நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 25, 2016

ஊர் விழிக்கும் நேரம் 2

யார் இந்த நரன்!...

என்ற வியப்பினைக் கேட்டுக் கொண்டே கண் மயங்கிச் சரிந்த நான் -
மெல்ல உணர்வு பெற்று விழித்த போது,

தென்றலின் குளுமை அங்கே தவழ்ந்து கொண்டிருந்தது..

அரைத்தெடுத்த புது மஞ்சளின் வாசமும் கமழ்ந்தது...
அத்துடன் - அப்போது அலர்ந்த பூக்களின் மெல்லிய நறுமணம்..

கண்முன்னே - காணற்கரிய காட்சி!..

ஒளிக் கோலங்களாக தேவியர் இருவரும் - புன்னகையுடன்!..

காவிரி அன்னை
கங்கா தேவியே சரணம்!..
காவிரித் தாயே சரணம்!..

மெல்ல எழுந்தேன்..

கரங்கூப்பியவாறு வலம் வந்து -
தேவியர் இருவரின் திருப்பாதக் கமலங்களில் வீழ்ந்து வணங்கினேன்..

புத்தம்புது தாமரைப் பூக்களின் வாசம் வீசிற்று - திருவடிகளில்..

தேவியரின் திருவடிக் கொலுசுகளில் முன் நெற்றி பதிந்து கிடந்தது..

தலையை உயர்த்தி எழுந்திருக்கத் தோன்றவேயில்லை...

எழுந்திரு மகனே!..

சொல் கேட்டு எழுந்து கைகட்டி நின்றேன்..
கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது..

அக்கா!.. நான் சொன்னேனில்லையா!..

ம்.. ஆனாலும், எனக்குத் தேவி என்ற தெய்வ நிலை..
உனக்குத் தாயென்ற உறவு நிலை!..

குமிழ் சிரிப்புடன் காவிரி என்னை நோக்கினாள்..

கங்கா தேவி
தாங்களும் எங்களுக்குத் தாய் தான்!..
ஆனாலும்,
இந்தக் காவிரி ஒரு பொழுதில் தாயாக..
ஒவ்வொரு சமயம் சகோதரியாக..
ஒரு சில சமயங்களில் தெய்வமாக..

ஆனால்!..

ஆனால்!.. - கங்கையின் கண்களில் வியப்பும் கேள்வியும்..

எல்லா நேரங்களிலும் எங்கள் மகள்...
எங்கள் மகளாகத் தான் எங்களுடன் விளையாடுகின்றாள்!..

செந்தமிழர் தம் வழக்கில் ஒரு சொற்றொடர் உண்டு!..

என்ன அது?..

மகன் வயிற்றில் தாய் வந்து மகள் எனப் பிறப்பாள்!.. - என்று..
மகளைத் தாயாகப் பாவிக்கும் வழக்கம் எங்களுடைது..

ஓ!..

அதனால் தான்,

அவள் எனக்கா மகளானாள்..
நான் அவளுக்கு மகனானேன்!..

- என்று, எங்கள் கவியரசர் உள்ளம் உருகினார்..

எங்களின் உரிமைத் தாய் இவள்..
இவளன்றி வேறொருவர் இல்லை!.. இல்லவே இல்லை!..

தாயென்றும் மகளென்றும் சொல்லுகின்றாய்!..
அப்படியான பெருமையைப் பெற்றவளின் இன்றைய நிலை என்ன !?..

தாயே.. அது காலத்தின் கொடுமையாகி விட்டது.. அற வழியிலிருந்து மக்கள் பிறழ்ந்தனர்.. அதனால் நேரிட்ட பிழையினால் விளைந்தது.. நல்லோர் எவரும் இப்படியான பெருந்தவறுகளைச் செய்ததில்லை...

..... ..... ..... ..... .....

அரசியலில் வந்து புகுந்த குணக்கேடுகளால் விளைந்த விபரீதங்கள் இவை.. அடி வேரை அசைத்துப் பார்த்ததனால் - திசை எங்கும் விரிந்து நின்ற விருட்சம் வெலவெலத்து நிற்கின்றது...

..... ..... ..... ..... .....

நடு தவறாத நல்லோர்கள் ஒன்று கூடி உழைக்கின்றார்கள்.. வேரோடி நிற்கும் பெருமரம் பெயர்ந்து விடாதபடிக்குத் தாங்கிப் பிடிக்கின்றனர்...

..... ..... ..... ..... .....

நிகழ்ந்தது பெரும் பிழைதான்.. வேறொன்றும் கூறுதற்கில்லை.. எங்கள் பிழை தனை உணர்ந்தோம்.. ஆற்றையும் குளத்தையும் ஆக்ரமித்து அழித்து ஒழித்த மாபாதகம் இங்கு தான் நடந்தது.. நீரோடிய நெடுவழிகளை அடைத்த கொடுமையும் எங்களுக்குள் தான் நடந்தது...

.... ..... ..... ..... .....

அன்றைக்கு ஆன்றோர்கள் சொல்லிச் சென்ற எல்லாவற்றையும் உய்த்து உணராமல் போலியான சடங்குகளாக ஆக்கித் தொலைத்தோம்.. இன்றைக்குப் போக்கிடம் இல்லாமல் போய்விடுமோ என்று திகைக்கின்றோம்!..

.... ..... ..... ..... .....

தான் மட்டும் என்று வாழும் மனிதர்களால் பற்பல பறவை இனங்களையும் பல்லாயிரக் கணக்கான மரக்கூட்டங்களையும் இழந்தோம்.. இந்த பாவத்தை எங்கே கொண்டு தொலைப்பது என்று தவிக்கின்றோம்!..

பாவத்தை எங்கே கொண்டு தொலைப்பதா?...

வெள்ளி மணி குலுங்கினாற்போல் நகைத்தாள் - கங்கையாள்..

ஏனம்மா?.. சொன்னது பிழையெனில் பொறுத்தருள்க!..

கையில் வெண்ணைய் இருக்க நெய்க்கு அலைகின்றீர்களே.. என்றுதான்!...

.... ..... ..... ..... .....!?..


காவிரி!.. இவளல்லவா சகல உயிர்களின் பாவத்தையும் தீர்த்து அருள்பவள்.. அதனால்தானே இந்த ஐப்பசி மாதம் முழுதும் காவிரியுடன் இருந்து எனது பாவங்களைப் போக்கிக் கொள்கின்றேன்!..

... ..... ..... ..... .....!?..

நீங்கள் சரணடைவதற்கு காவிரியை அன்றி வேறொருவரும் உளரோ?..
உங்களுக்கு உதவுவதற்குக் காத்திருப்பவள் இவள் ஒருத்தி தானே!..

உள்ளது.. உள்ளது!.. ஆயினும் எங்களுக்கு வெட்கமாக இருக்கின்றது!..

ஏன்?.. - கங்கைக்கு மிகுந்த வியப்பு..

ஒருவனின் கன்னத்தில் அறைந்து விட்டு அவனையே வழித்துணையாக அழைத்தால் கோபம் கொண்டு திருப்பி அடிக்க மாட்டானா?..

அது மண்ணில் சாதாரண மானுடராகப் பிறந்து உழல்பவர் தமக்குரிய குணம்... காவிரி தேவ கன்னியருள் ஒருத்தி..

மண் செழிப்புறுதற்காக மக்கள் சிறப்புறுதற்காக வந்தவள்... அவள் உங்களிடம் கோபம் கொள்ளமாட்டாள்... என்ன காவிரி.. அப்படித்தானே!...

அக்கா.. நான் என்ன சொல்லப் போகின்றேன்.. நல்லவர்கள் அறிவார்கள் என்னைப் பற்றி!..

காவிரியை தாயென்றும் மகளென்றும் போற்றுகின்றீர்கள் அல்லவா!..

ஆம் தாயே!..

அவள் தாயென வந்தால் -
உங்களை உச்சி முகந்து ஊட்டி வளர்க்க மாட்டாளா?..
அவள் மகளென வந்தால் -
அவளை வாரியணைத்து மடியிருத்தி மகிழ்வெய்த மாட்டீர்களா!..
அன்புச் சகோதரி என வந்தால் -
சீவி முடித்து சிங்காரித்து சீர் சிறப்பு செய்விக்க மாட்டீர்களா!..

இதைக் கேட்டதும் என் நெஞ்சம் நெகிழ்ந்தது.. விம்மல் வெளிப்பட்டது..
கண்களில் நீர் திரண்டு கன்னங்களில் வழிந்தது..

இப்படித்தானே இத்தனை நாளும் உறவாடிக் கிடக்கின்றோம்!..

காவிரி உங்கள் பிழைகளை எல்லாம் என்றைக்கோ மறந்து விட்டாள்... காவிரியைக் காப்பாற்றுங்கள்.. காவிரி உங்களைக் கரை சேர்ப்பாள்!..


நம்குலப்பெண் அரைத்த மஞ்சளில் குளித்தவள்..
திரும்பிய திசை எங்கும் பொன்மணி குவித்தவள்!..
நடையினில் பரதக் கலையினை வளர்த்தவள்..
நறுமலர் உடையால் மேனியை மறைத்தவள்!..

ஆகா.. அற்புதம்!.. - கங்கா தேவியைக் கை கூப்பி வணங்கினேன்..

இப்படிப் புகழ்ந்தவர் உங்கள் ஊர்க்கவிஞர் மாயவநாதன்!..
அப்படியே அவள் மீண்டும் பொலிவு பெறவேண்டும்...

கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு!..
- என்று போற்றினார் கண்ணதாசன்...

நீர் வளமும் நிலவளமும் மீண்டும் பெருக வேண்டும்... ஆறும் கரையும் காக்கப்படவேண்டும்.. ஆற்றங்கரை நாகரிகம் நம்முடையது.. மரங்களைக் காப்பீராக.. அவை தருமே நீரும் சோறும் உமக்கு!..

அறிந்தேன்.. அறிந்தேன்.. அருந்தேன் - என அனைத்தும் உணர்ந்தேன்!..

காவிரியின் கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்.. அவள் காலமெல்லாம் காத்து நிற்பாள் உங்களை!..

ஆகட்டும் தாயே!..

அவளன்றி வேறுகதியில்லை என்பதையும் நினைவில் கொள்வீராக...


தமிழக எல்லையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்
ஆகட்டும் தாயே!.. எல்லை தாண்டி வந்து எங்கள் மண்ணுக்குள் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் செல்கின்றார்கள்... அந்தக் கொடுமைக்கு இங்குள்ள ஈனர்கள் சிலரும் கையூட்டு பெற்றுக் கொண்டு துணை போகின்றனர்...



மண் பயனுற வேண்டும்.. என்றார் மகாகவி.. ஆனால், மணலால் கோடி என பயனுற்றார் பலர்.. மக்கள் நலனுக்குக் கேடு விளைக்கின்றார்.. 

இது இப்படி எனில், ஆற்றில் நச்சுக் கழிவுகளைத் திறந்து விட்டு அனைத்தையும் பாழாக்குகின்றது ஒரு கூட்டம்..


பொன்விளைந்த பூமியில் மண்ணைக் கொட்டி மலடாக்கி அதனை மனைப் பிரிவுகளாக்கி மடி நிறைத்துக் கொள்கின்றது மற்றொரு கூட்டம்..

கண்ணை இமை காப்பது போல காவிரியைக் காப்பதற்குக் கைகளைச்
சேர்த்திருக்கின்றார்.. நூறு ஆயிரமாய்!..

அவர் தமக்குத் துணையாய் நின்று அருளவேண்டும்!..

திடமுற்றோர் தேர் வடத்தைப் பற்றி இழுக்கும்போது கூடி நின்று 
உந்து கவி இசைத்து உற்சாகம் ஊட்டுவோரைப் போலத் தான் நானும்!..

என் நாவிலும் தோளிலும் நின்று நலம் அருளவேண்டும்!..

அப்படியே ஆகட்டும்.. நல்வாழ்த்துகள்!..

கங்கையும் காவிரியும் புன்னகையுடன் வாழ்த்துரை நல்கினர்..

அக்கா.. விடியும் நேரம் நெருங்கி விட்டது!..

நான் தங்களை மீண்டும் சந்திக்கும் நல்வாய்ப்பினை நல்குதல் வேண்டும்!..

ஆகட்டும்.. சந்திக்கலாம்.. நாங்கள் இன்னும் பல தலங்களுக்கும் செல்ல வேண்டும்!.. ஊர் விழிக்கும் நேரம் வந்து விட்டது.. நாங்கள் புறப்படுகின்றோம்!..

ஊர் விழிக்கும் நேரம் வந்து விட்டது.. 
ஆனாலும், ஊர் விழிக்க வேண்டுமே!..

கலகல.. என சிரித்தபடி - நீருடன் நீராய்க் கலந்தனர் கங்கையும் காவிரியும்!..
* * *


கங்கே ச யமுனே சைவ கோதாவரீ 
ஸரஸ்வதி நர்மதே சிந்து காவேரீ 
ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு..

என்குலப்பெண் அரைத்த மஞ்சளில் குளித்தாய்..
திரும்பிய திசை எல்லாம் பொன்மணி குவித்தாய்!..
நடையினில் பரதக் கலையினை வடித்தாய்..
நறுமலர் உடையால் மேனியை மறைத்தாய்!..

காவிரிப் பெண்ணே வாழ்க!..
நீ வாழ்க!...
* * *

12 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    விரிவான பொதுநல விடயங்கள் எத்தனை,,, எத்தனை,,,
    மண்ணை மறந்து வாழ்பவனை நாளை மண் தின்பதற்குகூட தயங்கும்.

    ஊர் விழிக்கும் நேரம் இருப்பினும்
    ஊர் விழிக்கவில்லையே.....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. வயல் வெளிகளை எல்லாம் மலடாக்கிக் கொண்டிருக்கிறோம்
    வேதனை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      வேதனை தான் மிச்சமாகப் போகின்றது..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  3. மணல் கொள்ளை, நீர்நிலைகளை மாசுபடுத்துதல், மரங்களைக் காக்க வேண்டும் போன்ற உயரிய கருத்துக்களை கங்கை சொல்வது போல் அமைத்துச் சுவையாகக் கொடுத்தமைக்குப் பாராட்டுக்கள் துரை சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கிறோம், வேதனையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  5. ஊர் விழித்துக் கொள்ளவில்லை என்றால் கஷ்டம் தான்.
    நல்ல பகிர்வு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஒவ்வொரு மழைப் பற்றாக்காலத்திலும் இந்த மாதிரி சிந்தனைகள் விரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..