நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 26, 2024

ஞான சம்பந்தம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 13 
ஞாயிற்றுக்கிழமை


திருமறைக்காடு..

அலைகள் புரள்கின்ற வங்கக் கடலின் பேரழகில் பெருந்தகை இருவரும் திளைத்திருந்த வேளையில் ஆள் அரவம் கேட்டு திரும்பிப் பார்க்க -
திருமடத்தின் அடியார்களுடன் வந்திருந்த  வீரர்கள் " சிவாய திருச்சிற்றம்பலம் "  என்றவாறு தண்டனிட்டு வணங்கினர்..

பெரியவராகப் பொலிந்தவர் திருநீறு வழங்கினார்..

மீன் கொடி தாங்கி நின்ற அவர்களில் தலைமை வீரனாக விளங்கியவன் - தன் வசமிருந்த ஓலைச் சுருளினைப் பணிவிலும் பணிவாக இளைய பிரானிடம் சமர்ப்பித்தான்...

செங்கரம் நீட்டி அதனைப் பெற்றுக் கொண்ட இளைய பிரான் திருமுகத்தில் புன்னகை.. 

புன்னகையின் பொலிவு மாறாமல் அருகிருந்த பெரிய பிரான் திருமுகத்தை நோக்கி,

" அப்பர் ஸ்வாமிகளே.. வழுதியின் நாடு வருக என்று அழைக்கின்றது.. " - என்று மொழிந்தார்..

அது கேட்ட அப்பர் ஸ்வாமிகளின் திருமுகத்தில் மகிழ்ச்சியும் கலக்கமும் ஒருசேரத் தோன்றின..

" ஆயினும், நாளும் கோளும் நல்லனவாக இல்லையே..
அங்கிருப்போர் பெரிதும் இன்னல்  விளைப்பவர் ஆயிற்றே.. " 

பதற்றமும் தடுமாற்றமும்
நிறைந்திருந்தன ஸ்வாமிகளின் திருவாக்கில்..

சுண்ணாம்பு நீற்றறையும், நாக விஷத்துடன் கூடிய வஞ்சனைச் சோறும், இடறுவதற்கு ஏவி விடப்பட்ட மத களிறும், கல்லினொடு பிணைத்து கடலில் இறக்கிய  வன்மமும் நினைவுக்குள் வந்த நொடியில்,


வேயுறு தோளிபங்கன் விடம் உண்ட 
கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் 
அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன 
வெள்ளி சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறுநல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியார் அவர்க்கு மிகவே.. 2/85/1

ஞான சம்பந்தப் பெருமானின் திருவாக்கில் இருந்து திருப்பதிகம் ஒன்று மலர்ந்து பிரபஞ்சப்பெருவெளி எங்கும் நிறைந்தது...

" அம்மையப்பன் திருவருள் துணை இருக்க அடியார் நெஞ்சகத்தில் அச்சமும் கலக்கமும் எதற்கு?.." - என்று திருவாய் மலர்ந்த ஞானசம்பந்தப் பெருமான் நாவுக்கரசரைப் பணிந்து வணங்கினார்..

மறுநாள் உதயாதி நாழிகையில் - குதிரை வீரர்கள் முன்னே செல்ல, ஞானசம்பந்தப் பெருமானின் பல்லக்கு  ஆலவாய் எனப்பட்ட கடம்ப வனத்தை  நோக்கி விரைந்து கொண்டிருந்தது..

ஆலவாய் நகர எல்லையில் பூரண பொற் கும்பங்களுடன் எதிர்கொண்டழைத்தார் பாண்டி மாதேவியாகிய மங்கையர்க்கரசியார்..

அவருக்கென திருமடம் அமைக்க உத்தரவாகியது..
தலைமை அமைச்சராகிய குலச்சிறையார் முன்னின்று அவ்வண்ணமே திருமடம் அமைத்துத் தந்தார்.. 

ஆனால், அன்றிரவு அத்திருமடம் தீக்கிரையானது..

நீதியும் நேர்மையும் வீழ்ந்திருப்பதைக் கண்ட ஞான சம்பந்தப் பெருமான் புன்னகையுடன்,
" பையவே சென்று பாண்டியர்க்கு ஆகுக.. " - என்று மொழிந்தார்..

அந்த அளவில் திருமடத்தில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த தீயின் வெம்மை - மன்னனாகிய கூன் பாண்டியனைப் பற்றியது..

வெப்பு நோயைத் தீர்ப்பதற்கு முயன்ற சமணர்கள் தங்களது மணி மந்த்ர ஔஷதங்கள் அனைத்திலும் தோல்வியுற்றனர்.. 

நல்லடியார் திருமடத்திற்கு தீ மூட்டப்படுவதைத் தடுக்க இயலாத மன்னனை வெப்பு நோய் வாட்டியது..

ஞான சம்பந்தப் பெருமானைச் சரணடைந்தான் கூன் பாண்டியன்...

திருஞானசம்பந்தப் பெருமானும் மன்னனைப் பொறுத்தருளி திரு ஆலவாய் திரு ஆலயத்தின் மடைப்பள்ளியில் இருந்து சாம்பலைத் தருவித்தார்.. 

மன்னனின் உடல் முழுதும் பூசி விட்டார்.. அந்த அளவில் மன்னனைப் பற்றி இருந்த வெப்பு நோயும் தணிந்து அடங்கி மறைந்து போனது..

மந்திரம்  ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாய்உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.. 1

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.. 2

முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.. 3

காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.. 4

பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே.. 5

அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.. 6

எயிலது வட்டது நீறு இருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திரு ஆலவாயான் திருநீறே.. 7

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே.. 8

மாலொடு அயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் ஆல வாயான் திருநீறே.. 9

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்திசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே.. 10

ஆற்றல் அடல்விடை யேறும் ஆல வாயான் திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.. 2/66/11

அனல் வாதம், புனல் வாதம் - என வென்றெடுத்த சிவ சமயம் மீண்டும் தழைத்தெழுந்தது..

கூன் பட்டிருந்த பாண்டியனும் நின்ற சீர் நெடுமாறன் 
என்றானார்..

பாண்டிய நாட்டில் சைவ சமயத்தை மீட்டெடுத்த ஞான சம்பந்தப் பெருமான் சிவ சாயுஜ்யம் அடைந்த வைகாசி மூலம் நேற்றும் இன்றுமாக..

திருஞானசம்பந்தரின் திருக்கரம் பற்றிய  
தோத்திர பூர்ணாம்பிகை,
சிவபாத இருதயர்,
திருநீலகண்ட யாழ்ப்பாணர்,
மதங்க சூளாமணியார்
முருக நாயனார், திருநீலநக்கர், 
நம்பாண்டார் நம்பி முதலான பெருமக்கள் 
சிவஜோதியுள் கலந்த நாள் வைகாசி மூலம்..

அவர் தம் திருவடிகள் போற்றி போற்றி..
**

ஞானசம்பந்தப் பெருமான் 
திருவடிகள் போற்றி..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. உருக வைக்கும் புராணம்,.  

    பதிலளிநீக்கு
  2. ஞானசம்பந்தப்பெருமான்படித்தும். நீக்குவது பாடல் சிறுவயதில் படிக்கும்போது மிகவும் விரும்பிப் படித்தோம்.

    பெருமான் பாதம் போற்றி நிற்போம்.

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருஞான சம்பந்தரைப் பற்றிய பக்திப் புராணங்களை படித்து தெரிந்து கொண்டேன். இறைவன் மேல் அளவு கடந்த பக்தி வைத்து தம் வாழ்வில் நன்மை கண்ட சிவனடியாரை பணிவுடன் தொழுதேன். பாடலை பாடி, நால்வரின் அருளாசிகள் நமக்கு கிடைத்திட பிரார்த்தித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. கோளறு பதிகம், மந்திரமாவது நீறு பதிகம் அடிக்கடி பாடும் பதிகங்கள். பதிகங்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன். பதிவு அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..