நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 05, 2014

மாமதுரைத் திருவிழா

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா -  கடந்த வியாழனன்று (மே-1) காலை கொடியேற்றத்துடன் மங்களகரமாகத் தொடங்கியது.
சைவ, வைணவ ஒற்றுமையின் அடையாளமாக நிகழும் மதுரை சித்திரைத் திருவிழா தமிழகத்தின் மிகப் பெரிய திருவிழா ஆகும்.


சென்ற ஆண்டு - சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததும் -

மறுபடி எப்போது திருவிழா!?.. - என ஏங்கிய நெஞ்சங்கள் மலரும்படிக்கு,

இதோ - மதுரையம்பதியில் மங்கலகரமாகத் திருவிழா!..

முன்னதாக சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு -

தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சித்திரை பதினாறாம் நாள் (29/4) செவ்வாய்க்கிழமை முகூர்த்தக்கால் நடப்பட்டது.

பின்னர், வண்டியூர் தேனூர் மண்டகப்படியில்-

ஸ்ரீஅழகர் கோவில் பட்டாச்சாரியார்களை - ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிவாச்சாரியார்கள் சந்தித்து திருவிழாவுக்கு அழைப்பு விடுத்தனர்.


சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக, ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருக் கோயிலில்,

நிகழும் சுப ஸ்ரீஜய வருடம் சித்திரை பதினெட்டாம் நாள் வியாழனன்று (மே-1) கோலாகலமாக துவஜாரோகணம் நடைபெற்றது.

கொடியேற்றத்தை முன்னிட்டு ஸ்வாமி சந்நிதியின்  முன்புறமுள்ள கம்பத்தடி மண்டபம் மலர் பந்தல் - மலர்த் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கம்பத்தடி மண்டபத்தில் உள்ள ஐம்பத்தொன்பது அடி உயரமுள்ள தங்கக் கொடி மரத்திற்கும் பலிபீடத்துக்கும், அதிகார நந்திக்கும் - மலர் அலங்காரம் செய்யப் பட்டிருந்தது.

இதனால் ஆலய வளாகம் - மலர்களின் நறுமணத்தால் நிறைந்திருந்தது. 

ஆலயத்தின் ஸ்தானிக அர்ச்சக பெருமக்கள் - சித்திரைத் திருவிழாவுக்காக காப்புக் கட்டி - சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.

கொடிமரத்தின் முன்  கலசங்களில் புனித நீர் வைத்து பூஜை செய்யப்பட்டது.


சொக்கநாதர் பிரியாவிடையுடன் எழுந்தருள, மீனாட்சி அம்மன் பல்லக்கில் கம்பத்தடி மண்டபத்தின் முன் எழுந்தருளினாள்.

சொக்கநாதர் வெண்பட்டு அணிந்து - வைரக்கிரீடம் தரித்திருந்தார்.
 
பிரியாவிடையும் அம்மனும் வாடாமல்லி நிறப் பட்டாடை அணிந்திருந்தனர்.

பிரியாவிடை வைரக் கொண்டையுடன் விளங்க  மீனாட்சி - மரகத ஆரம்  பவள மாலைகள் தரித்தவளாகத்  திகழ்ந்தாள்.  

சோமாஸ்கந்த திருக்கோலத்தில் ஸ்வாமி வீற்றிருக்க,  எதிர்புறம் மீனாட்சி , விநாயகர், சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளியிருந்தனர்.

அலங்கரிக்கப்பட்ட கோயில் யானையும் நிறுத்தப்பட்டிருந்தது.

ஐம்பதடி உயரமுள்ள  மாலைகளால்  அலங்கரிக்கப்பட்டிருந்த - கொடிமரத்தில் காலை 10.39 மணிக்கு வெண்ணிற ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது.

கொடிமரத்தின்  பீடத்தில் - பால், பன்னீர், பஞ்சாமிர்தம் இவற்றால் அபிஷேகம் நிகழ்ந்தது. யாக கலசங்களின் புனித நீர் கொண்டு கொடிமரத்தைச் சுற்றிலும் அபிஷேகம் நடைபெற்றது.

அன்னையின் திருக்கரத்தில் அமைதிப்புறா
கொடிமரத்தில் பட்டு வஸ்த்ரங்கள் அணிவிக்கப்பட்டன. பின்னர் நிவேத்யம் சமர்ப்பிக்கப்பட்டு - ஷோடச உபசாரங்களுடன்  தீபாராதனைகள் நிகழ்ந்தன.

வைபவத்தின் போது திருக்கோயில் ஓதுவார்கள் தேவார திருமுறைகளைப் பாடிப் பரவினர்.

கொடியேற்றத்தின் போது பலவகையான மலர்கள் கொண்டு புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது. தர்ப்பையும் கொடி மரத்தில் சாற்றப்பட்டிருந்தது. 

நிகழ்ச்சிகளை திரளான பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து இன்புற்றனர்.

மாலையில், சுவாமி கற்பக விருட்சத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் - வீதி உலா நடைபெற்றது.

மதுரை நகரில் கோடை மழை பெய்து சற்றே வெப்பம் குறைந்திருக்கின்றது. மக்கள் மகிழ்ந்த நிலையில் கொடியேற்றம் நடைபெறுகிறது. வருண ஜபம் நடந்த மறுநாள் மழை பெய்திருக்கின்றது.

இதுவரை நான்கு நாட்கள் நிகழ்ந்த திருவிழாவினைக் கண்டு மகிழுங்கள்.

திருவிழாவில் பொங்கிப் பெருகும்  - அருள் வெள்ளம்!..




முதல் நாள்
இரண்டாம் நாள்
மூன்றாம் நாள்
நான்காம் நாள்
திருவிழாவில் பொங்கிப் பெருகும் - ஆனந்த வெள்ளம்!..







மேலும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள்:

சித்திரை 25 (மே/8) - மீனாட்சி பட்டாபிஷேகம்.
சித்திரை 26 (மே/9) - மீனாட்சி திக்விஜயம்.
சித்திரை 27 (மே/10) - சுந்தரேசர் மீனாட்சி திருக்கல்யாணம்.
சித்திரை 28 (மே/11) - திருத்தேரோட்டம்.

மீனாட்சி அம்மனின் திருக்கல்யாண வைபவத்தைக்  காண்பதற்கு ஆறாயிரம் பேர் தெற்கு கோபுரம் வழியாக எவ்விதக் கட்டணமும் இன்றி அனுமதிக்கப் படுவர்.

தவிர - இம்முறையும் 'ஆன்லைனில்' ரூ.500/- மற்றும் ரூ.200/- மதிப்பில் நுழைவுச்சீட்டுகள் விற்பனையாகி உள்ளன.  

ரூ.500/-  நுழைவுச் சீட்டில்  ஆயிரத்து ஐநூறு அன்பர்கள் மேற்கு கோபுரம் வழியாகவும், ரூ.200/-  நுழைவுச் சீட்டில் நான்காயிரம் அன்பர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்படுவர். 


திருக்கல்யாணத்தை பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் பெரிய திரை வசதியும் குளிர் சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயிலின் சார்பாக அறிவித்துள்ளனர்.

மே/12 அன்று மாலையில் அழகர் மலையிலிருந்து மதுரைக்குப் புறப்படும் கள்ளழகர் - மே/14 அன்று காலையில் வைகையில் இறங்கி அருள்கின்றார்.


படங்களை வழங்கிய அன்பு நண்பர் குணாஅமுதன் அவர்களுக்கு நன்றி!..

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே!..
 
திருஞானசம்பந்தர் (3/120)

சிவாய திருச்சிற்றம்பலம்.. 
* * *

11 கருத்துகள்:

  1. அன்னையின் திருக்கரத்தில் அமைதிப்புறா
    அருமை..கருத்தைக் கவர்ந்தது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. மாமதுரைத் திருவிழாவினை,தங்களின் நேரடி ஒளிபரப்பில் கண்ட ஓர் நிறைவு
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  3. திரு ஆலவாய்ப் பெருமானின் புகழையும் சித்திரைத் திருவிழாவையும் மனதில் நிற்கும் புகைப்படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி ஐயா..

      நீக்கு
  4. சிறப்பான படங்களுடன் விளக்கங்கள் அருமை ஐயா...

    அன்பு நண்பர் குணாஅமுதன் அவைகளுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அழகு. நாங்களும் கலந்து கொண்ட உணர்வு தந்த படங்கள். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. அருமையான பகிர்வு,
    சித்திரை திருவிழாவை திரு. குணாஅமுதன் மூலம் அழகாய் நேரில் பார்க்கும் உணர்வை தந்தீர்கள்.
    உங்களுக்கும் குணா அமுதன் அவர்களுக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..