நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 02, 2019

மங்கல மார்கழி 18

ஓம் 

தமிழமுதம்

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.. (178)

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிய
திருப்பாவை
திருப்பாடல் 18



உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன் 
நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய் 
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் 
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப 
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்..
***

நலமெலாம் கொண்டு விளங்கும்
நப்பின்னை.. நங்காய்!...

எக்காலத்தும் விட்டு விலகாத தோள் வலிமையுடன்
மதகளிறுகளை உந்தி நடத்தி அவற்றைப் பரிபாலித்தருளும்
நந்தகோபனின் அன்புக்குரிய மருமகளே!...

 நறுமண சுகந்தம் கமழும் பூங்குழலீ!..
நீயாவது திருக்கதவங்களைத் திறக்கலாகாதா?...

மல்லிகைப் பந்தலின் மீது
குயிலினங்கள் வந்தமர்ந்து
கூவிக் களிக்கின்றன...

கூடவே
புழக்கடைக் கோழிகளும்
குரலெடுத்து மகிழ்கின்றன...

மல்லிகைப் பூம்பந்தன்ன விரல்களை உடையவளே!..
உன் மைத்துனனின் பேர்பாடிப் பரவுதற்கு வந்திருக்கின்றோம்..

செந்தாமரைத் திருக்கரங்களில் திகழும்
முத்து வளைகளும் வைர வளைகளும்
சேர்ந்து இசையெழுப்பும் படிக்கு
திருக்கதவங்களைத் திறந்தருள்வாயாக!...
*

தித்திக்கும் திருப்பாசுரம்


ஸ்ரீ கமலவல்லி - நம்பெருமாள்
உறையூர் சேர்த்தி வைபவம்  
பாயுநீர் அரங்கந்தன்னுள் பாம்பணைப் பள்ளிகொண்ட
மாயனார் திருநன்மார்பும் மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவளவாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககலலாமே.. (0891)
-: ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் :- 
*

இயற்கையின் சீதனம்

மல்லிகை



இல்லறம்
இந்த மலராலேயே இனியதாகின்றது...

மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ!..
- என்று, பூவையர் சூடும் பூ இதுவே!..

விதிவிலக்குகள் ஒன்றிரண்டு
ஆங்காங்கே இருக்கலாம்...

மனதிற்கு மகிழ்ச்சியை அளிப்பதில்
மல்லிகைக்கு நிகர் மல்லிகையே..

மல்லிகைப் பூக்கள் கிடந்த நீரைக் கொண்டு
கண்களைக் கழுவினால் கண் பளிச்சிடுகின்றன..
கண்களில் குறை ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன...

மல்லிகை முல்லை சம்பங்கி மலர்களை
இட்டு வைத்த நீரால்
இளங்கன்னியரை நீராட்டுதல் மரபு...

நிழலில் உலர்த்தப்பட்ட மல்லிகைப் பூக்களை
தேங்காய் எண்ணெயில் இட்டு
அதனை வெயிலில் சூடு செய்து
தலையில் பூசிக் கொள்வது மிக மிக நல்லது..


இல்லறத்தை நல்லறமாக்குவது - மல்லிகை ..

மல்லிகையே.. மல்லிகையே தூதாகப் போ!..
- என்பது இளங்காதல்...

அதே சமயம் பிரசவித்த பெண்களின்
பால் கட்டு வலியைக் குறைப்பதும் மல்லிகையே...

அந்தக் காலத் திரைப்படங்களில்
புறம் பொறுக்கும் மைனர்கள்
கையில் மல்லிகைச் சரத்தினைச் சுற்றிக் கொண்டு
திரிவதாகக் காட்டுவார்கள்...
***

சிவ தரிசனம்
திருச்சிராப்பள்ளி


இறைவன் - ஸ்ரீ தாயுமானேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ மட்டுவார்குழலி

ஸ்ரீ மட்டுவார்குழலி  
தலவிருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி

எல்லாம் வல்ல ஈசன் எம்பெருமான்
ரத்னாவதி எனும் கர்ப்பவதிக்கு
அவளது தாயாக வந்து
பேறு காலம் பார்த்தருளியதாக ஐதீகம்..

அதனாலேயே
தாயும் ஆன ஈஸ்வரன்!..

தென் கயிலாயம் எனக் குறிக்கப்படும்
திருத்தலங்களுள்
இதுவும் ஒன்று...

மேற்கு நோக்கிய
மலைக்கோயில்..


ஸ்ரீ உச்சிப்பிள்ளையார் 
அடிவாரத்தில்
ஸ்ரீ மாணிக்க விநாயகர்...

மேல் முகட்டில்
உச்சிப்பிள்ளயார்...

கர்ப்பிணிப் பெண்ணுக்கு
சுகப்பிரசவம் நிகழ வேண்டும் என்பதற்காக
தாயுமானவர் சந்நிதியில்
வாழைத் தார் காணிக்கை அளிப்பது பிரசித்தம்...

இத்திருக்கோயிலில்
இரண்டாம் தளத்தின் நிலவறையில்
ஸ்ரீ பாதாள சாஸ்தா வீற்றிருக்கின்றார்...
ஜன்னல் வழியாக தரிசிக்கலாம்...

நாயக்க மன்னர்களிடம் அமைச்சராக இருந்த
தாயுமானவர் ஞானம் எய்திய திருத்தலம்...

பற்பல வரலாற்று நிகழ்வுகளுடன் 
தொடர்புடையது - திருச்சி மலைக்கோட்டை...
*

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக்காப்பு

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே.. (1/98) 

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிய
தேவாரம்

மட்டுவார் குழலாளொடு மால்விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்
கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயுஞ்
சிட்டர் போலும் சிராப்பள்ளிச் செல்வரே.. (5/85)
*

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 15 - 16


ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்...

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்... 


ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

11 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை அண்ணா!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. கேஷவின் படம் செம...கோழி அழைப்பதையும் அழகா படத்தில் காட்டியிருக்கார்...

    தாயுமானவர் சன்னதியில் சுகப்பிரசவத்திற்கு வாழைத்தார் காணிக்கை புது தகவல்..

    மல்லிகையைப் பார்த்ததும் நீங்க சொல்லிருக்கற பாட்டுத்தான் நினைவுக்கு வந்தது...கூடவே மற்றொரு பாட்டு மல்லிகையே மல்லிகையே என்ற பாடலும். ஸ்ரீராம் இன்னும் நிறைய சொல்லுவார்...

    அமுதம் அனைத்தும் அருமை அண்ணா....படங்களும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல் என்று மல்லிகையிடம் தூது கேட்பதும் உண்டு. மல்லிகை முல்லை பொன்மொழிக் கிள்ளை என்று சகோதரியைத் தாலாட்டுவதும் உண்டு. மல்லிகைமுல்லை பூப்பந்தல் மரகத மாணிக்கப் பொன்னூஞ்சல் முரல் உறவின் இரவைக் கொண்டாடுவதும் உண்டு!

      மல்லிகைப்பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக என்று உருகுவதும் உண்டு!

      ஓகேயா கீதா... நமக்கு ஸாரி, எனக்கு இதுதான் சரளமாக வருகிறது!

      நீக்கு
    2. ஸ்ரீராம் நீங்க சொல்லிருக்கற பாடல்கள்ல மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் டக்கென்று மெட்டு நினைவுக்கு வரல மத்ததெல்லாம் நினைவுக்கு வந்துருச்சே!!

      நன்றி ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  3. குட்மார்னிங்.

    பேசாமல் நாமே போய் திருக்கதவங்களை திறந்து வைத்துவிட்டு வந்து விடலாம் என்று கைகள் பரபரக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. மல்லிகையின் மனம்வீசும் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  5. கமலவல்லி தாயாரின் தரிசனமும், ஸ்ரீ மட்டுவார் குழலி அம்மன் தரிசனமும் கிடைக்க பெற்றேன் ..

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ..

    பதிலளிநீக்கு
  6. படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.
    அர்த்தநாரி படம் மிக அழகு.
    மல்லிகையின் பெருமை அருமை.

    பதிலளிநீக்கு
  7. சொந்த அலுவல் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர இயலா நிலை. இன்று தாங்கள் அழைத்துச்சென்ற தலங்களைக் கண்டேன். பாடல்களால் இன்புற்றேன்.

    பதிலளிநீக்கு
  8. அமுதம் அனைத்தும் நன்றாக உள்ளது அழகான படங்களுடன் என்றால் கூடவே மல்லிகையின் மணமும் பரவுகிறது. அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. http://sivamgss.blogspot.com/2011/01/18.htmlஇந்தப்பாடலை ஸ்ரீராமானுஜர் அனுசந்தித்தபோது நடந்த நிகழ்வாகக் கூறப்படுவது இங்கே காணலாம். மல்லிகையின் புகழ் மங்காதது. கேஷவின் ஓவியத்திற்கு விளக்கமோ விமரிசனமோ தேவையே இல்லை. தாயுமானவருக்கு வாழைத்தார் நாங்களும் வைச்சிருக்கோம். குஞ்சுலுவுக்காக. அப்புறமாக் குஞ்சுலுவோடு போய்ப் பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..