நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 27, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 03

இந்திரனின் துயரம்

இதற்கு மேல் என்ன தான் செய்யமுடியும்!..

அடுத்தடுத்த பிரச்னைகளால்
குழம்பிக் கிடந்தது தேவேந்திரனின் மனம்... 

தட்க்ஷன் மாபெரும் யாகம் நடத்துகிறான் ...
அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறான்...

அன்புடன் அழைப்பு விடுத்திருக்கிறான் என்பதைவிட
அன்புடன் எச்சரித்திருக்கிறான் என்பதே சரி!...

ஆனால், இங்கே அமரலோகத்தில் -
அந்தத் தேதியில் அரம்பையரின்
ஆடல் பாடல் கேளிக்கை நிகழ்ச்சிகள்!...

வித்யாதர கந்தர்வ கன்னியரும் கலந்து கொள்கின்றனர்...
ஈரேழு புவனங்களிலும் இது போன்ற கலை நிகழ்ச்சி நடந்ததே இல்லை..

ஆனாலும் -
தட்க்ஷன் ஈசனுக்கு மாமனார் ஆயிற்றே!..
போகாமல் இருக்கத் தான் முடியுமா!...

எனவே -
தேவகன்னியரின் கலை நிகழ்ச்சியை ஒத்தி வைக்கப்பட்டது...
தட்க்ஷனின் யாகசாலையை நோக்கி தேவர்களின் விதி ஓடியது..

இந்திரன் ஐராவதத்தில் பயணிக்க -
எல்லாரும் யாகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்...

தட்க்ஷன் ஆஹூதி கொடுக்கின்றான்!..
- என்று, அங்கே போனால்  - பிறகுதான் தெரிந்தது - 
அது சிவப்பரம்பொருளை மதிக்காமல் செய்யப்படும் யாகம் என்று!.. 


அதன் பிறகாவது -
நல்லபுத்தி சொல்லி தட்க்ஷன் திருந்துவதற்கான
வழியைக் காட்டியிருக்கலாம்... அல்லது,

போடா!... நீயும் உன் யாகமும்!... - என்று, திரும்பி வந்திருக்கலாம்!.. 

அங்கு சென்றோர் எவருக்கும் - மதி வேலை செய்யாததனால் -
விதி புகுந்து விளையாடியது...

தட்சனின் யாகசாலையில் - யாரும் எதிர்பார்க்காத வகையில்
ஸ்ரீ வீரபத்ரஸ்வாமி ஸ்ரீ பத்ரகாளியுடன் தோன்றினார்... -

சிவ அபராதம் செய்ததற்காக -
தட்க்ஷனின் விருந்தினர்கள் வேட்டையாடப்பட்டனர்!..

அதுவும் போதாதென்று -
அசுரர் கையில் சிக்கி அவதிப்படவும் தீர்ப்பு வழங்கப்பட்டது...

நொந்து நூலாகிப் போன - தேவேந்திரன் அறிந்திருக்கவில்லை..

அன்றைக்கு மேலிடத்தில் எவ்வித அனுமதியும் பெறாமல்
தனது சொந்த விருப்பத்தின் பேரில் பாற்கடலைக் கலக்கியடித்து
பல உயிர்களுக்கும் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல்
சுற்றுப் புறச் சூழலைக் கெடுத்ததற்குமான தண்டனைதான் இது!.. - என்று!...


இந்நிலையில் - காலம் வகுத்தபடிக்கு
காசியப முனிவர் மாயை எனும் அசுர கன்னியிடம் சிக்கினார்...

மாயையின் காமத்தினால்
நேரங்கெட்ட நேரத்திலெல்லாம் அசுர குலம் உற்பத்தியானது...

தாரகன், சிங்கமுகன், சூரபத்மன்...
இவர்களுக்குத் தங்கையாக அஜமுகி!...

இன்னும் பல்லாயிரக் கணக்கான அசுர சைன்யம்...

ஆயிரத்தெட்டு அண்டங்களையும்
நூற்றெட்டு யுகங்களுக்கு ஆளும் வரம்!..

உத்வேகம் பெற்ற அசுரர்கள்
அமரலோகத்துள் புகுந்து ஆட்சியைக் கைப்பற்றினர்...

நாடற்றவன் ஆனான் - தேவேந்திரன்!...

ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமியால் தண்டிக்கப்பட்டு  -
அந்தக் காயங்கள் ஆறுவதற்குள், 
மாயையின் மகனாகிய சூரபத்மனிடம் 
எல்லாவற்றையும் இழந்து சீரழியும் நிலை வந்ததே!..

பட்டத்துக் குதிரை உச்சைச்சிரவமும்
பட்டத்து யானை ஐராவதமும் எங்கே ஓடிப் போயின?...
தேவ கன்னியர் எல்லாம் என்ன ஆனார்கள்?..
- என்று இதுவரைக்கும் தெரியவில்லை!..

மகன் ஜயந்தன் - மகேந்திர புரத்தின் சிறையில்!..
மனைவியுடன் நான் - இங்கே - மூங்கில் காட்டில்!..
சே.. என்ன வாழ்க்கை!..

- கலங்கிக் கண்ணீர் வடித்தான்  - தேவேந்திரன்!..

சூரபத்மனுக்கு அஞ்சி நடுங்கி இந்திராணியுடன்
ஒளிந்து கொண்ட மூங்கில் வனம் - வேணுபுரம் எனப்பட்டது...
அத்துடன் -  அஞ்சி நடுங்கிய இந்திரனுக்கு
ஆறுதலான புகலிடம் ஆனதால் - புகலி எனவும் புகழப்பட்டது.

இப்படி வேணுபுரம் எனவும் புகலி எனவும்
வழங்கப்பட்ட திருத்தலம் தான் -  சீர்காழி!..


சீர்காழியில் மனக்கலக்கத்துடன் ஒளிந்து வாழ்ந்த
தேவேந்திரன் - திருக்கயிலாய மாமலைக்குச் சென்று
அம்மையப்பனைத் தரிசிக்க விரும்பினான்.

இதனை அறிந்த இந்திராணி -

யாதொரு துணையும் இல்லாத நிலையில்
அசுரர்களின் குணத்தை அறிந்தும் -
என்னைத் தனியே விட்டு விட்டுச் செல்லலாமா?..
- என்று கலங்கினாள்...

இமையாத விழிகளில் இருந்து நீர் வழிந்தது.

அப்போது தான், 

ஸ்ரீ தர்ம சாஸ்தா எனவும் ஸ்ரீபூதநாதன் எனவும்
போற்றப்படும் ஸ்ரீஹரிஹர புத்ரனைப் பற்றி
இந்திராணியிடம் எடுத்துரைத்தான் தேவேந்திரன்.  

பெண்மையைக் காத்து நிற்கும்
பெருந்தகையாளனாகிய பெருமான் இருக்கும் போது -
நீ கவலை கொள்ளலாகாது...
அடைந்தவரைக் காத்தருளும் ஐயனாகிய அவர்
உனக்கு  அடைக்கலம் அருள்வார்!..

- என்று, ஆறுதல் கூறிய தேவேந்திரன் -
ஸ்ரீஹரிஹரபுத்ரனைத் தியானித்து வணங்கி நின்றான்.

இந்திரனின் வேண்டுதலைக் கேட்ட
ஸ்ரீ ஹரிஹரசுதன் பெருங்கருணையுடன் தோன்றினான்.

எப்படி!..

ஐயனின் திருக்கோலத்தை
கச்சியப்ப சிவாச்சார்ய ஸ்வாமிகள் கூறுகின்றார்!..

(இந்தப் பதிவில் எடுத்தாளப்பட்டிருக்கும் திருப்பாடல்கள்
ஸ்ரீ கந்த புராணத்தின் மகா சாத்தப் படலத்தில் உள்ளவை..
Project Madurai  - எனும் பொது தளத்திலிருந்து பெறப்பட்டவை...
அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!..)


காருறழ் வெய்ய களிற்றி டையாகிப்
பாரிடர் எண்ணிலர் பாங்குற நண்ணப்
பூரணை புட்கலை பூம்புற மேவ
வாரணம் ஊர்பவன் முன்னுற வந்தான்!..

இப்படி - பெருங்கருணையுடன் தோன்றிய பெருமானைப் போற்றி வணங்கி நின்றனர் தேவேந்திரனும் இந்திராணியும்.

பொன்னடி தாழ்ந்து புகழ்ந்து நின்ற இந்திரனிடம் -

தேவேந்திரனே!.. என்ன வேண்டும் என இயம்பு!.. -
எனக் கேட்டான் ஸ்ரீ ஹரிஹரசுதன்.

மூவுலகுக்கும் முதல்வன் ஆகிய முக்கண் மூர்த்தியைக் தரிசித்து -
எமக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்களைக் கூறுவதற்காக -
கயிலை மாமலையை நோக்கிச் செல்கின்றேன். இவ்வேளையில் -

தஞ்சம் இலாது தனித்த இவ்வனத்தே 
பஞ்சுறழ் செய்ய பதத்தியை வைத்தால் 
வஞ்சகர் கண்டிடின் வெளவுவர் என்றே 
அஞ்சினள் உந்தன் அடைக்கலம் ஐயா!.. 

- என்று கூறிக் கலங்கி நின்றான் இந்திரன்.

இதைக் கேட்ட பெருமான் புன்னகையுடன்,

உன் மனைவி தனித்திருப்பாள் எனக் கவலையுற வேண்டாம்...
எவ்விதக் குற்றமும் இலாத,  நின் ஏந்திழை தன்னைத்
தீது அடையாதபடிக்குக் காத்து நிற்பேன்!..

- என்று அருளினார்.

அத்துடன்,  மகாகாளன் எனும் சேனைத் தலைவரை -
இந்திராணிக்கு மெய்க்காவலாக நியமித்து -

மூவரின் முந்திய மூர்த்தி வரைக்குப் 
போவது உன்னினன் பொன்நகர் மன்னன் 
தேவி இருந்தனள் தீங்கு வராமே 
காவல் கொள் நீ!.. என - 

- ஸ்ரீ மகாகாளருக்கு கட்டளையிட்டு அருளினார்.

ஸ்ரீ கருப்ப ஸ்வாமி 

ஸ்ரீ மகாகாளர் தான் -
ஸ்ரீ ஐயப்ப வழிபாட்டில் விளங்கும் ஸ்ரீ கருப்ப ஸ்வாமி!..

அந்த அளவில் நிம்மதி அடைந்த தேவேந்திரன் -
தாமரைத் தண்டினுள் விளையும் நூலிழையாக மாறி,
காற்றில் மிதந்தபடி  கயிலை மாமலையை நோக்கிச் சென்றான். 

ஸ்ரீ மகாகாளர் தோன்றாத் துணையாயிருக்க -
திடம் கொண்ட மனத்தினளாக   -
இந்திரன் விட்டுச் சென்ற சிவபூஜையைத் தொடர்ந்தாள் இந்திராணி. 

அதேவேளையில் அண்ட பகிரண்டம் முழுதும்  -
இந்திரனைத் தேடி அலைந்து களைத்துப் போனது - அசுர சேனை. 

இந்தத் தடியன்கள் வேலைக்கு ஆக மாட்டார்கள்!..
- என உணர்ந்து கொண்ட அஜமுகி - சூரபத்மனின் தங்கை -
தானே தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தாள்.

அங்குமிங்கும் அலைந்து திரிந்தபோது -
அண்டபகிரண்டமும் தங்களது அராஜகத்தால் -
ஆர்ப்பாட்டத்தால் - வறண்டு கிடப்பதைக் கண்டாள்.

இந்த வறட்சியைக் கண்டு அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி!.. ஆனாலும் -
அதோ அந்தப் பகுதி மட்டும்  பச்சைப் பசேல் என  விளங்குவதெப்படி!..

அவளுக்குள் அதிர்ச்சி!.. 


பொதுவாகவே - மூங்கில் காடுகள் எளிதாக உலர்ந்து விடுவதில்லை..
அதிலும் இப்போது - இந்திராணி - சிவ வழிபாட்டில் இருக்கின்றனள்...

எனவே தான்
முன்னை விட அழகாகத் தழைத்திருந்தது - அந்த மூங்கில் வனம்...

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை  - அல்லவா!..

இதை அறிந்து கொண்ட அஜமுகியின் முகத்தில் மலர்ச்சி!..

தேவேந்திரனைத் தேடித் திரிந்த அஜமுகி  -
சிவபூஜை செய்து கொண்டிருந்த இந்திராணியைக் கண்டு கொண்டாள்...

இந்திராணியின் அழகைக் கண்டு அஜமுகி மருண்டாள்...

..விநாச காலே விபரீத புத்தி!.. - என்பதற்கிணங்க -

தன் அண்ணனுக்கு இவள் விருந்தாகட்டும்!..
- என்ற  குரூர எண்ணத்துடன்  - இந்திராணியின் கையைப் பிடித்து இழுத்தாள்!..

நிலைமை விபரீதமாகிப் போனது...


அஜமுகியைக் கண்டு வீறிட்ட இந்திராணி -
அபயம் அபயம்!.. - என்று  அலறினாள்...
கண்ணீர் வழிந்தோடக் கதறினாள்!..

பையரா அமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும் 
ஐயனே ஓலம்! விண்ணோர் ஆதியே ஓலம்! செண்டார் 
கையனே ஓலம்! எங்கள் கடவுளே ஓலம்! மெய்யர் 
மெய்யனே ஓலம்! தொல்சீர்வீரனே ஓலம்! ஓலம்!..
-: ஸ்ரீ கந்த புராணம் :-

இந்திராணியின் அபயக் குரல்
அந்த மூங்கில் வனம் எங்கும் எதிரொலித்தது!..

அதன் பின் நடந்ததென்ன!...

ஸ்ரீஹரிஹர சுதனே
சரணம்!.. சரணம்!..
ஃஃஃ

7 கருத்துகள்:

  1. மிக அருமையான நடையில் தெளிவான அழகான காலத்துக்கேற்ற விளக்கங்களுடன் செல்கிறது ஐயப்பன் திருக்கதை. சபரிகிரிவாசனுக்குச் சரணம்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் 🙏

    சிறப்பான நடை. ஐயனின் அருட்பார்வை அனைவரும் பெற எனது பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஜி
    விளக்கங்கள் அருமை தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. ஐயப்பன் கதையை அருமையாக தொகுத்து வழங்கி வருகிறீர்கள்.
    அஜமுகி அவள் தோழி துர்முகியின் நிலை அடுத்து படிக்க ஆவல்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. யக்ஷ யாகம் பற்றித் தெரிந்திருந்தாலும் இதிலும் புதியவை நிறைய...ஐயப்பன் கதை விரிவாக பாடல்களுடன் உங்கள் வழக்கமான அருமையான நடையில் அருமை ஐயா/ துரை அண்ணா..

    கீதா: துளசி ஏற்கனவே அனுப்பிவிட்டார். நான் வாசிக்கத்தான் தாமதமானதால் கருத்து இப்போதுதான் போட முடிகிறது...

    பதிலளிநீக்கு
  6. தொடர்கிறேன். சில காரணங்களினால் இணையத்துக்கு வரமுடியாதிருந்தது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..