நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 28, 2023

செவ்வாய்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று - மாசி 16
  செவ்வாய்க்கிழமை

அம்மாவுக்கு எழுதி நாளாயிற்று 
என்று இன்றொரு பாட்டு..

Fb ல் கிடைத்த
காணொளிக்கு
பின்னணி இசை
சேர்த்துள்ளேன்..

சேலம் மாநகரிலுள்ள
சமயபுரம
 மாரியம்மன் சந்நிதி இது..


செவ்வாயில் சிரிப்பழகி
சேர்ந்த சிவப்பு முகத்தழகி
பூவாகிப் புவியாகி
பூத்திருக்கும் வடிவழகி..
தாயாகித் தயவாகி
தாங்கி நிற்கும் பேரழகி
சங்கடங்கள் தீர்த்தருளும்
சமயபுரத் தாயழகி..

நில்லாத உலகத்திலே 
நின்று அருளும் முத்தழகி..
காணாத கடுவினையை
கடுத்தெறியும் பொட்டழகி
பொல்லாத பிணி நோயை
புறத்தெரிக்கும் பொன்னழகி
அல்லாத மானுடர்க்கும்
அறம் காட்டும் சொல்லழகி..


அம்மா என்றழைத்தாலே
ஆடிவரும் அன்னமம்மா
அஞ்சாதே என் மகனே
என்றுரைக்கும் வண்ணமம்மா
நோயாகி நலிந்தாலும்
நலங்கூட்டும் அருந்துணையே
ஆறாத துயரினிலும்
அரவணைக்க வருந்துணையே..

சொல்லாகப் பொருளாக
சூட்சுமங்கள் அருள்வாயே
கல்லாத கடையனுக்கும்
வழித்துணையாய் வருவாயே..
நன்றாக நடையெனக்கு
என்தாயே தருவாயே
பொல்லாத நாவினிலும்
பொன்னாக அமர்வாயே!..


பொன்னாகப் பூவாகப்
 பொலிந்தாலும் மலர்ந்தாலும்
 கண்ணாகக் கருத்தாகக்
காத்தருள வேணுமம்மா..
கை நழுவி சோராமல்
கடுவினையில் சேராமல்
கண்ணெடுத்து முகம்பார்க்க
முன்னெடுத்து வாருமம்மா..

வந்தார்கள் வளர்ந்தார்கள்
வாழ்ந்தார்கள் இருந்தார்கள்
வாழாமல் வாழ்ந்தவர்கள்
வல்வினையில் வீழ்ந்தார்கள்..
சொன்னார்கள் பெரியோர்கள்
சோதி முத்து மாரி உன்னை
சொன்னபடி கேட்டு நானும்
சொல்லி விட்டேன் தேவி உன்னை..


காலமெல்லாம் கை தொழவே
கண்ணிரண்டில் ஒளி கூட்டு
காலமெல்லாம் கால் நடக்க
கனிவுடனே வழி காட்டு..
நேரமெல்லாம்
நெஞ்சத்திலே நினைத்திட
 அருள் கூட்டு
நிம்மதியில் எல்லாரும்
வாழ்ந்திடவே நலங்கூட்டு!..

ஆதரிக்க வேணுமென்று
அடியேனும் பாட்டெடுத்தேன்
அம்மா உன் வாசலிலே
அணி விளக்கு ஏற்றி வைத்தேன்..
ஏற்றுகின்ற விளக்கு எல்லாம்
என்குறையைக் கூறாதோ
போற்றுகின்ற வார்த்தை எல்லாம்
பூக்களெனச் சேராதோ..


மனைவாழ மங்கலங்கள் 
மகிழ்வாகித் தந்தவளே..
தாயாகித் தமிழாகித்
தாங்கி நலம் புரிபவளே..
கடையவன் என்று சொல்லி
கை விடுத்துப் போகாமல்
கண் பார்த்து குறை தீர்த்து
நலம் சேர்க்க வேணுமம்மா!..

ஊரெல்லாம் உன்பாட்டு
ஓங்கிடவே வேணுமம்மா..
உயிரோடு உயிராக
உறவாட வேணுமம்மா..
கண்கலங்கும் வேளையிலே
காத்திடவும் வேணுமம்மா
கைகூப்பி உன்வாசல்
கும்பிடவும் வேணுமம்மா!..
***

ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
***

திங்கள், பிப்ரவரி 27, 2023

திருக்கோழம்பம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 15
   திங்கட்கிழமை


அம்பிகை பசுவாகி காவிரியின் தென்கரையில் உலவிய இடங்களுள் இதுவும் ஒன்று.. 

பசு தனது - மடி கொண்ட பாலை சிவலிங்கத்தின் மீது சுரந்து வழிபட்ட தலம்.. 

ஈசனின் திருமுடியைப் பார்த்து விட்டதாக தாழம்பூவினை சாட்சியாகக் காட்டிப்  பொய்யுரைத்த பிரம்மன் வழிபட்டு பழி தீர்ந்தது இத்தலத்தில்..

இந்திர சாபத்தினால்
குயிலாகிய சந்தன் என்ற வித்யாதரன் வழிபட்டு சாப விமோசனம் எய்தியதும் இத்தலத்தில் தான்..


திருக்கோழம்பம்
(குளம்பியம்)

இறைவன் - 
ஸ்ரீ கோகிலேஸ்வரர் 

அம்பிகை - 
ஸ்ரீ சௌந்தர்ய நாயகி

தீர்த்தம் பிரம்ம திருத்தமான
தலவிருட்சம் வில்வம்

அது ஒரு கல்பம்..

அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்த மேகங்களை வேடிக்கை பார்த்தபடி - ஆனந்தமான பொழுது என்று நினைத்தவாறே - அமர லோகத்தின் உப்பரிகையில் நின்றிருந்தான்
தேவேந்திரன்..

அன்றைய பொழுது நல்லபடியாகச்
செல்வதாகவே தோன்றியது - அவனுக்கு...

அந்த வேளையில் மேகக் கூட்டங்களின்
ஊடாக வித்யாதரன் ஒருவன் தென்பட்டான்..

அவன் பெயர் சந்தன்..
 
உண்மையில் சந்தனுக்குத் தான் நேரம் சரியாக இல்லை..

இவனும் அவனைப் பார்த்தான்..  அவனும் இவனைப் பார்த்தான்.. இருவரையும் ஒருசேரப் பார்த்துக் கொண்டிருந்தான் 
இன்னொருவன்.. யாரென்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை..

தன்னைக் கண்டதும் வித்யாதரன் ஓடி வந்து
வணங்கி பணிந்து நிற்பான் -  என்று இறுமாந்திருந்த
இந்திரன் அதிர்ந்து போனான்...

வித்யாதரன் இந்திரனைக் கண்டு கொள்ளவேயில்லை..

" நீ யாராக இருந்தால் எனக்கென்ன?.. " - என்ற மனோபாவம் அவனுக்கு!..

' இவனை இப்படியே விட்டு விடக்கூடாது!.. ' -  என்று  நினைத்த இந்திரன் -
வித்யாதரனை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தான்...

" நீ என்னைக் கண்டும் காணாத மாதிரி சென்றது எதற்கு?.. "

இந்திரனிடமிருந்து
ஆத்திரத்துடன் கேள்வி பிறந்தது..

" நீர் என்னைக் கண்டீர்.. நான் உம்மைக் கண்டேன்!.. அது போதாதா!.. "
வித்யாதரனிடமிருந்து பதில் வந்தது...

" நெஞ்சழுத்தம் உனக்கு!.. "

" தேவேந்திரனாகிய தாங்கள் மேகக் கூட்டத்தின் ஊடாக தேவகன்னியருடன்
விளையாடுவதாக நினைத்தேன்.. ஒதுங்கிச் சென்று விட்டேன்!.. "

" மேகத்துடன் நின்றதன்றி
மோகத்துடன் நின்றேனில்லை!.. "

" எனது மனதில் தோன்றியதைச் சொன்னேன்!.. தங்களது இயல்பு அவ்வாறாயிற்றே!.. " 

" நல்ல பொழுதென்று நினைத்திருந்தேன்..
அவ்வாறு அல்ல என்று நிரூபித்து விட்டது உன் பேச்சு!.. விபரீதத்தை விளைத்து விட்டாய் வித்யாதரா!.. அதன் விளைவு என்ன என்று தெரியுமா?.. பொறுப்பற்ற உனது பேச்சினால் வெறுப்புற்றது என் மனம்!.. " - 

தேவேந்திரன் குமுறினான்..

" எல்லாருக்கும் விருப்புற்றது குயில்.. ஆனால், அதுவோ பொறுப்பற்றது.. நீ அதுவாகக் கடவாய்!.. அங்குமிங்கும் அலைந்து திரிவாய்!.. "

சாபத்தினைக் கேட்டு
அதிர்ந்து நின்றான் வித்யாதரன்..

அச்சமயத்தில் அவ்வழியாக வந்த முனிவர்கள் விஷயத்தை உணர்ந்து
வித்யாதரனை ஆறுதல் படுத்தினர்..

" அஞ்ச வேண்டாம்.. காவிரிக்குத் தென்கரையில்
பராசக்தி பசு வடிவம் கொண்டு ஈசனை வழிபட்ட திருத்தலம் ஒன்றுண்டு.. அங்கே சென்று சிவ வழிபாடு செய்வாக.. அனைத்தும் நலமாகும்!.. " 

வித்யாதரன் மனம் கலங்கினாலும் ஆறுதல் கொண்டான்..

ஆருயிர் காதலிக்கு என்ன பதில் சொல்வதென்று
தெரியவில்லை..

" சிவனே..  என்று சென்று கொண்டிருந்த என்னை வம்புக்கு இழுத்து சாபம் கொடுத்தனை.. மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி.. ஆனால், "

" தேவேந்திரா!.. 
நான் சிவபூஜை செய்யும் தலத்திற்கு நீயும் வந்து
கும்பிட்டு எழுந்து குறையிரந்து நிற்பாய்!..
இதனை நினைவில் வைத்துக் கொள்வாயாக!.. "

மறுமொழி உரைத்த
வித்யாதரன் குயில் வடிவானான்.. அங்கிருந்து பறந்து விட்டான்..

குயிலாக மாறிய வித்யாதரன் வழிபட்டதனால்
குயிலேஸ்வரர் என்றும் கோகிலேஸ்வரர் என்றும்
எம்பெருமானுக்குத் திருப்பெயர் வழங்கலாயிற்று..

அம்பாள் பசுவாகி வழிபட்ட திருத்தலங்களுள்
திருக்கோழம்பமும் ஒன்று எனக் கண்டோம்..

எம்பெருமானின் ஆணைப்படி
பூமிக்கு வந்த பசு  அங்கு இங்கு என்று மேய்ந்து கொண்டிருந்த வேளையில் புற்று ஒன்றினைக் கண்டு உள்ளுணர்வினால் உந்தப்பட்டு தினமும் அதில் பாலைப் பொழிந்தது.. 

ஒருநாள் புற்றுக்குள் பாலைப் பொழிந்து கொண்டிருந்த போது பூமியினுள்ளிருந்து சுயம்புவாக சிவலிங்கம் வெளிப்பட்டது.. மேலைத் தொடர்பு இருந்த போதிலும்  பசு பதற்றமடைந்து
துள்ளியது.. அப்போது பசுவின் குளம்பு சிவலிங்கத்தின் மீது பட்டதால் தழும்பு ஏற்பட்டது..

சிவலிங்கத்தின் மேல்
பசுவின் குளம்பு தெரிவதாகச் சொல்கின்றனர்...

பின்னாளில்,
அகலிகையின் பாவத்தைக் கொட்டிக் கொண்ட இந்திரன்
கௌதம முனிவரது கடும் சாபத்தினால் காணச் சகிக்காத கோலத்துடன்
இத்தலத்திற்கு வந்தான்.. 

கோகிலேஸ்வரர் திருமுன்பு கண்ணீர் விட்டுக் கதறி அநுக்கிரகம் பெற்றதாகத் 
தல புராணம்..


ஞானசம்பந்தப் பெருமானும் அப்பர் ஸ்வாமிகளும் திருப்பதிகம் அருளியுள்ளனர்..

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னால் -
செம்பியன் மாதேவியார் அவர்களால் எடுப்பிக்கப்பட்ட திருக்கோயில்..

அன்றைக்கு ,
பொன்னும் பொருளும் நிலமும் புலமுமாக - எத்தனை எத்தனை கோலாகலமாக
இருந்திருக்கும் - இந்தக் கோயில்!.. 

ஆனால் - இன்றைக்கு இங்கே
ஒரு கால பூஜை மட்டுமே நிகழ்வதாகத் தெரிகின்றது..

கோழம்பம் எனும் இத்தலம் - இன்றைய நாளில்
குழம்பியம், கொளம்பியம் என்றெல்லாம்  மருவி விட்டது..

கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநீலக்குடியில் இருந்து 2 கி.மீ.
திருவாவடுதுறையில் இருந்து 2 கி.மீ..

கும்பகோணம் - மயிலாடுதுறை இரயில் தடத்தில் நரசிங்கன் பேட்டை நிலையத்திலிருந்து 5 கி.மீ.

சோழ நாட்டின் காவிரி தென்கரையில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் முப்பத்தைந்தாவது சிவத்தலமாக விளங்குகின்ற -
திருக்கோழம்பத்தின் அருகில் உள்ள சிவாலயங்கள்..

திருநீலக்குடி (2 கிமீ) 
திருவாவடுதுறை (2 கிமீ) 
தென்குரங்காடுதுறை
(ஆடுதுறை - 3 கிமீ) 
திருவைகல் மாடக் கோயில் 
(4 கிமீ) 
தேரழுந்தூர் (5 கிமீ) 
திருகோடிக்கா (5 கிமீ)
திருகஞ்சனூர் (6 கிமீ) 
திருமங்கலக்குடி (7 கிமீ) 
திருத்துருத்தி (குத்தாலம் 6 கிமீ) 
திருவேள்விக்குடி  (8 கிமீ) 

எனினும், திருக்கோழம்பம் உள்ளடங்கிய கிராமம் என்பதால் சாலைகள் எப்படி இருக்கின்றன என்று தெரியவில்லை..


மையான கண்டனை மான்மறி ஏந்திய
கையானைக் கடிபொழிற் கோழம்ப மேவிய
செய்யானைத் தேனெய் பாலுந்திகழ்ந் தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே!..(2/13)
-: திருஞானசம்பந்தர் :-

சமர சூரபன் மாவைத் தடிந்தவேற்
குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய
அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள்
அமர லோகம தாளுடை யார்களே.. (5/64)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

ஞாயிறு, பிப்ரவரி 26, 2023

முதல் பாட்டு


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று கார்த்திகை
மாசி 14
   ஞாயிற்றுக்கிழமை


வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு
பயமில்லை
குகனுண்டு
குறைவில்லை மனமே
குகனுண்டு
குறைவில்லை மனமே


கவிஞர் வாலி அவர்களது முதல் பாட்டு..

அஞ்சல் அட்டை வழியே T.M.சௌந்தரராஜன் அவர்களிடம் சென்று சேர்ந்த பாட்டு..

T.M.சௌந்தரராஜன் அவர்களே மெட்டமைத்துப் பாடிய பாட்டு..

நமது தந்தையும் தாயும் கேட்டு மகிழ்ந்த பாட்டு..

நாமும் எத்தனையோ முறை கேட்டு மெய்மறந்த பாட்டு..

நமது சந்ததியரும் கேட்டு மகிழ இருக்கும் பாட்டு..

காலமெல்லாம் கந்தன் காலடியில் கனிந்திருக்கும் பாட்டு..


காணொளியை
வலையேற்றியவர்க்கு நன்றி..
*

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் - நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்

அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே (கற்பனை என்றாலும்)

நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே..
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே..

கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே..
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே..

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உனை மறவேன்
கந்தனே உனை மறவேன்
கந்தனே உனை மறவேன்!..
**

வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு
பயமில்லை!..
***

சனி, பிப்ரவரி 25, 2023

வேண்டுகோள்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 13
   சனிக்கிழமை


சிவனடியார் ஒருவரது வேண்டுகோள் 
நம் மனதை நெகிழ்விக்கின்றது..


வையகத்தில் வாழும் ஒவ்வொருவரும் ஒரு மரக் கன்றினை வளர்க்க வேண்டும் என்று சொல்கின்றார்... எளிது போலத் தோன்றினாலும் மிகப் பெரிது.. எல்லாருக்கும் கூடி வருவதில்லை.. அதற்கும் அவனருள் வேண்டும்.. பிரார்த்தித்துக் கொள்வோம்..

இந்தக்
காணொளியை
 வலையேற்றியவருக்கு
 நன்றி..
*
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வெள்ளி, பிப்ரவரி 24, 2023

முருகா..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 12
 வெள்ளிக்கிழமை


முருகன் அடியார்கள் அனைவருமே 
அறிந்திருக்கும் பாடல் - இது..


இதுநாள் வரைக்கும் இந்தப் பாடலை - தனிப்பாடல் என்றே நினைத்திருந்தேன்.. யூடியூப்பில் கண்டதும் தரவிறக்கம் செய்து பதிவில் வழங்கியுள்ளேன்..

அபூர்வ திருடன் (1958) எனும் திரைப்படத்தில்
திரு S.தக்ஷிணாமூர்த்தி அவர்களது இசையில் கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் அவர்களது பாடல்..

பாடியிருப்போர் -
TM. சௌந்தரராஜன்  குழுவினர்


முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா..

முறை கேளாயோ குறை தீராயோ..
மான் மகள் வள்ளியின் மணவாளா..

உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா..

மறையே புகழும் மாதவன் மருகா
மறையே புகழும் மாதவன் மருகா
மாயை நீங்க வழி 
தான் புகல்வாய்..

அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே…
அறுபடை வீடெனும் அன்பர்கள் இதயமே
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய்..

ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
ஜென்ம பாப வினை தீரவே பாரினில்
சிவமே பதாம்புஜம் 
தேடி நின்றோம்..

தவசீலா ஹே.. சிவபாலா..
தவசீலா ஹே.. சிவபாலா..
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா..

முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா..

உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா..

உருகாதா மனம் உருகாதா
உருகாதா மனம் உருகாதா..

உருகாதா மனம் உருகாதா முருகா
உருகாதா மனம் உருகாதா!..
***

வியாழன், பிப்ரவரி 23, 2023

தேரழுந்தூர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 11
  வியாழக்கிழமை

பொழுது போகவில்லை என்று ஒருமுறை ஸ்ரீ ஹரி பரந்தாமனும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடினர்..

இவர்களது விளையாட்டுக்கு நடுவராக பார்வதி.. 

இந்தப் பக்கம் அன்பின் கணவர்.. அந்தப் பக்கம் ஆருயிர் அண்ணன்.. 

சொக்கட்டான் காய்கள் கலகல என்று உருண்டன..  காய் உருட்டும் போது ஏற்பட்டது அவருக்கும் இவருக்கும் வாக்குவாதம்..  

இருவரும் இமயவல்லியை நோக்கினர்..
கோவிந்த ரூபிணியின் தீர்ப்பு கோவிந்தனுக்கு சாதகமானது!..

அதனால், கோபித்துக் கொண்ட சிவபெருமான் - " தேவி.. நீ பசுவாகக் கடவது!.. " - என்றபடி புதியதொரு திருவிளையாடலை ஆரம்பித்து விட்டார்..


பசுவாக பூமிக்கு வந்த அம்பிகைக்குத் துணையாக - லக்ஷ்மியும் சரஸ்வதியும் பசுக்களாகி வந்தனர்.

இப்படியான பசுக்களை மேய்ப்பவராக - பெருமாளும் வந்தார்..


அந்தப் பகுதி முழுவதும் மேய்ந்து திரிந்தன தெய்வப் பசுக்கள்..

பெருமாளும் பசுக்களும் காவிரியில் நீராடியபோது சாப விமோசனம் ஆகியதாக ஐதீகம்..

அதன்படி - தேரழுந்தூர் திவ்யதேசத்தின் மூலஸ்தானத்தில் ஸ்வாமியை வணங்கியவாறு காவிரியும் உடன் இருக்கின்றாள்..


பசுக்களை மேய்த்தபடி ஆமருவியப்பன் என திருப்பெயர் கொண்டு திருக்காட்சி நல்கி நின்ற இடம் தான் இக்காலத்தில் தேரழுந்தூர் எனப்படும் திருத்தலம்.. 

இத்தலத்தில் மேற்கு முகமாக ஈசனும் கிழக்கு நோக்கியவாறு பெருமாளும் அருளாட்சி செய்கின்றனர்..


திரு அழுந்தூர்
(தேரழுந்தூர்)

இறைவன்
ஸ்ரீ வேதபுரீஸ்வரர்

அம்பிகை
ஸ்ரீ சௌந்தரவல்லி

தீர்த்தம் வேத தீர்த்தம்
தலவிருட்சம் சந்தனமரம்


வேதங்களும் தேவர்களும் மார்க்கண்டேயரும் காவிரியும் வழிபட்டு உய்வடைந்த தலம்.

அகத்தியர் பூஜிப்பதை அறியாத ஊர்த்துவ ரதன் என்னும் அரசன் சிவ தலத்தின் மேலாக ஆகாயத்தில்  தேரைச் செலுத்தியபோது அது மேலே செல்லாமல் பூமிக்குள் அழுந்தியதாக தலபுராணம்..

இதே சம்பவம் வைணவ சம்பிரதாயத்தில் சற்று மாறுதலுடன் - கீழ்க்கண்ட விதமாகச் சொல்லப்படுகின்றது..

உபரிசரவஸ் என்பவன் - தனது தேர் வானத்தில் வரும் போது - தேரின் நிழல் எவற்றின் மீதெல்லாம் படுகின்றதோ அவையெல்லாம் கருகிச் சாம்பலாகிப் போகும்படியான வரத்தைப் பெற்றிருந்தான்.

இப்படி ஒரு வரத்தை எங்கிருந்து பெற்றான் எனத் தெரியவில்லை..

மற்ற உயிர்களின் துன்பத்தில்  மகிழ வேண்டும் - என்ற கொடூர எண்ணம் அவனுக்கு!..

தான் பெற்ற வரத்தை சோதித்துப் பார்ப்பதற்கு முனைந்த அவன் விமானத்தில் ஏறிப் பறந்தான்..

இவன் மேலே பறந்த போது - கீழே மேய்ந்து கொண்டிருந்த பசுக்களின் மீது விமானத்தின் நிழல் பட்டது.. பெற்றிருந்த வரத்தின் தன்மையால் - பசுக்கள் கதறித் துடித்தன.

பசுக்களின் கதறலைக் கேட்ட ஹரிபரந்தாமன் - சினங்கொண்டு - தேரின் நிழலில் தன் கால் விரலை வைத்து அழுத்தினான்.

அந்த அளவில் - வானில் பறந்து கொண்டிருந்த தேர் பூமிக்கு இறங்கி மண்ணுள் அழுந்தி - புதையுண்டு போனது. 

தேர் அழுந்தியதால் - தேரழுந்தூர் என்பது பெயராயிற்று.

ஞானசம்பந்தர் திருப்பதிகம் செய்துள்ளார்.. 

அப்பர் பெருமான் திருவூர் திருத் தொகையுள் வைத்துப் போற்றுகின்றார்..


சோழ நாட்டின் காவிரி தென்கரையில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில்  முப்பத்தெட்டாவது சிவத்தலமாகும்.

அருகில் உள்ள சிவாலயங்கள்
திருத்துருத்தி (குத்தாலம் - 4 கிமீ)
திருவேள்விக்குடி (5 கிமீ)
திருக்கோழம்பம் (5 கிமீ)
திருநீலக்குடி (6 கிமீ) 
திருவாவடுதுறை (6 கிமீ)

பாரித்து எழுந்த படை மன்னர் தம்மை மாள பாரதத்து
தேரில் பாகனாய் ஊர்ந்த  தேவதேவன் ஊர்போலும்
நீரில் பணைத்த நெடுவாளைக்கு அஞ்சிப்போன குருகு இனங்கள்
ஆரல் கவுளோடு அருகு அணையும் அணியார் வயல் சூழ் அழுந்தூரே.. 1589
-: திருமங்கையாழ்வார் :-

அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான் 
நிலையார் மறியும் நிறைவெண் மழுவும் 
இலையார் படையும் இவையேந் துசெல்வ 
நிலையா வதுகொள் கெனநீ நினையே.. 2/20/5
-: திருஞானசம்பந்தர் :-

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

புதன், பிப்ரவரி 22, 2023

அழகே.. அருளே..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 10
   புதன்கிழமை

அன்றைக்கு
காணும் பொங்கலன்று 
எழுதிய கனவுப் பாட்டு.


பாதமணிக் கொலுசுக்குள்
பவளம் என மாறேனோ..
பாதமலர் அழகை எல்லாம்
பார்த்து மனம் ஆறேனோ!..

செங்காந்தள் கைகளிலே
செவ் வளையாய் மாறேனோ..
சிலுசிலுக்கும் வேளையிலே
செந்தமிழாய் வாரேனோ!..

காதோரம் கவி பாட
செவிப்பூவாய் மாறேனோ..
கரு மையாய்க் காத்திருந்து
கண்ணழகைப் பாரேனோ!..

பனிமுல்லைப் பூவாகி
பூங்குழலில் சேரேனோ..
செந்தூரத் துகளாகி
நெற்றியில் நான் வாழேனோ!..

வாத்யாரே.. 
இது உமக்கே நியாயமா!?..
(இல்லை தான்!..)

கன்றாத தமிழெடுத்துக்
கனி மகளைப் பாடுகையில்
காற்றோடு ஊடாடி
காலம் அது திரும்பிடுதே..

திகட்டாத சொல்லெடுத்துத்
திருமகளைப் பாடுகையில்
தித்திக்கும் தெய்வநலம்
திசையெங்கும் பரவிடுதே!..
***
அது அப்படியே
மாறி விட்டது..

அதன் புது வடிவம் 
அம்பிகையிடம்
வேண்டுதலாக - 
இன்று..

அப்போதே இது
கூடிவந்தாலும்
இப்போது தான்
இன்றைய பதிவில்!..


ஆடிவரும் தென் காற்றே
அன்னையிடம் செல்வாயா
அன்னையிடம் செல்லுங்கால்
அன்புடனே சொல்வாயா!..

அவளிடத்தில் சொல்லுதற்கு
அடியேனின் ஆசை ஒன்று..
ஆதரவு என்று அளித்தால்
அன்பில் மனம் வாழும் நின்று..

பாதமணிக் கொலுசுக்குள்ளே
பவளம் எனப் பதிந்தாலும்
பாதமலர் அழகை எல்லாம்
பார்த்து தினம் பணிவேனே!..

செங்காந்தள் கரந்தனிலே
செவ்வளையாய் சேர்ந்தாலும்
செந்தமிழின் சொல்லெடுத்து
சிறு கவியாய் இழைவேனே!..

காதோரம் குழையானால்
குன்றாமல் குளிர்வேனே..
கரு மையாய கண்ணருகில் 
கலையாமல் வாழ்வேனே!..

பனிமுல்லைப் பூவானால்
பூங்குழலில் சேர்வேனே
செந்தூரத் துகளானால்
பிறைநெற்றி வாழ்வேனே!..

கன்றாத தமிழெடுக்கக்
கைகொடுக்கும் அன்னையவள்
கால்மலரில் மலராகிக்
காலமெல்லாம் வாழ்வேனே!..
**
ஓம் சக்தி ஓம் 
சக்தி ஓம்
***

செவ்வாய், பிப்ரவரி 21, 2023

கேரட்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 12
   ஞாயிற்றுக்கிழமை

இணையத்தில் இருந்து செய்தித் தொகுப்பு


கேரட்..
வேரடிக் கிழங்காக உயிர்ச் சத்துக்களை உள்ளடக்கி வளர்கின்ற தாவரம்..

மத்திய தரைக்கடல் பகுதியில் கண்டறியப்பட்ட இதில் பீட்டா காரோட்டீன்  மிகுந்து உள்ளது.. இதுவே உடலில்  உயிர்ச் சத்து வைட்டமின் A யாக மாற்றப்படுகிறது. இதன் சாறு  உடல் நலத்திற்கு ஏற்றது.. 


கேரட் கண்பார்வையை மேம்படுத்துவதுடன் புற்றுநோய்த் தடுப்புப் பண்புகள் உடையதாகவும் இருக்கின்றது.. 
 
கேரட்டில்
அதிகப்படியான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. 

தினமும்  கேரட் சாறு அருந்துவதால் சருமம் பொலிவாகின்றது..

ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படுகின்றது... 

இதிலுள்ள நார்ச்சத்துக்கள்  பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது..


கேரட் சாறு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்கின்றது..  இதிலுள்ள வைட்டமின்களும் மினரல்களும் பல நன்மைகளைச் செய்கின்றன..

கேரட்டில் வைட்டமின் ஏ, சி, கே, பி6, பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இவை  வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்கு உதவுகின்றன.


கேரட் சாறு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை முறைப்படுத்துவதிலும் அதிகப்படியான ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.

கேரட் குறைந்த அளவு கலோரியும் குறைவான சர்க்கரை அளவும் கொண்டிருக்கிறது. 


இதனால் நீரிழிவு பிரச்னை குறைவதற்கும்
பார்வைத் திறன் மேம்படுவதற்கும்
உணவில்  கேரட் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

கேரட்டில் உள்ள பொட்டாசியம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்க உதவுகிறது.
அதோடு தைராய்டு வராமல் தடுக்கிறது.. கொலஸ்டிரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க கேரட் உதவியாக இருக்கிறது. 


அதனால் கேரட்டை அளவறிந்து அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது..

 வாழ்கநலம்
***

ஒரு கேள்வி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்றொரு கேள்வி!..



தமிழனின் நிலை இப்படியிருக்க,



தமிழ்நாட்டிற்குள் -
தொழிலாளர்கள் என்ற போர்வையுடன்
பங்களாதேஷிகள் மேற்கு வங்கத்தின் வழியாக கள்ளக் குடியேறிகளாக வருகின்றார்களாம்
ஆதார் அட்டையுடன்!..


 காணொளி
நன்றி: தினமலர்

விழிப்புணர்வு
காணொளிக்கு நன்றி


" சோம்பித் திரியேல் "
என்றார் ஔவையார்..

எத்தனை எத்தனையோ
புண்ணியர்களாலும் 
புண்ணியங்களாலும் 
புகழிடமாய் 
விளங்குகின்ற 
தமிழகம் - இன்றைக்குப்
புல்லர்களின் 
புகலிடமாய் ஆகிக் 
கொண்டிருக்கின்றது..

என்ன செய்யப்
போகின்றோம்?..
***

திங்கள், பிப்ரவரி 20, 2023

திருமங்கலக்குடி

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று - மாசி 8
திங்கட்கிழமை


இன்றைய பதிவில்
பரிகாரங்களைப் பற்றிய
படிப்பினைத் தரும்
திருத்தலம்.

ஒரு சமயம் காலவ மகரிஷி - தமக்குத் தோல் நோய் ஏற்பட இருப்பதை உணர்ந்தார்.. 

கலக்கமுற்ற அவர் நவக்கிரக நாயகர்களையும் அழைத்து தமக்கு உதவுமாறு வேண்டிக் கொள்ள அவர்களும் காலச் சக்கரத்தில் முனிவருக்குச் சாதகமாக இடம் மாறி அமர்ந்து முனிவருக்கு நோய் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டனர்..

இதனால் கோபமடைந்த காலதேவன் முனிவருக்கான வேதனையை  நவகிரகங்கள் அனுபவித்துக் கழிக்குமாறு சாபம் இட்டான்.. 

இதனால் துயருற்ற நவக்கிரக நாயகர் அனைவரும் தமது செயலுக்கு மனம் வருந்தி ஸ்ரீ பரமேஸ்வரனை சரணடைந்து வணங்கி நின்றனர்.. 

ஈசனும் அவர்களது பிழையைப் பொறுத்தருளி மீண்டும் அவர்களுக்கு நோயற்ற நிலையில் மங்கல வாழ்வினை அளித்தார்..

நமது வினைகளை நாமே அனுபவித்துக் கழிக்க வேண்டும் என்பதே காலம் வகுத்திருக்கும் விதி..

அம்மையப்பனின் துணை கொண்டு அவற்றைக் கடக்கத் தான் வேண்டும்..

இந்திரன் முதற்கொண்டு ஏனைய தேவர்கள் அனைவருமே திருக்கயிலாயத்தையோ ஸ்ரீ வைகுந்தத்தையோ சரணடைந்து வழிபட்டு தண்டனையை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகே தமது பிழைகளில் பாவங்களில் இருந்து விடுபட்டிருக்கின்றனர்..

இதைத்தான் - சரணாகதி என்று திருக்குறள் முதற்கொண்டு அற நூல்கள் அனைத்தும் வலியுறுத்துகின்றன..

இதுதான் ஆன்மீகம் என்றால் - இதற்கு எதிராக வேறு வேறு திசைகளில் இருந்து ஊளைச் சத்தங்கள்!..

பின்னொரு சமயம் மக்கள் வரிப் பணத்தில் கோயில் கட்டியதால் அமைச்சருக்கு பெருந்தண்டனையை வழங்கினான் மன்னன்.. 

தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில்  அமைச்சரின் மனைவி கதறித் துடிக்க அந்த அபலையின் குரல் கேட்டு இரங்கிய அம்பிகை அமைச்சரை மீண்டும் உயிர்ப்பித்துக் கொடுத்தாள்.. 

மாங்கல்ய பலம் அருள்வாள் ஸ்ரீ மங்கல நாயகி என்பது ஐதீகம்..

காலதேவனின் சாபத்துக்கு ஆளாகி தோல் நோய் அனுபவித்த நவக்கிரகங்களும் தங்கியிருந்த இடம் தான் சூரியனார் கோயில்..

திருமங்கலக்குடி கோயிலில் வழிபட்ட பிறகே சூரியனார் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றொரு மரபு உள்ளது..

திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருப்பதிகம் அருளியுள்ளனர்..

சோழ நாட்டின் காவிரி வடகரைத் தலங்களில்  முப்பத்தெட்டாவது திருத்தலமாகும்..

இத்தலம்  மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றினாலும்
மங்கள விநாயகர், மங்களாம்பிகை, மங்கள விமானம், மங்கள தீர்த்தம், மங்கலக்குடி - என்ற
பஞ்ச மங்கள க்ஷேத்திர சிறப்பினை உடையது..

தஞ்சாவூர் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் கும்பகோணத்தை அடுத்த ஆடுதுறையில் இருந்து 2.5 கிமீ..

ஆடுதுறை  நிலையத்தில் விரைவு ரயில்களும் நின்று செல்கின்றன..

தலம்
திருமங்கலக்குடி


இறைவன்
ஸ்ரீ பிராணவரதேஸ்வரர்


அம்பிகை
ஸ்ரீ மங்களநாயகி.

தல விருட்சம்
வெள்ளெருக்கு, கோங்கு (இலவ மரம்)
தீர்த்தம்
காவிரி, சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்..


திருநாவுக்கரசர் 
அருளிச் செய்த திருப்பதிகம்..

ஐந்தாம் திருமுறை
திருப்பதிக எண் 73


தங்க லப்பிய தக்கன பெருவேள்வி
அங்க லக்கழித் தாரருள் செய்தவன்
கொங்க லர்க்குழல் கொம்பனை யாளொடு
மங்க லக்குடி மேய மணாளனே..1

நறுமணம் உடைய மலர்களைக் கூந்தலில் சூடிக் கொண்டிருக்கும் பூங்கொம்பு போன்ற உமாதேவியுடன் மணவாளனாக மங்கலக் குடியில் மேவியிருக்கும் எம்பெருமான், முன்பொரு சமயம் தம்மைக் கலக்குதற்காகத் தக்கன் செய்த பெருவேள்வியை அங்கு அலைக்கழித்துப் 
பின் நிறையருள் புரிந்தவன்..

காவி ரியின் வடகரைத் காண்தகு
மாவிரி யும்பொ ழில்மங் கலக்குடித்
தேவ ரியும்பி ரமனுந் தேடொணொத்
தூவெ ரிச்சுடர்ச் சோதியுட் சோதியே.. 2

காவிரியின் வடகரையில் காணத்தக்கதாக மாமரங்கள் விரிந்து பொழிலாகச்  சூழ்ந்திருக்கும் மங்கலக்குடியில் திருமாலாகிய தேவனும், பிரமனும் தேடி அறிய இயலாதபடிக்கு தூய  சுடராய்த் திகழும் சோதியுள் சோதியாக வீற்றிருக்கிறான் எம்பெருமான்..

மங்க லக்குடி ஈசனை மாகாளி
வெங்கதிர்ச் செல்வன் விண்ணொடு மண்ணும்நேர்
சங்கு சக்கர தாரி சதுர்முகன்
அங்கு அகத்திய னும் அர்ச்சித் தாரன்றே.. 3

மங்கலக்குடியில் வீற்றிருக்கும் எம்பெருமானை
மாகாளியும் சூரியனும் விண்ணிற்கும் மண்ணிற்கும் நிகரான சங்கு சக்கரதாரி ஆகிய திருமாலும், பிரமனும், அகத்திய முனிவனும் அர்ச்சித்து வழிபட்டிருக்கின்றனர்..

மஞ்சன் வார்கடல் சூழ்மங் கலக்குடி
நஞ்சம் ஆரமுதாக நயந்து கொண்டு
அஞ்சும் ஆடல் அமர்ந்து அடி யேனுடை
நெஞ்சம் ஆலயமாக்கொண்டு நின்றதே.. 4

பெருங்கடல் சூழ்ந்த உலகில் மங்கலக் குடியில் வீற்றிருக்கும் மைந்தனாகிய எம்பெருமான் , ஆலகால விடத்தை நயந்து அமுதமாக உட்கொண்டு  ஆனில் ஐந்தும் விரும்பி ஆடி அடியேனுடைய நெஞ்சத்தையும் ஆலயமாகக் கொண்டு நிலை பெற்றிருக்கின்றான்..

செல்வம் மல்கு திருமங் கலக்குடி
செல்வம் மல்கு சிவநிய மத்தராய்ச்
செல்வம் மல்கு செழுமறை யோர்தொழச்
செல்வன் தேவியொ டுந்திகழ் கோயிலே.. 5

செல்வம் நிறைந்த திருமங்கலக்குடியானது அருட் செல்வம் நிறைந்து சிவநெறி எனும் செல்வம் செழித்தவராய்த் திகழும்  மறையோர் தொழுது வணங்க - திருவருட் செல்வனாகிய எம்பெருமான் தனது தேவியாகிய உமையவளோடும் திகழும் திருக்கோயிலாகும்..

மன்னு சீர்மங் கலக்குடி மன்னிய
பின்னு வார்சடைப் பிஞ்ஞகன் தன்பெயர்
உன்னு வாரும் உரைக்கவல் லார்களும்
துன்னு வார்நன் னெறிதொடர் வெய்தவே.. 6

நிலைத்த புகழை உடைய மங்கலக்குடியில் நிலை பெற்ற முறுகித் திகழும் நீண்ட சடையையுடைய பிஞ்ஞகன் திருநாமத்தை மனதில் நினைப்பதற்கும் வாயால் சொல்லுவதற்கும் வல்லமை உடையவர்கள் நன்னெறியாகிய சிவஞானத்
தொடர்பு எய்தப் பெறுவர்..

மாதரார் மருவும் மங்கலக்குடி
ஆதி நாயகன் அண்டர்கள் நாயகன்
வேத நாயகன் வேதியர் நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.. 7

பெண்கள் பொருந்தி வணங்குகின்ற மங்கலக் குடியில் வீற்றிருக்கும் எம்பெருமானே ஆதிநாயகன். தேவர்களின் நாயகன். வேதங்களின் நாயகன். வேதியர்க்கு நாயகன். பஞ்ச பூதங்களால் ஆகிய இவ்வுலகுக்கு நாயகன். அவனே புண்ணிய மூர்த்தியாகப் பொலிந்து விளங்குகின்றான்..

வண்டு சேர்பொழில் சூழ்மங் கலக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயகனுக்கு அருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே.. 8

மனம் மாறுபட்டதால் - வழிபாட்டிற்கு என இருந்த  பால் கலசங்களைக் காலால் எற்றிய - தந்தையின் கால் முறியுமாறு வீசிய விசார சர்மருக்கு
 சண்டேசுரர் என, பட்டம் சூட்டி நல்லருள் புரிந்த இறைவன் தான் - வண்டுகள் சேரும் பொழில்கள் சூழ்ந்த மங்கலக் குடியில் இளம் பிறையைச் சூடிய சோதியாக -   எம்பெருமானாக விளங்குகின்றான்..

கூசுவார் அலர் குண்டர் குணமிலர்
நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள்
மாசர் பால் மங்கலக்குடி மேவிய
ஈசன் வேறுபடுக்க உய்ந் தேனன்றே.. 9

தமது சிறுமையை எண்ணிக்
கூசாதவர்களும் குண்டர்களும்  நற்குணம் இல்லாதவர்களும்  அன்பு சிறிதும் இல்லாதவர்களும்  கீழானவர்களும் குற்றம் உடையவர்களும் ஆகிய சமணரோடு கூடியிருந்த என்னை - மங்கலக்குடி இறைவன் - வேறுபடுத்தி வைக்கவும் நான் உய்வடைந்தேன்..

மங்கலக்குடியான் கயி லைம் மலை
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன்
தன்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்
தங்கலைத்து அழு துய்ந்தனன் தானன்றே.. 10

அன்று கயிலாய மலையை  அசைத்து எடுக்க முயன்ற போது தனது கரங்களோடு தாளும்  தலையும் சிதைந்து அழியப் பெற்றதால் அழுது புலம்பிய இராவணன் நலமாகி உய்வடையும்படிக்கு  நல்லருள் புரிந்த இறைவனே மங்கலக்குடியில் எம்பெருமான் என விளங்குகின்றான்..

திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசர் 
திருவடிகள் போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***