நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஆகஸ்ட் 22, 2022

குரு தட்சணை

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
(நன்றி: இணைய தளத்தின் 
செய்திக் குறிப்புகளுக்கு)


நேற்றைய பதிவு Fb ல் வந்ததாகும்.. 

அதற்கு நான் இட்ட கருத்துரையின் தொடர்ச்சியாக இந்தப் பதிவில் என்னுடைய கருத்துகள்...

நேற்றைய பதிவில் கருத்து வழங்கிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
***

பல வருடங்களுக்கு முன்பு 
மரத்தின் நிழலில் இருந்து
பாடம் சொல்லிக் கொடுத்த குருநாதர்கள் அன்றைய ஓலைச் சுவடிகளைப் போலவே மிகவும் நைந்து இருந்தார்கள்..


இன்றைய மக்களாட்சியில்
சாதாரண ஊழியருக்கே சம்பளம்  ஆயிரக்கணக்கில்!..

கீழே உள்ள செய்திக் குறிப்பு சில மாதங்களுக்கு முந்தையது..

(நன்றி: இணைய நாளிதழ்கள்)


இப்படி தகுதியற்றவரை ஆசிரியர் என்று எப்படிச் சொல்வது!.. எதற்காகச் சொல்வது?..

அன்றைக்குக் கல்வி கற்றுக் கொடுத்த குருவுக்குத் தட்சணை கொடுத்தோம்..
அதுவும் எப்படி?..

" ஐயா எங்கள் தோட்டத்துக் கத்தரிக்காய்.. அப்பா கொடுக்கச் சொன்னார்கள்!.. "
- என்று சிறு கூடை ஒன்றைக் கொடுப்பான் ஒரு மாணவன்..

இதைக் கண்ட இன்னொரு மாணவன் இரண்டு தேங்காய்களைக் கொண்டு வந்து கொடுக்க மற்றவனோ நான்கு வாழைக் காய்களுடன் வந்து நிற்பான்..

வாத்தியார் (உபாத்யாயர்) மாணவர் உறவு என்பது அன்றைக்கு இப்படித்தான் இருந்தது..

நன்னடத்தை இல்லை என்று கன்னத்தில் அறையப்பட்டாலும்

கணக்கை ஒழுங்காகச் செய்யவில்லை என்று நாலு சாத்து சாத்தப்பட்டாலும் கூட, 

இந்த உறவு முறையும் அன்பின் கொடையும் பாதிக்கப்பட்டது இல்லை..

இப்படியாகத் தான் கல்வி பெற வேண்டும் என்றிருந்தது அக்காலத்தில்..

இதைத்தான் -

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!..  - என்று மனுநீதிச் சோழன் வருந்தியதாக வள்ளலார் எழுதுகின்றார்..

அன்றைக்கு மாட்டிற்கும் அறிவு இருந்தது நீதிக்காக ஆராய்ச்சி மணியை அடிக்க வேண்டும்!.. - என்று..

மன்னனுக்கும் அறிவு இருந்தது.. " ஒரு மாடும் பாதிக்கப்படக்கூடாது நமது ஆட்சியில்!.. " - என்று..

உற்றுழி உதவியும் 
உறுபொருள் கொடுத்தும் 
பிற்றைநிலை முனியாமல்
கற்றல் நன்றே..

- ஆரியப்படை கடந்த நெடுஞ்செழிய பாண்டியன்,

" ஆசிரியர்க்குத் துன்பம் என்று வந்த காலத்தில் அதைத் தீர்க்க உதவி செய்தல், அவரது வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை மிகுதியாகக் கொடுத்தல், பணிவு நிலையில் இருந்து மாறாமல்
இருத்தல் ஆகிய அனைத்தையும் கடைப்பிடித்து ஒருவன் கல்வியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்!.. " - என்று சொல்கின்றார்..

" இப்போது தோதுப்படவில்லை.. வயக்காட்டு வேலை முடிஞ்சதும் கொடுத்துக்கலாம்..  - என்று இருந்துவிட வேண்டாம்.. கையோடு கையாய்க் கொடுத்து விட வேண்டும்!. " - 

என்பதற்காகத்தான்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம் என்று உலகநீதி எனும் நூல் வலியுறுத்துகின்றது..

இதற்குள்ளும் திரிபு வாதங்கள் மாற்றுக் கருத்துகள் ஏராளமாக உள்ளன..

சமூகக் கட்டமைப்பினை உடைப்பதற்காக மாற்றார் செய்த சதி அது..

அத்தகையவர்களுக்கு நம்மவர்கள் சிலர் உடன் போனதனால் விளைநத பிழைகள் ஏராளம்..

" யாவினும் புண்ணியம் கோடி ஆங்கொரு ஏழைக்கு எழுத்தறிவித்தல்.. " என்பது மகாகவியின் முழக்கம்..

ஏழைக்குப் பயிற்றுவித்தலும் அதற்கு ஆவன செய்வதும் - இறைவழிக்கு இட்டுச் செல்லும் அறங்கள் முப்பத்திரண்டினுள் ஒன்று என்பது சான்றோர் வாக்கு..

அறத்தின்படி வாழ்ந்த இந்நாட்டில் -
அறம் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் என்பது  எல்லாருக்கும் நன்றாகத் தெரியும்..

அன்றைய ஆசிரியர்கள் சேவை செய்தார்கள்.. வேலை செய்யவில்லை.. சம்பளம் என்ற நடைமுறைக்கு வந்த போதும் கூட பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை..

வாய்மை, நல்லொழுக்கம் என்பன  எல்லாமும்  மாணாக்கரின் சிந்தையில் பதிக்கப் பெற்றன..

இவ்வளவும் கையில் கிடைத்தைக் கொடுத்து பாடம் படித்துக் கொண்டபோது..

இன்றைக்கும் தான் கொடுக்கின்றோம்!..

அது ஆசிரியருக்கு அல்ல!..
ஆசிரியர்களை வைத்துக் கொண்டு கல்வியைத் தொழிலாக நடத்துகின்றவர்களுக்கு!..

தன் உழைப்பைக் கொடுத்து ஒன்றைப் பெற்றால் தான் அதன் அருமை பெருமை புரியும்.. 

பொறுப்பு என்ற ஒன்று உணர்வில் உயிரில் கலந்திருக்கும்..




வந்தது முதல் போவது வரைக்கும் எல்லாவற்றுக்கும் நிதி உதவி என்றால் நீதி எங்கே வாழும்... நியாயம் எப்படி வாழும்?..

அந்நாட்களில்
தகப்பனாகிய தொழிற் கலைஞர் ஒவ்வொருவரும் தமது வாரிசுக்கு தாமே முதற்குரு என்றாகினார்கள்.. 

கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவரது தந்தையிடம் தான் பாடம் பயின்றார்..

தமக்கு என்று சிலவற்றை தொழில் ரகசியம் என்று வைத்துக் கொண்டார்கள்..

அது ஓரளவுக்கு தற்சார்பு எனப்பட்டாலும் சில  தொழில்கள் அழிவதற்கு காரணமாகி விட்டது..

அன்றைக்கு விவசாயி ஒருவரின் மகன் விவசாயி ஆகின்ற போது,

அவனுக்கு நிலத்தைப் பற்றியும் நிலத்திற்கான விதையைப் பற்றியும் விளையும் பயிரைப் பற்றியும் மழை வெள்ளம் வெயில் எனும் கால சூழ்நிலைகளைப் பற்றியும் உழவு மாடுகளுக்கு உடல் நலம் இல்லை என்றால் அதைத் தீர்க்கும் மருத்துவம் பற்றியும் -
அவ்வளவு ஏன்!..

தன் குடும்பத்தில் எவருக்காவது உடல் நலக் குறைவு என்றாலும் அதற்கு ஒரு தீர்வினையும் அறிந்திருந்தான்..

அவன் மட்டுமல்ல.. அவனது சுற்றுச் சூழலும் அப்படியே இருந்தது.. 

நோய்கள் பெரிதாக இல்லாதிருந்த சூழலில் எளிய மருத்துவ முறைகளை பெரும்பாலான மக்கள் அறிந்திருந்தனர்..

இன்றைக்கு அப்படி இல்லை..

எல்லோருக்கும் ஆபீஸ் வேலை என்ற  ஆசை அடிப்படைச் சங்கிலியை உடைத்து விட்டது..

இங்கே தான் - 
நவீன கல்வி முறையின் சகுனித் தனம் வெளிப்படுகின்றது!..

அலுவலகப் பணிக்கான கல்வி என்பது தான் கூட்டுக் குடும்பத்தை உடைத்தது.. கலாச்சாரத்தை சீரழித்தது..

மாணவன் ஆசிரியரைக் கண்டு கை ஓங்குவதும் மாணவியர் பொது இடத்தில் மது அருந்துவதும்




அரசு ஊழியரே அடாததைச் செய்வதும் 
கல்வியின் பெயரால் மாணவியர் சூறையாடப்படுவதும்,

மருத்துவத்தின் பெயரால் ஈவு இரக்கம் இன்றி கரு முட்டை வணிகம் செய்யப்படுவதும்,

எல்லா நிலைகளிலும்
வேலியே பயிரை மேய்வதும்,




நீதி நெறியற்ற கல்வி முறையினால் தான்!..

இதற்கு மேலும் பேசுவதற்கு இல்லை..  

அவரவரும் சிந்தித்துக் கொள்க..

அறமும் வாய்மையும் முக்கியம் என்று கூறுகின்றார் திருவள்ளுவர்..

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை..
(வினைத்தூய்மை - 656)

வாழ்க நற்றமிழ்
வளர்க நல்லறிவு..
ஃஃஃ

14 கருத்துகள்:

  1. உடல் நிலக்கரி = உடல்நிலை சரியில்லை என்று வரவேண்டும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம் போல கூகிள் செய்த நாட்டாண்மை.. இப்போது தான் கவனித்தேன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பொதுவாகவே சுயநலமும் பேராசையும் உலகைப் பிடித்த்துள்ளன.  அதாவது உலக மக்களை.  அதுதான் அடுத்தவரை ஏமாற்றி பணம் பிடுங்குகிறார்கள்.  வியாபாரங்கள் கூட அவர்கள் திட்டமிடுதலில் பேரிலேயே நடக்கிறது.  அவர்கள் விற்க நினைப்பதைத்தான் நாம் வாங்குகிறோம்.  இது ஒரு உதாரணம்தான்.

    பதிலளிநீக்கு
  3. மாணவன் ஆசிரியரை என்று மதிக்கத் தவறினானோ அன்றிலிருந்து அழிவு தொடக்கமாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  4. இன்றைய நிலைக்கு நாம் அனைவரும்தான் காரணம்.

    பதிலளிநீக்கு
  5. துரை அண்ணா இதில் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. எல்லாமே வணிகமாக மாறிப் போனதால், எல்லாமே வியாபார நோக்கில் பார்க்கப்படுவதால்...

    மற்றொன்று அரசுப் பள்ளியில் ஆசிரியர்களாக இருப்பவர்களின் குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள்? என்பதையும் பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?மிகவும் கவலையளிக்கும் காலகட்டத்தில்தான் இருக்கிறோம்,?மாற்றம் வர வேண்டும்.வரும்!

    பதிலளிநீக்கு
  7. அறமும் வாய்மையையும் ,பணம் வந்து கெடுத்துவிட்டது

    பணத்தின் பின்னால் ஓடும் கூட்டம் எதற்கும் அஞ்சுவதில்லை.

    பதிலளிநீக்கு
  8. மறுமலர்ச்சி வர வேண்டும்.
    அனைவரும் வாழ்த்துவோம். வேறு வழி இல்லை.
    எல்லாம் சீர் ஆகும் என்று நம்புவோம்.
    உங்களை போன்ற நல்லோர் நினைவுகள் பலிக்கும். நல்லதே நினைப்போம்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல விளக்கமாக இன்றைய சூழலை அலசியுள்ளீர்கள்.

    /தமக்கு என்று சிலவற்றை தொழில் ரகசியம் என்று வைத்துக் கொண்டார்கள்../

    ஆம். அன்று குலத்தொழில் கல்லாமலே வரும் என்ற பழமொழியும் இருந்தது. காரணம் நீங்கள் சொல்வது போல் தந்தையே முதல் குருவாக நின்று கற்றுத் தருவார். அடக்கம் என்ற ஒன்றும் அனைத்திற்கும் பலமாகி துணையாகி நின்றது.

    இன்றைய சமுதாய மலர்ச்சி நல்லபடியாக மலர வேண்டுவோம். தங்களின் ஆதங்கமான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. எதுவும் சொல்வதற்கு இல்லை. காலம் மாற மாற இன்னும் எல்லாமும் சீர்கெட்டுப் போகப் போகிறது. நல்லவேளையாகப் பார்க்க நாம் இருக்க மாட்டோம்.

    பதிலளிநீக்கு
  11. ஆசிரியர்களை மாணவர்கள் அடிக்கும் நிகழ்வுகள் நானும் கேள்விப்படுகிறேன். என் ஆசிரியப்பணியில் இத்தனை வருடங்களில் நல்லகாலம் இப்படியானவை நிகழவில்லை.

    பலவருடங்களுக்கு முன் நானும் மாணவர்களை அடித்திருக்கிறேன். அதில் ஒருவன் பின்னர் படிப்பு முடித்து வெளியில் சென்ற பின்னர் பள்ளிக்கு வந்த போது என்னைக் காணப்பயந்ததாகவும் அவனை அடித்தது மனதில் இருந்தது தெரிந்ததும் நான் மிகவும் வேதனைப்பட்டு அதிலிருந்து அடிப்பதை நிறுத்தினேன். ஆனால் இதுவரை நான் மறந்திருந்தாலும் நான் படிப்பித்த மாணவர்கள் பலரும் இன்றுவரை அன்புடன் என்னை நினைவுகூர்வது மகிழ்வாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  12. நமது கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் வர வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..