நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 30, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 06

மகிஷியின் தோற்றம்..

தனக்கு முன்பாக வந்தமர்ந்த லீலாவைக் கூர்ந்து நோக்கினார் -
அசுர குருவாகிய சுக்ராச்சார்யார். 

ஆதியில் இருந்தே அவரும்
என்னவெல்லாமோ - செய்து பார்க்கின்றார் -
அசுர குலத்தின் மேன்மைக்கு என்று!..

ஆனால் - அசுரர்கள் அவர்களுடைய அடாத செயல்களினால் -
அவர்களுக்கே எதிரியாகி விடுகின்றார்கள்!..

சொல் மகளே!..
- கனிவுடன் அவளுடைய குறையைக் கேட்டார் - சுக்ராச்சார்யார்.


குருவே!.. என் நிலைமை சிக்கலானது...
நான் காலவ மகரிஷியின் மகளும்
தத்த மகரிஷியின் பத்னியுமான - லீலா!..
நான் எந்தத் தவறும் செய்யவில்லை...

வாழ விரும்பினேன் - வாலிபம் இருக்கும் போதே!..
ஆனால், பிடிவாதமாக மறுத்தார் - என் கணவர்...

வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது... அநித்யமானது...
அதனால், புலனறிவு இருக்கும் போதே -
புலன்களை அடக்கி - புண்ணியத்தைத் தேடவேண்டும்...
எனவே - வானப் பிரஸ்தமே நன்று என்றார்!...  

சொல்லுங்கள் ஸ்வாமி!..
போகமும் ஒருவகையில் யோகம் தானே!..
போகத்தின் வழியே - யோக நிலை எய்தலாகாதா?..
நெய்யை விட்டு அக்னியை அவித்தார் யாரும் உண்டா!..
ஆசைகளை அடக்கி அழித்து விட்டு வா!... 
- என்றா  அமரலோகம் கூறுகின்றது?..
அந்த இந்திரனே - போகங்களுக்கு அதிபதி அல்லவா!..

வாழ்வதற்காகத்தானே -  வாலிபத்தை வரவு வைத்தான் ஈசன்!..
சாமான்ய மனிதர்களைப் போல - மகா முனிவர்களும் கூட
மனை மங்கலம் கண்டவர்கள் தானே!...


மனிதர் என்ன - தேவர் என்ன!.. 
புல்லும் பூச்சியும் பறவையும் மிருகமும் -
தாம் பெற்ற பேறு என்று தமக்கு விதிக்கப்பட்டவாறு
கொஞ்சி மகிழ்ந்து கூடிக் குலவி வாழவில்லையா?...'

வீணே மனதை விறகாக்கி
வெறுந்தரையில் -  யோகம் என்று அமர்ந்த நிலையில்,
அந்தக் காமவேள் எய்யும் பூங்கணைகளால்
தேகம் பற்றிக் கொண்டு எரியும் போது - 

அவர்கள் உருண்டு வந்து விழுந்த இடம் -
பெண்மையின் காலடியில் தானே!..


நீ சொல்வது எல்லாம் சரி.. மகளே!..
ஆனாலும் - காமத்தைக் கொன்று -
காலத்தையும் வென்றவர்களை நீ அறிய மாட்டாயா?..

காமனை வெல்வதாய்க் கூறி கரியைப்
பூசிக் கொண்டவர்களையும் அறிவேன் ஸ்வாமி!..

என்னுடைய கேள்வி எல்லாம் -
இல்லறத்துடன் கூடிய துறவறம் இனிக்குமா?.. கசக்குமா?..
வாலிபம் என்பது  - என் தவறா ஸ்வாமி?.. விடை கூறுங்கள்!..

மகளே!.. இல்லறம் துறவறம் - இவை இரண்டும் ஒன்றாகாது...
இரு நிலையின்  அடிப்படை தர்மங்களும்  வெவ்வேறானவை!.. 
அவற்றை, உன் கணவன் -  உனக்குப் புரியும்படியாக
விளக்கி இருக்க வேண்டும்!..

ஆனால், அவர் என்னை விலக்கி விட்டாரே!..
என்னை விட்டு விலகி விட்டாரே!..
மனம் அடக்கி வாழாத நீ மகிஷியாகப் போ!..
- என்று சபித்து விட்டாரே!..

நிலைமை சிக்கலாகத் தான் ஆகி விட்டது!..
- சுக்ராச்சார்யாருக்கும் மனம் வலித்தது...

தன்னிடம் இருந்து -
சஞ்ஜீவினி மகா மந்த்ரத்தினைக் கற்க வேண்டும் என,  
தேவ குருவின் மகன் கசன் வந்ததையும்,
தன் மகள் தேவயானி அவனிடம் மனம் பறி கொடுத்ததையும்
கடைசியில் அது மகா சோகமாக முடிந்து போனதையும் எண்ணி நெகிழ்ந்தார்..


நானும் பதிலுக்கு சாபம் கொடுத்து விட்டுத்தான் வந்தேன்..
என்னை அடையாமல் - உன்னை நீ அறிய முடியாது!..
என் மனதை அறிந்து வாழாத நீயும் மகிஷமாகப் போ!.. - என்று!..

சரி.. மகளே!.. மனதைத் தேற்றிக் கொள்...
இப்போது உனக்கு என்னால் ஆக வேண்டியது என்ன?..

வையகத்து மாந்தருக்கு வரமான வாலிபம் -
எனக்கு மட்டும் சாபமாகி விட்டது!..
பார்ப்பவர்கள் எள்ளி நகையாட பரிதவித்து நின்றேன்!..
என்னுடைய சாபம் பலிக்க வேண்டும்...
என் கணவன் என்னைத் தேடி வர வேண்டும்...
என்னுடன் கலந்து கரையேற வேண்டும்..
அதுவரைக்கும் - எனக்கொரு பாதுகாப்பு வேண்டும்!..

வானகமோ வையகமோ
பெண்மைக்கு எவ்விடத்திலும்
இன்றைய சூழ்நிலையில்
பாதுகாப்பு இருப்பதாகத் தெரியவில்லை...
சிக்கலான இவ்வேளையில்
எனக்கு நீங்கள் தான் அடைக்கலம் தந்தருள வேண்டும்!.. 

- என்று பணிந்து நின்றாள்.

தான் இயக்காமல்  -
நாடகம் அதுவாகவே இயங்குவதை -
சுக்ராச்சார்யார் புரிந்து கொண்டார். 


அம்பலத்தரசன் அம்மையுடன் ஆடுகின்றான்...
அவனே இந்த அகிலத்தையும் ஆட்டுவிக்கின்றான்...
அவர்தம் திரு உள்ளத்தை யார் அறியக்கூடும்?..

பொன்னம்பலம் மேவிய புண்ணிய மூர்த்தி,
பூங்கொடியாளுடன் கூடி - புதிதாய் நடத்தும் நாடகத்தில்
நாம் - நமது கடமையைச் செவ்வனே செய்வோம்!..
- என்று மனம் தெளிந்தார் - சுக்ராச்சார்யார்...

கமண்டல நீரைக் கையில் எடுத்தார்... 
கண்களை மூடி - ஸ்ரீ பஞ்சாட்சரத்தைத் தியானித்தார்...

ஸ்வாமி!.. என் மனமும் உடலும்
ஏதோ .. ஏதோ.. ஒரு மாறுதலுக்கு ஆளாகின்றன...
என் மனம் தடுமாறுகின்றது... என்னைக் காப்பாற்றுங்கள்!..
- என்றவளாய் மயங்கிச் சரிந்தாள் - லீலா...

அந்தத் தருணத்தில் -
கையில் வார்த்த கமண்டல நீரை மந்த்ர ஜபத்துடன்,
மயங்கிக் கிடந்த லீலாவின் மீது தெளித்தார் - சுக்ராச்சார்யார்...

அடுத்த சில விநாடிகளில் -
நடந்ததென்ன!?..

தொடரும் பதிவுகளில் காணலாம்...
***

ஸ்ரீ ஹரிஹர சுதனே!..
சரணம்!.. சரணம்!..

10 கருத்துகள்:

  1. மிக அற்புதம். முற்றிலும் வித்தியாசமான நடை, வித்தியாசமான கருத்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி. விரிவாகவே எழுதி வருகிறீர்கள். எல்லாமே நன்றாக இருக்கின்றன. படங்கள், பொருத்தமான வார்த்தைகள்,

    பதிலளிநீக்கு
  2. விறுவிறுப்பான எழுத்து ஆவலைத் தூண்டுகிறது தொடர்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  3. மிக அருமை ..தொடர்கிறேன்..

    பதிலளிநீக்கு
  4. பெண்மைக்கு எவ்விடத்திலும் பாதுகாப்பு இல்லை//

    இப்போதைய சூழலுக்கு ஏற்ப கருத்தையும் சொல்லிட்டீங்க அண்ணா. சரியான இடத்தில். தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. ஆன்மீகப் பொழிவினை அமைதியாகக் கேட்பதுபோல உங்களுடைய இந்த தொடர் பதிவினை அமைதியாக நிதானித்து ரசித்து படித்து வருகிறேன். இவ்வாறான எழுத்தினை உங்களுக்குத் தந்த பரம்பொருளை நினைத்துப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அருமையான கதை...

    ஆனா இளமையைக் கைவிட்டு புலன்களை அடக்கிக் காலத்தை வென்று என்ன பண்ணப்போகிறேன் யான்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  7. கதைகளை விரிவாக எதனால், ஏன் என்று அழகாய் சொல்லி வருகிறீர்கள்.
    படங்கள் அருமை.
    ஆட்டி வைத்தால் ஆடுகிறோம்.
    புண்ணிய மூர்த்தி ஆடும் நாடகம் !
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. காத்திருக்கிறேன் - நடந்தது அறிய...

    பதிலளிநீக்கு
  9. ஆஹா...

    சிறப்பாகச் செல்கிறது தொடர். மேலும் அறிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..