நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 30, 2014

அழகர் மலை

ஆயிரம் தோள்பரப்பி முடிஆயிரம் மின்னிலங்க
ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை
ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பலஆயிரமும்
ஆயிரம் பூம்பொழிலும்உடை மாலிருஞ்சோலையதே!.. (358)

- என்று, பஞ்சாயுதங்களுடன் கள்ளழகர் உறையும் மாலிருஞ்சோலையைக் கண்ணாரக் கண்டு பெருமைப்படுபவர் -பெரியாழ்வார் (4/மூன்றாம்திருமொழி).


ஆயிரம் திருமுடிகளுடன் ஈராயிரம் திருத்தோள்களுடன் - ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேஷன் மீது அனந்தசயனம் கொண்டிருக்கும் எம்பெருமான் மனம் விரும்பி இருந்து ஆட்சி செய்வது,   

ஆயிரம் ஆறுகள், ஆயிரம் பூம்பொழில்கள், பல்லாயிரம் சுனைகள் - இவற்றுடன் விளங்கும்   சோலைமலையாகும். 


இத்தகைய பெருஞ்சிறப்பினை உடைய மலையில் இருந்துதான் பெருமான் கள்ளழகராகத் திருக்கோலங் கொண்டு தென்கிழக்கே சுமார் 21 கி,மீ தொலைவில் உள்ள மதுரையம்பதியை நோக்கிப் புறப்படுகின்றார். காரணம்!?..

மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அருள்வதற்கு!..

கங்கையின் கரையினில் சிறு குடில். அது சுதபஸ் எனும் முனிவருடையது. ஆதவன் தனது பொற்கிரணங்களை விரித்துக் கிளம்புதற்கு முன்னதான ப்ரம்ம முகூர்த்தம். சுதபஸ் முனிவர் சந்தியாவந்தனம் செய்தற்கு  கங்கையில் இறங்கிய சமயம் துர்வாச முனிவர் அங்கே வருகின்றார். 

அந்த இளங்காலைப் பொழுதிலும் அவருக்குக் கோபம் கொந்தளிக்கின்றது.  விழிகள் சிவக்கின்றன. தன்னை மதிக்காமல் - சுதபஸ் கங்கையில் இறங்கினார் என்று!.. 

தாமரைக் குளத்தில் கிடந்தும்  தாமரையை அறியாதது தவளை. அதைப் போல பெரியவர்களோடு இருந்தும் அவர்தம் சிறப்பினை உணராது  மமதையில் உழலும் நீ மண்டூகம் ஆகக் கடவாய்!..

என்ன ஏது.. என்று புரியாமல் திடுக்கிட்ட  சுதபஸ் - அதிர்ந்தார். 

சுதபஸ் இவ்வாறு செய்யக்கூடியவர் இல்லையே.. அவருக்கு ஏன் இப்படி சோதனை!.. ஆங்காங்கே இருந்த மகா முனிவர்களும் அதிர்ந்தனர். வருந்தினர்.

சிந்தையில் பரம்பொருளைக் கொண்டிருந்த சுதபஸ் ஒருவாறு மனம் தேறினார். அவர் நிலை கண்டு இரங்கிய மற்ற முனிவர்கள் - துர்வாசரின் கோபத்தினைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

ரிஷிகளுள் மகோன்னதமானவரும் மூவுலகிலும் நிலைத்த புகழினை உடையவருமாகிய தாங்கள் - சினத்தினை விடுக்க வேண்டும். முக்காலமும் உணர்ந்த தாங்கள் - சுதபஸ்  தங்களை அலட்சியம் செய்ய வில்லை என்பதையும் அவர்தம் நாட்டம் முழுதும் நாராண மந்த்ரம் என்பதையும் அறிவீர்கள்.. அங்ஙனம் இருக்க  - இவ்வித கொடுஞ்சாபம் எதன் பொருட்டு!.. அதற்கு விமோசனம் தான் யாது!.. உரைத்தருள வேண்டும்!.. 

- என்று பணிந்து நின்றனர். மெல்ல புன்னகைத்தார் துர்வாசர்.

இது கொடுஞ்சாபம் அன்று. நான் இடும் சாபம்  - அவரவர்க்கு பெரும் பயனை நல்குவதற்கானதாகும். சந்தனக் கட்டையைத் தேய்க்கும் போதுதானே -  அதன் நறுமணம் எங்கும் பரவுகின்றது. அதுபோல்  சாபத்தினுள் உணர்வதற்கரிய பல தேவரகஸ்யங்கள் பொதிந்து கிடக்கின்றன. 

அன்றொருநாள் பரந்தாமன் - திருவிக்ரமனாக உலகளந்தபோது சத்ய லோகத்தினுள் நீண்ட அவனது திருவடியை, நான்முகன் - தன் கமண்டல தீர்த்தத்தினால் ஆராதித்து வழிபட்டான். 

அப்போது ஐயனின் திருவடி நூபுரத்தில் தோன்றிய கங்கையானது  - நூபுர கங்கை என புண்ணிய பாரதத்தின் தெற்கே கடம்பவனம் ஆகிய மதுரையம்பதியின் வடபால் ரிஷபாத்ரி எனும் புனித மலையில் விழுந்து பொங்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றது. 

அந்தமலை தோளுக்கினியான் ஆகிய பரவாசுதேவன் இருந்து ஆளும் திருமலை.  

சுதபஸ் மண்டூகமாகி வேகவதி எனப்படும் வைகையில் கிடக்க - மாமாயன் ஆகிய சுந்தரத் தோளுடையான் கள்ளழகன் எனும் திருப்பெயர் கொண்டு வைகையைக் கடக்க, வையகம் இன்புற்று உய்வடையும்  வேளை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் பொருட்டே இந்த நாடகம். நலமடைவீர்களாக!.. 

மனம் தெளிந்த அனைவரும் துர்வாச முனிவரை வணங்கிக் கொண்டனர்.

சுதபஸ் முனிவரும் தவளையாகி தென் திசைக்கு வந்தார். மண்டூகர் எனும் பெயரையும் அடைந்தார்.

இப்படி - துர்வாசரின் சாபத்தினால் மண்டூகம் ஆகிய சுதபஸ் மகரிஷிக்கு விமோசனம் அருளி முக்தி நல்குவதற்காகத்தான் கள்ளழகர் சித்ரா பௌர்ணமி அன்று வைகையாற்றில் இறங்குகின்றார். 


அழகர் மலையின் ஐயனை - சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது வந்திழியும் சிலம்பாறுடை மாலிருஞ்சோலை நின்ற சுந்தரன்!.. - என்று புகழ்கின்றாள் சுரும்பார் குழல் கோதை நாச்சியார். 

இந்த அழகனுக்குத்தான் - அவள்,

நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார அடிசில்சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ!.. 

- என்று நேர்ந்து கொண்டாள். ஆனால், நேர்ச்சையை நிறைவேற்ற அவளால் இயலவில்லை. 

காலச்சக்கரம் உருண்டோடியது.

நூறு நூறு ஆண்டுகளைக் கடந்த பின், ஒருநாள்!.. 

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் ஆவலை  அறிந்து கொண்ட உடையவர் - மாலிருஞ் சோலைக்கு எழுந்தருளி,  ஆண்டாள் நேர்ந்து கொண்டபடியே நூறு தடா வெண்ணெயும் நூறு தடா அக்கார அடிசிலும் பராவி வைத்து ஆரா அமுதனை வணங்கி நின்றார். 

பின் அங்கிருந்தபடியே ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். 

அங்கோர் அதிசயம் நிகழ்ந்தது. உடையவர் - அர்த்த மண்டபத்திற்கு ஏகிய போது - திரு மூலஸ்தானத்தில் இருந்த ஸ்ரீ ஆண்டாள் - அர்த்தமண்டபத்தில் ப்ரசன்னமாகி - ''..வாரும் எம் அண்ணாவே!..'' - எனக் கொண்டாடினாள். 

அதன் பின் அர்த்தமண்டபத்திலேயே ஆண்டாள் குடி கொண்டதாக ஐதீகம். 

இத்திருத்தலத்தில் ஆடி மாதத்தில் நிகழும் பிரமோற்சவ பெருந்திருவிழாவின் போதும் ஆயிரம் ஆயிரமாய் மக்கள் கூடுகின்றனர்.

பங்குனி உத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் -  

கள்ளழகர் ஆகிய  ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் ஏகாசனத்தில் இருக்க - ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி, ஆண்டாள்  உடனாகிய திருமண வைபவம்  நிகழ்கின்றது 

ஆயினும்,  சித்திரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குவதைத்தான் பெருந் திருவிழா என்று - பெருவாரியான மக்கள் அறிந்திருக்கின்றனர்.


 


அழகர் வைகையாற்றில் இறங்கும் விழா, தமிழக விழாக்களில் - மிகப் பிரபலமானதாகும். லட்சக்கணக்கான மக்கள் பங்கு கொள்ளும்  இந்தத் திருவிழா மக்களின் திருவிழா என புகழப்படுகின்றது.

இத்திருவிழாவில் கலந்து கொள்பவர்கள்  கிராமத்து மக்களே!..

இவர்களில் நேர்ந்து கொண்டவர்கள்  பல நாட்கள் விரதம் இருக்கின்றனர்.

விழாவின் போது - நெற்றியில் திருமண் தரித்து அழகர் மற்றும் கருப்பசாமி என வேடம் தாங்கி , அழகரின் முன்பு ஆடிப்பாடி அகமகிழ்கின்றனர்.

பெருமான் எழுந்தருளும்போது - ஆங்காங்கே கருப்பசாமி, அழகர் கதைப் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்க - அதைக் கேட்டு  நூற்றுக்கணக்கானோர் மெய் மறந்திருக்க - கள்ளழகரும் தன்னை மறக்கின்றார்.

திருமாலிருஞ்சோலை - வண்டியூர் பயணத்தின் போது அழகர் ஆங்காங்கே தங்கிச் செல்வார்.

அப்படி - அழகர் தங்கும் இடங்களுக்கு திருக்கண்கள் எனப் பெயர். இவற்றுள் பல நிரந்தர கல் மண்டபங்கள். மேலும், அழகரின் வருகையினை முன்னிட்டு - தற்காலிக பந்தல்களும் அமைக்கப்படுகின்றன.

இவ்வாறு மொத்தம் நானூறுக்கும் மேற்பட்ட திருக்கண்கள் வழியில் உள்ளன. போகும்போதும் வரும்போதும் என - இருமுறை இவைகளில் அழகர் தங்குகிறார்.



மீனாட்சி திருமணத்திற்காக அழகர் வருகிறார் என்பது மக்கள் மத்தியில் நிலவும் சுவையான கதை மட்டுமே. 

திருமலை நாயக்கர்  மதுரையில் ஆட்சி செய்தபோது,  சைவ  வைணவ சமயப் பூசல்களைக் களையும் விதமாக - மாசியில்  நடந்த  மீனாட்சி அம்மன் திருக் கல்யாணத்தையும்  

சித்திரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவையும் சேர்த்து நடத்தினார் என்று அறியப்படுகின்றது. 

மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அருள்வதற்காகவும்,

சுந்தரத் தோளுடையான் எனச் சொல்லி, நூறு தடா வெண்ணெயும் அக்கார அடிசிலும் தந்து ஆராதித்த  ஆண்டாள், தன் தோள்களில்  சூடி - களைந்த மாலையை,  தனது சுந்தரத் தோள்களில் அணிந்து கொள்வதற்காகவும்,

வைகை கரைக்குச் சென்ற கள்ளழகர் - சித்திரைத் திருநாளின் வைபவங்களை இனிதே முடித்துக் கொண்டு  மலைக்குத் திரும்பியதும் - மிக உற்சாகத்துடன் வரவேற்கப்படுகின்றார். 


பதினெட்டு பூசனிக் காய்களில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழிக்கப்படுகின்றது. மக்கள் ஆரவாரத்துடன் மூன்று முறை வலம் வந்து வணங்குகின்றனர். 

அழகர் மூலஸ்தானம் சென்று அடைந்த பின் - உற்சவ சாந்தி நிகழ்கின்றது.

மாலிருஞ்சோலையில் தான், ஆண்டாளும் ஆழ்வார்களும் புகழ்ந்த - நூபுர கங்கை எனும் சிலம்பாறு சுரக்கின்றது.

இம்மலையின் காவல் தெய்வம் - ராக்காயி அம்மன்..

கோபுர வாசலை அடைத்துக் கொண்டு - பதினெட்டாம்படி கருப்பசாமி!..

ராக்காயி என்றும் கருப்பர் என்றும் தென்பாண்டிச் சீமை எங்கும் - மணக்கும் பெயர்கள் - இவர்களுடையதே!..

ஏழை எளிய மக்களின் வாழ்வுடன் 
பின்னிப் பிணைந்த பெருமான் - அழகர்!..
கார்மேகமாகக் காத்தருளும் பெருமான் - கள்ளழகர்!..

பார்த்தனுக்கு அன்றருளிப் பாரதத்தொரு தேர்முன்னின்று
காத்தவன் தன்னைவிண் ணோர்கரு மாணிக்க மாமலையை
தீர்த்தனைப் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற
மூர்த்தியைக் கைதொழ வும்முடி யுங்கொலென் மொய்குழற்கே!.. 
திருமங்கை ஆழ்வார்(1835)9/9
* * *

12 கருத்துகள்:

  1. கள்ளழகர் அறிந்தேன் உணர்ந்தேன்
    மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. அருமையான படங்களுடன் கள்ளழகர் சிறப்புகளுக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  3. அருமையான படங்கள் மற்றும் தகவல்கள்..... நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  4. நல்ல விசயங்களை வெளியிடும் தங்களுக்கு நல்லருள் கிடைக்கட்டும் ஐயா.
    Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அனைவருக்கும் நல்லருள் கிடைக்கட்டும் .
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      வாழ்க நலம்.

      நீக்கு
  5. மனதுக்கினிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து பாராட்டுரைத்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. எதற்காகக் கள்ளழகர் ஆறில் இறங்குகிறார் என்பதன் பின்னணி எதுவாயிருந்தாலும் ஆண்டுதோறும் அவர் வருகையின் போது மக்கள் மகிழ்கின்றனர் என்பதே நிதர்சனம் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..