நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 05, 2023

விறல் மாரன்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 19
 செவ்வாய்க்கிழமை

கார்த்திகையும் சஷ்டியும் கூடி 
வந்திருக்கின்ற நாள்..


இன்று
திருச்செந்தூர்
திருப்புகழ்

தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த ... தனதான
 
அங்கே 
ஆண்டாளின் மாலை
கேட்கப்பட்டது..
இங்கே
அறுமுகனின் மாலை
கேட்கப்படுகின்றது..


விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த
மிகவானில் இந்து ... வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல ஒன்ற 
வினைமாதர் தந்தம் ... வசைகூற

குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட 
கொடிதான துன்ப ... மயல்தீர

குளிர்மாலை யின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து ... குறுகாயோ..

மறிமான் உகந்த இறையோன்ம கிழ்ந்து 
வழிபாடு தந்த ... மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல்  எறிந்த ... அதிதீரா

அறிவால் அறிந்துன்  இருதாள் இறைஞ்சும் 
அடியார் இடைஞ்சல் ... களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல்  அமர்ந்து 
அலைவாய் உகந்த ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 

எவராலும் வெற்றி கொள்ள இயலாத  
வீரனாகிய மன்மதன் தனது மலர் அம்புகளை 
என் மீது எய்ததால்

கோடையின் வெயில் போல நிலவு காய்கின்றது..
மிதமான தென்றல் காற்றும் தழல் போல வீசுகின்றது..
வீண்வம்பு பேசுகின்ற பெண்கள் ஒன்று கூடி 
தமது வசை மொழிகளைப் பேசிக் கொண்டிருக்க -

குறவர் குன்றின் வள்ளி நாச்சியார் போன்ற 
பேதைப் பெண்ணாகிய - நான் அடைந்த 
கொடிய துன்ப மயக்கம் தீரும்படிக்கு, 

குளிர்ந்திருக்கும் 
மாலைப் பொழுதினில் நீ வந்து உன் மார்பில் தவழ்கின்ற மலர் மாலையை எனக்குச் சூட்டி எனது குறை தீரும்படி என்னை அரவணைத்துக் கொள்ள மாட்டாயா?..


மான் கன்றினை விருப்பமுடன் கரத்தில் ஏந்தியிருக்கின்ற
சிவபெருமான் மனமகிழ்ந்து உன்னை வழிபடும் முறையினை (மக்களுக்கு) அருளிச் செய்யும் அளவுக்குத் திகழ்கின்ற மதியாளனே..

கிரெளஞ்ச மலை பொடியாகிச் சிதறும்படியும்
அலை கடல் அஞ்சி அலறும்படியும் அழகு வேலினை எறிந்து போர் புரிந்த அதிதீரனே..

நீ கொடுத்த அறிவால் உன்னை அறிந்து கொண்டு உனது இரு தாள்களையும் வணங்குகின்ற அடியவர்களின் அல்லல்களைக் களைபவனே.. 

செம்பொன் போலப் பிரகாசமாகத் திகழும் மயில் வாகனத்தில் அழகுடன் அமர்ந்து - அலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் விளங்குகின்ற பெருமாளே!..
**


இந்தத் திருப்புகழில்
மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து 
வழிபாடு தந்த மதியாளா.. 
- என்று அருணகிரி நாதர் பாடுகின்றாரே எதனால்!..

கார்த்திகைப் பெண்களிடம் தவழ்ந்து கொண்டிருந்த தமது
மழலைகளைக் காண்பதற்காக சரவணத்திற்கு எழுந்தருளினர் அம்மையும் அப்பனும்.. 

அவர்களைப் பணிந்து நின்றனர் 
கார்த்திகைக் கன்னியர்.. 

அப்போது ஈசன் - 
" சிவகுமரனை நீங்கள் போற்றி வளர்த்த காரணத்தால் இவன் கார்த்திகை மைந்தன் எனப்படுவான்.. மேலும் கார்த்திகை நட்சத்திர நாளில் கந்தனை மகிழ்வுடன் நினைந்து நோன்பிருப்போர் தமது குறைகளைத் தீர்த்து அவர்க்கு முக்தி நலம் அருள்வோம்!..
- என்று அருள் புரிந்தார்..


இதனைத் தான் - 
மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து 
வழிபாடு தந்த மதியாளா.. 
- என்று அருணகிரி நாதர் பாடுகின்றார்..

விறல் மாரன் ஐந்து - எனும் திருப்புகழ் 
சில ஆண்டுகளாகத் தான் பழக்கம்..

ஆனால், 
" கந்தனை நீர் " - எனும் கந்த புராணத் திருப்பாடலை 
நாற்பது ஆண்டுகளுக்கு முன் - புலவர் கீரன் அவர்களது 
புராணச் சொற்பொழிவில் கேட்டிருக்கின்றேன்..  

கந்த புராணத்தில் இருந்து அந்தப் பாடலைத் 
தேடியெடுத்து இன்று தந்திருக்கின்றேன்..

கந்தன் தனை நீர்போற்றிய கடனால் இவன் உங்கள் மைந்தன் எனும் பெயராகுக மகிழ்வால் எவரேனும் 
நுந்தம் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர் தந்தங் குறை முடித்தே பரந்தனை நல்குவம் என்றான்.. 30
(உற்பத்தி காண்டம் - சரவணப் படலம்)

முருகா முருகா..
முருகா முருகா!.
***

12 கருத்துகள்:

  1. முருகனைப் பணிவோம். முக்தி பெறுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. திருச்செந்தூர் திருப்புகழும் அதன் பொருளும் தெரிந்து கொண்டேன், துரை அண்ணா
    பல வருடங்களுக்கு முன் புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவில் கேட்ட கந்தப்புராணம் பாடலை தேடி எடுத்துப் பகிர்ந்தது சிறப்பு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  3. முருகா சரணம்
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. நாங்களும் இப்போது கொஞ்சநாளாக விறல் மாறன் ஐந்து பாடலை பாடி வருகிறோம் கூட்டு வழிபாட்டில்.

    பாடலும், விளக்கமும் பகிர்வுக்கு நன்றி.
    கிருத்திகை அன்று முருகன் தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முருகா சரணம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  5. விறல்மாரன் திருப்புகழ்ப் பெருமையும் பொருளூம் பகிர்ந்தமைக்கு நன்னி. புலவர் கீரனின் கந்தபுராணச் சொற்பொழிவு அதிகம் கேட்டதில்லை. வில்லி புராணம் தான் கேட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  6. கந்தபுராணம் எனில் வாரியார் ஸ்வாமிகள் தான்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..