நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஆடி அமாவாசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடி அமாவாசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 17, 2023

ஆடித் திங்கள்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி முதல் நாள்
திங்கட்கிழமை


இன்று சூரிய உதயத்தில் இருந்து தட்சிணாயன புண்ணிய காலம்..

சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கின்ற காலம்.. 

ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி வரையிலான ஆறு மாதங்களும் தேவர்களுக்கு மாலை நேரம்.. இரவுப் பொழுதாக அமைகின்றது...

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதையும் செய்ய மாட்டார்கள்..

பழைமையில் நம்பிக்கை உடைய மக்கள் எந்த விதமான வணிகமும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்..

பழைய பொருட்களைக் கூட விற்பனை செய்ய இயலாமல் ஈ விரட்டிக் கொண்டிருந்த காலம் மாறிப் போய் - 

அந்தத் தள்ளுபடி இந்தத் தள்ளுபடி, அதுக்குத் தள்ளுபடி இதுக்குத் தள்ளுபடி..  - என்று கிளம்பி விட்டதால் - கடைத் தெருக்களும் வணிக வளாகங்களும் பரபரப்பாகி விட்டன இன்றைக்கு..

தள்ளுபடி என்பதில் ஏகப்பட்ட உள்குத்து வேலைகள்,  ஜகஜ் ஜாலங்கள், தில்லாலங்கடிகள், தகிடுதத்தங்கள் - என்று கரடியாய்க் கத்தினாலும் யாரும் கேட்டுக் கொள்வதில்லை..

காலம் அல்லாத காலத்தில் எந்த ஒரு நல்ல காரியமும் செய்யக் கூடாது என்று முன்னோர் வகுத்திருந்த நியதிகள் எல்லாம் காற்றில் பறந்து விட்டன..


உண்மையில்
ஆடி மாதமானது முன்னோருக்கும்  தெய்வ வழிபாட்டிற்கும் உரியதாகும்..

முக்கியமாக அம்மனுக்குரிய மாதமாகும்..

ஸ்ரீ காவேரி
நடந்தாய் வாழி காவேரி!.. - என்று ஆடிப் பெருக்கில் சிறப்பிக்கப்படுகின்ற மாதம்..

ஆடிப் பட்டம் தேடி விதை!..
வேளாண்மையே பிரதானமாக இருந்த காலத்தில் விதை விதைப்பதற்கான மாதமாக குறிக்கப்பட்டது..

ஆடியிலே காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்!.. - என்று மழைக்கான குறிப்பினை உடையது இந்த மாதம்..

ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடிக் கிருத்திகை - என்று இந்த மாதத்தில் விசேஷங்கள் பல இருந்தாலும் ஆடி மாதமானது அம்மனுக்குரிய மாதமாகும்.. 

ஆடி மாதத்தின் செவ்வாய் வெள்ளிக் கிழமைகள் சிறப்புடையவை..

அம்மன் கோயிலில் நடக்கும் திருவிழாக்கள், பால் குடங்கள், கூழ் வார்த்தல் முதலானவற்றால்  மனதில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். 

ஆடி மாதத்தில் அம்பாளுக்கு மஞ்சள் குங்குமத்துடன் வளையல் சாற்றுவது சிறப்பிலும் சிறப்பு..

அம்மன் கோயிலுக்கு   மங்கலப் பொருட்களை வாங்கிக் கொடுத்து, அதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும்.

ஐந்து ஏழு ஒன்பது என, 
சுமங்கலிப் பெண்களுக்கு - மஞ்சள் குங்குமம், பூ இவற்றுடன் தாம்பூல தானம் செய்வது கூட நல்லது தான்.. 

ஆடியிலே காவிரி பெருக்கெடுத்தால் தான் நமக்கு நீர்!..

வயல் வேலைகள் செம்மையுற்று ஆடிப் பட்டத்தில் தேடி எடுக்கப்பட்ட விதை விதைக்கப்பட்டால் தான் நமக்கு சோறு!..




கருத்துப் படங்கள்
நன்றி : இணையம்

நீரும் சோறும் குறைவின்றி 
நிறைந்தால் தான் 
தள்ளுபடி லொள்ளுபடி  
- எல்லாம் என்பதை 
யாரும் மறுக்க முடியாது..


அவ்வண்ணம் 
நீரும் சோறும்
சிறப்பதற்காகத் தான் 
அம்மன் வழிபாடு!..

வாழ்க வளம் வாழ்க நலம்

ஓம் சக்தி சக்தி ஓம்
***

திங்கள், ஜூலை 20, 2020

கண்டேன் கயிலை..

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று அமாவாசை..
ஆடி அமாவாசை..

அப்பர் ஸ்வாமிகள்
திரு ஐயாற்றில்
திருக்கயிலாய தரிசனம்
கண்ட நாள்..

இன்றைய பதிவில்
அப்பர் பெருமான் அருளிச் செய்த
திருக் கயிலாய தரிசன
திருப்பதிகம்..
***
நான்காம் திருமுறை
மூன்றாவது திருப்பதிகம்

இறைவன் ஸ்ரீ ஐயாறப்பர்
அம்பிகை - ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி..
***

அம்மையும் அப்பனும்
சகல உயிர்களிலும்
பொலிந்து நிற்பதைக்
கண்ணாரக் கண்ட ஸ்வாமிகள்
அருளிய திருப்பதிகம்..

காதல் மடப்பிடியோடுங் களிறு
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந் தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன க
ண்டேன்!..(1)

போழிளங் கண்ணியினானைப்
பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றி என்றேத்தி வட்டம்
இட் டாடா வருவேன்
ஆழி வலவன் நின்றேத்தும் ஐயா
றடைகின்ற போது
கோழி பெடையொடும் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்!.. (2)

கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து
வரிக்குயில் பேடையொடு ஆடி
எரிப்பிறைக் கண்ணியானைத் ஏந்திழையாளொடும் பாடி 
முரித்த இலயங்களிட்டு முகமலர்ந்தாடா வருவேன்
அரித்தொழுகும் வெள்ளருவி ஐயாறடைகின்றபோது
வரிக்குயில் பேடையொடாடி வைகி வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்..(3)

சிறையிளம் பேடையொடு ஆடிச் சேவல்
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து
பிறை இளங் கண்ணியினானைப்
பெய்வளையாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயிலாலும் ஐயா
றடைகின்றபோது
சிறையிளம் பேடையொ டாடிச் சேவல்
வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்!.. (4)

ஏடு மதிக் கண்ணியானைத் ஏந்திழையாளொடும் பாடிக் 
காடொடு நாடு மலையுங் கைதொழுதாடா வருவேன்
ஆடல் அமர்ந்துறைகின்ற ஐயா றடைகின்றபோது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.. (5)

 வண்ணப் பகன்றிலொடு ஆடி
கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து..

தண்மதிக் கண்ணியி னானைத்

தையல் நல்லா ளொடும் பாடி
உண்மெலி சிந்தையன் ஆகி உணரா
உருகா வருவேன்
அண்ணல் அமர்ந்துறை கின்ற ஐயா
றடைகின்றபோது
வண்ணப் பகன்றிலொ டாடி வைகி
வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்.. (6)

கடிமதிக் கண்ணியி னானைக்
காரிகை யாளொடும் பாடி
வடிவொடு வண்ணம் இரண்டும்
வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்கும் கழலான் ஐயா
றடைகின்றபோது
இடிகுரல் அன்னதோர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்.. (7)

விரும்பு மதிக் கண்ணியானைத் மெல்லிய லாளொடும் பாடிப் 
பெரும்புலர் காலைஎழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி உந்தும் ஐயா றடைகின்றபோது
கருங்கலைப் பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்..(8)

நற்றுணைப் பேடையொடாடி நாரை
பைங்கிளி பேடையொடு ஆடி
முற்பிறைக் கண்ணியினானை
மொய்குழலாளொடும் பாடிப்
பற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும்
ஆடா வருவேன்
அற்றருள் பெற்றுநின் றாரோ டையா
றடைகின்றபோது
நற்றுணைப் பேடையொ டாடி நாரை
வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டறியாதன கண்டேன்.. (9)

திங்கள் மதிக்கண்ணியானைத் தேமொழியாளொடும் பாடி 
எங்கருள் நல்குங்கொல் எந்தை எனக்கினியென்னா வருவேன்
அங்கிள மங்கையராடும் ஐயாறடைகின்ற போது
பைங்கிளி பேடையொடாடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்..(10).

இளமண நாகு தழுவி வரும் ஏறு
வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததோர் காலங் காண்பான் கடைக்கணிக் கின்றேன்
அளவு படாததோ ரன்போ டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம்

கண்டறி யாதன கண்டேன்!.(11)



பொல்லா வினையின் காரணத்தால்
இவ்வருடம் காவிரிக் கரையில்
அமாவாசை தர்ப்பணம்
செய்வதற்குத் தடை விதிக்கப்
பட்டுள்ளது.

அருள்மிகு ஐயாறப்பர்
அருள்தரு அறம் வளர்த்த நாயகியுடன் 
எழுந்தருளும் வைபவம் திருக்கோயிலின்
உள்ளேயே நிகழும் என சொல்கிறார்கள்..

கைத் தொலைபேசியில் எல்லாமும்
 செய்ததால் ஒழுஙகமைவு சரியாக
 இல்லை... பொறுத்தருளவும்...

கயிலாய நாதனைக் கண்ணில்
நிறுத்தித் தரிசிப்போம்!..  
மங்கலமும் மனையறமும்
விளங்கப் பெறுவோம்!.

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி.. போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
***

திங்கள், ஜூலை 24, 2017

சிவ தரிசனம்

நேற்று ஆடி அமாவாசை...

அப்பர் ஸ்வாமிகளுக்கு திருக்கயிலாய தரிசனம் கிடைத்த நாள்..


விடியற்காலையில் இருந்தே -
திருஐயாற்றை நோக்கி மக்களின் பயணம்..

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் -
நெல்லை, மதுரை, திண்டுக்கல், தேவகோட்டை, காரைக்குடி -
என, தமிழகத்தின்  பல பகுதியில் இருந்தும் மக்கள்  திரண்டிருந்தனர்..

காவிரியில் வெள்ளம்  இல்லை எனினும் அதன் கரையினில் மக்கள் வெள்ளம்..

சிவ தரிசனம் காண்பதற்கு - நானும் திருஐயாறு சென்றிருந்தேன்..

பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கோயில் செல்லும் வழியில் பேருந்துகளைத் தடுத்து மக்களுக்காக விட்டிருந்தாலும் நெரிசல் - கடுமையான நெரிசல்..

காவலர்கள் கடும் வெயிலிலும் மக்கள் பணி செய்து கொண்டிருந்தனர்...

அவர்களை மனதார வாழ்த்தினர் பலரும்..

திருஐயாற்றின் சிவாலயத்தில் தனிச் சிறப்பு -
தெற்கு கோபுர வாயிலில் அமைந்திருக்கும் குங்கிலியக் குண்டம்..

ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் புகைந்து கொண்டிருப்பது..,

கோயிலுக்குள் செல்லும் முன்பாக அதனுள் குங்கிலியத்தைப் போட்டு விட்டு எதிரிலுள்ள ஆட்கொண்டார் ஸ்வாமியை வணங்கிச் செல்வது மரபு..

கோபுர வாசலில் குங்கிலியப் பொட்டலங்கள் விற்கும் கடைகளும் உள்ளன..

சிறிய அளவில் குங்கிலியத்தை தாளில் மடித்துத் தருவார்கள்..

குங்கிலியத்தைக் குண்டத்தினுள் போட்டு விட்டு தாளை வெளியே போட வேண்டும்,..

ஆனால் -

உணர்ச்சி வசப்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முட்டி மோதிக் கொண்டும் இன்னும் பலவிதமான சேட்டைகளைச் செய்து கொண்டும்

குங்கிலியக் குண்டத்தினுள் பொட்டலங்களை அப்படியே வீசிக் கொண்டிருந்தனர்...

அதன் விளைவு - புகைந்து கொண்டிருந்த குண்டம் குபீரெனத் தீப்பற்றிக் கொண்டது...



நூற்றுக் கணக்கான மக்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கும் போது எங்கே தப்பித்து ஓடுவது?...

ஆபத்தான அந்த வேளையில் -

அஞ்சாத சிங்கமாக காவலர் ஒருவர் அருகிலிருந்த தேநீர்க்கடையில் இருந்து ஒரு வாளி தண்ணீரை எடுத்து வந்து குண்டத்தினுள் ஊற்றி -

மூண்டெழுந்த தீயையும் மக்களின் பதற்றத்தையும் தணித்து
சூழ்நிலையைக் குளிர வைத்தார்...

ஆனாலும், அடுத்த சில நொடிகளில் மக்கள் மீண்டும் குங்கிலியப் பொட்டலங்களைக் குண்டத்தினுள் போட்டுக் கொண்டிருந்தனர்...

மக்கள் திருந்த மாட்டார்கள் என்பது தான் தெரிந்த விஷயமாயிற்றே!..

வாருங்கள் நாம் கோயிலுக்குள் செல்வோம்...

ஆடி அமாவாசை தீர்த்தவாரியை முன்னிட்டு
ரிஷப வாகனத்தில் ஸ்வாமி அம்பாள் எழுந்தருள இருக்கின்றனர்..

தெற்கு வாசலின் இரண்டாவது ராஜகோபுரத்தின் அருகில் -
இதோ அறுபத்து மூவர் - பெரிய ரதத்தில் காட்சியளிக்கின்றனர்...



திருக்கோயிலில் ஆங்காங்கே சிவனடியார்களின் தேவார பாராயணம்..
சிவகண திருக்கயிலாய இசைக்குழுவினரின் வாத்திய முழக்கம்..



மக்கள் பணியில் நீர் வழங்குதல், அன்னதானம் என கோலாகலமாக இருந்தது..

சென்னை அம்பத்தூர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்து கொண்டிருந்தனர்..

திருக்கோயிலில் எங்கு காணினும் மக்கள் திரள்..

அவரவர்க்கும் ஆயிரம் ஆயிரமாகப் பிரச்னைகள்..

அத்தனையையும் விட்டுத் தள்ளி விட்டு
ஐயாறனின் அடித்தலமே துணை!.. - என்று கூடியிருக்கின்றனர்..

காவிரியில் தீர்த்தவாரி முடிந்ததும் நிகழ்ந்த திருவீதி உலாவின் சில காட்சிகள் - இன்றைய பதிவில்...







முன்னிரவுப் போதில் அப்பர் ஸ்வாமிகளுக்கு கயிலாய தரிசனம் காட்டிய வைபவம்...

அதைக் கண்டு இன்புறத்தான் வீடு வாசலை மறந்து
கோயிலடியில் கொதிக்கும் வெயிலில் கிடக்கின்றார்கள்..

உச்சிப் பொழுது வரை திருக்கோயிலில் இருந்தேன்...

இரவு வரைக்கும் அங்கேயே இருப்பதற்குக் கொடுத்து வைக்கவில்லை..

உறவினர் ஒருவர் ஆபத்தான  நிலையில்.. சென்று பார்க்க வேண்டும்..

எல்லாவற்றுக்கும் ஐயாறப்பன் துணை.. - என்று
வேண்டிக் கொண்டபடி தஞ்சைக்குத் திரும்பினேன்...

பதிவில் உள்ள படங்கள் தங்களின் மனம் கவரும் என நம்புகின்றேன்..
  
காதல் மடப்பிடியோடுங் களிறு
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந் தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்!..
 

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி.. போற்றி!..
திருநாவுக்கரசர் (6/55) 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்.. 
* * *

சனி, ஜூலை 26, 2014

கயிலாய தரிசனம்

குவப்பெருந் தடக்கை வேடன் ஆகிய திண்ணன் - 

கொடுஞ் சிலையுடன்  இறைச்சிப் பாரந்தாங்கி வந்து, தூய வாய்க் கலசம் ஆட்டியதுடன் உவப்புடன் குருதி சோர ஒரு கண்ணைப் பெயர்த்து வைத்து  - தவத்தினும் பெரியதாய்த் தவம் இயற்றி - கண்ணப்பன் என்றானது இங்கே அல்லவோ!..

அப்பர் பெருமான் ஆனந்த வாரிதியில் ஆழ்ந்தார். காளத்தியானைக் கைகூப்பித் தொழுதார்.


மறையுடைய வானோர் பெருமான் றான்காண்
மறைக்காட் டுறையும் மணிகண் டன்காண்
கறையுடைய கண்டத்தெங் காபா லிகாண்
காளத்தி யானவனென் கண்ணு ளானே!..
(6/8)

திருக்காளத்தி மலையில் சிவதரிசனம் கண்ட திருநாவுக்கரசு சுவாமிகள் - தொடர்ந்து நடந்து திருக்கோகரணம் வந்தடைந்தார்.

கூறேறு கொடுமழுவாட் படையி னான்காண்
கொக்கரையன் காண்குழுநற் பூதத் தான்காண்
மாறாய மதில்மூன்றும் மாய்வித் தான்காண்
மாகடல்சூழ் கோகரணம் மன்னி னானே!..
(6/49)

திருக்கோகரணத்தில் - ஆத்மலிங்கேஸ்வரனைத் தரிசித்த ஸ்வாமிகள் -


பேரிடர்ப் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
காருடைக் கண்ட ராகிக் கபாலமோர் கையி லேந்திச்
சீருடைச் செங்கண் வெள்ளே றேறிய செல்வர் நல்ல
பாரிடம் பாணி செய்யப் பருப்பத நோக்கி னாரே!..
(4/58)

ஸ்ரீசைலம் எனும் திருப்பருப்பத மலையில் மல்லிகார்ஜுன பெருமானைக் கண்டு வணங்கினார்.

ஆயினும் அவர் ஆவல் தீரவில்லை. பயணம் தொடர்ந்தது.

பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் முதன்மையாக விளங்கும் வாரணாசி வந்தடைந்தார்.

ஆயிரமாமுகத்தினோடு விண்ணிலிருந்து மண்ணிற்கு இறங்கி மக்களுக்கு நலஞ்செய்யும் கங்கையைக் கண்டு களிப்பெய்தினார். வழி நடந்த களைப்பு தீர நீராடினார்.


கங்கையின் கரையில் கருணை கடலாகத் திகழும் காசிநாதனைக் கண்குளிரத் தரிசித்தார்.

அங்கிருந்தபடியே - திருக்கயிலாயம் சென்று கயிலாய நாதனைத் தரிசிக்க விழைந்தார். 

உடனிருந்தவர்கள் அதிர்ந்தனர்.

''..ஸ்வாமி.. தங்களுக்குத் துணையாக நாங்களும்  வருகின்றோம்!..'' - என்றனர்.

சுவாமிகள் அதை மறுத்தார்.

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் 
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான் 
தன்கடன் அடியேனையுந் தாங்குதல் 
என்கடன் பணி செய்து கிடப்பதே!.. (5/19)

எனும் திருப்பாடலை நினைவு கூர்ந்தார். 

தளரும் நிலையில் தாங்கிக் கொள்வான் தலைவன்!.. அஞ்சவேண்டாம்!.. வள்ளல் வருவான் - வழித்துணையாக!..

அடியார்களுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டு - பயணத்தைத் தொடர்ந்தார். 

திருக்கேதாரம் (1882)
கெளரி குண்டம், திருக்கேதாரம், இந்திர நீலபருப்பதம் முதலான திருத் தலங்களைத் தரிசித்தார். உள்ளம் பேரானந்தப் பெருவெள்ளத்தில் நீந்திக் களித்தாலும்  - சுவாமிகளின் உடல் நிலையோ தளர்வுற்று இருந்தது. 

ஆயினும் தளராத மனத்தினராய் - 

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்!..

- என்று உறுதி பூண்டார். திருப்பதிகங்கள் அவர் திருநாவினின்று மலர்ந்தன.

எவ்விடத்தும் தங்காது நடந்தார்., நடந்தார்,. நடந்து கொண்டேயிருந்தார்.

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் ஆனாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி!..
(6/55)

உண்ணவும் இல்லை. ஓரிடத்தில் இருந்து உறங்கவும் இல்லை!.. விளைவு!.. 

நடந்ததால் பாதங்கள் தேய்ந்தன. அதனால் என்ன என்று கைகளை ஊன்றிச் சென்றார்.  கைகளும் தேய்ந்தன. 

பகல் இரவு என்று கருதாது, கயிலை நோக்கிச் சென்ற சுவாமிகளின் மன உறுதியைக் கண்ட -  வன விலங்குகள் அஞ்சி வழி விட்டு விலகிச் சென்றன. 

கொடிய நஞ்சுடைய நாகங்கள் -  ஒளிரும் மணிகளை உமிழ்ந்து - இரவில் வழிகாட்டி - தம் வினைகளைத் தீர்த்துக் கொண்டன. 

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி!..
(6/55)

கைகளும் பயனற்றுப் போக - நிலத்தில் ஊர்ந்ததால், மார்புத் தசைகள் தேய்ந்து சிதற,  எலும்புகளும் முறிந்தன.  

நாவுக்கரசரின் நெஞ்சுரம் கண்டு கயிலை மாமலையும் உருகியது. 

கயிலை மாமலையே  - உருகிய போது கருணை வடிவான கயிலை நாதனின் நெஞ்சம் உருகாமல் இருக்குமா!.. உருகிற்று!.. 

வேதியர் என உருக் கொண்டு நாவுக்கரசரை அணுகிற்று.

''..உடலெல்லாம் காயப்பட்ட நிலையில் இங்கு என்ன காரணம் கொண்டு வந்தீர்?..''  - என வினவிற்று!..

''..வண்டுலாவும் மலர்க் கூந்தல் உமாதேவியுடன் , எம்பெருமான் கயிலையில்  வீற்றிருக்கும் திருக்காட்சியினைத் தரிசிக்க விருப்புற்று வந்தேன்!..'' - என்றார் அப்பர்.



''..தேவர்களுக்கே அரிதானது கயிலை!.. அதனை நாடி வந்து இத்தனை துன்பம் அடைகின்றீரே!.. உம் போன்ற மானுடர்க்கு அது அத்தனை எளிதல்ல!.. எனவே
இங்கிருந்து மீண்டு செல்வீராக!..'' - என்றார் தவயோகி என வந்த பரம்பொருள்.

''ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை காணாமல், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்!..'' - என மறுத்து உரைத்தார் - சுவாமிகள்!..

தன் அடியாரின் மன உறுதியைக் கண்டு - ஆதியும் அந்தமும் இல்லாது  ஜோதியாய் நின்ற சிவப் பரம்பொருள் பெருமிதம் கொண்டது.

''நாவுக்கரசரே!.. இதோ இந்தப் பொய்கையுள் மூழ்கிக் கயிலைக் காட்சியினைக் காண்பீராக!..'' - என மொழிந்து மறைந்தார். 

நாவுக்கரசரா!?.. அது அதிகை வீரட்டானத்தில் ஐயன் அருளியதாயிற்றே!.. அப்பெயரை யான் மறந்தும் வெகு நாளாயிற்றே!..  இங்கே அதை அறிந்து அழைத்தவர்  யாராயிருக்கக்கூடும்?..  - திகைத்தார் ஸ்வாமிகள்.

அந்த அளவில் வந்தது இறை என்றுணர்ந்து  அகமகிழ்ந்தார். 

கயிலை மலைச் சாரலில் இருந்த பொய்கையில் மூழ்கினார் அப்பர் பெருமான்.


தீர்த்தத்திலிருந்து எழுந்தபோது அவர் கண் முன் தெரிந்தது பஞ்சநதீஸ்வரம். 

அப்போது-  திருக்கயிலைக் காட்சி பேரானந்தப் பெருங்காட்சியாக விரிந்தது!..

கணபதி, கந்தன், திருமால், நான்முகன் -  சூழ்ந்திருக்கக் கண்டார்.

இந்திரன் முதலான தேவர்களுடன் அசுரர்கள், சித்தர்கள், மகரிஷிகள், வித்யாதரர்கள் , கின்னரர்கள், யட்சர்கள்,  நாகர்கள் - என  அனைவரும்  திரண்டு நின்று வணங்கிடக் கண்டார். 

கங்காதேவி மங்கல நீர் வார்க்க - சிவகணங்களும் பூதவேதாள கணங்களும் பலவகையான வாத்தியங்களை இசைத்துப் போற்றிட - 

தேவ மகளிரின் பாடலும் ஆடலும் முழவு ஒலியும் எழுகடலின் ஓசை என எங்கும் எதிரொலிப்பதைக் கேட்டார்.

இறைவனின் ஆணைப்படி, வருபவர்க்கு வழிபாடு செய்விக்கும் பொறுப்பினை உடைய நந்தியம் பெருமான் நடுவில் நின்று விளங்கிட, 


வெள்ளி மலையென விளங்கும் விடை வாகனத்தின் மீது உமா தேவியுடன் - வீற்றிருக்கும் காட்சியைக் கண்டு கை தொழுது வணங்கி இன்புற்றார்.  

அந்த அளவில் -

அம்மையும் அப்பனும் ஆனந்த ஸ்வரூபமாக - ஆடி வருவதைக் கண்டு இன்புற்றார்.

நிற்பனவும் நடப்பனவும் ஆகிய உயிர்கள் அனைத்தும், சக்தியும் சிவமும் ஆகிய தன்மையில், பற்பல உயிர்களின் பிறப்பு விளங்கும் முறைமையைக் கண்டார். 

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந் தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்!..
 

காதல் மடப்பிடியோடுங் களிறு
கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து
வரிக்குயில் பேடையொடு ஆடி
சிறையிளம் பேடையொடு ஆடிச் சேவல்
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து
 வண்ணப் பகன்றிலொடு ஆடி
கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து
நற்றுணைப் பேடையொடாடி நாரை
பைங்கிளி பேடையொடு ஆடி
வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததோர் காலங் காண்பான் கடைக்கணிக் கின்றேன்
அளவு படாததோ ரன்போ டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்!..
(4/3)


திருநாவுக்கரசு சுவாமிகள்  பாடினார். ஆடினார். அழுதார். தொழுதார். 

''சுவாமிகளுக்கு அங்கு நிகழ்ந்தனவற்றை யார் சொல்ல வல்லார்?.  எவரும் இலர்!..'' - என்கின்றார் சேக்கிழார் பெருமான் - பெரிய புராணத்தில்!...

அப்பர் பெருமான் கண்ட கயிலாயத் திருக்காட்சி ஆடி அமாவாசை தினத்தில் நிகழ்ந்ததாக ஐதீகம். 

அவ்வண்ணமே - இன்று (ஜூலை/26) திருஐயாற்றில் பெருங்கோலாகலமாக நிகழ்கின்றது.

திருஐயாற்றில் கயிலைக் காட்சி கண்டால் கயிலாயம் தரிசித்த புண்ணியம் என்பர். 

இங்கு வந்து தரிசனம் செய்தவர்கள் எல்லா நலன்களையும் பெறுவர் என்பது திண்ணம். 

நாமும் சென்று தரிசிப்போம்!..

திருநாவுக்கரசர் அருளிய தேவாரத்தைப் பாராயணம் செய்தபடி - நாள்முழுதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலினுள் குழுமியிருக்க, மாலையில்  - திருக்கயிலாயக் காட்சி கொடுத்தருளும் வைபவம் நிகழ்வுறும்.


ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி ஸ்ரீஐயாறப்பருடன் வலம் வந்து அருளும் - பக்திப் பரவசமான காட்சியினைக் காணக் கண்கோடி வேண்டும். 

அடியார்களாகிய நம் பொருட்டு  - ஐயனும் அம்பிகையும் விடை வாகனத்தில் எழுந்தருளி - வலம் வந்து வரந்தருகின்றனர். 

கயிலாய நாதனைக் கண்டு தரிசிப்போம்!..  
கண் கொண்ட பயனைப் பெறுவோம்!..
 
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்!.
கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்!.
''சிவாய திருச்சிற்றம்பலம்!..''
* * *