நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 12, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 18

ஐயப்பா சரணம்

காணக் கண்கோடி வேண்டும்!.. என, அனைவரும் தவித்தனர்...

காரணம் -
ஆயிரங்கோடி சூரியனைப் போல் - மணிகண்டன்..

கண்டு தரிசித்தவர் - தம் கடுவினைகள் எல்லாம் -
அனல் பட்ட மெழுகாய் அக்கணமே அழிந்து போயின...


ஐயனே சரணம்!.. அப்பனே சரணம்!..
- என, அனைவரும் விழுந்து வணங்கினர்...

தேவதேவனே!.. எம் குலம் காக்க வந்த கோமகனே!..
எம்மையும் ஒரு பொருட்டாக ஆண்டு கொள்ளுக!..
- என, நெக்குருகி நின்றனர்.

தேவர்கள் பூமழை பொழிந்தனர்..


யாம் பெற்ற பேறு - வேறு யார் பெறக்கூடும்!?.. - என்று,
பந்தளத்தின் ராஜ தம்பதியினர் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்...

மன்னரின் கேள்விக்கு விடையாக -
மணிகண்டப் பெருமான் திருவாய் மலர்ந்தான்.

யான் ஹரிஹரசுதன்...
தங்களது பூர்வ ஜன்ம புண்ணியத்தினால்
மண்ணுலகில்மறு அவதாரம் கொண்டு
பந்தளத்தின் அரண்மனையில் மகவாக வளர்ந்தோம்...
இங்கே இதுவரையில் நிகழ்ந்ததெல்லாம்
ஈசனின் அருளாணையின் படியே நிகழ்ந்தன...
எனவே எவ்விதத்திலும் கலக்கம் கொள்ள வேண்டாம்!..

ஐயனே!.. பிள்ளைப் பாசம் எங்கள் நெஞ்சை அழுத்துகின்றது...
தாங்கள் எம்முடன் வளர்ந்த நாட்களில் வாழ்ந்த நாட்களில் - 
தங்களுக்கு நாங்கள் ஏதும் பிழை புரிந்திருந்தால் -
பெருங்கருணையுடன் அவற்றைப் பொறுத்தருள வேண்டும்...
இந்நாட்டை தங்களின் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றேன்...
அவற்றை ஏற்று  எம்மை வழி நடத்தி - அருள் புரிக!..

மன்னர் வேண்டிக் கொண்டார்...

அப்பனே!.. மணிகண்டா!.. எல்லாம் அறிந்திருந்தும்
எந்தன் பிழையைப் பொறுத்தருளினை...
என் வஞ்சனை தொலைக்க வேண்டி
வன்புலி வாகனனாக வந்தனை!..

உன் மேல் உற்ற அன்பினால் எப்படியெல்லாமோ
உன்னை அழகு செய்து பார்த்திருந்தேன்...
ஏதோ ஒரு மாயை இன்னலில் ஆழ்த்தியது...
அதையும் பொறுத்தருளினை...

இன்னும் ஒரு வரமாக - நீ மணிமுடி தரித்து
செங்கோல் ஏந்தி அரசு கட்டில் அமர வேண்டும்...
அதனைக் கண்ணாரக் கண்டு நான் இன்புற வேண்டும்!..

மனமுருகி நின்றாள் தாய்...

தாயே!.. தந்தையே!... உங்களது பாசத்தினால்
நான் கட்டுண்டு இருக்கின்றேன்...
ஆயினும் எனக்கென விதிக்கப்பட்டது ஒன்று உண்டு!...

சொல்லுக.. ஐயனே!.. அதை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளோம்!..

அங்ஙனமாயின் - தாங்கள் எமக்கு சூட்டுவதாக இருந்த
மணிமுடியினை தம்பி ராஜராஜனுக்கே சூட்டுங்கள்!..

என்ன!?.. மூத்தவனாக முன்னவனாக
தாம் இருக்கையில் - இளையவனுக்கா?..

ஸ்ரீ ஹரிஹர மூர்த்திகளின் புத்ரனாகிய நான் -
கலியின் கொடுமைகளில் இருந்து
மக்களைக் காத்தருளவே - அவதாரம் செய்தேன்...
மணிமுடி தரித்து - மண்ணை ஆள்வது  எனது நோக்கம் அல்ல!...
எனது பணி நிறைவடைந்ததாக உணர்கின்றேன்!..
தாங்கள் அனைவரும் எனக்கு விடை கொடுக்க வேண்டும்!..

மன்னருக்கும் அரசிக்கும் ஆற்றாமை தாளவில்லை...

என் ஐயனே!.. என் அப்பனே!..
உனக்காக   திருஆபரணங்களைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தேனே...
அவற்றை உனக்கு சூட்டி அழகு பார்க்க இனி என்றைக்கு இயலும்!?..

தாய் தந்தையராகிய தங்களது விருப்பத்தினைப்
பூர்த்தி செய்ய வேண்டியது எனது கடமை...
இதோ.. இந்த சரம் மதங்க வனத்திற்குள்
எந்த இடத்தில் பதிந்திருக்கின்றதோ  -
அந்த இடத்தில் பதினெட்டுத் திருப்படிகளுடன்
கூடிய  திருக்கோயிலை எனக்காக எழுப்புக!..

ஸ்ரீ சபரி பீடம் எனப்படும் -
அந்தத் திருக்கோயிலில்  எழுந்தருளும் திருமேனியில்
மகர சங்கராந்தி அன்று திருஆபரணங்களைச் சூட்டி மகிழ்க!...

அந்த வேளையில்
காந்த மலையின் பொன்னம்பல மேட்டில்
ஜோதி வடிவாகத் தோன்றியருள்வேன்!..
ஏக சிந்தையுடன் என்னை வழிபடும் அடியவர்களுக்கு
எல்லா நன்மைகளையும் தந்து காத்தருள்வேன்!..

- என்று மணிகண்டப் பெருமான் திருவாய் மலர்ந்தருளினான்.

ஐயனே!.. அந்தத் திருத்தலத்தை நாங்கள் எவ்விதம் அறிவது?..

பட்சி ராஜனாகிய கருடன் வழிகாட்டுவான்..
திருமேனியினை ஸ்ரீபரசுராமர் பிரதிஷ்டை செய்வார்...
ஸ்ரீ அகத்திய மகரிஷி பூஜா தர்மங்களை விளக்குவார்!..

- என்று மொழிந்த மணிகண்டன் - கோதண்டத்தில் சரம் தொடுத்து எய்தான்... அது காற்றைக் கிழித்துக் கொண்டு விண்ணில் பாய்ந்து மறைந்தது...


அதுவரையிலும் -
பொன்னாபரணங்களுடனும் பட்டுப் பீதாம்பரத்துடனும்
விளங்கிய ஐயன் அனைத்தையும் துறந்தவனாக -
மரவுரி தரித்தவனாக ருத்ராட்ச துளசி மாலைகளுடன்
திருக்கோலம் காட்டி அருளினான்!..

மணிகண்டனின் துறவுக் கோலத்தினைக்
காண்பதற்கு இயலாமல் தவித்தனர் - அங்கிருந்தோர்... 

ஆனாலும் - மனதைத் திடப்படுத்திக் கொண்ட மன்னரும்
மற்றவர்களும் பெருமானை மனதாரத் துதித்து வணங்கினர்...

அங்கே சர்வ மங்களமும் நிறைந்திருந்தது...


அப்போது,  மன்னன் ராஜசேகர பாண்டியனும் மற்றவரும்
தமக்கு நல்லுபதேசம் செய்தருளும்படி -
தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொண்டனர்...

நம்மை வாழ வைக்கும் பூமிக்கும்
இந்தப் பூமியில் உள்ள உயிர்களுக்கும்
எவ்விதத்திலும் தீங்கு செய்யக்கூடாது... 

எதைச் செய்தாலும்  இயல்பிலிருந்து மாறாமல்
தனக்கு நன்மையானவைகளை விருப்புடன்
செய்து கொள்வது போல - இந்த சமுதாயத்திற்கும்
விருப்புடன் செய்வதே மேன்மைக்கு வழி வகுக்கும்...

ஈசனை வாயார வாழ்த்திப் போற்றுவதோடு
அனைவருக்கும் இனியதாக சந்தோஷமாகப் பேசவேண்டும்..

நம்முடைய மனம் கொண்டு ஈசனை தியானித்து -
தனக்கும் தன் குடும்பத்திற்கும் நன்மைகளைக் கேட்கும்போது -
பரந்து விரிந்த இந்தப் பூவுலகிலுள்ள அனைத்தும்,
அனைவரும் நன்றாக வாழவேண்டும்!.. - என்று
உலக நன்மைகளுக்காகவும் பிரார்த்திக்க வேண்டும்...

இறைவனை வணங்குவதோடு மட்டுமல்லாமல் -
அவனை மனதில் நிறுத்தி - செய்யும் கார்யங்களைச்
சிறப்பாக செய்ய வேண்டும்...

இறைவனால் விளங்கும் இந்த பூமியில்
யாவருக்கும் பயன்படுமாறு பொதுச் சேவைகளை
இயன்றவரை மனதாரச் செய்தல் வேண்டும்...

இப்படி வாழும் வாழ்க்கையில் , தனது வியர்வையினால்
சேர்த்த செல்வத்தைத் தனக்கும் தனது குடும்பத்திற்கும் - என, 
பத்திரப்படுத்துவது நியாயம் தான்...

எனினும், அத்துடன்  நில்லாமல் -
பரோபகாரமாக  அற்றார்க்கும் அலந்தார்க்கும்
எவ்வித பிரதி உபகாரமும் எதிர்பாராமல் -
தானமும் தர்மமும் செய்ய வேண்டும்...

ஸ்வதர்மப்படி அவரவருக்கு இயன்றவரை,
சகல ஜீவராசிகளுக்கும் நலம் விளையும்படி
எளிய செயல்களைச் செய்வதே பரோபகாரம்...
பரோபகாரம் என்றால் - பரன் ஆகிய
பரம் பொருளுக்கே செய்யும் நற்காரியம்...

இத்தகைய அருஞ்செயல்களை  -
தன் விருப்பத்தால் செய்பவர் தனி ஒருவர்  என்றாலும்
ஒத்த மனம் உடைய பலர்  என்றாலும் அத்தகைய
அருளாளர்கள் இருக்கும் இடம் புனிதமாகின்றது...

விருப்பத்துடன் தெய்வத்திற்கு
தொண்டு செய்வதைப் போலவே -
திக்கற்ற எளியோருக்கும் செய்ய வேண்டும்...
அப்படிச் செய்வதும் இறைவழிபாடாகவே ஆகின்றது...

தெய்வத்திற்கும் தேசத்திற்குமாக வாழ்வதே வாழ்க்கை...
இப்படி வாழ்வதே தவத்திலெல்லாம் சிறந்த தவம்...

இவ்வுலக வாழ்க்கையை -
அது இன்பமாக இருந்தாலும் துன்பமாக இருந்தாலும்
எல்லாம் ஈஸ்வரார்ப்பணம்!.. - என்று வாழ்பவருடைய
நெஞ்சகத்தில் அருட்பெருஞ் சோதியாக - இறைவன் ஒளிர்வான்...

தன்னை முன் நிறுத்திக் கொள்ளாமல் -
தான் எனும் அகங்காரத்தைத் துறந்து - யார் ஒருவர் பரோபகாரமாக தர்மங்களைச் செய்கின்றாரோ  அவர்தம் நெஞ்சம் கோயில் ஆகின்றது..
அங்கே அழைக்காமலேயே தெய்வம் வந்து கொலு இருக்கும்...

எல்லா உயிர்களையும் ஈஸ்வர ஸ்வரூபமாகப் பாவித்து
திரிகரணமாகிய  மனம் மொழி மெய் இவற்றால் நேர்மையுடன்
வாழ்ந்து சாயுஜ்ய நிலையை  அடைய வேண்டும்...

இதைத்தான் ஞானிகளும் மகான்களும் சித்தர்களும் உத்தமர்களும்
ஆகிய - நம் முன்னோர்கள் நமக்கு உரைத்துச் சென்றனர்...
அதையே பின்பற்றி மேல்நிலையை அடைவீர்களாக!..

- என்று கலியுக வரதனாகிய ஸ்ரீமணிகண்டன் ஆசீர்வதித்தான்...


ஐயா.. சரணம்!.. அப்பா சரணம்!..
ஐயப்பா சரணம்!..

என்று, முழங்கியவாறு  -
அனைவரும் மணிகண்டனை வலம் செய்து வணங்கினர்...

இதுவே - எனது சரண மந்திரம் ஆகட்டும்!..

இருவினையாகிய இருமுடி தனைத் தலையில் சுமந்து -
பெருவழி எனப்படும் அடர்ந்த காட்டிலும் மேட்டிலும் நடந்து,
சபரிமலை உச்சியில் - ஐம்புலன்கள், அஷ்ட ராகங்கள்,
மூன்று குணங்கள் - எனும் பதினாறுடன்

அஞ்ஞானம் , ஞானம் எனும் இரண்டும் சேர்ந்ததாகத் திகழும்
பதினெட்டு படிகளைக் கடந்து வரும் எவர்க்கும் -

நீ எதை நாடி வந்தாயோ.. அதுவாகவே நீ உள்ளாய்!..
என்பதை உணர்த்துவேன்!..
அனைவருக்கும் மங்கலம் உண்டாகட்டும்!..


அந்த அளவில் ஜோதி மயமாகி
எங்கும் நிறைந்தவன் ஆனான் - மணிகண்டன்...   

ஐயா சரணம்!.. அப்பா சரணம்!..  
ஐயப்பா சரணம்!..

சுவாமியே சரணம் ஐயப்பா!..
சுவாமியே சரணம் ஐயப்பா!..

சுவாமியே...
சரணம் ஐயப்பா!..
ஃஃஃ 

6 கருத்துகள்:

  1. மிக அருமையான எழுத்து. ஹரிஹர சுதன் வாக்காகத் தாங்கள் சொன்னவை அனைத்தையும் மக்கள் ஏற்று நடக்கப் பிரார்த்தனைகள். ஸ்வாமியே சரணம் ஐயப்பா! திருவானைக்காவில் கும்பாபிஷேஹத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு வரத் தாமதம் ஆனது. அவ்வளவாகக் கூட்டம் இல்லை! சுமாரான கூட்டம் தான். பொதிகை ஒளிபரப்பும் என நினைத்துக் கடைசியில் தினத்தந்தி தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பு!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையாக, நுணுக்கமாகக் கூறிக்கொண்டே எங்களையும் உங்களுடன் அழைத்துச்சென்ற விதம் போற்றத்தக்கது. ஸ்வாமியே சரணம் ஐயப்பா.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஜி பரவசமான தொடர் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மணிகண்டனின் நல்லுரைகள் ​மிக அருமை. ​

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான தொடர் பதிவு.
    ஐயப்பன் புகழை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
    அவர் சொன்னவை அனைத்து கடைபிடிக்கபட்டால் வாழ்வில் ஆனந்தம் ஆனந்தன் தான்.
    நேற்று தம்பி மகள் வளைகாப்பு விழாவிற்கு போய் விட்டதால் வரமுடியவில்லை இங்கு.
    சபரிநாதன் அனைவர் வாழ்விலும் மங்கலங்களை தரட்டும்.
    வாழ்த்துக்கள் உங்களுக்கு.
    சுவாமியே சரணம் ஐயப்பா.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..