நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 22, 2025

சர்க்கரை வள்ளி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 9
புதன்கிழமை

" ஓட்டலில் சாப்பிட்டு விட்டேன்!.. " - என்று
 சொன்னால்,

வீட்டுப் பெரியவர்களிடம் வசவு கிடைக்கும்..

அது அந்தக் காலத்தில்!..

பசுவிடம் நேரிடையாகப் பாலைக் கறந்த காலம் அது..

தலைச் சுமையாக மோர், தயிர் வெண்ணெய் நெய் விற்கப்பட்ட காலம் அது..

இரசாயனக் கலப்பில்லாத சிறு தீனிகள் தங்குதடையின்றி கிடைத்த காலம் அது..

அப்படிப்பட்ட சிறு தீனிகளில் ஒன்று தான்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு..


ஏறக்குறைய நோயில்லா வாழ்வைத் தருகின்ற அற்புதம் - சர்க்கரைவள்ளிக் கிழங்கு..

மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் தெருவில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு 
விற்கப்படுகின்றது.

நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா?  என்று எதுவும் தெரியாமலேயே அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமலேயே தெரிந்தும் உணவகத் தொற்று நம்மை ஒன்றும் செய்யாது என்ற அலட்சியத்துடன்
சாப்பிட்டுக் கொண்டிருக்கின்ற காலம் இது..

 சாப்பிடும்  உணவு செரித்து அது சக்தியாகிய பிறகு உடலில்  கழிவுகள் தங்கினால் என்னவாகும்? (நோய்க் காரணிகளுள் இதுவும் ஒன்று)

இத்தகைய கழிவுகள் Free Radicals எனப்படும்.
..

இத்தகைய கழிவினை   சுத்தம் செய்வதில்  சர்க்கரை வள்ளிக் கிழங்கு பெரும்பங்கு வகிக்கின்றது.

விளைகின்ற மண் வாகு -  தன்மை - ரகத்தினைப் பொறுத்து கிழங்கின் உட்புறத்தில் இளஞ்சிவப்பு நிறம் தென்பட்டாலும் பொதுவாக வெள்ளை நிறமுடையது..


சர்க்கரை வள்ளி கிழங்கில்  கார்ப்போஹைடிரேட்ஸ்  புரதம் மிகச் சிறிய அளவில் கொழுப்பு  ஆகியன அடங்கியுள்ளன
நூறு கிராம் கிழங்கில் நூற்று எண்பது புள்ளி கலோரி   உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வைட்டமின் A , வைட்டமின் C , வைட்டமின் B6 , மாங்கனீஸ். பொட்டாசியம் ஆகியனவும் நிறைந்துள்ளன.
(நன்றி விக்கி)

நீரிழிவைக் கட்டுப்படுத்துகின்றது..

புற்றுநோயின் அபாயத்தைக்  தவிர்க்கின்றது..

இதனால் - இதய ஆரோக்கியம் மேம்படுகின்றது..

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது ...

தோல் திசுக்களை மேம்படுத்துகின்றது..

உடலில் இயற்கை சர்க்கரையின் (குளூக்கோஸ்) அளவை சீராக வைத்திருக்கின்றது.. கிளைசெமிக் இன்டெக்ஸ் 
சர்க்கரை வள்ளியில் குறைவாக இருப்பதால் 
நீரிழிவு குறைபாடு உடையவர்களும் இதனை உண்ணலாம்...

சர்க்கரைவள்ளிக் கிழங்கு நமது உடலில் 
இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் என எங்கெங்கும்
தங்கும் நச்சுகளை சுத்தமாக துடைத்து எடுக்கின்றது.

வாழ்நாள் முழுக்க நச்சுக் கழிவு பற்றிய பயம் இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைத்தால் பருவ காலத்தில் கிடைக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை தேவையான அளவு சாப்பிட வேண்டும்.

வைத்தியன் எனில் பாரம்பரிய தமிழ் வைத்தியன்.. வைத்தியருக்குக்கு கொடுப்பதை விட வாணியருக்குக் கொடு என்பது பழமொழி.. 

வாணியர் என்பவர் எண்ணெய் வணிகர்...

உணவு ஏவாரிகளுக்குக் கொடுத்து விட்டு நோயாளி ஆவதை விட உண்மையான விவசாயிகளுக்குக் கொடுத்து ஆரோக்கியமாக இருப்பதே நல்லது..


கண்ணில் கண்ட மசாலாக்களையும் அள்ளிப் போட்டு சமையல் என்ற பேரில்  கெடுத்து வைக்காமல் கிழங்கைக் கழுவி விட்டு அப்படியே  அவித்து உண்பதே ஆகச் சிறந்தது...

எனினும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாம்பார் வைக்கின்ற வழக்கம் பழக்கம்  தஞ்சை மாவட்டத்தில் இருக்கின்றது...

எங்கள் வீட்டில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாம்பார் வைப்பதற்குத் தவறுவதில்லை....

மசாலா தவிர்ப்போம்
மகிழ்ச்சியுடன் வாழ்வோம்...

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
**

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

10 கருத்துகள்:

  1. சிறப்பு.  

    நீண்ட நாட்களாக வாங்காமல் இருந்த இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு சமீப ஒரு மாதமாகத்தான் வாங்கி உபயோகிக்கிறோம்!  முன்பெல்லாம் அம்மா வேகவைத்துத் தருவார் அப்படியே சாப்பிடுவோம்.

    பதிலளிநீக்கு
  2. சாம்பார் என்று தனியாக வைத்ததில்லை.  கதம்ப சாம்பாரில் முக்கிய பொருள் இது.  கணுப்பொங்கல் நாளின் அவியலிலும் சிறப்பிடம் பெற்றது!  பொரியல் செய்ததில்லை.  முயற்சிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. சர்க்கரை வள்ளிக் கிழங்கு எனக்கு மிகவும் பிடித்தமானது. விறகடுப்பில் சுட்டுத் தருவார்கள்.. அவ்வளவு ருசி. விசேஷங்களில் வறுவலும் சாப்பிட்டிருக்கிறேன்.

    கயாவில் விட்டுவிட்டேன். அதனால் சாப்பிடுவதில்லை. இருந்தாலும் திருக்கண்ணபுரம் கோயிலில் நேற்றைக்கு முந்தைய தினம் எனக்கு மடப்பள்ளியில் உணவிட்டபோது, சர்கரைவள்ளிக் கிழங்குகளை தானாகப் போட்டு குழம்பு செய்திருந்தார்கள். கோயில் உணவு என்பதால் தவிர்க்காமல் சாப்பிட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. சர்க்கரை வள்ளிக் கிழங்கு அப்படியே வேகவைத்து சுட்டு சாப்பிடுவது தான் நல்லது, ருசி. சிவகாசியில் பள்ளி பக்கம் மரவள்ளி கிழங்கு, சீனி கிழங்கு என்று சொல்வார்கள் இதை வேகவைத்து விற்பார்கள். மதிய நேரம் வாங்கி சாப்பிடுவோம்.
    பனங்கிழங்கு வேகவைத்து விற்பார்கள். பள்ளி பருவத்தில் நிறைய சாப்பிட்டு இருக்கிறேன், இப்போது பொங்கல் அன்று மட்டும் தான் வாங்கினேன்.

    பதிலளிநீக்கு
  5. சக்கரை வள்ளிக் கிழங்கு எங்கள் வீட்டிலும் அம்மா அவித்துத்தருவார்.

    இப்பொழுதும் வாங்கிச் செய்கிறோம்.

    அவித்த கிழங்கை மசித்து சம்பல் செய்யலாம்.

    சிங்கள முறையில் காரக்குழம்புதான் செய்கிறார்கள். நீங்கள் கூறியதுபோல மசாலாக்களை தவிர்ப்பது நல்லது.

    பதிலளிநீக்கு
  6. சர்க்கரை வள்ளிக் கிழங்கு நல்லது. இங்கு நல்லதாகச் செழிப்பாகக் கிடைக்கும் நாட்களில் கண்டிப்பாக வாங்கிச் செய்வதுண்டு. நம் வீட்டில் பாட்டி தணலில் சுட்டுத் தருவார்.

    அப்படியெ வேக வைத்துச் சாப்பிடுவதுதான் நலல்து என்பதால் பெரும்பாலும் அப்படித்தான். அது சாப்பிட்டால் காலை உணவாக வேறு எதுவும் சாப்பிடுவதில்லை நான்.

    பொரியல் செய்வதுண்டு. எண்ணை அதிகம் விடாமல். உருளைக் கிழங்கு மசாலா செய்வதில் உகிக்குப் பதிலாக சர்க்கரை வள்ளிக் கிழங்கைப் போட்டுச் செய்வதுண்டு...

    சர்க்கரை வள்ளிக் கிழங்கும் கத்தரியும் போட்டு அசடு என்று ஒரு கூட்டு என் மாமியார் செய்வார்கள் அந்தக் குறிப்பு எபியிலும் 'திங்க'வில் வந்த நினைவு.

    பொங்கலுக்குச் செய்யும் கூட்டிலும் இது இடம் பெறும்.

    இதையே வெல்லம் போட்டு நெய் எல்லாம் விட்டு கிளறுவதும் உண்டு. அப்படி வெல்லம் போட்டுச் செய்வதை போளி (மைதா போடுவதில்லை செய்வதுண்டு. காரம் போட்டும் போளி (மைதா அற்ற) செய்வதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இங்கு இந்தப் பருவத்தில் வேக வைத்து விற்கிறார்கள். தள்ளு வண்டிகளில்.

    அது போல மரச்சீனிக் கிழங்கையும் விற்கிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. துரை அண்ணா நம் வீட்டிலும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாம்பார் வைப்பதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. சர்க்கரைவள்ளி கிழங்கின் உபயோகங்கள் குறித்த விபரங்கள் அருமை. முன்பு சிறு வயதில் கரி அடுப்பில் பக்குவமாக சுட்டு சாப்பிட்டுள்ளோம். பாட்டி அப்படி செய்து தருவார்கள். நீங்கள் கூறுவது போல் இது மாலை நேர சத்துள்ள உணவாக சாப்பிட்டுள்ளோம். சாம்பாரும் அடிக்கடி செய்துள்ளோம். தேங்காய் துருவல் சேர்த்து பொரியல் நன்றாக இருக்கும். ஏனோ இப்போதுள்ள குழந்தைகள் இதை வேண்டாமென ஒதுக்குகிறார்கள். என் மகள் வயிற்று பேத்தி மட்டும் இதைச் செய்தால், கொஞ்சம் விரும்பி எடுத்துக் கொள்வாள். நல்ல தகவல்களுடன் கூடிய பதிவை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..