நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 06, 2024

திருவைகாவூர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 23
 புதன்கிழமை


இரவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

இன்னும் வயிற்றுப் பாட்டுக்கு ஏதும் கிடைக்கவில்லை. பசி காதுகளை அடைக்கின்றது. குயிலியும் பசியோடு காத்திருப்பாள்!. என்ன செய்யலாம்?.. இன்னும் சிறிது நேரம் பார்ப்போம்!.. அதன் பிறகு சாமி விட்ட வழி!..

- என்று சிந்தித்தபடியே விழிகளைக் கூர்மையாக்கினான் அவன்.

அவன் பிறந்தது தவழ்ந்தது நடந்தது ஓடி விளையாடியது எல்லாம் இந்த காட்டில் தான்.. 

இந்தக் காடு தான் அவனுடைய வீடு நாடு எல்லாம்!..

காட்டுக்கு வெளியில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதே அவனுக்குத் தெரியாது.

அவனுக்குத் தேவை - அன்றைய பொழுதுக்கு ஏதாவது சிறு பிராணிகள்!..

அவன் - வேடன். பெயர் கடுக்கன்!..

அவன் பிறந்து பல வருடம் வரைக்கும் அவனுக்குப் பெயரே வைக்கவில்லை.

காட்டுக்குள் ஓடித் திரிந்த விடலைப் பருவத்தில், ஒரு நாள் -

ராத்திரி நடந்த குருதி பூசையில்  இறைச்சியைக் கடித்திருக்கின்றான்.

அதிலிருந்து கடுக் என்று சத்தம் வரவே - கடுக்கன் எனப்பட்டான்.

பொழுது விடிந்ததும் - மாமன் மகள் குயிலியுடன் கல்யாணம்.. 

" என்னடா இது!.. " - என்று பார்த்தால் - குயிலியின் அப்பா தான் இவனுடைய பலத்தை பரிட்சை செய்து பார்த்தாராம்!.. மிகவும் சந்தோஷம் கடுக்கனுக்கு..

உணவுக்கு மட்டுமே வேட்டையாடும் பழக்கமுடையவன் - கடுக்கன்.

தனக்கும் குயிலிக்கும் அன்றைய பொழுதுக்கு என்ன தேவையோ - அதை மட்டும் கொடுத்தால் போதும்!..

- என்று குடிலை விட்டுக் கிளம்பும் முன் சூரியன் உதிக்கும் பக்கமாக நின்று கேட்டுக் கொள்வான்..

இது - அவனுடைய அப்பா சொல்லிக் கொடுத்தது..

நம்ம தாத்தாவோட தாத்தாவோட தாத்தா ஒருத்தரு - சதைக் கறியா எலும்புக் கறியா..ன்னு தின்னு பார்த்துட்டு குடுமியப்பருக்குக் கொடுத்து இருக்குறாரு!..

அவரு கறிய மட்டுமா கொடுத்தாரு?..

குடுமியப்பர் கண்ணுல இருந்து ரத்தம் வந்ததும் தன்னோட கண்ணையே பிடுங்கிக் கொடுத்து இருக்குறாரு!..

அதனால தான் அவருக்கு கண்ணப்பர்  ன்னு பேரு!..
அப்பேர்ப்பட்ட வம்சத்தில வந்தவன்டா நீ!..

நாலு பேரு நல்லாருக்கணும்.. ன்னு பாடுபடு.. உன்னைய வந்து கேட்டா கூட கொடுத்துடு!..

இதுவும் கடுக்கனுடைய அப்பா சொல்லிக் கொடுத்தது தான்!..

தானும் உண்டு தன்னைச் சேர்ந்தவர்களையும் உண்ணச் செய்து -

அதன் பிறகு, தான் உண்டு - துணைக்குக் குயிலி உண்டு - தூக்கம் உண்டு - என்று இருப்பவன்.. 

அப்படிப்பட்ட கடுக்கனுக்குத் தான்  இன்று சோதனை.. 

காலையில் இருந்து -   அம்புக்கு வேலையே இல்லை... திடீரென சலசலப்பு

மானோ!.. - என்று ஆசையுடன் - அம்பு தொடுக்க முயன்றவன் மருண்டான்.

வாயைப் பிளந்து கொண்டு வரிப்புலி ஒன்று!.. எதிரில். 

சற்றே தயங்கினான் கடுக்கன்.

வரிப்புலியின் வாய் கிழித்து அதன் பற்களைப் பிடுங்கும் தீரன் தான் ...

ஆனாலும் இப்போது மிகவும் தளர்ந்திருந்தான்..

பொழுதும் சாய்ந்து இருள் சூழந்து கொண்டிருக்கிறது.. 

புலியுடன் போராட சக்தியும் இல்லை. சாத்தியமும் இல்லை.. எனவே,

மின்னலெனப் பாய்ந்து அருகிருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டான்.

ஆனாலும், அந்தப் புலியும் அவனைப் போலவே பசித்திருந்தது.

எப்படியும் நீ கீழே வருவாய் தானே!..


- என்று ஓர் ஓரமாக புலியும் படுத்துக் கொண்டது.

இதை எதிர்பார்க்காத கடுக்கன் வெலவெலத்துப் போனான்...

எப்படித் திரும்பிச் செல்வது?..

இந்தப் புலிக்கும் பசி அதிகமானது...


மேலேயே பார்த்துக் கொண்டிருக்கிறது!..

முற்றாக இருட்டி விட்டது...

இனிமேல் புலி நகர்ந்து விட்டாலும் வீட்டுக்குப் போவதென்பது இயலாது.

சிறு பொழுதில் தன் வாழ்வு ஒளிமயமாக ஆகப்போவதை அறியாத அவன் -

விடியும் வரை மரக்கிளை தான் மாளிகை என முடிவு செய்து கொண்டான்.

வசதியாக சாய்ந்து கொண்டான். உறக்கம் வராதிருக்க வேண்டி, கைகக்கு கிடைத்த இலைகளைப் பறித்து கீழே போட்டான். 

தண்ணீர் தாகம் அவனுக்கு... இருட்டுக்குள் எங்கே செல்வது?.. இருப்பினும் கீழே பார்த்தால் இரண்டு ஒளிப் புள்ளிகளாய் புலியின் கண்கள்!..

வந்த வேகத்தில் போனது தாகம்!..

மேலே நோக்கினான்.

நட்சத்திர மண்டலம் நகர்ந்து இருந்தது.. விரல் கொண்டு கணக்கிட்டான்..

மூன்றாவது ஜாமம் ஆகியிருந்தது.

இலைகளைப் பறித்துக் கீழே போடுவதை மட்டும் அவன் நிறுத்தவே இல்லை.

ஆயிற்று.. இன்னும் கொஞ்சநேரம் தான்...

தொல்லைகள்  எல்லாம் தீர்ந்து விடும் என எண்ணிக் கொண்டான்!..

அதோ விடியலின் கீற்றாக - கீழ் வானில் செவ்வண்ணக் கோலங்கள்...

கீழே புலியைக் காணவில்லை. மிக்க மகிழ்ச்சி..

மரத்திலிருந்து இறங்கினான்... எதிரில் - 

கன்னங்கரேல் என்று எருமைக்கடா மீது - யார் அது?.. பார்த்ததில்லையே!..

பாவம்!..

அவன் விதி அந்தப் பொழுதில் முடிந்து விட்டது - என்பது கடுக்கனுக்குத் தெரியாது.

அதே நொடியில் - கடுக்கனைத் தேடிக் கொண்டு குயிலி ஓடி வந்தாள்..

மச்சான்.. என்னய விட்டுட்டு எங்கே போயிருந்தே?.. 

நான் எங்கேயும் போகலை.. குயிலி!.. இங்கே தான் இருக்கேன்!..

விம்மலுடன் ஓடி வந்த குயிலி - கடுக்கனை இறுகத் தழுவிக் கொண்டாள்..

இவங்கள்ளாம் யாரு மச்சான்!..

எனக்குந் தெரியல புள்ளே!..
எங்க அப்பாரு அடிக்கடி சொல்வாரு - அந்த மகராசனா இருக்குமோ!..

பாசக் கயிற்றினை சுழற்றி  வீசுவதற்குள்  - அதை விட  வேகமாக சுழித்து வந்த சூறாவளியில் செயலற்று சுருண்டு விழுந்தான் யமதர்மராஜன்..

எருமை எந்தப் பக்கம் ஓடிப் போனதோ தெரியவில்லை.

கண் கொண்டு நோக்க - எதிரில் - காணற்கரிய காட்சி!..


பேரொளிப் பிழம்பாக ஸ்ரீபரமேஸ்வரனும் பரமேஸ்வரியும்!..

அருகில் கைகட்டியபடி  நந்தியம்பெருமான்..

பெருமானே!.. என்னை மறுபடியும் மன்னித்து விடுங்கள்!..
இரவெல்லாம் உண்ணாமல் விழித்திருந்து இலைகளைப் பறித்துக் கீழே போட்ட வேடனின் செயல் - 
யாவருக்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை - என்றபடிக்கு, சிவபூஜையாகி விட்ட பெருமையை அறியாத 
அந்தகனாகி விட்டேன்!.. பிழை பொறுத்தருள வேண்டும் ஸ்வாமி!..

- எனக் கதறி, கண்ணீர் வடித்தான் யம தர்மராஜன்..

மனங்கனிந்த  பரமேஸ்வரன் - வழக்கம் போலவே யமனின் மீது இரக்கங் கொண்டு,  நந்தியம்பெருமானை நோக்கினார் .

உத்தரவு!..

-  தனது மூச்சுக் காற்றால் கட்டப்பட்டு செயலற்றுக் கிடந்த யமனை விடுவித்தார் நந்தியம்பெருமான்...

யமதர்ம ராஜனின் கண் முன்பாகவே -

கடுக்கனும் குயிலியும் - ஜோதியாக சிவகதி அடைந்தனர். 

ஈசன் திருவாய் மலர்ந்தருளினார். 

நந்தி!.. இனி இந்தத் திருத்தலத்தில் எம்மை அடைந்தவர் எவர்க்கும் யம பயம் இல்லை. நீ கிழக்கு நோக்கி இருந்து கால பாசத்திலிருந்து ஆன்மாக்களைக் காப்பாற்றுவாயாக!...

தங்கள் சித்தம்!..
நந்தியம் பெருமான் தலை வணங்கினார்.

யமனும்  திருத்தலத்தின் எதிரே தீர்த்தத்தினை உண்டாக்கி - அதில் நீராடி, தனது பிழைதனைப் பொறுத்த இறைவனைப் பணிந்து வணங்கினான்.

இறைவன் ஆலமர் செல்வனாக திருக்கரத்தினில் பிரம்புடன் திருக்கோலம் கொண்டார்..

பிரம்பு - 
அது அடியவர்களுக்கு அல்ல!..
தகாததைச் செய்யுங் கொடியவர்களுக்கு!..

அதிசயம் கேட்டு வந்த மஹாவிஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத வகையில் சந்நிதியின் இருபுறமும் எழுந்தருளினர். 

யமனுக்கே வேலையில்லாத இத்தலத்தில் நமக்கென்ன வேலை.. - என்று நவக்கிரகங்களும் வெகு தொலைவுக்கு ஓடிப் போயினர்.

எல்லாம் அறிந்த 
மார்க்கண்டேயருக்காக ஈசன் எழுந்த தலம் 
திருக்கடவூர்

ஏதும் அறியாத 
வேடனுக்காக ஈசன் எழுந்த தலம் 

திருவைகாவூர்


இறைவன் 
ஸ்ரீ வில்வவனேஸ்வரர்  


அம்பிகை
ஸ்ரீ சர்வஜன ரட்சகி 
வளைக்கை நாயகி

தீர்த்தம் - யம தீர்த்தம்
தலவிருட்சம் வில்வம்

ஐயனின் இடப்புறம்
அம்பிகை கிழக்கு முகமாகத் திகழ்கின்றாள்.

எங்கும் இல்லாத விதத்தில்
அம்மையப்பனைத் தரிசிக்க வரும் அன்பர்களை வரவேற்பார் போல  - நந்தியம்பெருமான் கிழக்கு முகமாக வீற்றிருக்கின்றார்..



கோபுர வாசல், சந்நிதி வாசல் - எங்குமே துவார பாலகர்கள் கிடையாது..

சந்நிதி வாசலின் இருமருங்கும் பிரம்மனும் மஹாவிஷ்ணுவும் திகழ்கின்றனர்..

யம தீர்த்தம் திருக்கோயிலின் எதிரில் உள்ளது.
தல விருட்சம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிக்கு எதிரில்  வில்வமரம்.

இதனடியில் சப்த கன்னியர் எழுந்தருளியுள்ளனர்..


கொல்வாரேனுங் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமசிவாயவே!.. (3/49)

நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை 
ஆளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடை யிடைப்புனல் கரந்த
சிவலோகன் அமர் கின்றஇடமாம்
அஞ்சுடரொ டாறுபதம் ஏழின்இசை 
எண்ணரிய வண்ணம் உளதாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது 
சேரும்வயல் வைகாவிலே!.. (3/71)  
-: திருஞானசம்பந்தர் :-

பல ஆண்டுகளுக்கு முன் வெளியான பதிவு
மகா சிவராத்திரிக்கு என மீண்டும்!...

நம சிவாய வாழ்க!..
நாதன் தாள் வாழ்க!..
இமைப்பொழுதும் என் 
நெஞ்சில் நீங்காதான் 
தாள் வாழ்க!..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
  2. திருவைகாவூர் திருத்தலம் பற்றி ரொம்ப அருமையாக எழுதியிருக்கீங்க. எல்லா சிவத் தலங்களையும் பற்றித் தொடர்ந்து எழுதுங்க. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறையருளுடன் முயற்சி செய்கின்றேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நெல்லை அவர்களுக்கு நன்றி ..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. சிவராத்திரியின் சிறப்பை உணர்த்தும் கதை. எத்தனை முறை படித்து கேட்டாலும், நினைவில் மங்காத அருள் ஒளியை காட்டும் கதை. அழகாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    வில்வவனேஸ்வரரை தரிசித்துக் கொண்டேன். திருவைகாவூர் கோவில் படங்கள் யாவும் நன்றாக உள்ளது. திருவைகாவூர் கோவிலின் தலவரலாறு பற்றியும் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நமசிவாய வாழ்க!..
    நாதன் தாள் வாழ்க!..
    இமைப்பொழுதும் என்
    நெஞ்சில் நீங்காதான்
    தாள் வாழ்க!..

    ஓம் சிவாய நம ஓம். 🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// சிவராத்திரியின் சிறப்பை உணர்த்தும் கதை. எத்தனை முறை படித்து கேட்டாலும், நினைவில் மங்காத அருள் ஒளியை காட்டும் கதை ///

      ஆன்றோர்கள் சொல்லி வைத்ததை எனது சிற்றறிவுக்குத் தகுந்தாற்போல் தந்திருக்கின்றேன்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  4. சிறப்பான விவரங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  5. புராணக்கதை அறிந்து கொண்டேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி ஜி..

      நீக்கு
  6. ""யாவர்க்குமாம் இறைவர்கொருபச்சிலை"" நன்றாக சொல்லீயுள்ளீர்கள்.சிறுவயதில் கதை கேட்டபோது வியப்புத்தான்.

    திருக்கடையூர் வில்வவனேஸ்வரர் பாதம் பணிந்து வணங்குகின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி..

      நீக்கு
  7. மிக அருமையாக சொல்லி விட்டீர்கள் சிவன் ராத்திரி கதையை.
    இறைவன் விலவவனேஸ்வரர், நாயகி ரட்சகியை வணங்கி பதிகத்தை பாடினேன்.
    படங்கள் எல்லாம் அருமை.
    வளைகை நாயகி அனைவருக்கும் நலங்களை அருள பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. /// வளைக் கை நாயகி அனைவருக்கும் நலங்களை அருள பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.///

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி ..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..