நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 15, 2018

செல்வப் பசு

செல்வம் பசு..

உண்மையில் பசு தான் செல்வம்..


இதனால் தான் ஐயன் திருவள்ளுவர் -
கல்வியின் பெருமையைக் கூறும்போது

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை..

- என்று சிறப்பிக்கின்றார்..

கல்விதான் செல்வம்.. அதைவிடப் பெருஞ்செல்வம் வேறெதுவும் இல்லை.
செல்வம் என்பதனை மாடு எனும் சொல்லால் குறிப்பிடுகின்றார்...

தேவாரத் திருமுறைகளிலும் இவ்வாறே அருளப்படுகின்றது..

மருவி நின்பாதம் அல்லால் மற்றொரு மாடிலேனே!...

எம்பெருமானே.. நினது திருவடிகளை அன்றி மற்றொரு செல்வம் இலேன்!..
- என்று உருகுபவர் திருநாவுக்கரசு ஸ்வாமிகள்...

பொருள் எனும் செல்வத்தைப் பாதுகாத்த நாம் -
பசு எனும் செல்வத்தைப் பாதுகாத்தோமா!.. என்றால்

இல்லை!.. - என்பதே விடை..


இப்படி ஒரு சூழல் எதிர்காலத்தில் வரும்!..
- என்பதனை உணர்ந்திருந்த நம் முன்னோர்கள்
தை மாதத்தின் இரண்டாம் நாளை கால்நடைச் செல்வங்களுக்கானதாக உருவாக்கித் தந்தார்கள்...

ஆனால், நாம் உள்ளத்தில் கொள்ளவில்லை...

பெரும்பாலும் ஏழையின் வீட்டில் கூட கன்றும் பசுவும் இருந்தன ஒரு காலத்தில்...

அதனால் தான் 99% ஆரோக்கியம் நிலவியது கிராமங்களிலும் நகரங்களிலும்...


சில தினங்களுக்கு முன் -
தமிழகத்தின் தலைநகர் வாழ் மக்கள்
பொலி காளைகளை ஆச்சர்யத்துடன் நேரில் பார்த்திருக்கின்றார்கள்..

பசுவினிடமிருந்து இப்படித்தான் பால் கறப்பதா!.. - என்று வியப்பு..

சென்னையில் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கால்நடைக் கண்காட்சி நடந்திருப்பது அங்கிருப்பவர்களுக்கெல்லாம் பெரிய அதிசயம்..

வயல்வெளிகளை வாழ்வியல் முறைகளைக் காணாதோர் அங்கே ஆயிரம் ஆயிரம்...

தமிழே படிக்காமல் தமிழகத்தில் மருத்துவர் என்றும் பொறியாளர் என்றும் வேறுபல உயர் நிலைகளையும் எப்படி அடைய முடிகின்றதோ...

அப்படியே தமிழகத்தின் அடிப்படை வாழ்வியலை அறியாமலேயே
வாழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பவர்களும் இங்கே இருக்கின்றார்கள்...

இத்தனைக்கும் இரண்டு தலைமுறைக்கு முன்னால் இவர்கள் எல்லாம்
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்..

அவர்கள் என்ன!.. நாம் எல்லாரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே!..

ஏனெனில், வேளாண்மை தானே உலகின் ஆதி!..


உலகின் முதல் மனிதன் மண்ணில் கை வைக்காது இருந்திருந்தானே ஆயின் -
இம்மண்ணுலகு மண்ணுலகாகவே ஆகியிருக்கும்...

அப்படி அவன் காப்பதற்கு முனைந்தபோது
அவனுக்குத் தோள் கொடுத்து நின்றவை - காளைகள்!..

அதனால் தான் - தான் வணங்கிய ஈசனுக்கு அருகில் கொண்டு போய் காளையை வைத்தான்...

கடவுளை வணங்கியதோடு காளையையும் வணங்கினான்...

தனது வாழ்க்கைக்குத் துணையாய் இருந்த அத்தனைக்கும் வணக்கத்தையும் மரியாதையையும் செலுத்தினான்..


இதனை உய்த்துணராத மூடர்கள் -

கல்லை வணங்குகின்றான்... காற்றை வணங்குகின்றான்..
மண்ணை வணங்குகின்றான்... மரத்தை வணங்குகின்றான்...
மாட்டையும் வணங்குகின்றான்... காட்டுமிராண்டி!..

- என்று கதைத்து வைத்தார்கள் கருத்தறிந்தவர்களாய்!....,.

இப்படி இவன் இவற்றைச் சிறப்பித்து வணங்கி
அடுத்த தலைமுறையினரிடம் கொடுத்திராவிட்டால் -

கருத்தறிந்து கதைத்தவர்களும் காட்டுமிராண்டிகளாகவே இருந்திருப்பார்கள்..


வேளாண்மையும் தாளாண்மையும் தான் தமிழனின் முதுகெலும்பு...
அதனுள் ஓடும் உயிர் நாளம் தான் கால்நடைச் செல்வம்!..

- என்பதைப் புரிந்து கொண்ட ஆதிக்க வெறி பிடித்த அந்நியர்கள்
உயிர் நாளத்தை அறுத்து முதுகெலும்பை முறிக்க முனைந்தார்கள்..

அதிலே வெற்றியும் கண்டார்கள்..

அதன் விளைவாக -
இன்றைக்கு கிராமங்களில் கூட
கால்நடைகள் அறுகிப் போயின...

பாரம்பர்யங்களை மாற்றியதால்
கழனிகளும் களங்களும் கருகிப் போயின...

கால்நடைகளின் அழிவினால்
இயற்கை எருவிற்குப் பஞ்சமானது..
இரசாயனங்களைக் கொட்டியதால் வயல் வெளியும் பாழானது...

நாட்டுப் பசு ஒரு வேளைக்கு உழக்கு பால் கொடுப்பதே அரிது..

ஆனால், அந்த உழக்குப் பாலின் துளிகள் அத்தனையும் அமுதமாக இருந்தன..


காலம் மாறிய சூழ்நிலையில்
நாட்டுப் பசுவுக்கு மாற்றாக செயற்கை முறையில்
கருவூட்டப்பட்ட பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டன...

இதன்பின் -
ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்த
நாட்டுப் பசுக்களும் செயற்கைக் கருவூட்டலுக்கு ஆளாயின...

அதனால் பொலி காளைகளுக்கு வேலை இல்லாமல் போனது..

ஏறு எனப்பட்ட காளைகள்
தமது இணையின் முகங்களைப் பாராமலேயே
கொலைக் களத்தில் வெட்டி வீழ்த்தப்பட்டு
வீட்டுச் சட்டிக்குள் கொதித்து அடங்கின...


காளையின் தழுவல் இல்லாமல்
கருவுற்ற பசுக்கள் - கன்றினை ஈன்ற பின்
குடம் குடமாக பாலைக் கொடுக்கும் - என்று எதிர்பார்த்தால்
ஏமாற்றமே மிச்சமாகப் போனது பேராசைக்காரர்களுக்கு...

அத்தோடு விடாமல் பால் சுரப்புக்கு என்று ஒரு மருந்தைக் கண்டுபிடித்து
கறப்பதற்கு முன்பாக அந்த மருந்தை ஊசி மூலம் பசுவிற்குச் செலுத்தி
தனது ஆசையைத் தணித்துக் கொண்டான் மனிதன்..

இப்போதெல்லாம் மாடுகளின் உலர் தீவனத்திலேயே
பால் பெருக்கத்துக்கான மருந்துகள் கலக்கப்படுவதாக சொல்கின்றார்கள்...

இப்படி கிரியா ஊக்கிகள் மூலமாகப் பெறுவதனால் தான்
தமிழகத்தில் இரவு பகல் எந்நேரமும் பால் தடையின்றி
கடைகளின் குளிர் சாதனப் பெட்டிக்குள் கிடக்கின்றது...

சரி.. இந்தப் பால் நல்லது தானா?..

இல்லை..

இந்தப் பாலே கிரியா ஊக்கிகளின் மூலமாகப் பெறப்பட்டது..

இப்படிப் பெறப்பட்ட பாலின் கட்டமைப்பும்
இரசாயனங்களின் மூலமாக மாற்றப்பட்டு விடுகின்றது..

ஒருகாலத்தில் பாலைக் காய்ச்சி
உறையூற்றி தயிராக்கி
அதைக் கடைந்து அதிலிருந்து
வெண்ணெயையும் மோரையும் பிரித்து
அந்த வெண்ணெயை உருக்கி
நெய்யாக்கினார்கள்..

ஒரு வீட்டில் வெண்ணெயை உருக்கினால் அந்தத் தெருவே மணக்கும்...

சர்.... சர்... சர்... - எனத் தயிரைக் கடைவதனால் எழுந்த சத்தத்துடன்
நறுமணமும் எழுந்து தயிர் கடைந்த ஆய்ச்சியர்களின் மீது படிந்திருந்தது!..

வாச நறுங்குழல் ஆய்ச்சியர்!.. - என்கின்றாள் சூடிக் கொடுத்த சுடர்க்கோடியாள்...

இன்றைக்குக் கடைகளில் விற்கப்படும்
செயற்கை நெய்யில் மணம் என்பதே இல்லை..

பாட்டில்களில் அடைபட்டிருக்கும் நெய்யைப் போட்டுக்
கொளுத்தினால் கூட நறுமணம் கமழ்வதில்லை...

நெய்யில்லா உண்டி பாழ்!.. - என்றார் ஔவையார்..

ஔவையாரை விட அறிவாளியாகிய
இன்றைய நவீன மருத்துவம்
நெய்யை நினைத்துக் கூடப் பார்க்காதே!.. - என்கின்றது..

இதிலிருந்தே உண்மையினை உணர்ந்து கொள்ளலாம்...

ஆயிரம் ஆயிரம் டன் கணக்கில்
ஆஸ்திரேலியாவிலும் ஐரோப்பாவிலும்
வெண்ணெயையும் நெய்யையும் தயாரித்து
அவற்றை உலகின் பல நாடுகளுக்கும்
ஏற்றுமதி என - அனுப்பி வைக்கின்றார்கள்..

இப்போது நான் பணி செய்யும் சமையற் பெருங்கூடத்தில்
நாளொன்றுக்கு சராசரியாக 75 கிலோ வெண்ணெயையும்
உடலுக்குக் கேடான பொருட்கள் பலவற்றையும் சேர்த்து
இனிப்பு (Pastry and Bakery) வகைகளைத் தயாரிக்கின்றார்கள்...

இப்படியான இனிப்புகளை நாளும் தின்பவர்களின் கதி!?...

சந்தேகமின்றி மருத்துவமனை தான்!..

இந்த நிலைமை நமது நாட்டிலும் பரவிக் கொண்டிருக்கின்றது...

இதைப் பற்றி இன்னும் எழுதலாம்..
ஆயினும் அவற்றை வேறொரு பொழுதில் சிந்திப்போம்...


இன்றைக்கு மாட்டுப் பொங்கல் அதுவுமாக
பதிவு ஏதும் வெளியாக வில்லையே!.. - என்று
அன்புக்குரிய கீதா ரங்கன் அவர்களும்
அன்புக்குரிய இளமதி அவர்களும்
நலம் விசாரித்துக் கேட்டிருந்தார்கள்...

யார் மனமும் வருந்தக்கூடாது!..  - என்பதில் முனைப்பாக இருப்பவன் நான்..

அடுத்த சில தினங்களில் -
உங்களிடம் சில வார்த்தைகள்!.. - எனும் பதிவு வெளியாகும்..
அந்தப் பதிவில் அறியத் தருகின்றேன்,..

தஞ்சாவூர் பெரிய நந்தி - இன்றைய அலங்காரம்..
ஆகவே, இன்றைய நிலையில்
நலம் நாடுவோர் எவராயினும் இயன்றவரைக்கும்
பழைய வாழ்க்கை முறையைக் கடைபிடித்தல் அவசியமாகின்றது...

இனிவரும் நாட்களில் நாட்டுப் பசுவையும் அதன் பாலையும் ஆதரிப்போம்..

இப்போது கூட தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாட்டுப் பசுவின் பால் விற்பனை செய்யத் தொடங்கி விட்டார்கள்..ஆனாலும் விலை சற்று அதிகம்..

தேவை அதிகம்.. உற்பத்தி குறைவு..
நாட்டுப் பசுவிற்கு பராமரிப்பும் சற்று அதிகம்..

எல்லாரும் நாட்டுப் பசுவின் பாலை ஆதரித்தால்
உண்மையான பசுமைப் புரட்சி ஏற்பட வாய்ப்புண்டு...

அந்த நாளை ஆவலுடன் வரவேற்போம்!..

நேற்று நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் 
வெற்றி வாகை சூடிய காளைக்குக் கொடுக்கப்படும் 
மரியாதையைக் கீழுள்ள காணொளியில் காண்க..


ஆநிரைகளை வாழ வைப்பதுவே
உண்மையான மாட்டுப் பொங்கல்!..

ஆநிரைகள் வாழ்ந்தால் 
அதனை அண்டியுள்ள மக்களும் 
நலமுடன் வாழ்வர் என்பது திண்ணம்..

ஆன்றோர்கள் காட்டிய வழியில்
ஆநிரைகளைக் காத்து நிற்போமாக!..
ஆநிரைகளின் நல்வாழ்வினுக்கு
வேண்டிக் கொள்வோமாக!..



வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே!.. (3/54)
-: திருஞானசம்பந்தர் :-

வாழ்க நலம்.. வளர்க வளம்!. 
***

7 கருத்துகள்:

  1. அழகிய பதிவு.. நிறைய விசயங்கள் தெரிஞ்சு கொண்டேன்... அழகிய படங்கள் மனதை ஈர்க்குது...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஐயா!

    பதிவு கண்டதே உங்களைக் கண்டதிற்குச் சரியாகிற்று!..
    வரவிற்கும் பதிவிற்கும் நன்றி ஐயா!

    ஆநிரைகள் வாழ்க்கை அடியோடு தொலைந்திடும் நிலை வேதனையைத் தருகிறது.
    மாட்டுப் பொங்கலின்று சிறந்ததொரு ஆய்வுத்தொகுப்புப் பதிவு ஐயா!

    அழகிய படங்களுடன் அறிவுசார் நல்ல பதிவு!

    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  3. துரை செல்வராஜு சகோ...ஆஹா இது இது இதைத்தான் எதிர்பார்த்தேன்...ரசித்து ரசித்து வாசித்தேன். காலையில் பதிவு இல்லை என்றதும் எபியைப் பார்த்துவிட்டு அப்புறம் வீட்டு வேலை சமையல் மாமியார் வீட்டில் சமையல் விருந்து என்று சென்றதில் இப்போதான் பதிவைப் பார்க்க முடிந்தது.....

    அழகான பதிவு...அனைத்து கருத்துகளும் அருமை. மிக்க நன்றி எங்கள் வேண்டுகோளை ஏற்று வெளியிட்டமைக்கு. உங்களின் வார்த்தைகள் பதிவையும் எதிர்ப்பார்க்கிறோம்...

    ஆம் சகோ இப்போது ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு நாட்டுப் பசுக்களின் பால் விற்கப்படுகிறது. ஆனால் விலை அதிகம் தான். அதை ஏன் கேட்கிறீர்கள் முன்னால் இவை எல்லாம் தானே நம் வாழ்வியலில் இருந்தன. இடையில் காணாமற் போய் இப்போது மிண்டும் பாரம்பரியம் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு விலையையும் ஏற்றிவிட்டார்கள்.

    வாசநறுங்குழாய்ச்சியர்...ஆஹா...நான் என் பாட்டி வீட்டிற்குச் (திருக்குறுங்குடி) செல்லும் போதெல்லாம் வீட்டில் பால் கொண்டு தரும் ஆய்ச்சி....வீட்டில்வெண்ணை எடுத்து நெய் காய்ச்ச்சுவார் பாட்டி. தயிர் பற்றவில்லை என்றால் ஆய்ச்சியரிடம் தயிர் கொண்டுதரச் சொல்லுவார். வீட்டிற்கு ஆய்ச்சி தலையில் பானையுடன் வரும் போதே தயிர் வாசம் அவரிடமும் வீசும் பாருங்கள் அந்த மணமே அலாதிதான்...

    கிராமத்தில் இருந்தவரை பசும் பால், எருமைப்பால் என்று கறந்து வாங்கி வந்து அதில்தான் எல்லாமே...என் மகனும் மிகவும் ருசித்திருக்கிறான்...அவன் அம்மாடுகளிடம் காதல் கொண்டுதான், அவனுடன் எங்கள் கிராமத்திற்குச் சென்றாலே பைரவர்கள் அவனைச் சுற்றிக் கொண்டுவிடுவார்கள். கன்றுகுட்டியைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொஞ்சுவான்...ஆடு, வான் கோழி, கோழிக் குஞ்சைப் பிடிக்க முயற்சி என்று.... கால்நடை மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு கால்நடை மருத்துவனானான்..

    நாங்கள் எங்கள் வீட்டில் கூடியவரை வெண்ணை எடுத்து நெய் காய்ச்சுகிறோம்..அருகில் மாடு வளர்க்கிறார்கள். அங்கு பால் வாங்குகிறோம். பனீரும் கூட அவர்கள் செய்கிறார்கள் பால் நிறைய மீந்துவிட்டால்.

    காளையை இறைவன் அருகில் வைத்து வணங்கியது...மரம், ஆநிரை, எல்லாவற்றையும் வணங்கியது பற்றி சொன்ன விஷயங்கள் அனைத்தும் அருமை..

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ஜி
    மாட்டுப் பொங்கல் அன்று காளையைக் குறித்த அரிய விடயங்கள் பல அறிந்தேன் புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  5. நிறைய விஷயப் பகிர்வுகள் பாராட்டுகள் நான்கிராமத்தில் இருந்த போது பார்த்திருக்கிறேன்பொலிகாளைகளைத்தேடி பசுக்களை அனுப்புவார்கள் ஓ அதெல்லாம் நினைவுகளே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆநிரைகளுக்கு மரியாதை இன்னும்மிச்சம் இருகிறது என்பதுகாணொளி காட்டுகிறது

      நீக்கு
  6. விளக்கமான, சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..