நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 05, 2013

ஆடி அமாவாசை

வானவியல் கணிப்பின் படி, சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற காலம் அமாவாசை.  

6.8.2013 அன்று ஆடி அமாவாசை.


சூரியன் பிதுர் காரகன். ஆண்மை, ஆற்றல், வீரம் – இவற்றைத் தர வல்லவன். சந்திரன் மாதுர் காரகன். தெளிந்த அறிவு, உற்சாகம், இன்பம் – இவற்றைத் தர வல்லவன். 

அமாவாசை நாட்களில்தான், மறைந்த முன்னோர்கள் - தங்கள் சந்ததியினரின் வழிபாடுகளை ஏற்க பூவுலகிற்கு வருகின்றனர் என்பது நம்பிக்கை. 

சூரியனின் தென் திசைப் பயணம்  எனும் தட்க்ஷிணாயனத்தின் தொடக்கமான ஆடி மிகப் புனிதமானது. எல்லா அமாவாசை தினங்களும்  சிறப்பானவை தான். எனினும் தட்க்ஷிணாய ஆடி மற்றும் உத்ராயண தை அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்தவை.

பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள், மேற்குறித்த தினங்களில் தர்ப்பணம் செய்தாலே - ஆண்டு முழுவதும் அவர்கள் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்பது பெரியோர் வாக்கு.

இராமேஸ்வரம்
அமாவாசையை முன்னிட்டு - ராமேஸ்வரம், உவரி, வேதாரண்ய கடற்கரை, நெல்லை பாபநாசத்தில் தாமிரவருணி, திருவையாற்றில் காவிரி ஆகிய தீர்த்தங்களில் புனித நீராடுவதையும் தர்ப்பணம் செய்வதையும் பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.  

தாமிரபரணி
பூர்வ ஜென்ம வினையால் பாதிக்கப்படுவோர் -  இந்நாளில் கடலிலோ, காவிரி தீர்த்தத்திலோ நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவர் என்பது நம்பிக்கை.

ஆடி அமாவாசையில் முன்னோருக்குத் தர்ப்பணம்  செய்ய - ஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் வழிபட்ட வேதாரண்யம் மிகவும் சிறப்பானது.  
 
திருக்கோவிலுக்குள் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடினால், கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகளில் நீராடியதற்கு சமம்.

மணிகர்ணிகை தீர்த்தம்
இதில் நீராடியவர்கள், தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்வதுடன், தங்கள் முன்னோர் செய்த பாவங்களுக்கும் சேர்த்து, நிவர்த்தி பெறலாம். பிரம்மஹத்தி போன்ற கொடிய பாவங்களும் கூட நீங்கும் என்பது ஐதீகம்

பல ஆண்டுகளாக யோகம், தானம், தவம் செய்த பலன்களையும் அடையலாம்.

திருக்கோவிலின் எதிரே உள்ள கடல் - ஆதி சேது எனப்படுகின்றது  

ராமேஸ்வரத்துக்கு சமமானது வேதாரண்யம். இங்கே கடல் நீராடுவது ராமேஸ்வரத்தில் நூறு தடவை நீராடிவதற்கு சமம் என்பர்.

அருகில் உள்ள கோடியக்கரை கடல் தீர்த்தமும் மிகவும் புனிதமானது.

திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடக்கூடாது என்பர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதே அதன் காரணம். அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்களில் ஆடம்பரமான சுப நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்பது விதி.


அமாவாசை நாளில் நம் முன்னோரை வழிபடுவதுடன் - ஏழைகளுக்கு உடுத்தவும் உண்ணவும்  கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தீய வினைகள் விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.

காகத்திற்கு சோறு வைத்தல் தொன்றுதொட்டு வரும் பழக்கமாகும்.   

நாம் வைத்த உணவை காகம் தின்றால் பித்ருக்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள் என்றும், உணவை காகம் தீண்டா விட்டால் அவர்க்கு ஏதோ குறை இருப்பதாகவும் கருதி , அதனைத் தீர்த்து வைக்கவும் முயற்சிப்பர்.

காகம் - பிற காக்கைகளையும் கரைந்து அழைத்து, உணவு உண்ணும். பழக்கம் உடையது. உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

உவரி சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயில்
அமாவாசை தினத்தில் - பிதுர் தர்ப்பணம், அன்னதானம், சிவாலய தரிசனம், என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.

பிதுர்களை சிரத்தையோடு வழிபாடு செய்வதால் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

முன்னோர்களுக்கு நாம் செய்யும் வழிபாடுகளைப் பெற்று பிதுர்களிடம் வழங்குபவன் சூரியன்.  

பிதுர்காரகனாகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீரை அள்ளி விடுவது) மிகுந்த நன்மை தரும்.


தீர்த்தங்களில் நீராடி, இடுப்பளவு  நீரில் நின்றபடி , சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் பரிபூரணமாக அருளைப் பெறமுடியும் 

தர்ப்பணம் என்றால் திருப்தியுடன் செய்வது என்றும்  சிரார்த்தம் என்றால் சிரத்தையுடன்  செய்வது என்றும் அர்த்தம்.  

இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வதுதான்  சிறப்பு என்றில்லை. 

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒருபச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.


எனும் - திருமூலர் திருவாக்கின்படி - 

பக்தியுடன் மனதார நம் முன்னோர்களை வழிபட்டு - அரிசி, காய்கறி, பழம், வஸ்திரம் முதலானவற்றை இல்லார்க்கும் இயலார்க்கும் வழங்கலாம். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்யலாம். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுக்கலாம். 

அமாவாசை - அரிய மானிடப் பிறவியைத் தந்து, நம்மைக் காத்து வளர்த்து அமரத்துவம் எய்தியவர்க்கு  நன்றி தெரிவிக்க நடத்தும்  ஒரு வழிபாடு எனக் கொள்ளலாம்.

தென்திசையில் வாழ்பவராகிய முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் இல்லம் என்ற ஐவகை அறநெறிகளையும் தவறாமல் போற்றுதல் - இல்வாழ்வானின்  கடமைகளாகும் என வள்ளுவப் பெருமான் உரைக்கின்றார்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. (43)
 

''சிவாய திருச்சிற்றம்பலம்!..''  

2 கருத்துகள்:

  1. அமாவாசை - அரிய மானிடப் பிறவியைத் தந்து, நம்மைக் காத்து வளர்த்து அமரத்துவம் எய்தியவர்க்கு நன்றி தெரிவிக்க நடத்தும் ஒரு வழிபாடு எனக் கொள்ளலாம்....

    சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. வணக்கம்..தங்களின் வருகைக்கும் மேலான பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..