நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 14, 2024

பங்குனி

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி முதல் நாள் 
வியாழக்கிழமை


பங்குனி

தமிழ் மாதங்கள் பன்னிரெண்டில் ஆண்டு நிறைவாகின்ற  மாதமாகும் பங்குனி.. 

ஜோதிடத்தின்படி சூரியன் மீன ராசிக்குச் செல்கின்றார்.. 

கணவனின் ஆயுள் விருத்திக்கும் ஆரோக்கியத்திற்கும்  உறுதுணையான கௌரி விரதம் மாதத்தின் முதல் நாளில் வருகின்றது.

சிறப்பு வாய்ந்த உத்திரம், ராம நவமி,  யுகாதி போன்ற நல்ல நாட்கள் இம்மாதத்தில் தான்..

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தை ஒட்டி வருகின்ற நிறைநிலா நாளில்  உத்திரத் திருவிழா..


ஸ்ரீ ஹரிஹர புத்திர ஸ்வாமியின் அவதார நாள் பங்குனி மாத உத்திர நட்சத்திரம்..


சிவபெருமான் பார்வதியின் திருமண நாளும் முருகப்பெருமான் தெய்வானையின் திருமண நாளும் பங்குனி உத்திரமே..


பங்குனியின் எட்டாம் நாள் வியாழனன்று திரு ஆரூர் ஆழித்தேரோட்டம் நிகழ இருக்கின்றது..

பங்குனி 12 திங்கட்கிழமை (25/3) உத்திரத்திருநாள்..

முருகப்பெருமானின்
அறுபடை வீடுகளிலும் இந்த பங்குனி உத்திரம் மிகச் சிறப்பாக  கொண்டாடப் படுகின்றது..


பார்க்கவ மஹரிஷிக்கு மகளாக பார்கவி என்ற பெயருடன் ஸ்ரீ மகாலக்ஷ்மி பூமியில் தோன்றிய நாள் பங்குனி உத்திரம்..

தெய்வத் திருமணம் என்பது  பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாகிய தத்துவம்..

திருமயிலையில் - விஷக்கடியினால் மாண்டு சாம்பலாகி அஸ்தி கலசத்தில் இருந்த பூம்பாவையை  உயிருடன்  மீண்டும் அழைக்கும் போது - 
பங்குனி உத்திர ஒலி விழா காண்பதற்கு வருவாயாக!.. - என்று அழைக்கின்றார் ஞானசம்பந்தப் பெருமான்..


திருமயிலாப்பூர் 
ஸ்ரீ கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனியில் நிகழும் அறுபத்து மூவர் திருவிழா தமிழகத்தில் குறிப்பிடத்தக்க ஒன்று..


திரு ஐயாற்றை அடுத்துள்ள அந்தணக் குறிச்சியில் - சிலாத முனிவருக்கு நந்தியம் பெருமான் மகனாகத் தோன்றியதும்
அவருக்கு அதிகார நந்தி - என பட்டம் வழங்கப் பெற்றதும்
திருமழபாடியில்  வியாக்ரபாத முனிவரின் மகளான சுயம்பிரகாஷிணி தேவியுடன் திருமணம்  நிகழ்வதுவும் பங்குனியில் தான்..


இதன்படி,
நிகழாண்டில் பங்குனி 5 திங்கட்கிழமை (18/3)  நந்தி ஜனன வைபவம்..
பங்குனி 6 செவ்வாய்க்கிழமை 
(19/3) நந்தி  திருக்கல்யாணம் நடைபெறுகின்றது..


புனிதவதியாகிய காரைக்கால் அம்மையார் திரு ஆலங்காட்டில் முக்தி நலம் பெற்றது பங்குனி சுவாதி..

அனைத்து சுபகாரியங்களுக்கும் உகந்தது பங்குனி உத்திரம்..

பங்குனி உத்திரத்தில்
திருமாங்கல்யத்திற்கு பொன் உருக்குதல், மரக்கன்றுகள் நடுவது, புதிய பொருட்கள் வாங்குதல், புதிய வியாபாரம் தொடங்குவது முதலான சுப காரியங்களை மேற்கொள்வது மரபு..


அடுத்து வருகின்ற புத்தாண்டில் சித்திரை 4 புதனன்று ஸ்ரீ ராம நவமி நிகழ்கின்றது..
 

ஓம் ஹரி ஓம்
 ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. சிறப்பான மாதம்.  "பங்குனி மாசம் பார்த்து வச்சு பரிசம் போட்டாரு.."  வரி தவிர சட்டென எனக்கு பாடல் எதுவும் நினைவுக்கு வரவில்லை!!  வந்தாக வேண்டுமா என்று கேட்காதீர்கள்.  என் பழக்கம் அது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிசம் போட்டது தானே...

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ...

      நீக்கு
  2. பங்குனி மாத சிறப்புகள் அனைத்தும் தொகுத்து கொடுத்த பதிவு அருமை.
    அனைவருக்கும் அனைத்து சுபகாரியங்களும் நடக்கட்டும் இறைவன் அருளால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// அனைவருக்கும் அனைத்து சுபகாரியங்களும் நடக்கட்டும் இறைவன் அருளால்.///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ...

      நீக்கு
  3. பங்குனி உத்திரம் குறித்த தகவல்கள் அனைத்தும் நன்று. நெய்வேலியில் இருந்தவரை இந்த பங்குனி உத்திரம் திருவிழா மிகவும் பிடித்த ஒன்று. அத்தனை கோயில்களிலிருந்தும் காவடிகள் புறப்பட்டு வில்லுடையான்பட்டு கோயிலுக்குச் சென்று சேரும் அன்றைக்கு. எல்லோருமாக எட்டு ரோடு எனப்படும் இடத்திற்குச் சென்று காவடிகள் அனைத்தும் பார்த்துவிட்டு, கடைசியாக வரும் காவடிகள் உடன் வில்லுடையான்பட்டு கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவோம். இனிய நினைவுகள்.

    பதிலளிநீக்கு
  4. பங்குனி மாதம் சிறப்புகள் நல்ல தொகுப்பு.

    இங்கு பங்குனி மாதத் திங்கள் நாட்களில் அம்மனுக்கு பொங்கல் ,அன்னதானங்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..