நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 28, 2013

புன்னைநல்லூர்


தமிழகத்தில் மாரியம்மன் குடிகொண்டுள்ள சிறப்பான தலங்களுள் தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலும் ஒன்று..


தஞ்சையின் கிழக்கே ஐந்து கி.மீ தொலைவில் பசுமையான வயல்களுக்கு மத்தியில்  அமைந்துள்ளது  புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில்.  



இன்றும் காணக்கூடிய அதிசயமாக - ஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்தில்,  முத்து முத்தாக  வியர்த்து தானாக உலர்கின்றது.  இதனாலேயே  அன்னை முத்துமாரி எனப்பட்டாள்.

கோபுரத்தடியில் விநாயகர், முருகன், நாகர் சந்நிதிகள். தென்புறத்தில் ஸ்ரீகாளியம்மன் மற்றும்  பூர்ண புஷ்கலைதேவியருடன் ஸ்ரீ ஐயனார் வீற்றிருக்கின்றார்.

 

ஆடி மாதம் - முத்துப் பல்லக்கு ஆவணி மாதம் - கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். புரட்டாசி மாதம் - தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா.. 

தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இத்திருக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து அம்பாளை தரிசித்து பேரானந்தம் அடைகின்றனர். 

வருடத்தின் சிறப்பு நாட்களான - தமிழ் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல் தினங்களின் போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும்.

புகழ் பெற்ற பிரார்த்தனை தலமான இக்கோயிலுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.

அம்மை நோய் கண்டவர்கள் பெருமளவில் பிரார்த்தனை செய்து குணமடையப் பெறுவது இத்தலத்தின் சிறப்பு.

இத்தலத்தில் தங்கி வழிப்பட்ட சில தினங்களில் அம்மை இறங்கி குணமாகி விடுவது கண்கூடு.

அம்மை நோய் கண்டவர்கள் அம்மை இறங்கியவுடன் அம்மனுக்கு மாவிளக்கு  போடுகிறார்கள். குறிப்பாக கண் நோயால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் கண்ணில் மாவிளக்கு போடுகின்றனர். 

வயிறு பாதிக்கப்பட்டு குணமானவர்கள் வயிற்றில் மாவிளக்கு இடுகின்றனர். 

உடம்பில் கட்டிகள் இருந்து குணமானவர்கள் வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கிப் போடுகின்றார்கள்.

பொதுவாக உப்பு வாங்கிப் போடுதல் நேர்த்திக் கடனாகின்றது. 

ஆடு, மாடு, கோழி காணிக்கை தருகின்றனர். 

பெண்கள் திருமாங்கல்யம் சாத்துதல், முடிக்காணிக்கை, பால்குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல் போன்றவையும் இத்தலத்தில் முக்கிய நேர்த்திகடன்கள் 

தவிர - அம்மனுக்கு எலுமிச்சம் பழங்களால் நிலைமாலை சாத்துதல் சிறப்பு வழிபாடு. 

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உஷ்ணத்தால் நோய்கள் ஏற்படும் சமயத்தில் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து கொண்டு உள்தொட்டி,  வெளித் தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எவ்வித சிரமமும் இன்றி குணமடைதல் இன்றுவரை கண்கூடாக நிகழ்கின்றது.

தஞ்சை புன்னைநல்லூர் மாரிம்மன் கோயில் பிராம்மணாள் கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் வருடந்தோறும் வெகு சிறப்பாக நேற்று பால்குடத் திருவிழா நடைபெறும். 

முதல் நாள் நிகழ்ச்சியாக தஞ்சை மேல ராஜவீதி சங்கரமடத்தில் அம்பாள் கடஸ்தாபனமும், அம்பாளுக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெறும். 

இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை. 

மூன்றாம் நாள் காலையில் சண்டிஹோமம். மதியம்12 மணிக்கு பூர்ணாஹூதி மற்றும் கஞ்சி வார்த்தல்.

மாலையில் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெறும்.

இதைத் தொடர்ந்து நான்காம் நாள் காலை 7.30 மணியளவில் ஏறத்தாழ 1,500 பேர் பால்குடங்கள் எடுத்து கொண்டு தஞ்சை சிவகங்கை பூங்காவிலிருந்து ஊர்வலமாக புறப்படுவர். 

மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழ ராஜவீதி, கீழவாசல் வழியாக பிற்பகலில் மாரியம்மன் கோயில் சென்றடைந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்வர்.. 

திருக்கோயில் வளாகத்தில் மாலை 6 மணிக்கு அம்மன் புறப்பாடு நிகழும்.

இந்த ஆண்டு பால்குட வைபவம் கடந்த 2/4/2013 அன்று நடந்தது.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களுள் ஒன்றாக தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் விளங்குகிறது.

அம்பாளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறும். 


ஆடி மாதம் முத்து பல்லக்கு , ஆவணி மாதம் வருடாந்திர திருவிழாவும், கடைசி ஞாயிற்றுக்கிழமையும் தேரோட்டமும் , புரட்டாசி மாத தெப்ப உற்சவம் விடையாற்றி மற்றும் நவராத்திரி திருவிழாவும் சிறப்பாக நடைபெறும்.

ஆகம விதிப்படி பூஜைகள்  நிகழும் இத்திருக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோயில்களுள் ஒன்றாகும்.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்கும் தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயிலுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கம்.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து - திருக்கோயிலுக்கு அடிக்கடி பேருந்துகள் இயங்குகின்றன. 

கண் திறந்து பார்க்கும் அருள் தெய்வம் நீயம்மா!..
இந்த மண்ணில் உன்னை மறவாத வரம் வேண்டும் அம்மா!..
* * *

2 கருத்துகள்:

  1. மிகவும் நல்ல பதிவு. நேரில் சென்று ஆலயத்தை தரிசனம் செய்தது போல் இருந்தது. மிக்க நன்றி திரு.துறை சார்.

    பதிலளிநீக்கு
  2. அன்புடையீர்!..தங்களின் வரவு நல்வரவாகுக!..தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!...அனைத்து உயிர்களுக்கும் அன்னை அவள் அல்லால் ஏது கதி?....

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..