நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 9
திங்கட்கிழமை
பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்.
மகாபாரதப் போரின் போது உணவு வழங்கி உபசரித்த மாமன்னன்..
சோற்றால் மடையடைத்த சோழ நாடு...
உண்ணீர் உண்ணீர் என்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடியுறும்..
இதெல்லாம் இம்மண்ணுக்கே உரிய பெருஞ்சிறப்புகள்..
ஆனால்
இன்றைக்கு வீடுகள் பலவற்றிலும் - வார நாட்களில் சில வேளைகளாவது - ஆடம்பரத்தின் காரணமாக சமையல் நிறுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது..
சமையலையும் சாப்பாட்டையும் பிறர் வசம் ஒப்படைப்பதற்கு (ஒப்படைத்து விட்டு - வக்கணையாகத் தின்கின்ற வேலையை மட்டும் கைவசம் வைத்துக் கொள்வதற்கு) இளந்தலைமுறையினர் தயாராக இருக்கின்றனர்..
கேட்டால்,
சும்மா ஒரு மாற்றுக்கு!.. - என்ற பதில்...
இப்படியே போனால் வீட்டிலுள்ள
மற்றவர்கள் கதி??...
குடும்ப வாழ்க்கை என்பதே அழிந்து விடும்.
ஊர் விட்டு ஊர் வந்து அலுவலகப்
பணி செய்வோரும் உடல் நலம் குன்றியோரும் உணவகங்களைத் தான் நாடியாக வேண்டும்..
ஆனால் இன்றைய நிலைமை வேறு..
வீட்டில் சமையல் நிறுத்தப்பட்டு வெளியில் உணவைப் பதிவு செய்து வரவழைத்துச் சாப்பிடும் பழக்கம் - மேலை நாடுகளைப் போல பரவுகின்றது..
அது குடும்பங்களின் சீரழிவிற்கு வழி வகுக்கின்றது.
நமது நாட்டிலோ
வாழும் முறையில்
அன்புடன் சமைப்பதையும் ஆதரவுடன் உபசரிப்பதையும் இல்லாததாக்கி விடுகின்றது...
சமையல் என்பது நமது பாரம்பரியத்தின் அருங்கலைகளில் ஒன்றாக விளங்குவது மட்டுமல்ல
தனிப்பட்ட குடும்பத்தின் கலாச்சார அச்சாணி...
சமையல் கூடம் இல்லாத வீடுகள் நம்மிடையே இல்லை..
வரவேற்பறை படுக்கையறை
கழிவறை - இவை மட்டுமே நமது கலாச்சாரம் ஆகாது..
சமையலறையையும் மூடி விட்டு படுக்கையறை மட்டும் போதும் என்று நினைப்பது அவலம்..
மேலைத் திருமண வாழ்வியல் முறைகள் என்றுமே பிரச்னைக்குரியவை..
படுக்கையறை மட்டுமே வாழ்க்கை ஆகாது..
அதற்கொரு அறை இதற்கொரு அறை என்பது நாகரிகம் என்றாலும் அதுவே நம்முடைய வாழ்வியல் இல்லை..
மேலைத் தேசங்களுக்கு இணையாக தற்போது நமது நாடும் திருமண முறிவுகளில்
இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.. .
இங்குள்ள குடும்பக் கலாச்சாரம் அழிந்தால் மேலை நாகரிக அடிவருடிகளுக்கு கொண்டாட்டம்..
குடும்ப உணர்வுகள் அழியும் போது மன நலமும் சேர்ந்தே அழிகின்றது.
தொடர்ந்து வெளியில் சாப்பிடுவதால் உடலானது நோய்களின் கிடங்காக மாறுகின்றது.
தனியறையில் மகிழ்ந்து
வெளியறையில் சாப்பிடுவது மட்டுமே குடும்ப நலனுக்குக் காரணமல்ல.
எப்போதாவது வெளியில் சாப்பாடு என்பது ஓரளவுக்கு ஏற்புடையது..
இன்றைக்கு எல்லாமே மாற்றப்பட்டு விட்டன..
எனினும்,
மன மகிழ்வுடன் சமைப்பதும் சாப்பிடுவதும் உள்ளத்திற்கும் இல்லத்திற்கும் இன்றியமையாதவை..
அதனால் தான் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொன்னார்கள்..
வெளியில் சாப்பிட்டு விட்டு வந்ததற்காக அடுத்த வீட்டு அண்ணன்கள் அடி வாங்கியது 1960 களின் நிலைமை...
இக்காலத்தில் ஒவ்வொரு விடுமுறை நாளிலும் ஒவ்வொரு உணவகத்தில் சாப்பிடுவது என்பது நாகரிகம் ஆகிவிட்டது ...
உடனுக்குடன் பதிவு செய்து வரவழைத்துச்
சாப்பிடும் வழக்கம் மக்கள் மத்தியில் கௌரவமாகி வருகின்றது.,
இந்தப் பழக்கம் வருத்தத்துக்கு உரியதாகும்...
இவையே உணவு - இவற்றையே சாப்பிட வேண்டும் - என, முன்பதிவு செய்யும்படியாக விளம்பரங்கள் வாயிலாகத் தூண்டுவதும் உளவியல் ரீதியான காரணம்.
விளம்பரங்கள் ஒரு சில வழிகளில் மட்டுமே நன்மை தருகின்றன..
நமது விருப்பத்தை முடிவு செய்வதற்கு நிறுவனங்கள் யார்?..
நமது முன்னோர்கள் அக்காலத்தில் யாத்திரை, வெளியூர் என்று சென்றபோது சமைத்து எடுத்துச் சென்றது எல்லாம் கேலிக் கூத்து என்றாகி விட்டது...
அப்போது உணவு பாதுகாப்பு இருந்தது.. ஆரோக்கியம் இருந்தது..
கீழான அவலம் தேடி வரும் முன் -
நமது வீட்டில் நாமே
அக்கறையுடன் சமைத்து,
அன்புடன் பரிமாறி
ஆதரவுடன் சாப்பிட்டு அடுத்த தலைமுறையினருக்கு வாழ்ந்த காட்டி மகிழ்ச்சி கொள்வோம்..
யாரோ சமைக்க யாரோ முன் பதிவு செய்ய - உனக்கென்ன பிரச்னை ??..
என்றால் -
ஏதோ ஒரு ஆதங்கம் தான்!..
ஓம் சிவாய நம
**