நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 30, 2017

மாமன்னன் வாழ்க..

ஆயிரத்து முப்பதாண்டுகளுக்கு முன் - ஒருநாள்..

அன்றைக்கு ஐப்பசி மாதத்தின் சதய நாள்..

அவன் இப்புவியில் பிறந்து தாயின் அருகில் கிடந்தபோது
திருமகள் நெஞ்சம் தித்தித்திருந்தாள்.

அதன் பின் -

அவன் தத்தித் தவழ்ந்து தளர் நடையிட்டபோது
இந்தப் பூமகள் நெஞ்சம் பூத்திருந்தாள்..

குருகுலத்தில் அமர்ந்து கலைகளைக் கற்றபோது
கலைமகள் நெஞ்சம் களித்திருந்தாள்...

தோள்வலி கொண்டு போர்முகங் கண்டு
வாளேந்தி நாற்புறமும் வன்பகை முடித்தபோது
வீரத் திருமகள் ஆரவாரச் சிரிப்புடன்
வெற்றித் திலகமிட்டு வாழ்த்தி நின்றாள்..

அதனால் தானே ஆண்டுகள் பலநூறு கடந்தபோதும்
அவனுடைய சீர் தனை அவனுடைய பேர் தனைப் பேசி நிற்கின்றோம்...

இப்பேர்பட்ட பெருமை இப்பூவுலகில்
எத்துணைப் பேருக்குக் கிடைத்திருக்கின்றது!?..


மாமன்னன் ராஜராஜ சோழன்!..

இப்பேர்தனைக் கேட்கும்போதே
நெஞ்சமும் தோள்களும் விம்மித் திளைக்கின்றனவே!..

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த நிலையில்
இப்படி என்றால்!..

அந்த மாமன்னன் வாழ்ந்த காலத்தில்
அவனோடிருந்த மக்களுக்கு எப்படியிருந்திருக்கும்!..

மக்களுடன் மக்களாக
அந்த மாமன்னன் திளைத்திருந்த காரணத்தால் தான்
இரத்தத்தோடு இரத்தமாக கலந்திருக்கின்றது அவனைப் பற்றிய உணர்வு...

வாழையடி வாழையாக - இந்த உணர்வு வருவதால் தான்
மாமன்னனின் பேரைக் கேட்ட மாத்திரத்தில்
உடலும் உள்ளமும் உற்சாகக் கடலில் நீந்திக் களிக்கின்றன..

முன்னோர்க்கும் பின்னோர்க்கும் - என,
பெருமைகளை மலையளவாகச் சேர்த்து வைத்தவன்
மாமன்னன் ராஜராஜசோழன்...


ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்ட பெருந்தகையாளன்!..

காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளிய கோப்பரகேசரி!..

வேங்கை நாடும் கங்கைபாடியும்
விழி மூடாது காத்துக் கிடந்தன இவனது காலடிகளில்!..

நுளம்பபாடியும் தடிகை பாடியும் 
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் 
புலம்புதற்கொரு மொழியும் இன்றி
புகழ்ந்து கிடந்தன இவனது திருவடிகளை!..

எண்திசைகளும் இவனைப் பேசித் திரிந்த வேளையில்
ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும்..

இவையும் போதாதென்று -

முந்நீர்ப் பழந்தீவுகள் பன்னீராயிரமும்
என்ன புண்ணியம் செய்தனமோ!.. - என்று,
மன்னவனின் பாதங்களைத் தழுவிக் கிடந்தன..
முப்போதும் பன்னீரால் கழுவிக் கிடந்தன!..

நாட்டு மக்களுக்கு நன்மைகளைச் செய்வதில்
இவனே முன்னவனாக முதல்வனாக இருந்தான்..

இதனால் தான்
சோழ வளநாட்டின் மக்கள் மன்னனுக்கு இமையாக இருந்தார்கள்..
மாமன்னனும் தன் மக்களுக்கு இமையாக இருந்தான்..

ஆலயங்களைத் திருத்தி திருவிளக்கேற்றியதில் இவனுக்கு நிகரில்லை...

அதுவரைக்கும் -
அங்குமிங்குமாக காற்றில் தவழ்ந்து கொண்டிருந்த
திருப்பதிகங்களை மீட்டெடுக்க ஆவலுடன் முனைந்தான்...

இனிமையில் இவ்வளவு என்றால் எண்ணிக்கையில் எவ்வளவு!?..

அப்பரும் ஞானசம்பந்தரும் சுந்தரரும் நமக்களித்த
திருப்பதிகங்கள் அத்தனையையும் மீட்டெடுக்க முடியுமா?..

திகைத்து நின்ற வேளையில்
திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் மூலமாக
அந்த அற்புதம் நிகழ்ந்தேறியது..



பொள்ளாப் பிள்ளையாரின் திருவருள் பெற்ற
திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அவர்களின் மூலமாக
மன்னனின் ஆவல் ஈடேறியது..

தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறைக்குள்
கறையான்களின் பிடியில் கிடந்த சுவடிகளை மீட்டெடுத்து
தமிழுக்கும் சைவத்திற்கும் புத்துணர்வூட்டிய பெருந்தகை ராஜராஜ சோழன்..

அதனால் தானே அனைவராலும்
சிவபாத சேகரன்!.. - எனக் கொண்டாடப்பட்டான்..

அப்பேர்ப்பட்ட மாமன்னனுக்கு
நாம் எந்த விதத்தில் மரியாதை செய்கின்றோம்?..

மும்முடிச் சோழ மண்டலம் என்பது
ராஜராஜன் ஆட்சி செய்த நிலத்தின் திருப்பெயர்...

ஆனால், இன்றைக்கு மாநில அளவில் கூட
அப்பேரரசனுக்கு மரியாதை செலுத்தவில்லை..

தஞ்சை மாநகர் மட்டும் எப்போதும் போல
மாமன்னனின் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றது..

இதற்கிடையில் சமீப காலமாக
எங்கெங்கிருந்தோ - எவர் எவரோ வந்து
எங்க சாதி.. எங்க சாதி!.. - என்று கூக்குரலிட்டு
தஞ்சை நகரைப் பதற்றத்துக்குள்ளாக்குகின்றார்கள்..

ஒருபுறம் மக்கள் பெருமளவில் புழங்கும்
பேருந்து நிலையம் மற்றும் மருத்துவமனை..
இன்னொரு புறம் கடைத்தெருவும் வங்கி வளாகமும்..

இவற்றுக்கு நடுவே - இந்தக் கூச்சலும் கூக்குரலும்
பெரிய கோயிலுக்குச் செல்லும் பக்தர்களைக் கூட விட்டு வைப்பதில்லை...

இந்தப் பதற்றமும் பரபரப்பும் மக்களுக்குப் புதியவை..

பதற்றத்தைத் தணிக்கும் முகமாக -
காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றுகின்றனர்...

என்றாலும் -
எந்த நேரத்தில் என்ன நிகழுமோ?.. - என்ற பதற்றம் நிலவுவது உண்மை..


ஆண்டுக்கு ஆண்டு அத்தனையையும் பேசிக் கொண்டிருக்கின்றோம்..
அத்தனை சிறப்புகளும் ஒரே அடையாளத்துக்குள் பொதிந்து கிடக்கின்றன..

ஆயிரம் ஆண்டுகளாக அணி கொண்டு விளங்குகின்ற அந்த அடையாளம் -
ராஜராஜேஸ்வரம் எனும் தஞ்சை பெருவுடையார் திருக்கோயில்.

தமிழர் தம் கட்டடக் கலைக்கு -
மாபெரும் எடுத்துக்காட்டு தஞ்சை ராஜராஜேஸ்வரம்..


நேற்றைக்கும் இன்றைக்குமாக (29, 30/10) 
தமிழக அரசு விழா நடத்துகின்றது...

இன்று காலையில் பெருவுடையார்க்கும் பெரியநாயகி அம்மனுக்கும் 
பெருந்திருமுழுக்கு நிகழ்கின்றது.. 

அதனைத் தொடர்ந்து பெருந்தீப வழிபாடு நிகழ்கின்றது..

மாலையில் ஐயனும் அம்பிகையும் விடைவாகனத்தில் ஆரோகணித்திருக்க
அம்மையப்பனைத் தரிசித்த வண்ணம் மாமன்னன் திருவீதி எழுந்தருள்கின்றான்...

அம்மையப்பனுடன் சேர்த்து மாமன்னனையும் தரிசிக்க
ஆவலுடன் காத்துக் கிடக்கின்றனர் தஞ்சை மக்கள்..


விண் கொண்ட பெருமை எல்லாவற்றையும் 
தமிழும் தமிழ் மண்ணும் கொண்டு நிற்கும் வண்ணம் 
வடிவமைத்துத் தந்த பெருந்தகை - சக்ரவர்த்தி ராஜராஜ சோழன்..

பார் கொண்ட பெருமையெல்லாம் 
ஊர் கொண்டு நிற்கும் வண்ணம் 
பேர் கொண்டு நிற்கின்றது பெரிய கோயில்!..

தேர் கொண்ட மாமன்னன்
சீர் கொண்டு நின்றனன்!..
பெரும்பேர் கொண்டு நின்றனன்!.. 
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!..  

திருவீதி கண்டருளும்
சிவபாத சேகரனின் பெரும்புகழ் ஓங்குக!..
***

10 கருத்துகள்:

  1. அன்பின்ஜி
    மாமன்னன் ராஜராஜ சோழனின் வரலாறும், இன்றைய அவல நிலையும் அழகாக விளக்கினீர்கள்.
    அருமையான படங்கள்

    அவரின் ஆன்மா இவர்களை மன்னிக்காது.

    பதிலளிநீக்கு
  2. நாங்கள் தஞ்சையில் இருந்த காலங்களில்தான் ராஜராஜன் சிலை நிறுவப்பட்டது! முதலில் கோயிலுக்குள்ளேயே சிலையை வைத்தார்கள். எதிர்ப்புகள் கிளம்பியதும் சிவகங்கைப் பூங்கா செல்லும் வழியில் ராஜா மிராசுதார் மருத்துவமனைத் திரும்பும் சாலையின் ஆரம்பத்தில் வைத்தார்கள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு. படங்கள் அழகு.

    மன்னர் பிறந்த ஐப்பசி சதயத்தில் என் மகனும் பிறந்தான். இன்று அவனுக்கு பிறந்தநாள்.

    பதிலளிநீக்கு
  4. ராசராச சோழன் போற்றுவோம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  5. நல்ல தகவல்கள்!படங்கள்...பல புதிய விவரங்களும் அறிகிறோம். நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  6. மாமன்னனை அவரவர்கள் இப்போது சாதிக்கட்டுப்பாட்டுக்குள் இழுத்துச்செல்கின்றார்கள். சாதி அடிப்படையில் இங்கே காணப்படுகின்ற சில போஸ்டர்களைக் காணும்போது வேதனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  7. அருமையான பகிர்வு ஐயா...
    நம் பெருமை அவர்...
    இன்று ஆளாளுக்கு அவரைச் சாதிக்குள் இழுத்து சிறுமை செய்கிறார்கள்.
    இதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. கோவில்களில் காணும் கல்வெட்டுக்களைப் படிக்க முயன்று தோற்றிருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. மாமன்னன் வாழ்க.....


    அழகிய நதியில் சாக்கடையை கலப்பது போல்

    மாமன்னனின் புகழில் களங்கத்தை சேர்க்கிறார்கள்...


    மூடமனிதர்கள்...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..