நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 10, 2016

வரந்தரும் வாணி

இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி!..

பிள்ளைகளின் மனங்களில் எல்லாம் உற்சாகம்!..

ஏனெனில், இன்று மங்கலகரமான சரஸ்வதி பூஜை!.. 


ஒருவருக்கொருவர் அன்பின் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் - தனித்தன்மையான சந்தோஷம் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றது. 

கோயில்கள், வீடுகள், அலுவலகங்கள், வர்த்தக - தொழில் நிறுவனங்கள் - இங்கெல்லாம் அலங்காரமாக வாழைக்கன்றுகளுடன் மாவிலை மற்றும் தென்னங்குருத்துத் தோரணங்களும் - கட்டப்பட்டிருக்கின்றன. 

அவைகளுக்குப் போட்டியாக - பல வண்ண காகிதப் பூந்தோரணங்களும் பளபள என்று மின்னிக் கொண்டிருக்கின்றன. 

வீட்டிலுள்ள இயந்திரங்களையும் வாகனங்களையும்  அலங்கரிப்பதே  - 
தனி ஆனந்தம்.

வீட்டில் உள்ள தெய்வ சித்திரங்கள் எல்லாம் அலங்கரிக்கப்படுகின்றன. 

இசைக் கருவிகள் இருந்தால் அவைகளும் ஆனந்தத்தில் பங்கெடுத்துக் கொள்கின்றன. 



என் தந்தையின் நினைவாக

வளம் தரும் கலைகள் அனைத்தும் வாழ்க..

புத்தகங்கள், பேனா, பென்சில் மற்றும் வாழ்வாதாரத்துக்கு அடிப்படையான கருவிகள் இவைகளையும் ஸ்ரீ சரஸ்வதி திருமுன் வைத்து பழவகைகளுடன் அவல் பொரி, சர்க்கரை, சுண்டல் - என, நிவேதனங்களைச் சமர்ப்பித்து வழிபடுதல் மரபு. 

சூழ்நிலை இடங்கொடுப்பின் சித்ரான்னங்களையும் சமர்ப்பிக்கலாம். 

நவராத்திரி விரதம் அனுசரிப்போர்  - 
இரவில் பூஜை செய்து விரதத்தினை நிறைவு செய்வர்... 

கொலு வைத்திருப்பவர்கள் கொலுவுக்கு மகாஆராதனை செய்து - 
கொலுவுக்கு வரும் பெண்களுக்கு - மஞ்சள் குங்குமத்துடன் தாம்பூலம் தந்து உபசரித்து மகிழ்வர்...

இந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் தான் உண்மையான திருநாள்.. 


மகிழ்ச்சி நிறைந்த நன்னாளில் -
அஞ்ஞான இருளை அகற்றி நல்லறிவினை வழங்குவாய் தாயே!.. 
- என்று அன்னையை வணங்கி வழிபடுதல் அவசியம். 

எல்லா கலைகளுக்கும் சரஸ்வதி தான் அதிபதி!.. 
அவள் இல்லாத இடம் - பொருள் என்று ஏதுமே இல்லை!..

அன்னை கலைவாணி நம்முடனே தான் இருக்கின்றாள். 
நாம் தான் அவளை உணர்ந்து கொள்வதில்லை.


ஏடங்கை நங்கை இறை எங்கள் முக்கண்ணி 
வேடம் படிகம் விரும்பும் வெண்தாமரை 
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள் 
சூடுமின் சென்னி வாய் தோத்திரம் சொல்லுமே!.. 
- திருமூலர் -

முக்கண்களை உடைய திரிபுரையே திருக்கரத்தில் 
சுவடிகளை  ஏந்தி கலைமகளாகத் திகழ்கின்றனள்..
அந்தத் திருக்கோலத்தில் அவள்  பளிங்கு நிறத்தினள். 
அவள் வெண் தாமரை மலரில் வீற்றிருக்கின்றாள்..

திருமுறைகள் பாடிப் பரவும் அந்தணளாகிய பராசக்தியின் -  
பாதமலர்களைத் தலையில் சூடிக் கொள்ளுங்கள்.. 
வாயால் அவளது புகழினைச் சொல்லுங்கள்!..

கலைமகளை வேறு ஒருத்தியாக நினையாமல் 
பராசக்தியாகவே நினைந்து வணங்குங்கள்!.. 

 - என்று, திருமூலர் புகழ்ந்துரைக்கின்றார்..


வெள்ளைக் கமலத்திலே  - அவள் 
வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்!
கொள்ளைக் கனி இசைதான்  - நன்கு 
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப்பாள்!.. 

கள்ளைக் கடலமுதை - நிகர் 
கண்டதோர் பூந்தமிழ்க் கவிசொலவே 
பிள்ளைப் பருவத்திலே - எனைப் 
பேணவந்தாள் அருள் பூணவந்தாள். 

வாணியைச் சரண் புகுந்தேன் - அருள் 
வாக்களிப்பாள் எனத் திடம் மிகுந்தேன்: 
பேணிய பெருந் தவத்தாள் - நிலம் 
பெயரளவும் பெயர் பெயராதாள்!..
- மகாகவி பாரதியார் - 

பிள்ளைப் பருவத்திலேயே - என்னைப் பேணிக் காப்பதற்காக வந்து விட்டாள்!.. - என்று, மகாகவி பாரதியார் -  பாடி மகிழ்கின்றார்..


மனதினுள் மண்டிக் கிடக்கும் மாசுகளை அகற்றுவோம்!..
அன்பு எனும் திருவிளக்கை ஏற்றி வைப்போம்!.. 

எல்லாவித உயர்வுகளையும் உன்னதங்களையும் 
அன்னை கலைவாணி நமக்கு அருள்வாள்!..

வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் 
உள்ளத் தனையது உயர்வு.. 

ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே விரிஞ்சி 
பத்ந்யை ச தீமஹி தந்நோ: வாணி ப்ரசோதயாத்..

அனைவருக்கும் அன்பின் இனிய 
சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!..

கலைமகள் திருவடி சரணம்.. சரணம்..
***

14 கருத்துகள்:

  1. உங்களுக்கு எங்கள் சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அன்பின் ஜி விரிவான விளக்கம் தங்களுக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் ஐயா....
    படங்களும் பகிர்வும் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. சிறப்பான தகவல்களுடன் அழகிய பகிர்வு.

    சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. இந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் தான் உண்மையான திருநாள் என்று சரியாகச் சொன்னீர்கள். வழக்கம் போல் சிறப்பான தகவல்களுடன் கூடிய பதிவு. வாழ்த்துக்கள் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மகிழ்ச்சியும் மனநிறைவும் தான் பெரும்பேறு..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. தாமதமாகிவிட்டது. சிறப்பான தகவல்கள்! அதுவும் பாரதியின் பாடலுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      என்றைக்கு வந்தாலும் தங்களுக்கு இன்முகம் தான்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..