நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மார்ச் 11, 2024

கழிப்பாலை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 28
 திங்கட்கிழமை

ஒருங்கிணைந்திருந்த தஞ்சை மாவட்டம் சம தளமான நிலப்பரப்பு ..


கல்லணையில் இருந்து  கிழக்கு முகமாக வங்கக் கடல் வரை வடக்கு தெற்காக முக்கோணமாக விரிந்திருக்கின்றது மேடு, மலைகள் அற்ற நிலப்பரப்பு ..

காவிரியாள் கடலுடன் கலப்பதற்கு முன் - சோழ மண்டலத்தில் பல கிளைகளாகப் பிரிந்து
வளமாக்குகின்றாள்..


தான் கொண்டு வந்த 
களிமண், மணல்
மற்றும் வண்டல் 
 அனைத்தையும் விட்டு விட்டு கடலுக்குச் செல்கின்றாள்..

வண்டல் வடிநிலம் எனப்படும் - இப்பகுதி 
நீர் வளம் நிறைந்து இருப்பதால் இங்கு நெல் சாகுபடி அதிகம்.. மற்ற பயிர்களும் செழித்து வளரும்..

வெள்ளையன் வந்து இந்த நிலத்தைப் பார்த்து விட்டு டெல்டா என்றான்..

டெல்டா என்றால் அவனது மொழியில் முக்கோண வடிவ சமதளமான  நிலப்பரப்பு.. ஆற்றின் வடி நிலம்..

வடி நிலத்தின் பெருமையை நம் முன்னோர் அறிந்திருந்தனர்..

அதனால் தானே - ஞான சம்பந்தப் பெருமான் -
காவிரியின் வண்டல் வடிநிலத்தை இப்படியெல்லாம் போற்றுகின்றார்..

வண்டலார் கழனிக் கலந்து மலர்ந்த தாமரை.. (2/50/5)
(திரு ஆமாத்தூர்)

வண்டல் அங்கமழ் சோலை மா மறைக்காடு..  (2/91/10)

வண்டல் வாரி மிண்டு நீர் வயற் செந்நெல் (2/101/10) (திரு ஆரூர்)

வண்டல் மணல் கெண்டி மட நாரை 
விளையாடு மயிலாடுதுறையே.. (3/70/9)

 ஆனால் -

வெள்ளையன் வந்து தான் எல்லாருக்கும் கல்வி அறிவு உண்டாயிற்று.. நாடு நலமாயிற்று என்றெல்லாம் இங்கே அடி வருடிக் கிடக்கின்றனர் பலர்..

நாமும் நமது பெருமை மிகு - கழி, கழிமுகம், வண்டல், வடிநிலம் - என்ற சொற்களை விட்டு விட்டு 'டெல்ட்டா' என்று சொல்லிக் கொண்டு திரிகின்றோம்..


தஞ்சை மாவட்டத்தின் வரைபடத்தைப் பார்த்தாலே - முக்கோண வடிவ சமதளமான வண்டல் வடி நிலப்பரப்பு விளங்கும்..
 
பழைய தஞ்சை மாவட்டம்
ஆறு கடலில் கலக்குமிடத்தை ஒட்டிய நிலப்பகுதிக்குக் கழி - கழிமுகம் என்று பெயர்.

கழி - கழனி (வயல்) என்பன தொடர்புடைய சொற்கள்..

உப்பங்கழி என்பது கடலைச் சார்ந்துள்ள பகுதி.. இதுவும் தேவாரத்தில் பேசப்படுகின்றது..

திருக்கழிப்பாலை, திரு இடைக்கழி என்றே தலங்கள் இருக்கின்றன.. 


காவிரியின் வடி நிலப்பரப்பைக் குறிக்கும் கழி , கழனி எனும் சொற்கள் மூவர் திருப்பதிகங்களிலும் பல பாடல்களில் காணப்படுகின்றன..

கழனி, கழி, இடைக்கழி, கடைக்கழி, உப்பங்கழி என்று இருந்திருக்கலாம்.. 

நாம்  பலவற்றைத் தொலைத்து விட்டோம்..

காவிரியின் கடைமடை (கடைக்கழி) மயிலாடுதுறை பூம்புகார் சாலையில் இருக்கின்றது..

தலம்
திருக்கழிப்பாலை


காவிரி வடகரையின் திருத்தலம்.. 
காமதேனு வழிபட்ட சிறப்பினையுடையது..  


இறைவன் 
ஸ்ரீ பால் வண்ணநாதர்

அம்பிகை 
ஸ்ரீ வேதநாயகி

தீர்த்தம் கொள்ளிடம்
தலவிருட்சம் வில்வம்

மூவராலும் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்..


மண்ணி னார்மலி செல்வமும் வானமும்
எண்ணி நீரினி தேத்துமின் பாகமும்
பெண்ணி னார்பிறை நெற்றியொ டுற்றமுக்
கண்ணி னாருறை யுங்கழிப் பாலையே. 3/44/7
-: திருஞானசம்பந்தர் :-

நங்கையைப் பாகம் வைத்தார் 
ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார் 
ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையின் யாழும் வைத்தார் 
தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார் 
கழிப்பாலைச் சேர்ப்பனாரே.. 4/30/1
-: திருநாவுக்கரசர் :-

எங்கேனும் இருந்துன் அடியேன் உனைநினைந்தால்
அங்கே வந்து என்னொடும்  உடனாகி நின்றருளி
இங்கே என்வினையை அறுத்திட்டு  எனையாளும்
கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.. 7/23/2
-: சுந்தரர் :-

கழி நிலம் வாழ்க
கழிப்பாலை வாழ்க..

நன்றி
திருப்பதிகப்பாடல்கள்
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

11 கருத்துகள்:

  1. நல்லபல தகவல்களை தேடி கொடுத்து இருக்கிறீர்கள்.  நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. நல்ல தகவல்கள். ஆனால் இந்த முறை காவிரி பொய்த்துவிடும் எனத் தோன்றுகிறது. இங்கே தேவையான தண்ணீர் இல்லை என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இப்படியான சந்தேகம்..

      நெல்லை அவர்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கழி நிலம் பற்றிய அருமையான விளக்கங்கள். திருக்கழிப்பாலை எம்பிரானை வணங்கிக் கொண்டேன். நால்வரில் மூவர் பாடியதை படித்து தெரிந்து கொண்டேன். தெரியாத பல விஷயங்களை தேடித்திரட்டித்தரும் தங்கள் அருமையான எழுத்துக்கு பல கோடி நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// திருக்கழிப்பாலை எம்பிரானை வணங்கிக் கொண்டேன்.///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  4. கழி நிலம் நல்ல பல தகவல்களுடன் தந்துள்ளீர்கள்.

    திருக்கழிப்பாலை இறைவனை தரிசித்துக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// திருக்கழிப்பாலை இறைவனை தரிசித்துக் கொண்டோம்.///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி ..

      நீக்கு
  5. பதிவு அருமை. நல்ல விளக்கமான தகவல்கள்.
    திருக்ழிப்பாலை தேவாரத்தை பாடி இறைவனை வணங்கி கொண்டேன். படங்கள் நேரில் தரிசனம் செய்த மனநிறைவை தந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // திருக்கழிப்பாலை தேவாரத்தை பாடி இறைவனை வணங்கி கொண்டேன். //

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ...

      நீக்கு
  6. தகவல்கள் அனைத்தும் நன்று. எத்தனை எத்தனை தகவல்கள் நம் இலக்கியங்களில்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..