நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மார்ச் 12, 2024

தீர்த்தம் 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 29
செவ்வாய்க்கிழமை

மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய் தொடங்கினார்க்கு ஓர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே.. 
-: தாயுமான ஸ்வாமிகள் :-

தில்லை திருச்சிற்றம்பலம்

மூர்த்தி - எழுந்தருளி யிருக்கின்ற ஸ்வாமி

தலம் - ஸ்வாமி எழுந்தருளியிருக்கின்ற இடம் - ஊர்..

தீர்த்தம் - ஸ்வாமியின் சாந்நித்தியம்..

ஒன்றா உலகனைத்தும் ஆனார் தாமே
ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே
நின்றாகி எங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர்வளிதீ ஆகாசம் ஆனார் தாமே
கொன்றாடுங் கூற்றை உதைத்தார் தாமே
கோலப் பழனை உடையார் தாமே
சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே
திருஆலங் காடுறையுஞ் செல்வர் தாமே.. 6/78/1
-: திருநாவுக்கரசர் :-

சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே.. - என்பது அப்பர் ஸ்வாமிகளின் திருவாக்கு..

தீர்த்தத்தில் மூழ்கி திருத்தலம் சென்று ஈசனை தரிசித்தலே புண்ணியம் எனப்படுவது..

தீர்த்த யாத்திரை பற்றிய குறிப்புகள் தொன்மையானவை. . 
ஆனால் அதன் உட்பொருளை உணர்ந்து நடப்பவர்க்கே  நன்மை..
 
கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண்குமரித்துறை ஆடிலென்
ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே.. 5/99/2
-: திருநாவுக்கரசர் :-

இறைவனையும் இயற்கையையும் உணர்ந்து நடந்து கொள்பவர்க்கே நலனும் நன்மைகளும்!.. என்றுரைக்கின்றார் அப்பர் ஸ்வாமிகள்..


சைவ வைணவ மரபுகளின் வழித் தோன்றல்களுக்கு ஒவ்வொரு நாளும் உதயாதி நாழிகையில் நீராடுவதுடன் தொடங்குகின்றது..

திருத்தலத்தின் தீர்த்தங்கள் - பெரும்பாலும் நதிகளாகவே இருக்கும்..

அதுவன்றி திருக்குளமாக, கிணறுகளாக -  தல வரலாற்றை அனுசரித்து இருக்கக் கூடும்.. 

எனவே அங்கு நீராடுவதைப் பற்றி அங்குள்ள பெரியவர்களை அணுகி கேட்டுத் தெரிந்து கொள்ளவும்..

தீர்த்தங்களில் குறிப்பாக அக்னி தீர்த்தம் எனப்படும் கடலில் நீராடுவதற்கு பகல் பொழுது மட்டுமே.. தர்ப்பணங்கள் எனில்
உச்சி காலத்துக்கு முன்னரே நீராடி முடித்து விட வேண்டும்..

பொதுவாக - சூர்ய உதயத்தில் இருந்து மேற்கில் இறங்கும் வரை தான் உகந்த நேரம்..

ஆறுகளில் நீராடும் பொழுது (நீரோடும் திசையில்) கிழக்கு முகமாக மூழ்கி எழ வேண்டும்.. மேற்கு முகமாக வடக்கு முகமாகவும் மூழ்கி எழலாம்.. தெற்கு முகமாக மூழ்கக் கூடாது.. 

நீரின் வேகத்தைக கவனத்தில் கொண்டு மூழ்கி எழ வேண்டும்.. 

எப்படி மூழ்கி எழுந்தாலும் சூரியனுக்கு  கிழக்கு நோக்கியும் ஈஸ்வரனுக்கு வடக்கு நோக்கியும் பித்ருக்களுக்கு தெற்கு நோக்கியும் அர்க்கியம்  கொடுத்து விட்டு கரையேற வேண்டும்..

ஆற்றில் தெற்கு மேற்கு முகமாக மூழ்கினால் நீரின் வேகம் ஆளைப் புரட்டி நீருக்குள் தள்ளி விடும்.  

நீந்தத் தெரியாது எனில் சமாளிக்க இயலாமல் பெரும் பிரச்னை ஆகி விடும்..



பாபநாசம்
திருநெல்வேலி - பாபநாசம் சிவாலயத்தின் எதிரில் தாமிரபரணியின் போக்கு சரிவானது..
எதிரே உள்ள படித்துறையில் நீரின் ஓட்டமும் அப்படியே.. 

அதற்கும் மேலே உள்ள ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் கோயிலில்  படித்துறை கிடையாது..


ஸ்ரீ சொரிமுத்து ஐயனார் கோயில்

கோயிலை அணைத்தவாறு பாறைகளில் முட்டி மோதி ஓடுகின்ற தாமிரபரணியின் போக்கும் இப்படியே.. 

இங்கெல்லாம் நீர்ப்பெருக்கு எப்போது ஏற்படும் என்பது எவருக்கும் தெரியாது..  இறையருள் துணையிருக்க இதுவரை எவ்வித துன்பமும் ஏற்பட்டதில்லை.. எனினும் நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்..  

மதுரை திருநெல்வேலி - வேறு பல தலங்களில் திருக்கோயிலுக்குள் தீர்த்தக் குளங்கள் அமைந்திருந்தாலும்  அவற்றில் நீராடுதற்கு இயலாது..

தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் சிவகங்கை எனும் திருக்குளம் இருந்தாலும் அங்கே நீராடுவதற்கு அனுமதி உண்டா என்பது தெரியவில்லை..



திரு ஆரூரில் கமலாலய திருக்குளம்
மன்னார்குடியில் ஹரித்ராநதி..
திருமறைக்காட்டில் வேத தீர்த்தம் - எனப் பெரிய திருக் குளங்கள்..
இங்கெல்லாம் மக்கள் நீராடலாம்.. 


திருக்காஞ்சியில் ஸ்ரீ   
அத்தி வரதர் - ஆனந்த புஷ்கரணிக்குள் துயில் கொண்டிருக்கின்றார்..


இன்று மதுரை பொற்றாமரைத் திருக்குளத்தில் குளிக்க இயலாது எனினும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் இக்குளத்தில் மக்கள் நீராடியிருக்கின்றனர்..

கீழ்வரும் பாடல் எட்டாம் வகுப்பில் படித்தது..

புலவர்கள் இருவர்.. இரட்டையர்.. ஒருவர் பார்வைத் திறன் அற்றவர்.. மற்றவர் பாதத் திறன் அற்றவர்.. எனினும் இருவரும் கவித்திறன் மிக்கவர்கள்..

பாதத் திறன் அற்றவரை - பார்வைத் திறன் அற்றவர் தோள்களில் தூக்கிக் கொள்ள, அவர் வழி காட்டுவார்.. 

இப்படியாகப்
பல ஊர்களுக்கும் சென்றிருக்கின்றனர்..


ஒருசமயம் இவர்கள் மதுரைக்கு வந்திருக்கின்றனர்..
பார்வைத் திறன் அற்றவர்
 பொற்றாமரைக் குளத்தில் இறங்கி துணிகளை அலசிய போது  அவரது கையில் இருந்த வேட்டி நீரில் நழுவியிருக்கின்றது.. 

அதைக் கண்ட மற்றவர் விவரம் சொல்ல அப்போது எழுந்த பாடல்..

வேட்டிக்கு கலிங்கம் என்றும் பெயர் இருந்திருக்கின்றது அந்தக் காலத்தில்..

பாடல் எளிமையானது என்றாலும் விளக்கம்..

அப்பு, தப்பு, கலிங்கம்,  லிங்கம் எனும் வார்த்தை நயங்கள்..

அப்பு - நீர்,
தப்பு - அடித்தல், துவைத்தல், தப்பித்தல்.
கலிங்கம் - வேட்டி,
லிங்கம் - இறைவன்,

வேட்டியை நீரில் நனைத்து அடுத்தடுத்து (தப்பினால்) அடித்துத் துவைத்தால் அது நம்மிடமிருந்து தப்பித்துக் கொள்ளாதோ!... நம்மிடமிருந்து இந்த கலிங்கம் (வேட்டி) போனால் என்ன?.. நமக்கு மாமதுரை சொக்கலிங்கம் பாதுகாப்பாக இருக்கின்றாரே!..

அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாமதனை
தப்பினால் நம்மையது தப்பாதோ இப்புவியில்
இக்கலிங்கம் போனால் என்! ஏகலிங்க மாமதுரை
சொக்கலிங்கம் உண்டே துணை!..
**

இறைவனே இயற்கை
இயற்கையே இறைவன்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. மிகவும் சுவாரஸ்யமான தொகுப்பு. தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ...

      நீக்கு
  2. அருமையான பதிவு.
    நிறைய செய்திகள் பகிர்ந்து இருக்கிறீகள்.
    படங்கள் அருமை. சொரிமுத்து ஐய்யனார் கோயில் பார்த்தது (சிறு வயதில் போனது) நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ...

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    நல்ல அருமையான பதிவு. கோவில் சம்பந்தபட்ட நீர்நிலைகள் பற்றி விளக்கி கூறியதும், ஆற்றில் எப்படியெல்லாம் நீராட வேண்டுமென விளக்கி கூறியிருப்பதும் பயனுள்ள தகவல்கள்.தெரியாத தகவல்களை தெரிந்து கொள்ளும் விதத்தில் பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறது.

    தாமிரவருணி சொரி முத்து நயினார் கோவிலுக்கு ஐந்து வருடங்களுக்கு முன் குழந்தைகளுடன் சென்றுள்ளோம். ஆங்காங்கே நீரோட்டங்கள், வழுக்குப்பாறைகள் என நடப்பதற்கே கவனம் வேண்டும். அப்படியும் ஓரிடத்தில் வழுக்கி விழுந்து சில காயங்களுடன் வந்து சேர்ந்தேன். அதை மறக்க இயலாது.

    பாத, பார்வை வலிமையற்றவர்களின் பாடல் அருமை. அவர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன்.
    இயற்கையே இறைவன். இறைவன் இயற்கையானவன். உண்மையான வாசகம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. /// அப்படியும் ஓரிடத்தில் வழுக்கி விழுந்து சில காயங்களுடன் வந்து சேர்ந்தேன். அதை மறக்க இயலாது.///

      அடடா..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ...

      நீக்கு
  4. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  5. நீராடல் பற்றி நல்ல தகவல்கள்

    . காஞ்சி அத்திவரதர் ஆனந்த புஷ்கரணி மட்டும் தரிசித்திருக்கிறேன்.
    எல்லாம் அவனருள்.

    பதிலளிநீக்கு
  6. எல்லாம் அவனருள்..

    அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி மாதேவி ...

    பதிலளிநீக்கு
  7. தீர்த்தம் - பதிவு நன்று. பல கோயில்களின் தீர்த்தங்கள் இன்றைக்கு இருக்கும் நிலை பார்க்கும்போது வேதனை மட்டுமே மிஞ்சும்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..