நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஆகஸ்ட் 03, 2022

ஆடிப்பெருக்கு

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடிப் பெருக்கு

 பொங்கி வரும்
புதுப் புனலாக
எங்கும் நன்மைகள்
விளைந்து
நலம் பெருகட்டும்..

அனைவருக்கும்
அன்பின் நல்வாழ்த்துகள்
**

பூவிரித்தோடும்
 அலைகளினூடே
காவிரிக் கயல்கள்
கவிதைகள் பாடும்..

புயலது தழுவப்
பூக்களும் மலரும்
குயிலதன் குரலில்
குருவிகள் கூடும்..

பாடும் கிள்ளைகள்
பரவசம் ஆகும்
கூடும் அன்பினில்
அன்னங்கள் பேசும்..

ஹரி ஓம் என்றே
மேழியைச் சுமந்தான்
அன்றைய நாளில்
பெரும் பாட்டன்..

காளையும் மேழியும்
கனவாய்ப் போயின
கழுத்தின் மணிகள்
காற்றில் கரைந்தன..

கதையாய் புகையாய்
காலமும் போனது
எஞ்சிய வயலில்
எந்திரம் நின்றது..

இதுதான் வாழ்க்கை
என்றதன் பின்னே
இளையவர் செல்ல
இனியெது சொல்ல!..

வயலும் வரப்பும் வளமாக
வாழும் வாழ்க்கை நலமாக
பூம்புனல் காவிரி உடன் வருக..
பூந்தமிழ் அமுதைத் தான் தருக..

 
தாயே காவிரி போற்றி போற்றி..
நீயே நிறைவாய் நிறைவாய் போற்றி!..
***

மேலே உள்ள காணொளி 
பாரம்பரியத்தை 
மறக்காத குடும்பத்தினரின்
காவிரி வழிபாடு..
மனதிற்கு மிகவும்
மகிழ்ச்சியளிப்பது..

சென்ற வருடம் Fbல் வந்தது..

காவிரியாள் கடலில்
சங்கமிக்கும் வரையுள்ள தலங்கள்
யாவும் பாட்டுக்குள் வருகின்றன..

நலமே எங்கும் நிறைக..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

24 கருத்துகள்:

  1. ஆடிப்பெருக்கு வாழ்த்துகள்.  காவிரிக்கரையில் வசிக்கும் நீங்கள் கொண்டாடாமல் யார் கொண்டாடுவார்கள்?  அருமையான கவிதை?  ஆனால் புயலாதன் தழுவலில் பூக்கள் பூக்குமா?  தாயே புயலானாளா?  வயலும் வரப்பும் காலம் உள்ளவரைக்கும் மறையாமல் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      புயல் எனும் பழந்தமிழ்ச்சொல் காற்று, இடி, மேகம், மழை - முதலியவற்றிற்கு வழங்கப்படுவது..
      இங்கே காற்று என்ற பொருளில் வந்திருக்கின்றது

      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. காணொளி அருமை.  பாரம்பரியங்கள் மறைந்து வருகின்றன.  பின்னாட்களில் மறந்தே போகக்கூடிய வழக்கங்களை நினைவுபடுத்த இது மாதிரி காணொளிகள்தான் உதவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் நல்லதுக்குத் தான்..

      எதிர்காலத்தில் கூட இல்லை..

      இன்றைக்குக் குறிப்பாக நவ நாகரிகத் தமிழர்கள் தெரிந்து கொள்வதற்கு ஆகும்.

      தங்கள் கருத்திற்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. ஆடிப்பெருக்கு வாழ்த்துகள் ஜி

    தங்களது கவிதை அருமை

    காணொளி கண்டேன் சிறப்பான பாடல். இந்த சடங்குகள் இனி காட்சிப்பொருளாக காணெளியில்.

    பாரம்பரிய உணர்வுகளை மறக்காத அந்த குடும்பம் வாழ்க பல்லாண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி ஜி..

      நீக்கு
  4. // எஞ்சிய வயலில்
    எந்திரம் நின்றது...//

    ஆழ்துளை இட்டு...
    அந்த பகுதி...
    வருங்காலத்தில்...
    சுடுகாடு...

    பதிலளிநீக்கு
  5. காவேரி அன்னையை போற்றும் பாடல் அருமை. படித்து மகிழ்ந்தேன்.
    காவேரி தாயவள் உள்ளம்குளிர வாழ்த்துவோம் நாடு செழிக்கட்டும். ஆடிப் பெருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      அன்பின் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  6. காவேரி அன்னைக்கு பாமாலை அருமை.
    மாயவரத்தில் இருக்கும் வரை ஆற்றுக்கு போய் கும்பிடுவோம் அக்கம் பக்கத்தினர்களுடன். மாவிளக்கு, காப்பு அரிசி பழங்கங்கள் பூக்கள் வைத்து.
    காணொளி அருமை.
    நாடு செழிக்க வேண்டும் நல்ல மழை பெய்யவேண்டும்.
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      பழைய நாட்களை நினைவு கூர்ந்த கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      வாழ்க நலமுடன்..

      நீக்கு
  7. காணொளி திறக்கலை. ஆனால் எங்க வீட்டில் எப்போதும் ஓர் செம்பில் சந்தனம், குங்குமம் இட்டுக் காவிரி நீர் என சுவாமி அலமாரி முன்னர் வைப்போம். நிவேதனங்கள் முடிஞ்சதும் எடுப்போம். இன்னிக்கு நானும் நினைவு கூர்ந்தேன். நமக்கு அப்புறமாய் இதெல்லாம் யார் தொடரப் போகிறார்கள் என! அவரும் சொல்லிக் கொண்டிருந்தார். பிள்ளை/மருமகள் இருக்கும் இடமெல்லாம் இதற்கு வசதி இல்லை! :( வயிற்றுப் பிழைப்பு. வெளியே போயாச்சு. யாரையும் குற்றம் சொல்ல முடியாது.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. ஆடிப்பெருக்கு வாழ்த்துகள். அன்னை காவிரிக்கு தாங்கள் இயற்றிய கவிதை அருமை. பாடி மகிழ்ந்தேன். நாடு செழிக்க பருவம் தப்பாத நல்ல மழை பெய்ய வேண்டும். இங்கு கடந்த இரு தினங்களாக நல்ல மழை. (இன்றும் நல்ல மழை) அனைவரும் வளமாக வாழ வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      இங்கும் மழையாகத் தான் இருக்கின்றது..

      கருத்துரைக்கு நன்றி ..
      வாழ்க நலம்..

      நீக்கு
  9. ஆடிப் பெருக்கிற்கான உங்கள் கவிதை அருமை துரை அண்ணா. ஆடிப் பெருக்கு என்றாலே எனக்கு எங்கள் ஊர் நினைவுக்கு வந்து பழைய நினைவுகள் வந்துவிடும். ஊர் முழுவதும் ஆற்றங்கரையில் (மிக அருகில் ஓடுகிறதே) கூடி தொழுது, கலந்த சாதம் எல்லோரும் கொண்டு வந்ததைப்பகிர்ந்து அங்கேயே வெற்றிலைப் பாக்கு எல்லாம் கொடுத்துக் கொண்டு, கரையில் இருக்கும் சிவன் கோயிலுக்கும் சென்று வருவோம்.

    சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது வெள்ளம் வந்த போதும் படம் எடுத்திருந்தேன், வெள்ளம் வடிந்த பின்னும் நாங்கள் ஆடிப்பெருக்கு கொண்டாடும் இடம் எடுத்திருக்கிறேன். இனிதான் பகிர வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. மேலதிகச் செய்திகளுடன் கருத்துரைக்கு நன்றி ..

      வாழ்க நலம்..

      நீக்கு
  10. காவிரிக்குப் பூஜை செய்து அலங்காரம் செய்திருக்கும் அப்படம் மிக அழகு என்றால், காணொளியை மிகவும் ரசித்துப் பார்த்தேன். பாடலும், அக்குழந்தை சப்பரம் இழுப்பதும் விளையாடுவதும், பெண்கள் பூஜை செய்வதும் எல்லாம் அத்தனை அழகு. ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது இந்தப் பக்கத்தில் உள்ள பாரம்பரிய வழக்கம்..

      தங்கள் அன்பின் வருகையும் .கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி சகோ ..

      நீக்கு
  11. என்னோட கருத்துப் பதிவாகவில்லை. ஆனால் மெயில் பாக்சில் இருக்கு. பின் தொடரும் கருத்துகளும் வருகின்றன!!!!!!!!!!!!!!!!!! :( நேற்று இந்தக் காணொளி தெரியலையேனு சொல்லி இருந்தேன். இன்னிக்கு வாட்சப் மூலம் நண்பர் ஒருத்தர் அனுப்பி இருந்தார். இதி எ.பி.குழுவிலும் எங்கள் குடும்பக் குழுவிலும் கூடப் பகிர்ந்திருக்கேன். இப்படியாக ஆடிப்பெருக்குச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுவது மனதில் சந்தோஷத்தைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்.. ஆடம்பரம் இல்லை.. ஆனால் அழகு.. பாரம்பரிய வழிபாடு.. மனதிற்கு மகிழ்ச்சி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றியக்கா ..

      நீக்கு
  12. நேற்றைய கருத்தில் எனக்குப் பிறகு இதை எல்லாம் தொடர யாரும் இல்லையேனு எங்கள் வருத்தங்களைப் பகிர்ந்திருந்தேன். குழந்தைகள் எங்கேயோ நைஜீரியாவில் இருக்காங்க. அவங்க இருக்கும் இடத்தில் இதுக்கெல்லாம் வசதி இருப்பதாகத் தெரியலை! :( இதுக்கு அம்பேரிக்கா பரவாயில்லை போல இருக்கு! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் இப்படியான கவலை இருக்கின்றது.. ஆனாலும் யாராவது எடுத்து நடத்துவார்கள்.. இறைவன் துணை..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..