நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மார்ச் 08, 2024

சிவ சிவ 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 25
 வெள்ளிக்கிழமை

இன்று
மஹா சிவராத்திரி


செங்கணானும் பிரமனும் தம்முளே
எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலர்
இங்குற்றேன் என்று லிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே.. 5/95/11
-: திருநாவுக்கரசர் :-


" மூண்டு முளைத்தெழும் வித்தெல்லாம் சிவலிங்கம்.. " என்றனர் ஆன்றோர்..

இன்று மாலை தொடங்கி விடியும் வரை ஸ்ரீ மஹா சிவராத்திரி..

நான்கு கால (6:00 - 9:00, 9:00 - 12:00, 12:,00 - 03:00, 3:00 - 6:00) அபிஷேகங்களுடன் பூஜைகள்.. 

நமது சிவாலயங்களில் நள்ளிரவு வழிபாடுகள் இன்று ஒரு நாள் மட்டுமே.. 

ஒரு சமயம் திருக்கயிலாயத்தில் எம்பெருமான் அம்பிகையுடன் அத்தாணி மண்டபத்தில் திருக்காட்சி நல்கியபோது நாகராஜன் குடையாக நின்றிருந்தான்.. 

கணபதியும் கந்தனும் வணங்கிய பிறகு
தேவர்களும் முனிவர்களும் அரம்பையர்களும் யட்சர்களும் கின்னரர்களும் அம்மையப்பனின் அடித்தாமரையில் வீழ்ந்து பணிந்து கொண்டிருந்தனர்..

ஈசனுக்குப் பின்னால் நின்றிருந்த நாகராஜனின் நெஞ்சில் இறுமாப்பு விரிந்தது.. தலை கனத்தது..

அதே விநாடியில் - தலை குப்புற அதல பாதாளத்தில் விழுந்தான்.. விழுந்த வேகத்தில் தலை நூறாகத் தெறித்துப் போனது..

பாதாளத்தில் இருந்து எழுந்து வந்தவனிடம் அன்பு கொண்டு விநாயகப் பெருமான் அருளினார்.. 

சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் நான்கு தலங்களில் சிவபூஜை செய்தால் உனது பழியும் பாவமும் தீரும் என்று..

அதன்படி முதற் காலத்தில் திருக் குடந்தைக் கீழ்க்கோட்டம் இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரம் மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம்  நான்காம் காலத்தில் திருநாகை (சில குறிப்புகளில் திரு நாகூர்) என, வழிபட்டு நின்றான்..

எம்பெருமானும் அவனை மன்னித்து அருள் செய்தாக ஐதீகம்..

குடந்தைக் கீழ்க்கோட்டம் என தேவாரத்தில் சொல்லப்பட்டுள்ள திருக்கோயில் கும்பகோணத்திலுள்ள ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில்..

திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகேஸ்வரன் கோயில்..

திருப்பாம்புரம் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் கோயில்..

நாகப்பட்டினம்
ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் கோயில்..


நள்ளிரவுக்குப் பின் மூன்றாவது காலத்தில் அம்பிகை ஈசனை வழிபட்டதாக ஐதீகம்..

தஞ்சை ராஜராஜேஸ்வரத்தில் மூன்றாம் கால பூஜைக்குப் பின் ஸ்ரீ பிரஹதீஸ்வரர் அம்பிகையுடன் திருவீதி எழுந்தருள்வார்..

நான்கு காலங்களிலும் இத்திருக்கோயில்களை சிந்தித்து நலம் பெறுவோம்..
 
குடந்தைக்
கீழ்க்கோட்டம்


இறைவன்
ஸ்ரீ நாகேஸ்வரஸ்வாமி
அம்பிகை
ஸ்ரீ பிரஹந்நாயகி
தீர்த்தம்
மகாமக தீர்த்தம்
தலவிருட்சம்
வில்வம்

காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்
காமன் எழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்
ஆலதனில் அறம்நால்வர்க்கு அளித்தார் போலும்
ஆணொடுபெண் அலியல்லர் ஆனார் போலும்
நீலஉரு வயிரநிரை பச்சை செம்பொன்
நெடும்பளிங்கு என்று அறிவரிய நிறத்தார் போலுங்
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்
குடந்தைக் கீழ்க் கோட்டத்தெம் கூத்த னாரே..6/75/5
-: திருநாவுக்கரசர் :-
**
திருநாகேஸ்வரம்


இறைவன்
ஸ்ரீ நாகேஸ்வரஸ்வாமி
அம்பிகை
ஸ்ரீ கிரிகுஜாம்பிகை
தீர்த்தம்
சூரிய தீர்த்தம்
தலவிருட்சம்
சண்பகம்

கொம்பனாள் பாகர் போலும் கொடியுடை விடையர் போலும்
செம்பொனார் உருவர் போலும் திகழ் திருநீற்றர் போலும்
எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை
நம்புவார்க்கன்பர் போலும் நாகஈச்சரவனாரே..4/66/4
-: திருநாவுக்கரசர் :-
**
திருப்பாம்புரம்


இறைவன்
ஸ்ரீ சேஷபுரீஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ வண்டார்குழலி
தீர்த்தம்
சேஷ தீர்த்தம்
தலவிருட்சம்
வன்னி

சீரணி திகழ் திருமார்பில் வெண்ணூலர் 
திரிபுரம் எரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர் 
மான்மறி ஏந்திய மைந்தர்
காரணி மணிதிகழ் மிடறுடை அண்ணல் 
கண்ணுதல் விண்ணவர் ஏத்தும்
பாரணி திகழ்தரு நான்மறையாளர் பாம்புர நன்னகராரே..1/41/1
-: திருஞானசம்பந்தர் :-
**
நாகைக்காரோணம்


இறைவன்
ஸ்ரீ காயாரோணேஸ்வரர்
அம்பிகை
ஸ்ரீ நீலாயதாட்சி
தீர்த்தம்
தேவ தீர்த்தம்
தலவிருட்சம்
மா

வேம்பினொடு தீங்கரும்பு விரவி எனைத் தீற்றி
விருத்தி நான் உமை வேண்டத் துருத்திபுக்கு அங்கிருந்தீர்
பாம்பினொடு படர்சடைகள் அவை காட்டி வெருட்டிப்
பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும்
திருவாரூர் புக்கிருந்த தீவண்ணர் நீரே
காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும்
கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீரே..7/46/2
-: சுந்தரர் :-


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவது  இனியே..
-: மாணிக்கவாசகர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

12 கருத்துகள்:

  1. பெரிய வி ஐ பி தந்தையுடன் ஒரு குழந்தை நடக்கிறது.  மக்கள் எல்லோரும் தந்தைக்கு தலை வணங்குவதைப் பார்க்கும் குழந்தை  தாக்கு(ம்)தான் அனைவரும் தலை வணங்குகிறார்கள் என்று நினைத்தால் தந்தை அந்தக் குழந்தையை தூக்கிக் கடாசிடுவாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாகராஜனின் அகந்தை இங்கு சொல்லப்பட்டுள்ளது...... குழந்தை என்ற பாவனை இங்கே பொருந்தாது..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. சிவராத்திரி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. மகா சிவராத்திரிக்கு சிறப்பான பதிவு. அழகான படங்கள்.
    நால்வர் பாடிய பாடல்களை பாடி சிவன் , பார்வதியை வணங்கி கொண்டேன்.
    சிவலாயங்களில் மகா சிவன் ராத்திரி வழி பாடு சிறப்பாக இருக்கும்.
    நாம் சித்தத்தில் சிவனை வைத்து வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// சித்தத்தில் சிவனை வைத்து வணங்குவோம்.///

      தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய சிவராத்திரி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. 'சிவராத்திரி" நாளில் நல்லபகிர்வு . அனைவருக்கும் அவனருள் கிடைக்க பிரார்த்திப்போம்.

    "நான்கு காலங்களிலும் இத்திருக்கோயில்களை சிந்தித்து நலம் பெறுவோம்" நன்றாக சொன்னீர்கள் 'அவனருளால் அவள்தான் வணங்குவோம்""

    "சிவ சிவ சிவ சிவாய நம ஓம்"

    பதிலளிநீக்கு
  6. இந்த நான்கு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனை வணங்கியது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்திய அருமையான பதிவு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. சிவராத்திரி தின வாழ்த்துகள் துரை அண்ணா. எல்லோரும் நல்ல உடல் நலம் பெற்று மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை இன்றைய சிவராத்திரி பதிவு படிக்க நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் அழகுடன் அருமையாக உள்ளது. அம்மையப்பரை மனமுருக பணிந்து வணங்கி கொண்டேன். அருமையான பதிவை படித்ததும் சிவசக்தியாக காட்சிதரும் ஈசனருள் அனைவருக்கும் அன்போடு கிடைத்திட பிராத்தனைகள் செய்து கொண்டேன். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. சிவராத்திரி அன்று சிறப்பான தகவல்களுடன் பகிர்வு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. பார்க்க வேண்டிய நான்கு கோயில்கள் - ஒன்று மட்டும் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..