகங்கள் மட்டுமே..


ஸ்வாமிகள் அருளிச் செய்த திருப் பதிகங்களே தேவாரம்.

இத்திருப்பதிகங்கள் நான்கு, ஐந்து, ஆறு எனும் திருமுறைகளாகத் திகழ்கின்றன..

113 திருப்பதிகங்கள் - நான்காம் திருமுறையிலும்
100 திருப்பதிகங்கள் - ஐந்தாம் திருமுறையிலும்
99 திருப்பதிகங்கள் - ஆறாம் திருமுறையிலும் விளங்குகின்றன..


சமணம் சார்ந்து காஞ்சியில் உற்றிருந்த போது ஈசனருளால் சூலை எனும் வயிற்று வலியால் பீடிக்கப்பட்டவர்..

சகோதரியாகிய திலகவதியார் தமது திருக்கரத்தால் திருநீறு பெற்று மீண்டும் சிவ சமயத்தைச் சார்ந்தவர்..

அதனால்
சமணர்களுடன் சேர்ந்து கொண்டு மகேந்திர பல்லவன் இழைத்த தீங்குகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டவர்..  


கல்லுடன் சேர்த்து கடலில் தள்ளப்பட்டும் கல் தெப்பமாக மிதந்து  கரையேறிய நிலையில் - வந்து பணிந்து நின்ற 
மகேந்திர பல்லவனை 
மன்னித்துத் திருநீறு வழங்கியவர்..

திரு அதிகையில்  தமக்கையார் வழங்கிய உழவாரம் கொண்டு திருக்கோயில்களை சீர் செய்தவர்..

எம்பெருமானால் நாவுக்கரசு என்று  பெயர் சூட்டப் பெற்றவர்..

திருக்கோயில் தரிசனம் என்று காசி  கயிலாயம் வரை நடந்தவர்..

திருப்பெண்ணாகடத்தில் சமணம் சார்ந்திருந்த பிழை நீங்குதற்கு இடபக்குறி இடுமாறு விண்ணப்பம் செய்து கொண்டவர்..

ஞான சம்பந்தப் பெருமானால் அப்பர் என அழைக்கப் பெற்றவர்..

நின் பணி செய்து கிடக்கும் என்னைக் காப்பது உனது கடன அல்லவா!.. - என்று திருக்கடம்பூரில் இறைவனிடம் வேண்டிக் கொண்டவர்..

திருநல்லூரில் ஈசன் திருவடி சூட்டப் பெற்றவர்..

திரு ஆரூரில் உழவாரப்பணி செய்த போது மண்ணுக்கு உள்ளிருந்து புரண்டு வந்த ரத்தினக் கற்களை உழவாரம் கொண்டு எற்றி எறிந்தவர்..

உழவாரப் பணியின் போது மேனியழகைக் காட்டி நடனமிட்ட அரம்பையர் அஞ்சி ஓடும்படிக்கு அக்கினியாகத் தகித்தவர்..


திருவீழிமிழலையில்  இறைவனிடம் காசு பெற்று கால மாறுபாட்டினால் விளைச்சல் அற்று
வறுமையுற்ற மக்களின்  பசிப்பிணி தீர்த்தவர்..

திங்களூரில் அப்பூதியடிகளின் மகன் நாகம் தீண்டி உயிர் துறக்க - ஈசன் அருள் கொண்டு அச்சிறுவனை மீட்டுக் கொடுத்தவர்..

திருப்பூந்துருத்தியில் திருமடம் அமைத்து மக்கட் பணி செய்தவர்..

பழையாறை வடதளியில் சமணர்கள் அடைத்து வைத்திருந்த சிவாலயத்தைத் திறக்கும்படிக்கு உண்ணாநோன்பு இருந்து வெற்றி கண்டு சிவதரிசனம் செய்தவர்..

திருமறைக்காட்டில் வேதங்களால் அடைக்கப்பட்டிருந்த கோயில் கதவுகளைத் தமிழால் திறந்து கொடுத்தவர்..


திருப்பைஞ்ஞீலி செல்லும் வழியில் தளர்ந்திருந்த போது
இறைவனால் கட்டமுது வழங்கப் பெற்றவர்..

முழங்கால் மூட்டு தேய்ந்த நிலையிலும் கயிலாய மாமலையில் தவழ்ந்து சென்று ஈசன் அருள் பெற்று மானசரோருவ ஏரியில் மூழ்கி திரு ஐயாறு சூரிய புஷ்கரணியில் எழுந்து கயிலாய தரிசனம் பெற்றவர்..

என்பத்தோராவது வயதில் திருப்புகலூரில் சிவமுக்தி எய்தியவர்..

திருப்பிரமபுரம், திருப்பூந்துருத்தி, திருமறைக்காடு, 
திருப்புகலூர், திருவீழிமிழலை, திருக்கடவூர்,
ஆகிய திருத் தலங்களில் ஞானசம்பந்தப் பெருமானுடன் தரிசனம் கண்டவர்..

திருநீலகண்ட யாழ்ப்பாணர், நீல நக்கர், சிறுதொண்டர், முருகர், குங்கிலியக் கலயர், அப்பூதி அடிகள்  ஆகிய பெருமக்கள் தம்முடன் அன்பினைக் கொண்டவர்..

ஸ்வாமிகளது காலம்  ஆறாம் நூற்றாண்டு (பொது ஆண்டு 547 - 655) என்று அறியப் பட்டுள்ளது..

ஸ்வாமிகள் தரிசித்த திருக்கோயில்கள் 191 என்பர்..


மன்னரும் மக்களும் திருநாவுக்கரசு ஸ்வாமிகளைப் போற்றி வணங்கியதற்குச் சான்றாக - 

தஞ்சை பெரிய கோயிலில்  தென்னவன் மூவேந்த வேளான் (1014) என்பவர் திருநாவுக்கரசர் திருமேனியை எழுந்தருளுவித்துத் திருவிளக்கும் அணி கலன்களும்  அளித்துள்ள செய்தி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது..

மேலும்,
திருநாவுக்கரசர் நித்ய பூஜைக்கு என்று ராஜராஜ சோழன் கொடை அளித்துள்ள செய்தி திருப்புகலூர் 
கல்வெட்டில் விளங்குகின்றது..


அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ 
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95/1

திருநாவுக்கரசர் திருவடிகள் 
போற்றி.. போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

புதன், ஏப்ரல் 27, 2022

என் கடன்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று திருப்பூந்துருத்தி அப்பர் ஸ்வாமி திருமடத்தில் குருபூஜை தரிசனம்..


இந்தத் திருமடம் அப்பர் பெருமானால் அமைக்கப் பெற்றது..

திருமறைக்காட்டில் இருந்து மதுரைக்கு ஏகிய ஞானசம்பந்தப் பெருமான் அப்பர் ஸ்வாமிகளால் வரவேற்கப் பெற்று அளவளாவி இருந்தது இந்தத் திரு மடத்தில் தான்..






முற்பகல் 10:30 மணியளவில் திருமடத்தில் உள்ள திருமேனிக்கும் உற்சவ விக்ரகத்திற்கும்
பலவகையான திரவியங்களால் திருமுழுக்கு நடைபெற்றது.. தொடர்ந்து அலங்காரமும் மலர் வழிபாடும் தீப ஆராதனையும் நடைபெற்றது..





திரளான அன்பர்கள் கலந்து கொண்ட நிகழ்வின் நிறைவாக
தஞ்சாவூர் அருட்பெருஞ் ஜோதி அறக்கட்டளையின் சார்பாக அன்ன பிரசாதம் வழங்கப் பெற்றது..



தேவாரத் திருப்பண் இசையும் தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் அருளாளரின் ஞான உரையும் நிகழ்ந்தன..



மாலையில் தேவார விரிவுரையும் அப்பர் பெருமான் திருமேனி திருவீதி உலாவும் குறிக்கப்பட்டிருந்தன..
இரவு வரை அங்கிருப்பதற்கு எங்களுக்கு இயலாத நிலை.. வரும் நாட்கள் நலமாக அமைவதற்கு இறைவன் அருள் புரிவானாக..
*
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும்
இமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால்
உரித்தானை மதகரியை உற்றுப் பற்றி
உமை அதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானைச் சீரார்ந்த பூதஞ் சூழத்திருச்சடைமேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப் பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே..6.043.7

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையுந் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே..5.019.9

திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

சனி, ஏப்ரல் 18, 2020

தொண்டருட்தொண்டர்


இன்று சித்திரை - சதய நட்சத்திரம்..

சைவ சமயம் கூறும் எண்ணற்ற நல்லடியார்களுள் -

எண்பத்தொரு அகவை தாங்கியவரும்
தலை சிறந்த திருத்தொண்டரும்
மக்கள் பணியே மகேசன் பணி - என
உலகுக்கு உணர்த்தியவரும் ஆகிய

திருநாவுக்கரசு சுவாமிகள் - ஈசன் திருவடிகளில் இரண்டறக் கலந்த நாள்..


திருவாமூரில் செழித்தோங்கிய வேளாண் குடியில் - புகழனார் மாதினியார் தம்பதியர்க்கு இரண்டாவது மகவெனத் தோன்றியவர்..

இயற்பெயர் மருள்நீக்கியார் என்பதாகும்..

மூத்தவர் திலகவதி எனும் அருங்குண நங்கை...

உரிய வயதில் கல்வி கற்று சிறந்து விளங்கினார் - மருள்நீக்கியார்..

திலகவதியார் - தம் பன்னிரண்டாம் வயதில் அவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பெற்றது..

மாப்பிள்ளை - கலிப்பகை எனும் வீர மணாளன்

அவ்வேளையில் திருமுனைப்பாடி நாட்டின் வட எல்லையில் போர் மூளவே -
கலிப்பகையாரும் வாளேந்தி வன்பகை முடிக்க விரைந்தார்..

காலம் செய்த கொடுமையாய் - எதிர்பாராத விதமாக அன்பு மகளின் திருமணத்தைக் கண்குளிரக் காணாமல் - புகழனார் இறைவனடி சேர்ந்தார்..

அத்துயரத்தைத் தாங்க மாட்டாதவராக மாதினியாரும் -
உற்ற செல்வங்களையும் பெற்ற செல்வங்களையும் துறந்து -
கணவனைத் தொடர்ந்து விண்ணேகினார்..

பெற்றோரைப் பிரிந்த பெருந்துயரிலிருந்து மீள்வதற்குள் - மீண்டும் ஒரு பேரிடி..

நாட்டுக்காகப் போராடிய கலிப்பகையாரை மரணம் தழுவிக் கொண்டது..

தனக்குக் கணவனாக நிச்சயிக்கப் பெற்ற - கலிப்பகையார்
போர் முனையில் வீர மரணம் எய்திய செய்தியறிந்த திலகவதியார் -
தாமும் தன் இன்னுயிரைப் போக்கிக் கொள்ள முனைந்தார்..

அந்தக் கொடுமையைக் காணச் சகிக்காத மருள்நீக்கியார் -
அன்புச் சகோதரியின் கால்களில் வீழ்ந்து அரற்றினார்..

அன்னையிற் சிறந்த அக்கையார்.. தாமும் எனைக் கை விட்டால் நான் போவது எங்கே?.. அவனியில் எனக்கென்று ஓரிடமும் உளதோ?.. யானும் தம்முடன் வருகின்றேன்!.. அடியேனையும் அருள் கூர்ந்து அக்னிக் குழிக்குள் அழைத்துச் செல்க!..

கல்லாகியிருந்த திலகவதியாரின் - மனமும் கரைந்தது..

கால்களைப் பற்றிக் கொண்டு - மருள்நீக்கியார் சிந்திய கண்ணீர்த் துளிகளுடன் திலகவதியாரின் கண்ணீர்த் துளிகளும் கலந்தன...

தம்பியின் தோள்களைப் பற்றித் தூக்கி ஆரத் தழுவிக் கொண்டார்..

இனி என்றும் உனைப் பிரியேன்!..

அக்காளின் அன்பு மொழிகளினால் சற்றே ஆறுதலுற்றார் - தம்பி..

மனம் தேறியவராக - திரண்டு கிடந்த செல்வங்களை வாரி வாரி வழங்கினார்..

எந்த வகையிலெல்லாம் இயலுமோ -
அந்த வகையிலெல்லாம் குறைவின்றி அறம் புரிந்தார்..

ஆனாலும் மருள்நீக்கியார் மனதில் அமைதி உண்டாகவில்லை..

உயிர் தரித்திருந்தாலும் அக்கா பூண்டிருந்த கைம்மைக் கோலம்
அன்புச் சகோதரனின் மனதைத் துளைத்தது..

நிம்மதி குலைந்திருந்த அவரை - புறச் சமயம் கவர்ந்தது..

சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்..
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்..
நலந் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்..
உன் நாமம் என்நாவில் மறந்தறியேன்..

- என்று பின்னாளில் தம்மைப் பற்றிக் குறித்தாலும் -
அந்த கொடுமையான சூழ்நிலையில் -

சைவ சமயத்தைத் துறந்து காஞ்சிக்குச் சென்று சமண சமயத்தைச் சார்ந்தார்..

அதைக் கண்டு திகைத்த திலகவதியார் - தாமும் திருவாமூரில் இருந்து நீங்கி திருஅதிகை வீரட்டானத் திருக்கோயிலில் நாளும் தொண்டு புரிவாராயினர்..

காலங்கள் காற்றென ஓடின..

மருள்நீக்கியார் - தருமசேனர் என்ற பெயருடன் - காஞ்சியில் புகழ் பெற்று விளங்குவதை அறிந்து ஏதும் செய்ய இயலாதவராக மனம் இளைத்தார்..

எனினும் என்றாவது ஒருநாள் தன் சகோதரன் மீண்டு வருவான் என்ற நம்பிக்கையில் திளைத்தார்..

அந்த நம்பிக்கையுடனேயே - அதிகை வீரட்டானேஸ்வரரைத் துதித்தார்..

அவர் தம் நம்பிக்கை நிறைவேறும் நாளும் வந்தது..

காஞ்சி மடத்தில் தருமசேனர் என்ற பெயரிலிருந்த
மருள்நீக்கியாருக்கு சூலை நோய் உண்டானது..

அதன் கடுமையை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை..

புறச் சமயத்தின் - மணி மந்த்ர ஔஷதங்கள் எதுவும் பலனளிக்கவில்லை...

வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்து எனை நலிகின்றதே!..

- என, அரற்றினார்..

அவரது மனதில் மெல்லியதாக ஒளிக் கீற்று புலப்பட்டது..

அஞ்சேலும் எனீர் ... அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே!..

- என கரங்குவித்து வணங்கினார்..

தனது நம்பிக்கைக்கு உரிய பணியாளனுடன் - எவரும் அறியாத வண்ணம்
மாலை மயங்கிய பிறகு, விடியலைத் தேடி நடந்தார்..

ஆனாலும் - வயிற்று வலியின் கொடுமை.. அவரால் நடக்க இயலவில்லை..

பணியாளனுடன் குதிரையில் பயணித்து வந்தார்..

கிழக்கே ஆதவன் உதிக்கும் வேளையில் அவர் வந்து சேர்ந்த இடம் - திருஅதிகை..

திருக்கோயிலின் வாசலில் நீர் தெளித்துக் கொண்டிருந்த அக்காளைக் கண்டார்..

தத்தளித்துக் கொண்டிருந்த மனம் தெளிந்தார்.. கண்களில் நீர் பொங்கிற்று..

அவர் தம் திருவடிகளில் அடியற்ற மரம் போல் வீழ்ந்தார்..

எனக்கென உயிர் தாங்கிய உம்மையும் தவிக்க விட்டுச் சென்ற பாவமோ - இங்ஙனம் எனக்கு வந்துற்றது?.. இதிலிருந்து மீளவும் வழியுண்டோ?.. அறியேனே!...

அழுதார்.. தொழுதார்.. துடித்தார்.. துவண்டார்..

ஆதரவுடன் தோள்களைத் தொட்டுத் தூக்கி -
தம்பியின் நெற்றியில் திருநீற்றினைப் பூசினார் - திலகவதியார்..

வழி உண்டு!.. கலங்க வேண்டாம்!..

எங்கே?.. எளியேன் அறியும்படிக்குக் காட்டியருளுங்கள்.. அக்கையாரே!..

அதோ.. அங்கே!..

திருவதிகை வீரட்டானம்
அக்கையாரின் திருக்கரங்கள் காட்டிய திசை - திருவதிகை திருமூலத்தானம்..

அருள்மயமாக ஐயன் வீரட்டானேஸ்வரர்...

அந்த அளவில் மருள்நீக்கியாரின் நாவிலிருந்து -
மடை கடந்த வெள்ளமாக அமுதத் தமிழ் பொங்கியது..

கூற்றாயினவாறு விலக்கலீர் கொடுமைபல செய்தன நானறியேன்..
ஏற்றாயடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேனடியேன் அதிகைக் கெடில வீரட்டானத் துறைஅம்மானே!..  

திருப்பாடல்கள் வளர வளர - சூலை நோய் தேய்ந்து கொண்டே வந்து முற்றாகத் தொலைந்தது..

நோய் நீங்கிய மகிழ்வில் திலகவதியாரின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார் - மருள்நீக்கியார்..

தம்பிக்கு நல்லாசி கூறிய திலகவதியார் -

ஐயனை வணங்கு..
அவனைத் துணை கொண்டு
அவனிக்குத் தொண்டு செய்!..

- என்று மொழிந்தவராக,

ஊருக்கு உழைப்பதற்கென உழவாரப் படையினை தம்பியின் கரங்களில் அளித்தார்..

அப்போது, விண்ணினின்று - திருநாவுக்கரசு!.. - எனும் ஒலி எழுந்தது..

ஆலயத்தின் மணிகள் தாமாகவே முழங்கின..

நெடுங்கிடையாய் விழுந்து வணங்கி எழுந்தவர் - திருஅதிகை வீரட்டானத்தின் மருங்கில் மண்டிக்கிடந்த முள்ளையும் கல்லையும் உழவாரப் படையால் செதுக்கித் துப்புரவு செய்து அடியார் நடக்கும் பாதையைச் சீர் படுத்தினார்...

அடுத்த சில விநாடிகளில் - அங்கே மகேந்திர பல்லவனின் படையாட்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்...

சமயம் துறந்து வந்த தாங்கள் அரசரின் ஆக்கினைக்கு ஆட்பட்டீர்.. எம்முடன் காஞ்சிக்கு வரக்கடவீர்!.. உம்மைத் தண்டித்து ஒறுக்கும் படிக்கு அரசரின் ஆணை!..

சேனை நாயகன் கடுங்கோபத்துடன் மொழிந்து நின்றான்..

நாமார்க்கும் குடியல்லோம்.. நமனை அஞ்சோம்!..

- திருநாவுக்கரசர் திடங்கொண்டு மொழிந்தார்..

அதைக் கேட்ட சேனை நாயகன் பதறினான்..

ஐயனே.. தம்மைத் தண்டிக்கும் துணிவு எனக்கேது.. என்பிழை பொறுக்க வேண்டும்.. ஆயினும் - தாம் அறியாததா?.. அரசரின் ஆணையை நிறைவேற்றா விட்டால் எளியேன் தண்டனைக்கு ஆளாக நேரிடும்... இக்கட்டான சூழ்நிலையில் தாமே எனக்கு உதவ வேண்டும்!..

சேனை நாயகனின் துயர் தீரட்டும் என்று - தாமே காஞ்சிக்கு எழுந்தருளினார்..

அங்கே திருநாவுக்கரசர் பெருந்திடலில் நிறுத்தப்பட்டார்..

காஞ்சி சமண மடத்தில் தீ - எனக் கனன்று கொண்டிருந்தது சிவ சமயக் காழ்ப்பு..

ஏதேனும் செய்து கொள்க!.. - என்றவாறு மன்னன் மகேந்திர பல்லவன் - திருநாவுக்கரசரை - தான் சார்ந்திருந்த சமண சமயத்தினரிடம் ஒப்புவித்தான்..

அரசனின் வாக்கைச் சிரமேற்கொண்ட - அவர்கள்
திருநாவுக்கரசரைப் பலவகையிலும் துன்புறுத்தத் தலைப்ப்பட்டனர் - 

சமண சமயத்தினின்று நீங்கி மீண்டும் சிவசமயத்தைச் சார்ந்த குற்றத்திற்காக -
சுண்ணாம்பு நீற்றறையில் அடைக்கப்பட்டார்..

ஏழு நாட்களுக்குப் பின் -
நீற்றுப் போயிருப்பான் - நீற்றைப் பூசியவன்!.. -
என்ற இறுமாப்புடன் நீற்றறையைத் திறந்தவர்கள் அதிர்ந்து பின்வாங்கினர்..

காரணம் -
நீற்றறைக்குள் அருள் பூத்த திருமேனியராக அமர்ந்திருந்தார் - திருநாவுக்கரசர்..

அதன்பின், அவருக்கு - நஞ்சு கலந்த பால் சோற்றை வஞ்சனையுடன் உண்ணக் கொடுத்தனர் - வண்கணாளர்கள்..

அதிலும் வெற்றிகரமாகத் தோல்வியடைந்த பின் -
திருநாவுக்கரசரை கழுத்து வரை - ஆழ்குழிக்குள் நிறுத்திப் புதைத்தனர்..

மதயானையை அவிழ்த்து - அவர் மீது ஏவி விட்டனர்..

தடம் மாறியின் தலையை இடறித் தென்னங்குறும்பையைப் போல் நசுக்கட்டும்!.. - என்ற எண்ணம் அவர்களுக்கு..

ஆனால் - அவிழ்த்து விடப்பட்ட யானை - குழிக்குள் புதைக்கப்பட்டிருந்த நாவுக்கரசரைக் குனிந்து நோக்கியது..

பெருமானை நோக்கிய அளவில் அதனைப் பிடித்திருந்த மதம் அகன்று போனது.. ஐந்தறிவாகிய அந்த யானைக்கு நல்லறிவு பிறந்தது..

மதம் நீங்கிய மாதங்கம் ஐயனை வலம் வந்து வணங்கியது..

வேடிக்கை பார்க்க என கூடியிருந்த கூட்டத்துள் புகுந்து ஓடிப் போனது..

ஆனை ஓடிப் போனதும் அதனைப் பிடித்திருந்த மதம்
ஆங்கிருந்த ஆறறிவுடையோர்க்கு ஆனது...

இதெல்லாம் எம்மிடம் காட்டும் மாய வித்தைகளோ!.. இனி என்ன செய்யப் போகிறாய்?.. இதுவே உனக்கு இறுதி!..

என்று ஆர்ப்பரித்தவாறு - நாவுக்கரசரைக் கல் தூண் ஒன்றுடன் சங்கிலியால் இறுகப் பிணைத்தனர்..

தர.. தர.. - என்று தெருவில் இழுத்துச் சென்றனர்..
தரங்கக் கடலுள் தள்ளி விட்டு கை தட்டி மகிழ்ந்தனர்..

அந்தோ.. பரிதாபம்!..
அவர்களுடைய மகிழ்ச்சி அரை விநாடி கூட நிலைக்கவில்லை...

அதிர்ந்து போயினர்.. அச்சத்தால் உறைந்து போயினர்..


சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்த கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நம சிவாயவே!..

கடலுள் ஆழ வேண்டிய கருங்கல் தூண் -
அலைகளின் ஊடாக மிதந்து கொண்டிருந்தது..

இரும்புச் சங்கிலிகள் இற்றுத் தெறித்திருந்தன..

இறைவனைத் துதித்து திருப்பதிகம் பாடிய வண்ணம் -
இன்முகத்துடன் கரையேறினார் - திருநாவுக்கரசு சுவாமிகள்..

நடக்கும் கொடுமைகளைக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்த அடியார்கள் ஓடோடிச் சென்று ஐயனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்..

அவர் இவர் என்றெண்ணாத அருள் மனத்தினராக
அனைவரையும் வாரியணைத்துக் கொண்ட திருநாவுக்கரசர்
ஆங்கிருந்த திருப்பாதிரிப் புலியூர் ஆலயத்தினை நோக்கி நடந்தார்..

நடந்தவற்றை அறிந்த மகேந்திர பல்லவன் தான் செய்த மடமையை எண்ணி வருந்தினான்...

மீண்டும் தன்னிடம் வந்து திருநாவுக்கரசர் பற்றி முறையிட்டவர்களை தண்டித்தான்..

விரைந்தோடிச் சென்று - சிவப்பழமாகக் கனிந்திருக்கும் திருநாவுக்கரசரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான்...

என் பிழைதனைப் பொறுத்திடுக.. என்னையும் தாங்கள் ஒறுத்திடுக!..

உயர்ந்த மனத்தினரான திருநாவுக்கரசர்
அடிகளில் வீழ்ந்து கிடந்த அரசனை எழுப்பி -
ஐந்தெழுந்து மந்திரத்தை ஓதியவாறு
திருநீறளித்து ஆசி கூறினார்..

அந்த அளவில் அரசன் அகம் தெளிந்தான்..

சமணத்திலிருந்து கரையேறினான்

சிவமே தவம்!.. என்று மனம் தேறினான்..

அடைக்கப்பட்ட அனைத்து ஆலயங்களையும் திறப்பிக்கச் செய்தான்..
சிதைக்கப்பட்ட அனைத்து கோயில்களையும் சிறப்பிக்கச் செய்தான்..

சிவனடியார்களின் பஞ்சாட்சர முழக்கம் மண்டலம் எங்கும் ஒலித்தது...

தாம் இங்கேயே இருந்து எமக்கு அருள வேண்டும்!.. எனக் கேட்டுக் கொண்டான்..

இனி இயற்றவேண்டிய பணிகள் ஏராளம்.. வடமேரு தொட்டு தென்குமரி வரை எனது இல்லம்.. எல்லாரும் எமக்கு உற்றார்.. அவர் தமக்குப் பணி செய்து கிடப்பதே என்கடன்!..

என்று மொழிந்தவராக எழுந்து நடந்தார் - திருநாவுக்கரசர்..

அவரைத் தொடர்ந்தது - அடியார் பெருங்கூட்டம்..

அவர்களைக் கையமர்த்தினார் - திருநாவுக்கரசர்..


எவராயினும் எத்திறத்தார் ஆயினும் கங்கையை வார்சடையில் கரந்தார்க்கு அன்பராகில் - அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!..

கோத்திரமும் குலமும் கொண்டு ஏதும் செய்ய இயலாது.. எனவே எல்லாம் சிவன் என பணிந்து நிற்பீராக!..

துறவி நெஞ்சினராகிய தொண்டர்களே!.. நீவிர் அனைவரும் அவரவர் நிலையில் வழுவாது இருந்து வையகத்திற்குத் தொண்டு புரிக..  மதம் கொள்ளாது மனம் கொண்டு வளர்க!..

- என, மனதார வாழ்த்தினார் - திருநாவுக்கரசர்..

அன்பர்கள் ஆற்றாமையுடன் அவருக்கு விடை கொடுத்தனர்..

அந்த அளவில் திருநாவுக்கரசர் தனது திருப்பயணத்தைத் தொடங்கினார்..

அப்போது அவருடைய வயது - எழுபது..

தன்னந்தனியராக - தென்னகம் முழுதும் நடந்த திருநாவுக்கரசர் -
திருக்கயிலை மாமலையைத் தரிசிக்க விழைந்தார்..

மா மலையில் நடந்ததால் கால்கள் தேய்ந்தன..
நடை மறந்து தவழ்ந்தார் - ஆயினும் எலும்புகள் முறிந்தன..

தளரா மனத்தினராக - தரையோடு தரையாக ஊர்ந்தார்..

மானசரோருவ ஏரியை நெருங்கிய வேளையில் - நெஞ்சக் கூடு நைந்தது..

உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளரவில்லை..

அவருக்காக - திருக்கயிலை நாதன் இறங்கி வந்தான்..

பெரியீர்.. இந்தத் தடாகத்தில் மூழ்கி - கயிலாயக் காட்சியைக் காண்பீராக!..

என்று நவின்றான்..

அது கொண்டு - மானசரோருவ ஏரியில் மூழ்கிய நாவுக்கரசர் -
திருவையாற்றின் சூரிய புஷ்கரணியில் எழுந்தார்..

அதிர்ந்து நின்ற திருநாவுக்கரசருக்கு - 
அம்மையும் அப்பனும் - அனைத்து உயிர்களின் வடிவமாகி
சிவசக்தி ஐக்கியத் திருக்கோலத்தினைக் காட்டியருளினர்..

கண்டேன் அவர் திருப்பாதம்.. கண்டறியாதன கண்டேன்!..

என - கசிந்துருகி வணங்கி நின்றார் - திருநாவுக்கரசர்..

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்.. (0033)

எனும் திருக்குறளின்படி - சென்ற இடம் எங்கும் அறம் வளர்த்தார்..


அப்பர் பெருமான் அருளிய திருப்பதிகங்கள் நாலாயிரம் என்று ஒரு சொற்குறிப்பு உண்டு..

தஞ்சை பெரிய கோயிலில் திருநாவுக்கரசரின் திருமேனியை வடிவமைத்து வைத்து பேரானந்தம் கொண்டான் - மாமன்னன் ராஜராஜ சோழன்..

பெரிய கோயில் மகா மண்டபத்தின் வலப்புறத் தூண் ஒன்றில் அப்பர் பெருமானின் திருக்கோலத்தினைக் கண்டு இன்புறலாம்..

தஞ்சை கரந்தை ஸ்ரீ வசிஷ்டேஷ்வரர் திருக்கோயிலில் தென்புற கோட்டத்தில்
கோவணத்துடன் உழவாரம் தாங்கிய திருக்கோலத்தில் ஸ்வாமிகளைத் தரிசிக்கலாம்..

இந்தத் திருக்கோயில் - தஞ்சை பெரிய கோயிலுக்கு முந்தையது..
மகாராணி செம்பியன் மாதேவியாரின் திருப்பணி..

அப்போதே சமய ஆச்சார்யார்களுக்கு செய்யப்பெற்ற சிறப்பினை இதன் மூலம் உணரலாம்..

சிவாலயங்கள் பலவற்றிலும் - திருநாவுக்கரசர் ஜோதி வடிவாக ஈசனுடன் கலந்ததை குறிப்பால் உணர்த்தி அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தி வழிபட்டுவது மரபு..

இப்போதைய சூழ்நிலையில் அடியார் கூட்டமின்றி ஆலயங்கள் பலவற்றிலும் அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நிகழ்கின்றன..

நன்றி - Facebook
தஞ்சையை அடுத்த களிமேடு கிராமத்தில் மூன்று நாள் விழாவாக சித்திரை சதயம் அனுசரிக்கப்படும்..

ஓடும் பொன்னும் ஒருசேர நோக்கிய உத்தமர் - அப்பர் ஸ்வாமிகள்..

நாகையை அடுத்துள்ள திருப்புகலூர் திருத்தலத்தில் திருமடம் அமைத்துத் தங்கியிருந்தார்.. அங்கே நாளும் சிவத் தொண்டு ஆற்றினார்..

போதும்... இவ்வுலக வாழ்வு!.. - எனத் தோன்றியது அந்தப் புண்ணியருக்கு..

தம் விருப்பத்தைத் தெரிவித்து திருப்பதிகம் பாடினார்..

அந்த அளவில், பொழுது விடிவதற்கு முந்தைய பொழுதில்
எல்லாம் வல்ல எம்பெருமான் - தனது திருவடித் தாமரைகளில்
திருநாவுக்கரசரை இணைத்துக் கொண்டான்..

புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே!..

- என்ற புகழ்ந்தவாறு - சித்திரைச் சதய நாளில்,
ஈசனின் திருவடிகளில் இரண்டறக் கலந்தார்..

அப்போது அவருடைய வயது எண்பத்தொன்று..

அப்பர் ஸ்வாமிகளின் காலம் 575 - 656 என்றறியப்படுகின்றது..

துகளற்ற துறவு.. மாசற்ற தொண்டு.. 
மக்கள் பணி.. மனித நேயம்..
இவற்றின் திருவடிவம்
திருநாவுக்கரசு ஸ்வாமிகள்..

அப்பர் பெருமானுடைய திருவடிகளைத்
தலைமேற்கொள்வோம்..

ஆழிமிசைக் கல்மிதப்பில் 
அணைந்த பிரான் அடி போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***