நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 31, 2018

மங்கல மார்கழி 16

ஓம்  
தமிழமுதம் 

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தான்தன்
தகுதியால் வென்று விடல்.. (158)
*
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 16 




நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய 
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக் கதவம் தாள் திறவாய் 
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் 
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ 
நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.. 
***

எமக்கெல்லாம் நாயகனாக நிற்கும்
நந்தகோபனின் திருமாளிகையையும்

திருக்கொடியும் தோரணமுமாகிய
திருவாயிலையும்
காத்து நிற்கும் பேறு பெற்றவர்களே...

உங்களுக்கு
ஆய்ப்பாடியின் சிறுமியர்களாகிய
எங்களது அன்பு வணக்கங்கள்..

விடிந்தும் விடியாத
இந்தப் பொழுதில் இத்திருமாளிகையின்
திருவாயிலில் திரண்டு வந்திருக்கும்
எங்களைக் கண்டு ஆச்சர்யம் கொள்கிறீர்கள்..

மாயன் மணிவண்ணன் மரகதக் கண்ணன்
இன்றைக்கு இங்கே வந்து சேருமாறு
நேற்றே எங்களுக்கு உறுதியளித்தான்..

அதன்பொருட்டு
அவனிடமிருந்து பறையெனும் பேறு பெறுதற்கும்
தூயவனைத் துயிலெழுப்புதற்குமாக
நாங்கள் தூயோமாக வந்து நிற்கின்றோம்...

சொன்ன சொல்லை மாற்றாதவன்
சுந்தரரூபன்...



ஆகையினால்
எங்கள் மீது அன்பு கொண்டு
தாழ்களை நீக்கி மணிக் கதவுகளைத்
திறந்து விடுவீர்களாக!.. 
***
தித்திக்கும் திருப்பாசுரம்


ஸ்ரீ ஹரசாப விமோசனப்பெருமாள் - கண்டியூர்  

நாடிலும் நின்னடியே நாடுவேன் நாடோறும்
பாடிலும் நின்புகழே பாடுவன் சூடிலும்
பொன்னாழி ஏந்தினான் பொன்னடியே சூடுவேற்கு
என்னாகில் என்னே எனக்கு... (2169)
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்  
***  

இயற்கையின் சீதனம் 

பவளமல்லி 



தேவலோகத்திலிருந்து
பூமிக்கு வந்த மலர் இது...


ஸ்ரீ ஹரிபரந்தாமனுக்கு மட்டுமல்லாது
சிவ வழிபாட்டிற்கும் உரியது - பவளமல்லி...

இதனுடைய மற்றொரு பெயர் தான் பாரிஜாதம்..

சாஸ்த்ர விதிகளின்படி மண்ணில் உதிர்ந்து கிடக்கும்
பூக்களைக் கொண்டு வழிபாடு செய்தல் கூடாது..

ஆனால்,
பவளமல்லி மட்டுமே விதிவிலக்கு..

மரத்தின் கீழாக உதிர்ந்து கிடக்கும்
பவளமல்லிப் பூக்களைச் சேகரித்து பூஜை செய்யலாம்...

இந்த மரத்தின் வேர்களை நிழலில் உலர்த்தி
இடித்து பல் துலக்கலாம்...
ஈறு தொடர்பான பிரச்னைகள் தீரும்...

மேலும்,
மரத்தின் பட்டைகளைக் கொதிக்க வைத்த
நீரைக் குடிப்பதனால் சிறுநீரகம் சுத்தமடைகின்றது...
நீரிழிவு நோயும் மட்டுப்படுகின்றது..

எனினும், தக்க மருத்துவருடைய
மேற்பார்வை அவசியம்...
***

சிவ தரிசனம்
திருக்கண்டியூர் வீரட்டம்



இறைவன் - ஸ்ரீ ப்ரம்ம சிரக்கண்டேஸ்வரர் 
அம்பிகை - ஸ்ரீ மங்களாம்பிகை 

தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - நந்தி தீர்த்தம், குடமுருட்டி ஆறு

ஈசனைப் போல தமக்கும் ஐந்து முகம் என
ஆணவம் கொண்டு நின்ற 
பிரம்மனின் ஐந்தாவது சிரம்
துணிக்கப்பட்ட திருத்தலம்...

ஈசனது வீரட்டத் திருத்தலங்களுள்
முதலாவது தலம் இது..



ஈசனுக்கு வலப்புறமாக
தனிச்சந்நிதியில்
தேவி சரஸ்வதியுடன் நான்முகன்
புன்னகை ததும்ப வீற்றிருக்கும் அழகே அழகு...

மேற்கு நோக்கிய திருத்தலம்...

மாசி மாதத்தின் 13, 14, 15 ஆகிய
மூன்று நாட்களின் மாலை 5:30 மணியளவில்
கருவறைக்குள் சிவலிங்கத்தின் மீது
சூரிய ஒளி படர்வது கண்கொள்ளாக்காட்சி...

சில வருடங்களுக்கு முன்
அந்தவேளையில் தரிசனம் செய்துள்ளேன்..

அவ்வப்போது
நெடுஞ்சாலைத்துறையினர்
சாலையை உயர்த்துவதாலும்
மேற்கு நோக்கிய சாலையில்
மக்கள் ஆங்காங்கே
தடைகளை ஏற்படுத்துவதாலும்
சூரிய ஒளி கருவறைக்குள் படர்வதற்கு
இடையூறாகின்றது..

தஞ்சை - திருஐயாறு வழித்தடத்திலுள்ளது...

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து
பத்து நிமிடங்களுக்கு ஒரு பேருந்து இயங்குகின்றது..




ஸ்ரீ திருஞான சம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

திருந்து தொண்டர்கள் செப்புமின்மிகச்
செல்வன்றன்னது திறமெலாங்
கருந்தடங்கண்ணி னார்கள்தாந்தொழ
கண்டியூருறை வீரட்டன்
இருந்து நால்வரோடு ஆல்நிழல்லறம்
உரைத்ததும்மிகு வெம்மையார்
வருந்தவன்சிலை யாலம்மாமதில்
மூன்றுமாட்டிய வண்ணமே.. (3/38)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகிவிழத்
தேய்ந்தன பாவஞ் செறுக்ககில் லாநம்மைச் செற்றநங்கைக்
காய்ந்த பிரான்கண்டியூர் எம்பெருமானங்கம் ஆறினையும்
ஆய்ந்த பிரானல்ல வோஅடியேனை ஆட்கொண்டவனே.. (4/93) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை..
திருப்பாடல்கள் 11 - 12


மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.. 11

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.. 12

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..  
***

ஞாயிறு, டிசம்பர் 30, 2018

மங்கல மார்கழி 15

ஓம்  

தமிழமுதம் 

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனன்றோ ஆன்ற ஒழுக்கு.. (148)
*
அருளமுதம் 

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 15



எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன்வாய் அறிதும் 
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை 
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க 
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்... 
***

தேனாய் மொழியுடையாய்..
மீனாய் விழியுடையாய்!...

வித்தாரம் பேசுவதில் நாணா நாவுடையாய்..
கோவிந்தனைக் கூடுவதில் கோணா மனமுடையாய்!...

இன்னும் உறங்குகின்றனையே...
என்னவொரு விந்தை!...

(இதற்குப் பிறகுதான் அவள்
கண் மலர்கிறாள் போலும்!..)

சில்லென்று பொழுதும் இருக்கையில்
சில்.. வண்டு போல
ஏனடி துளைக்கின்றீர்கள்!..
இதோ.. எழுந்து வருகிறேன்...

ஆகா... மொழி மாற்றிப் பேசுவதில் வல்லவள் நீ!...
உன்னைப் பற்றி அறிய மாட்டோமா நாங்கள்...

ஓ... நீங்கள் சொல்வது போல
நான் வல்லவளாகவே இருந்து விட்டுப் போகிறேன்...

சரி.. சரி... உனக்கு என்னதான் வேண்டும்?..
விரைவாய் எழுந்து வா!..

எல்லாரும் வந்து விட்டார்களா?..
யாரும் வரவில்லை எனில் அவர்கள் வரும் வரைக்கும் 
சற்று உறங்கிக் கொள்கிறேனே!...

அடிக் கள்ளி.. நீ மட்டும் தான் வரவேண்டும்...
ஐயம் உண்டெனில் எழுந்து வந்து
எண்ணிப் பார்த்துக் கொள்!...
அப்படியாவது வருகிறாளா.. பார்ப்போம்!...

நான் அவசியம் வரத்தான் வேண்டுமா!?..
இன்னும் கொஞ்சம் தூக்கம் இருக்கிறதே தோழிகாள்!... 

எல்லே.. இளங்கிளியே!...
என்ன பேச்சு பேசுகிறாய் நீ!..
நா படைத்த பயனை நாம் அடைய வேண்டாமா?...

நாரணனைப் பாட வேண்டாமா?..
அவனது நலந்தனைக் கூறவேண்டாமா?..

வெறி கொண்டு வந்த வேழத்தைக் கொன்றவன் அவன்..
மதிகெட்ட மாற்றாரின் மாற்றழித்து வென்றவன் அவன்..

வா.. எழுந்து வா!..  
***

தித்திக்கும் திருப்பாசுரம்




வரைகுடைதோல் காம்பாக ஆநிரைகாத்து ஆயர்
நிரைவிடையேழ் செற்றவாறென்னே உரவுடைய
நீராழியுள்கிடந்து நேரா நிசாசரர் மேல்
பேராழி கொண்ட பிரான்.. (2164)
-: ஸ்ரீ பொய்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்  
***  

இயற்கையின் சீதனம் 

பன்னீர் பூ


இதுதான் மர மல்லி எனப்படுவது..

தூய வெண்ணிறம் அல்லது 
அதனுடன் இள மஞ்சள் கலந்த
நிறமுடைய அழகான பூக்கள்..

நறுமணம் மிக்க மலர்களுள்
இதுவும் ஒன்று..

வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு,
பித்த கோளாறுகள்
இவற்றுக்கெல்லாம்
பன்னீர் இலைகள், மரப்பட்டை
உகந்தவை என்கிறார

மருத்துவ குணம் மிக்கது என்றாலும் 
தகுந்த மருத்துவரின் மேற்பார்வை அவசியம்...

பன்னீர் மரத்தின் பட்டைகளை நிழலில் உலர்த்தி
இடித்து தணலில் தூபம் இடுவது நல்லது..

நேர்மறை எண்ணங்களை விளைப்பதாக
இம்மலர் உணரப்படுகின்றது...



திருச்சோற்றுத்துறையின்
தலவிருட்சம் பன்னீர்..

இருப்பினும்
பற்பல திருக்கோயில்களிலும்
பன்னீர் மரத்தைக் காணலாம்...

இம்மலரைத் தலையில் சூடிக்
கொள்வதில்லை.. ஆனாலும்
மனதை மயக்கும் மணமுடையது...

ஸ்ரீ ஆதிசங்கரர்
திருச்செந்தூரில் வழிபட்டபோது
அவருடைய வயிற்று வலி தீர்வதற்கு
பன்னீர் இலையில் வைத்து
திருச்செந்தில் நாதன்
விபூதி வழங்கினான் என்பது ஐதீகம்..
***

சிவ தரிசனம்
திருச்சோற்றுத்துறை



இறைவன் - ஸ்ரீ சோற்றுத்துறை நாதன்
அம்பிகை - ஸ்ரீ அன்னபூரணி

தல விருட்சம் - பன்னீர் மரம்
தீர்த்தம் - காவிரி

திருமூலத்தானத்துக்குத் தென்புறம்
கிழக்கு முகமாக தனிக்கோயிலில்
அம்பிகை அருள் பாலிக்கிறாள்...

வறுமையுற்ற நிலையிலும்

அறம் செய்வதற்கு விரும்பிய
அடியார் ஒருவருக்கு
அம்மையப்பன்
அட்சய பாத்திரம் வழங்கி
அருள் புரிந்த திருத்தலம்...

அக்ஷய திரிதியை அன்று வழிபட்டுதற்குரிய

திருத்தலம்..

திரு ஐயாற்றின்

சப்தஸ்தானத் திருத்தலங்களுள் ஒன்று...



காவிரியின் தென்கரையில்
அமைந்திருக்கும் திருத்தலம்...

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து

கண்டியூர் வழியாக வீரமாங்குடி சென்றடைந்தால்
அங்கே வரப்ரசாதியாக
அன்னதானப் பிரியை அன்னை மகாமாரியம்மன்
திருக்கோயில் கொண்டிருக்கின்றாள்..

அவளைத் தரிசித்து விட்டு
அங்கிருந்து ஒன்றரை கி.மீ., தொலைவில்
திருச்சோற்றுத்துறைக்குச் செல்லலாம்.....

நல்ல சாலை உள்ளது.. ஆனாலும்
ஏன் பேருந்து செல்வதில்லை?.. என்பது புதிர்..
**

ஸ்ரீ திருஞான சம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு


பாலும் நெய்யும் தயிரும் பயின்றாடித்
தோலும் நூலும் துதைந்த மார்பர்
மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே.. (1/28)

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

மூத்தவனாய் உலகுக்கு முந்தி னானே
முறைமையால் எல்லாம் படைக்கின்றானே
ஏத்தவனாய் ஏழுலகும் ஆயினானே
இன்பனாய்த் துன்பங் களைகின் றானே
காத்தவனாய் எல்லாந்தான் காண்கின் றானே
கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத்
தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே
திகழொளியே சிவனே உன்அபயம் நானே.. (6/44)

ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அருளிய
திருப்பாட்டு

கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியும்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே.. (7/94) 
*

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை..
திருப்பாடல்கள் 09 - 10



முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏலோர் எம்பாவாய்... 9

பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன்
கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதவரைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்... 10

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..  
***