நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 22, 2018

மா... - 1

மா..

அம்மா!..

மா!.. - எனும் ஓரெழுத்துக்குள் சிறப்புகள் பல பொருந்தியிருந்தாலும்
அம்மா - என்ற அழைப்பு இருப்பது ஒன்றே பெருஞ்சிறப்பு..

இன்று விடியற்காலையில் - எங்கள் பிளாக்கில் வெளியான மாங்காய் ஊறுகாய் பற்றிய பதிவினைக் கண்டதும் -



இதைப் பற்றி சிந்திக்காமல் இருந்து விட்டோமே!.. என்று தோன்றியது...

அந்த நேரத்தில் தான் வந்து சேர்ந்தான் அவன்....

வாத்யாரே.. என்ன யோசனை..ல இருக்கீங்க?...

வா.. சின்னமணி... உட்கார்.. இந்த இலக்கியத்துல...

சரி.. நா.. அப்புறமா வர்றேன்.. வேலையிருக்கு...

அட.. உக்காருப்பா.. கொஞ்ச நேரம்!...

அரை குறை மனதுடன் அவன் உட்கார்ந்த போது

என்ன அக்கா!.. தம்பிக்குப் பொண்ணு பார்க்கப் போனீங்களே.. 
பொண்ணு எப்படி.. சிவப்பா லெச்சணமா இருக்காளா?...

அதையேன் கேக்கிறே செங்கமலம்!.. பொண்ணு மா நிறந்தான்!.. 
ஆனாலும், இந்தப் பய மயங்கி விழுந்துட்டான்!..
பேசி முடி... சீக்கிரம்..ங்கறான்னா... பாரேன்!...

சாலையில் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டு போனார்கள்....

என்ன வாத்யாரே.. மா நிறத்துக்கு மயங்கிட்டான்.. மாங்கா மடையன்!...

அடே.. சின்னமணி.. மாநிறம்..ன்னா பொசுக்கு..ன்னு நெனைச்சிடாதே!..
இலக்கியத்து... ல மாநிறத்தைப் பத்தி நெறைய சொல்லியிருக்காங்க....

என்னா...ன்னு!.. 



மா நிறந்தான் அவள்!.... ஆனால் -
அவளுடைய பற்கள் முத்துக்களைப் போல....
அவள் மேனி நறுமணம் வீசுகின்ற பூவைப் போல....
மை பூசிய கண்கள் கூரிய வேலினைப் போல....
இத்தனையும் போதாதென்று -
தோள்கள் இரண்டும் மூங்கிலைப் போல இருக்கின்றனவே!...

அதெல்லாம் இருக்கட்டும்.. மூங்கி மாதிரி தோள்..ன்னா முள்ளு குத்துமே!..

அட... உங்கிட்ட சொல்ல வந்தேன் பாரு!..
மூங்கில் மாதிரி தோள்..ன்னா.. அழகா!...

உறுதியா.. குடும்ப பாரம் தாங்கற மாதிரி...ன்னு சொல்லுங்க வாத்யாரே!..

சின்னமணி ... இப்பதான் உன் தலைக்குள்ள விளக்கு எரியுது!...

இப்படி எல்லாம் சொல்லிட்டுப் போனது  யாரு?..

நம்ம திருவள்ளுவர் தான்!..

அவரா.. பார்க்கிறதுக்கு குடுமி தாடி எல்லாம் வெச்சுக்கிட்டு 
சாமியார் மாதிரி இருக்கார்... அவரா இப்படி சொன்னார்?...

நீ என்ன இந்த காலத்து பரட்டை....ங்க மாதிரி நெனைச்சியா!..
இவங்க...ல்லாம் அந்த காலத்துல நல்லதே சொன்னவங்க.. செஞ்சவங்க!...

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல்உண்கண் வேய்த்தோள் அவட்கு... (1113)

அப்படி..ன்னு சொல்றார்....

சரி.. இந்தப் பாட்டுல முதல் வார்த்தையா -
முறிமேனி - ன்னு சொல்லியிருக்காரே..
முறிமேனி....ன்னா புருசனோட இடுப்பை முறிக்கிற மேனியா!...

புருசனோட எலும்பை முறிக்கிறதெல்லாம் அப்புறம்!.. 
முதல்..ல முறிமேனி..ன்னா தளிர் மேனி..ன்னு அர்த்தம்..

அப்படியா!.. சரி... தளிர்மேனி.. ன்னா அரசந்தளிரா... ஆலந்தளிரா?...

தளிர்...ன்னா.. மாந்தளிர் தான்!...
இந்த மாந்தளிர் மேனி...ங்கறது தான் மா நிறம்... 

ஓகோ... திருவள்ளுவர் காலத்திலயே மா நிறத்தைப் பார்த்து 
மயக்கம் போட்டிருக்கானுங்களா... அப்போ இந்தப் பையன் மயங்கி விழுந்ததுலயும் தப்பில்லே...

வள்ளுவர் மட்டுமில்லே.. இளங்கோவடிகள் கூட ....

யாரு.. இந்தக் கண்ணகி பாட்டு எழுதுனாரே அவரா!...

அவரே தான்!..

என்ன வாத்யாரே.. சாமியாராப் போனவங்களுக்கெல்லாம் 
இப்படித்தான் தோனுமா?...

சின்னமணி.. இதெல்லாம் இலக்கியம்....ப்பா!...
இதையெல்லாம் படிச்சுட்டு யாரும் கெட்டுப் போனதில்லை..
விமர்சனம் பண்றேன்....ன்னு தான் முகத்துல கரி...யப் பூசிக்கிறது!..

சரி.. அவரு என்ன சொல்லியிருக்காரு!..

வேந்துறு சிறப்பின் விழுச் சீரெய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை.. 

- அப்படீ..ன்னு சொல்றார்....

அட.. இந்தக் கோவலனும் மாநிறத்துக்கு மயக்கம் போட்டவன் தானா!..

இப்படியான அழகான மா நிறத்தைத் தான் -
மாந்தளிர் மேனி... ந்னு இலக்கியத்தில சொல்றாங்க!...
அந்த சிறப்பெல்லாம் மா மரத்துக்குத் தானே!..

சரிங்க வாத்யாரே.. அவ்வளவு பெருமையா இந்த மாமரத்துக்கு?...

பின்னே... இல்லையா!..
தென்னை, பனை, மூங்கில், வாழை - இதுங்களைப் போல
முற்று முழுதாக மக்களுக்குப் பயன்படுவது - மாமரம்...

முதல்ல தளிரை எடுத்துக்குவோமே...


தளிரு..ல என்ன இருக்கு?...

தளிரை எடுத்து நல்லா காய வெச்சி பொடியாக்கி பல்லு தேச்சா அவ்வளவு நல்லது... பல்லு கறையெல்லாம் காணாப் போய்டும்...

சொல்லவேயில்லையே!...

இன்னுங் கேளு.. மாந்தளிரைப் பறிச்சு ரெண்டு குவளை தண்ணியில கொதிக்க வெச்சி வடிகட்டி வெதுவெதுப்பா குடிச்சா வயித்துல உள்ள கிருமி எல்லாம் ஒழிஞ்சிடும்.. ரத்தத்துல சர்க்கரையும் கட்டுப்படும்!...

அடடே!...

நல்ல நாள் பெரிய நாள்..ன்னா மாவிலை..ல தோரணம் கட்டுறாங்க தானே!..

ஆமா... எல்லாம் பார்க்க அழகா இருக்கும்!..


அழகுக்கு மட்டும் இல்லே... வேப்ப இலை மாதிரி மா இலையும் கிருமி நாசினி.. நம்ம கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழிச்சிடும்... அதனால தான் மாந்தோப்புக்குள்ள அந்தக் காலத்தில வீடு கட்டுனாங்க...

ஓகோ!...

செம்புக்குள்ள தண்ணிய நிரப்பி அதில நாலு மா இலையப் போட்டு ராத்திரி பூரா வெச்சிருந்து காலையில வீட்டுல தெளிச்சா ரொம்ப நல்லது..

வாத்யாரே.. கோயில்..ல ஐயருங்க மாவிலையால தண்ணி தெளிக்கிறாங்களே.. அந்த மாதிரியா....

ஆமா... சும்மா இருந்தா தண்ணி..
அதுல துளசி, மா இலை இதெல்லாம் போட்டு வெச்சா தீர்த்தம்!...

அடேங்கப்பா!.. இவ்வளவு இருக்கா!..

மாம்பட்டை, கருவப்பட்டை ஆலம்பட்டை எல்லாத்தையும் காய வெச்சி இடிச்சி தூளாக்கி சலிச்சி பல்லு விளக்குனா சொல்லு ஒன்னொன்னும் கணீர்.. கணீர்.. ந்னு இருக்கும்...

மாந்தளிர், மா இலை, மரப்பட்டை எல்லாம் சொல்லிட்டீங்க!..

இதோ.. இன்னொரு சேதி இருக்கு... காஞ்சு போன மாம்பூவை சேகரம் பண்ணிக்கிட்டு மழைக் காலத்தில தணல்...ல்ல சாம்பிராணி மாதிரி தூபம் போட்டா கொசுவெல்லாம் தொலைஞ்சு போகும்....

மாம்பூ ரசம் வயிற்றுப் போக்கை நிறுத்தும்... மாம்பூவை கொதிக்க வச்ச தண்ணியில வாய் கொப்பளிச்சா பல்லு வலி வாய் நாற்றம் போகும்...

வாத்யாரே.. இவ்வளவு சொல்றீங்க... எனக்கு எதுவும் தெரியாதே!..

இதெல்லாம் பெரியவங்க சொன்னது... எளிமையான கை வைத்தியம்...

ம்.. அப்புறம்!...

நெல்லு கொட்டி வைக்கிற பத்தாயம் செய்றது மாம்பலகையில தான்.. ஏன்னா மாம்பலகை மங்கலகரமானது..ன்னு ஐதீகம்..

அதோட நாற்காலி கட்டில் எல்லாம் பெரும்பாலும் மாம்பலகையில தான் செய்வாங்க... காரணம் - உடம்புக்குக் குளிர்ச்சியோட மன அமைதியத் தர்றது மாம்பலகை....

பூஜையறை பலகை கூட மாம்பலகையில செய்றது நல்லது...

நம்ம நாட்டுக்கே உரியது மா மரம்...
வெள்ளைக்காரனுக்கு மா மரத்தைப் பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது..
அவனோட ஆங்கிலத்துல மா மரத்துக்குப் பேரே கிடையாது..
அதனால தான் மாங்காய்.. ங்கிறதை மேங்கோ..ன்னு ஏத்துக்கிட்டான்..


அப்படியா!..

அரபு நாட்டுல..யும் இப்படித்தான்..
அரபு மொழியிலயும் இதுக்குப் பேர் கிடையாது... 
அரபுக் காரனும் மாங்கா..ன்னு தமிழை அப்படியே ஏத்துக்கிட்டான்...
அரபுக் காரனுங்க மாம்பழத்துக்கு அடிமை.. ந்னா பார்த்துக்கோ!...

இவ்வளவு சொல்றீங்களே.. மா வடுவப் பத்தி சொன்னீங்களா?..
மாங்காய், மாம்பழத்தைப் பத்தி சொன்னீங்களா?..

அட.. சின்னமணி!.. இவ்வளவு சொன்ன நான்
அதுங்களப் பத்தியும் சொல்லாம இருப்பேனா!.. 
இப்போ போய் டெலிபோனுக்குப் பணம் கட்டணும்.. 

அப்போ மிச்ச விஷயம் எல்லாம்!...

நாளன்றைக்கு சொல்றேன்!..

அப்போ நானும் கிளம்பறேன்.. கடைக்குப் போவணும்..

என்ன வாங்கப் போறே!...


மா வடு தான்!.

ஊறுகாய் போடவா!..

இல்லே.. பொன்னுமணிக்கு!..

பொன்னுமணிக்கா!?..

ஆமா!.. பொன்னுமணி மாசமா இருக்குது..ல்லே!...
***


வாழ்க வளமுடன்!..   
***

24 கருத்துகள்:

  1. பொன்னுமணிக்கு நல்லபடியாப் பிரசவம் நடக்க வாழ்த்துகள். மாநிறம் என்றால் செந்தளிர் நிறம் என்பதை இன்றே அறிந்தேன். மாவிலைகளைப் போட்டுக் கொதிக்கவைத்துக் கஷாயம் குடிச்சிருக்கோம். அதைப் பற்றிப் பதிவும் எழுதி இருக்கேன்.

    பதிலளிநீக்கு
  2. மாந்தளிர் மேனி என்பதை, நான் மெல்லிய தொட்டால் அசைந்துவிடுகிற மேனி என்பதாகத்தான் புரிந்துகொண்டிருந்தேன். 'முறிமேனி'க்கும் அதான் அர்த்தம். கொஞ்சம் அழுத்திப் பிடித்தால் முறிந்துவிடுவதுபோல் அத்தகைய மெல்லிய மேனி.

    மாந்தளிர் படத்தைப் போட்டு, 'மா நிறம்' என்று சொல்லியுள்ளதை ரசித்தேன். கருப்பும் இல்லை, சிவப்பும் இல்லை நிறம்தான் மா நிறம்.

    மாசமா இருக்கறவங்க, மாங்காய் சாப்பிடுவாங்கன்னு படிச்சிருக்கேன். மாவடு சாப்பிடுவாங்களா?

    நிறைய தகவல்களோட இடுகை போட்டிருக்கீங்க. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான உரையாடல் வழியாக நிறைய மருத்துவ விடயங்கள் தந்தமைக்கு நன்றி ஜி.

    பொன்னுமணிக்கு நல்லபடியாக செல்வமணி பிறக்க இறையருள் கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜி எழுத்து வடிவில் مانجو Mango என்று எழுதினாலும் அம்பா என்ற வார்த்தையும் சொல்வழக்கில் உண்டு.

      நீக்கு
    2. ஓ அம்பே என்றால் சிங்களத்தில் மாங்காய் ஹா ஹா ஹா ..

      நீக்கு
  4. எங்கள் தளத்தில் அம்மாவைப் படித்த கையோடு இம்மா பற்றி படிக்க உங்கள் தளம் வந்தேன். சும்மா சொல்லக் கூடாது... யம்மா! எவ்வளவு விவரங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ஆஹா .. அம்மா.. இம்மா.. யம்மா... என்னமா பாட்டெழுதுறார்:)..

      நீக்கு
  5. மாந்தளிர், முறிமேனி போன்றவற்றின் பொருளை அறிந்தேன். மூங்கில் தோள் படித்திருக்கிறோம். உதாரணத்துக்கு யாரையாவது சொன்னால்தான் எனக்குப் புரியும்! சட்சட்டென எங்கிருந்து பிடிக்கிறீர்கள் பாடல்களை! அருமை.

    பதிலளிநீக்கு
  6. பொன்னுமணி அக்காவுக்கு:) மா வடுவா?:) குடுங்கோ குடுங்கோ:)..

    மா இலையில் கிருமியைப் போக்கும் தன்மை இருக்கு என்பது புதுசு எனக்கு... ஊரில் மஞ்சள் தண்ணியை மா இலையாலதானே ஐயர் தெளிப்பார்ர்.. கோயிலில் தீர்த்தமெல்லாம்..

    நிறைய விசயங்கள் அறிஞ்சிட்டேன் இங்கு வந்ததால...

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் ஐயா!

    அருமையான நிறைந்த பயனுடைய தகவற் களஞ்சியமாக இப்பதிவு தந்துள்ளீர்கள்!

    மாவின் சிறப்புக்கள் கற்பகதரு பனை மரத்தின் சிறப்பைப் போலவே உள்ளதே!
    சில தகவல்கள் அறிந்திருக்கின்றேன். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுதலின் காரணம், தீர்த்தம் போன்றவற்றுடன்,
    மாம்பலகையில் கட்டில் (போன்று அகலமாக இருக்காது ஆனால் ஒருவர் படுக்கக் கூடியதான அகலம் குறைந்த வாங்கு எங்கள் வீட்டில் இருந்தது. அது) உடம்பிற்குக் குளிர்ச்சி எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
    மாந்தளிர் மேனியும் படித்ததாக நினைவிலுண்டு.

    வைத்தியக் குறிப்புகள் இன்றுதான் தெரிந்து கொண்டேன் ஐயா!
    பதிவினை மிக அருமையாக நாடகப் பாணியில் தந்தமை
    ரசிக்கும் படியாக அமைந்தது. உங்கள் திறமை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்!

    அனைவரும் பயன் பெற மிகச் சிறப்பான பதிவும் பகிர்வும்!
    மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. தொடக்கமே அசத்தல்!!! ஆஹா! மா!!!!!!! இது உலகின் குரல் இல்லையோ!!!
    துளசிக்கு லிங்க் அனுப்பிட்டேன்....
    கீதா

    பதிலளிநீக்கு
  9. மாதா ஊட்டாத சோறை மாங்கா ஊட்டும்னும் சொல்லுவது உண்டே!!! இதோ வாசிக்கத் தொடங்கிட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. முறிமேனினா தளிர் மேனி!!// அட!!! இதன் மற்றொரு அர்த்தமும் தெரிந்து கொள்ள முடிந்தது அண்ணா...அருமை...

    எங்கள் மாமியார் வீட்டில் மாமரம் இருப்பதால் மாம்பூ ரசம் வைப்பதுண்டு. அப்புறம் புதிய தகவல் ஒன்றையும் தெரிந்து கொண்டேன் மாம்பூவைக் காய வைத்து கொசுவிரட்டியாகப் பயன்படுத்தலாம் என்பதை...இப்போது மாம்பூ காலம் தொடங்கிவிடுமே....சேகரித்துவிட்டால் போச்சு...மைத்துனரிடமும் சொல்லிவிட்டால் சேகரித்து வைத்துவிடுவார். வேம்பும் உள்ளதால் வேப்பம்பூ சேகரிப்பதுண்டு...

    இதோ அடுத்த கருத்து

    கீதா

    பதிலளிநீக்கு
  11. மாந்தளிர் சர்க்கரை வியாதிக்கு நல்லது என்று சொல்லுவதுண்டு...நானும் எடுத்துச் சாப்பிடுவதுண்டு.

    மாம்பட்டை பற்றியும் கேள்விப்பட்டதுண்டு. என்றாலும் பல தகவல்கள், விளக்கங்கள் புதிது. நிறைய அறிய முடிந்தது. கிருமி நாசினி, பல்லுக்கு நல்லது போன்ற அனைத்தும்.

    மா - என்றால் பெரியது என்று அர்த்தம் இல்லையா...காய் சிறிதென்றாலும் "மா" ங்காய் தான் இத்தனை ரகசியங்களைக் கொண்டுள்ளதே!! அதனால் சரியாகத்தான் பெயர் பெற்றிருக்கிறதோ!!

    அடுத்த பதிவில் இன்னும் அறிய தொடர்கிறோம் அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  12. மாந்தளிர் படம் அழகோ அழகோ அழகு!!! இலக்கிய மேற்கோள்கள் வியக்க வைக்கின்றன அண்ணா ஹப்பா எத்தனை வாசிப்பு!!! கில்லர்ஜி அடிக்கடிச் சொல்லுவார் உங்களைப் பற்றி...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. பொன்னுமணிக்குச் சுகப்பிரசவம் ஆகடட்டும்...கூடவே பொன்னுமணிக்குயிலே என்ற பாடலும் நினைவுக்கு வருகிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  14. மா என்றதும் நிறைய பாடல்கள் மனதில் ஒலிக்கத் தொடங்கிவிட்டது!!

    மாஞ்சோலைக் கிளிதானோ!!!

    மாம் பூவே! சிறு மைனாவே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. அரிய தகவல்கள்.....

    அனைத்தும் மிக சிறப்பு...

    பதிலளிநீக்கு
  16. மாநிறமே சிறந்தது என்று இப்போது வரும்விளம்பரமே கூறுகிறதே சிவப்பு நிறம் என்பதெல்லாம் இனி எடுபடாது

    பதிலளிநீக்கு
  17. உங்கள் பதிவு திருடப்படப் போகிறது காலை சன் தொலைக்காட்சியில் நாட்டு மருத்துவம் பகுதியில் உங்கள் குறிப்[புகள் பயன்படப் போகிறதாம்

    பதிலளிநீக்கு
  18. மாங்காய் பற்றி மாமரம் பற்றி எத்தனை தகவல்கள்! அதுவும் பல மேற்கோள்கள். உங்கள் உழைப்பு தெரிகிறது! வழக்கம் போல அருமையான உரையாடலில் மா பற்றிச் சொல்லியிருப்பது அனைத்தும் அருமை. இன்னும் தெரிந்து கொள்ள ஆவல்...

    தொடர்கிறோம்...

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  19. மாங்காய் ஊறுகாய் ரொம்பப் பிடிக்கும்..

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  20. ஆஹா... அற்புதம் ஐயா...
    மாவினைப் பற்றி எவ்வளவு அழகா எழுதியிருக்கீங்க...
    பள்ளிக்கூடத்துக்குப் போகும் போது மாங்கொழுந்து, வேப்பங்கொழுந்து, புளியங் கொழுந்தெல்லாம் பறிச்சி தின்னுக்கிட்டே போவோம்...

    நல்ல பகிர்வு ஐயா...

    உடல் நலம் இப்போ எப்படியிருக்கு?

    பதிலளிநீக்கு
  21. அட மாவுக்கு இத்தனை சிறப்புக்களா? அழகான விளக்கங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..