நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
ஞாயிற்றுக்கிழமை
சும்மா இரு சொல் அற!..
- என்பது,
முருகப்பெருமான் அருணகிரி நாதருக்கு அளித்த உபதேசம்...
செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.. (12)
என்று கந்தர் அனுபூதியிலும் சொல்லப்படுகின்றது..
ஆக,
" சும்மா " என்கிற வார்த்தை முருகப் பெருமான் பேசிய வார்த்தை..
காலங்களைக் கடந்தும் இந்த வார்த்தையின் அழகு மிளிர்கின்றது...
Fb ல் வந்த பகுதி
சும்மா படித்துத் தான் பாருங்களேன்..
பேச்சு வழக்கில் நாம் அடிக்கடி
பயன்படுத்துகின்ற வார்த்தை - சும்மா..
சும்மா என்றால் என்ன?..
பேச்சு வழக்கு சொல்லாக இது இருந்தாலும், தமிழ் மொழியின் உள்ளே வாங்கப் பட்டிருக்கின்ற வார்த்தை தான் - சும்மா!..
சும்மா என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் பதினைந்து அர்த்தங்கள் உள்ளன.
வேற்று மொழிகளில் இல்லாத சிறப்பு நாம் அடிக்கடி கூறுகின்ற சும்மா எனும் வார்த்தை ..
1. கொஞ்ச நேரம் சும்மா இரு
( அமைதியாக /Quite)
2. கொஞ்ச நேரம் சும்மா இருந்து விட்டுப் போகலாமே? (களைப்பாறி விட்டு/Leisurely)
3. அவரைப் பற்றி சும்மா சொல்லக் கூடாது
(அருமை/in fact)
4.இதெல்லாம் சும்மா கிடைச்சது ன்னு
நினச்சியா?..
(இலவசமாக/Free of cost)
5. சும்மா கதை அளக்காதே?..
(பொய்/Lie)
6. சும்மா தான் கெடக்குது. வேணும்னா நீ எடுத்துக்கோ..
(உபயோகமற்று/Without use)
7. சும்மா சும்மா தொல்லை கொடுக்கிறான். (அடிக்கடி/Very often)
8. இப்படித்தான்.. சும்மா பேசிக்கிட்டே இருப்பான்
(எப்போதும்/Always)
9.ஒன்றுமில்லை சும்மா வந்தேன்..
(தற்செயலாக/Just)
10. இந்தப் பெட்டியில் எதுவும் இல்லை சும்மா தான் இருக்கின்றது..
(காலி/Empty)
11. சும்மா சொன்னதையே சொல்லாதே..
(மறுபடியும்/Repeat)
12. பிள்ளைகளிருக்கிற வீட்டுக்கு சும்மா போகக் கூடாது.. (வெறுங் கையோடு/Bare)
13. வேலை இல்லாம சும்மா தான் இருக்கின்றோம்..
(சோம்பேறித் தனமாக/ Lazily)
14.அவன் இப்படித் தான் சும்மா ஏதாவது உளறுவான்..
(வெட்டியாக/idle)
15.எல்லாமே சும்மா தான் சொன்னேன்..
(விளையாட்டிற்கு/ Just for fun)
நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த சும்மா என்கிற ஒரு சொல் நாம் பயன் படுத்துகின்ற இடத்தின் படியும், தொடர்கின்ற சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது என்பது சும்மா இல்லை ஆச்சர்யம்
அமுதே தமிழே நீ வாழ்க!..
( Fb ல் கிடைத்ததை என்னளவில் சீர் செய்திருக்கின்றேன்)
ஓம் நம சிவாய
**

சும்மா என்ற வார்த்தையில் தான் எத்தனை அர்த்தங்கள்... சும்மா சொல்லக்கூடாது, நன்றாகவே பகிர்ந்து இருக்கிறீர்கள் உங்கள் பதிவினை... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குசும்மா கிடைத்ததை வைத்து பதிவைச் செய்திருக்கின்றேன்
நீக்குதங்கள் அன்பின்
வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி வெங்கட்..