நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 04, 2019

மங்கல மார்கழி 20

ஓம் 

தமிழமுதம்


சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்..(200) 
*
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை
திருப்பாடல் 20



முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று 
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு 
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் 
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை 
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்..
*

பெருமானே..
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முன்பாக நின்று
அவர்தம் கலக்கத்தைத் தடுத்தவன் நீ...

செம்மை உடையவன் நீ...
பெருந்திறல் உடையவன் நீ...

எதிர் நிற்கும் பகைவர் தமக்கு
விழி வீச்சால் வெப்பத்தைக்
கொடுக்கும் விமலனும் நீ!..

இத்தனை நலன்களையும் உடைய நீ
இன்னும் துயிலெழாமல் இருக்கலாமா!...

தூயவனின் தோள் தழுவித் துயில் கலையாதிருக்கும்
செப்பென்ன மென்முலையாய்.. சிற்றிடையாய்..
பவளக்கனி என - செவ்வாய் உடையாய்..
நப்பின்னை நங்காய்!..
திருவளர் செல்வீ!..
துயில் எழுவாயாக!..

நீயும் நின் மணாளனும் துயிலெழுந்து
விசிறியும் கண்ணாடியும் ஆகிய
மங்கலங்களை எமக்குத் தந்து
அருள் மழையில் நீராட்டுவீர்களாக!...
*

தித்திக்கும் திருப்பாசுரம்


திரு அரங்கன்  
கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்துபாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள்மால் இறைவன்ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே..(894)

-: ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் :-

இயற்கையின் சீதனம்

தாழை


ஈசன் முன்னிலையில் 
நான்முகப் பிரம்மனுடன் சேர்ந்து கொண்டு
பொய் சொன்னதால்
சிவ வழிபாட்டில் விலக்கப்பட்டது - தாழை..

விநாயகர் முருகன் வழிபாடுகளிலும்
இது சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை..

ஆனால் இதன் மீது
அம்பிகை இரக்கம் கொண்டாள்...

நான்முகனுக்கு அஞ்சியே
பொய்யுரைத்தது தாழை..
அதுவன்றி - வேறு பிழை
ஏதும் செய்யவில்லை...

ஆகையால்
தனது திருவடிகளுக்கு அருகில்
இருத்திக் கொண்டாள்...

திருக்கருகாவூர்
ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகையின்
திருவடிகளில் தாழம்பூவினை எப்போதும் காணலாம்..

ஈசன் எம்பெருமானுடைய சாபத்தினால்
தாழை வனங்களில் நாகங்கள் கிடக்கும்...

இப்படித் தாழங்காட்டில் பாம்புகள் கிடந்தாலும்
மக்கள் இந்தப் பூவின் மீது கொண்ட ஆசை மாறியதில்லை..

சடங்கான பெண் மஞ்சள் நீராடி
வீட்டுக்குள் வந்ததும்
மங்கல அலங்காரம் செய்யும் போது
சடையில் தாழை மடல்களை வைத்துப்
பின்னுவது பாரம்பர்யம்...

தாழம்பூ வைத்துப் பின்னப்பட்ட சடையுடன்
தன் மகளைக் காணும் தாய் பூரித்து நிற்பாள்...

தாழையாம் பூ முடித்துத் தடம் பார்த்து நடை நடந்து..
 - என்பது நம் குலப் பெண்களுக்கே உரிய சிறப்பு.. 

கடற்கரைகளிலும் சற்றே உள் வாங்கிய
ஆற்றங்கரைகளிலும் வளர்வது தாழை...

தாழம்பூ சர்பத் என்பது தஞ்சை வட்டாரத்தில் பிரபலமானது...

தாழம்பூவின் மஞ்சரியை மகரந்தத்துடன் பெட்டிகளில்
போட்டு வைத்தால் அந்துப் பூச்சிகள் அண்டாது...

தாழை நாரில் கூடைகள் பின்னுவர்..
தாழம்வேர் சுண்ணாம்பு , காரை பூசும் மட்டையாகப் பயன்படும்.. 


பொய் சொன்ன குற்றமுடையது ஆனாலும்
தாழையின் சிறப்புகள் பலவாகும்..
*

சிவ தரிசனம்
திருஎறும்பூர்


இறைவன் - ஸ்ரீ எறும்பீஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ நறுங்குழல்நாயகி

தல விரிட்சம் - வில்வம்
தீர்த்தம் - பிரம்ம தீர்த்தம்

சிறு குன்றின் மேல் திருக்கோயில்..

தேவர்கள் எறும்பு வடிவாக ஈசனை வழிபட்ட
திருத்தலம்...

திருமூலத்தான சிவலிங்கம்
மண்ணால் அமைந்துள்ளது...


வைகாசி விசாகத்தைப்
பத்தாம் திருநாளாகக் கொண்டு
பெருந்திருவிழா நிகழ்கின்றது..



எறும்புகளுக்கும்
ஏற்றமளித்த திருத்தலத்தின் பெயர்
இன்றைக்கு மக்களால்
திருவரம்பூர் என்று சொல்லப்படுவது
குறிப்பிடத்தக்கது...
*

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி
அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட
புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்சம் உண்ட
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்
சடையானை மடைதோறும் கமல மென்பூச்
செறியெறும்பி யூர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.. (6/91) 
*

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 19 - 20


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம்அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்...


போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்..

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
இந்த அளவில் 
நிறைவடைகின்றது..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. குட்மார்னிங். பயனிலாச் சொல் சொல்பவர்கள் அதிகம் - என்னையும் சேர்த்து! தவிர்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  2. திருப்பாவை, பாசுரம் ரசித்தேன்.

    "தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்..."

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் நீங்க சொல்லிருக்கற பாட்டை கேட்டப்ப கேட்ட நினைவு வந்துக்சு...நிறைய பாடல்கள் இருக்குபோல தாழம்பூ பாடல்கள்...நெட்ல தேடினப்ப வந்துச்சு...

      கீதா

      நீக்கு
  3. எறும்பீஸ்வரர் - கருங்குழல் நாயகி அழகான திருநாமங்கள். தரிசித்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. அருமை ஐயா...

    வாசித்தவுடன் மனதில் வந்த பாடலையும் ஸ்ரீராம் சார் சொல்லி விட்டார்...

    பதிலளிநீக்கு
  5. "கை கொடுக்கும் கை" திரைப்படத்தில் "தாழம்பூவே வாசம் வீசு" என்ற பாடல் நினைவை மீட்டியது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று நீ நாளை நான் என்றொரு படம். அதில் தாழம்பூவே கண்ணுறங்கு... தங்கத்தேரே ​கண்ணுறங்கு என்ற பாடல். அப்புறம் தாழம்பூவே தங்கநிலாவே என்ற ஒரு டி எம் எஸ் பாடல்...!!!!

      நீக்கு
  6. இனிய காலை வணக்கம் துரை அண்ணா!

    குறள் ..நான் ஸ்ரீராமுடன் ஹைஃபைவ் சொல்லிக்கறேன் இதுக்கு...

    பாடல்கள் படங்கள் எல்லாம் அருமை....தாழம்பூ ஆஹா பழைய நினைவுகள். எங்க ஊர்ல ஆடி, தை நா செவ்வா வெள்ளில தாழம்பூ வைச்சு சடை பின்னி கோலாட்டம் போடுவமே...நானும் தாழம்பூ வைச்சு சடை பின்னி விடுவேன். அதைக் கொண்டு வந்தா வீட்டுல அதை ரொம்ப ஆராஞ்சு பார்த்துட்டுத்தான் சடைல வைப்பாங்க. பூச்சி பொட்டு இருக்கான்னு பார்த்துட்டு....அந்த மகரந்தம் தூள் சில சமயம் மூக்குக்குள்ள புகும் எடுக்கும் போது...அப்புறம் இந்த மகரந்ததை எங்க வீட்டுத் துணிப் பெட்டிக்குள்ள போட்டு வைப்பதுண்டு..மணக்கும்னு....

    பல நினைவுகளை மீட்டியது

    கீதா

    பதிலளிநீக்கு
  7. திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும், விளக்க்மும் படங்களும் மிக அருமை.
    திருஎறும்பீஸ்வரர் வரலாறு அருமை.
    தாழ்ம்பூ பற்றிய செய்திகள் நன்று.
    சிறு வயதில் தாழ்ம்பூவை அழகாய் கத்திரித்து ஜடையில் வைத்து தைத்து ஜடையின் மேல் பகுதியில் கிரீடம் போல் அழகாய் கத்தரித்து வைத்து விடுவார்கள், ஒரு நாள் சூரியன் போல், ஒருநாள் நிலா போல், ஒருநாள் நடசத்திரம் போல். ஜடையை சுற்றி அந்த அலங்காரம் இருக்கும்.அம்மாவின் அலங்காரம் செய்ய்யும் திறமையை எல்லோரும் பாராட்டுவார்கள்.
    ஜடையில் வி வடிவத்தில் வெட்டிய தாழம்மடல் நடுவில் கலர் கலர் கம்பிளி தூலை பூ போல நடுவில் வைத்து தைத்து விடுவார்கள்.
    பழைய நினைவுகளை மீட்டியது தாழ்ம்பூ பகிர்வு, நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...


    அற்புத தரிசனம்...

    பதிலளிநீக்கு
  9. தாழம்பூவை இப்போப் பார்க்கவே முடியவில்லை. நான் சின்ன வயசில் நிறைய மல்லிகைப்பூத் தான் தைத்துப் பின்னிக் கொண்டிருக்கேன். தாழம்பூ வைத்துப் பின்னியதில்லை. அதில் பூநாகம் இருக்கும் என்பார்கள். எங்கள் அப்பாவழிக்குடும்பத்தில் ஓர் இளம்பெண் தாழம்பூவின் பூநாகம் கடித்து இறந்து விட்டதாய்ச் சொல்வார்கள். ஆகவே வரலக்ஷ்மி விரதத்தில் கூடத் தாழம்பூ வாங்க மாட்டார்கள். நான் கல்யாணம் ஆகி வந்து எங்க பெண் பிறந்த பின்னர் 3 வருஷம் கழிச்சு என் கணவரின் அத்தை என் தலைமயிரின் அடர்த்தியைப் பார்த்துவிட்டுத் தாழம்பூ வைத்துத் தைத்து அலங்கரித்தார்.

    பதிலளிநீக்கு
  10. எறும்பீஸ்வரர் கோயிலுக்கு இதுவரை போனதில்லை. சிறப்புகள் அறிந்திருந்தும். அதே போல் உய்யக்கொண்டான் மலைக்கும்! சிறு பையர்கள் சின்ன வயசில் படுத்தினாலோ அடங்காமல் இருந்தாலோ இங்கே வந்து பிரார்த்தனை செய்து கொண்டு மந்திரித்துக் கொண்டு போவார்களாம். கேள்விப் பட்டிருக்கேன். அதே போல் கோபத்தை அடக்கும் கோயிலும் ஒன்று உண்டு. பெயர் மறந்துட்டேன். யோசித்துச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. https://sivamgss.blogspot.com/2015/01/blog-post_4.html உக்கமும் தட்டொளியும் பற்றிய கருத்து இங்கே இந்தச் சுட்டியில் காணலாம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..