நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 09, 2025

விருட்சங்கள்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 25
 ஞாயிற்றுக்கிழமை

மரங்கள் இறைவனின் வரங்கள்..

மரங்கள்
பறவைகளுக்கு உணவு அளிப்பதுடன அவற்றுக்கு உறைவிடமாகவும் இருப்பவை..

ஆதியில் மனிதனுக்கும் உணவு அளித்து அவனுக்கு அடைக்கலமாகவும் உறைவிடமாகவும் இருநதவை மரங்களே...

அந்த  நன்றியை இன்றும் நினைவில் வைத்து மரியாதை கொண்டிருப்பது நமது ஹிந்து சமயம் மட்டுமே.. 

ஹிந்து சமயத்தில் மரங்களும் வணங்கத் தக்கவையே. 


நல்ல ஹிந்து குடும்பத்திற்கு அரசு, அத்தி, ஆல், மா, மருதம், வில்வம், வேம்பு, வன்னி, கொன்றை, நெல்லி, நாவல் - மரங்கள் எல்லாம் தெய்வ வடிவங்கள்...  

அரச மரத்தை வலம் செய்து பிரம்மா, மகாவிஷ்ணு, சிவ பெருமான் ஆகிய மூவரையும் வலம் செய்ததாக பேருவகை
கொள்வது ஹிந்து சமுதாயமே..

ஹிந்துக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை மரங்கள்.. அவற்றுக்கு  காரணமின்றி ஒரு நாளும் துன்பம் செய்யப்பட மாட்டாது..

இந்த பாரத மண்ணில் கல்வி தழைத்ததே மரங்களின் நிழலில் தான்..

அரச மரத்தடியில் இருந்தே ஞானமும் கல்வியும் பிறந்தன....

திறந்து கிடந்த இந்நாட்டுக்குள் வணிகம் என்ற போர்வையுடன் நுழைந்த கொள்ளையர்களால் இவை எல்லாம் இழிவு செய்யப்பட்டன...
 அழிக்கப்பட்டன..

உனர்வுகள் எல்லாம் மழுங்கடிக்கப்பட்டன.. எல்லாம் மறக்கடிக்கப்பட்டன..

கருவுறுவதில் பெண்களுக்கு சிக்கல் இருப்பின் அவர்களை அரச மரத்தைச் சுற்றி வரச் சொல்வது வழக்கம்..

காரணம்
மிகுதியான உயிர்வளியினை
(ஆக்ஸிஜன்) வெளியிடுவது அரச மரம் தான்..

நினைவுப் பேழையினுள் இருப்பவைகளுடன் இணையத் தகவல் திரட்டு.. 
இன்றைய பதிவு - நன்றி விக்கி..


அரசு :
தலவிருட்சம் -
திருவாவடுதுறை
அரச மரத்தின் நுண்ணலைகள்  கருப்பைக் கோளாறுகளைப் போக்கும் தன்மையுடையது என்கின்றது நவீன விஞ்ஞானம்..

அரச மரம்  வெளியிடுகின்ற காற்றில், பெண்களின் மாதச் சுழற்சி சீராகின்றது..

மேலும் கர்ப்பப்பை சம்பந்தமான சுரப்பிகள் நலமடைகின்றன - என்கின்றனர் அறிவியலாளர்கள்..

இதைப்போலவே மரங்கள் அனைத்தும் மருத்துவ குணங்களை உடையவை என்றாலும் பதிவில் சொல்லப்பட்ட விருட்சங்களின் நலங்கள் மட்டும் ஓரிரு வரிகளில்..

ஆல் :
தலவிருட்சம் -
திரு ஆலங்காடு
ஆறாத புண்ணுக்கு ஆலம் விழுது அருமருந்து.. தோலில் எரிச்சல், ரத்தக்கசிவு,  நீரிழிவு, புண், சிரங்கு இவற்றுக்கு ஆலம் பட்டைக் கஷாயம் சிறந்தது.. சித்த மருத்துவரின் கண்காணிப்பு அவசியம்..

அத்தி :
தலவிருட்சம் -
திரு ஒற்றியூர்
அடிக்கடி சோர்வு அடைவோருக்கு அருமருந்து..
சித்த மருத்துவரின் ஆலோசனையின்படி அத்தி மரத்தின் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் உடல் நலம் மேம்படும்.. அத்திப் பழங்கள் இரத்த விருத்திக்கு சிறந்தவை..


மா :
தலவிருட்சம் -
திருக்கச்சி ஏகம்பம்
வேம்பினைப் போலவே அருங்குணங்கள் பலவற்றைக் கொண்டதாகும்.. 

மாந்தளிர்கள் இரத்த சர்க்கரையைக் குறைக்க வல்லவை.. சித்த மருத்துவர் ஆலோசனையின்படி மா மரத்தின் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் நீரிழிவு  நீங்கும்..

மருதம் :
தலவிருட்சம் -
திரு இடைமருதூர்
மருத மரப் பட்டையின் கஷாயம்
ரத்த நாளங்களின் இறுக்கத்தை தளர்வாக்குகின்றது.. இதனால் ரத்த ஓட்டம் எளிதாகி இதய நலம்  மேம்படுகின்றது.. சித்த மருத்துவரின் கண்காணிப்பு அவசியம்..

வில்வம் :
தலவிருட்சம் -
திரு ஐயாறு
வில்வ இலையில் வைட்டமின் C  நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது... வில்வ மரத்தின் பட்டை வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறு முதலியவற்றை உடனே நீக்கும்.. சித்த மருத்துவரின் கண்காணிப்பு அவசியம்..


வேம்பு :
தலவிருட்சம் -
புள்ளிருக்கு வேளூர்
இம்மண்ணின் மகத்தான மரம் இது..  சிறந்த கிருமி நாசினி.. இந்த மரத்தை நம்மிடம் காட்டியே வெளி நாட்டு நிறுவனங்கள் பொருள் ஈட்டுகின்றன... அந்தக் காலத்தில் வீட்டில் மகப்பேறு நிகழ்ந்தால் வீடெங்கும் கிருமி நாசினியான வேப்பிலைக் கொத்துகளைக் கட்டி வைத்திருப்பார்கள்..

அம்மை நோய்க்கு வேப்பிலை தான் அருமருந்து.. பித்தளை அண்டாவில் நீர் நிறைத்து அதில் வேப்பிலை மஞ்சள் தூள் போட்டு வெயிலில் சில மணி நேரம் வைத்திருந்து உச்சிப் பொழுதில் குளித்தால் அதுவே மிகச் சிறந்த கிருமி நாசினி... 

இன்றைக்கு இரசாயன திரவங்கள் தான்  குழந்தைக்குப் பாதுகாப்பு என்கின்றார்கள்.. எல்லாம் கலி காலக் கொடுமை..

வன்னி :
தலவிருட்சம் - தஞ்சை
வன்னி இலைகளை  நீர் விட்டு அரைத்து ஆறாத புண்களின்
மீது பூசினால்  விரைவில் குணமாகின்றன.. பொதுவாக சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு சிறந்த மருந்து.  பட்டையைப் பொடி செய்து கஷாயம் வைத்து அருந்தினால் அஜீரண கோளாறுகள் நீங்குகின்றன..

வன்னி மரப் பட்டையின் கஷாயம் கொண்டு வாய் கொப்பளித்தால்  பல்வலி, ஈறு வீக்கம் குணமாகும். சித்த மருத்துவரின் ஆலோசனை அவசியம்..
 

கொன்றை
:
தலவிருட்சம் - திருவெண்காடு
கொன்றை மரத்தின் பட்டைகளை
கஷயாமாக்கிக் குடித்தால்  நீரிழிவு மற்றும் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும்.  இலையை  அரைத்துச் சாறெடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கி படர்தாமரை உள்ள இடத்தில் பூசினால் அது சில நாட்களில் மறைந்து விடும்... சித்த மருத்துவரின் கண்காணிப்பு அவசியம்..


நெல்லி
:
தலவிருட்சம் - திருநெல்லிக்கா
சித்தர்கள் கொண்டாடுகின்ற
காயகல்ப மருந்துகளில் இதுவும் ஒன்று.. 

நெல்லி மரக் கிளையின் துண்டுகள் சிலவற்றை 
உப்பு நீர் கிணற்றில் போட்டு வைக்க மூன்று நாட்களில்
உப்பின் கடுமை குறைந்து விடும்.
காயகல்ப மருந்துகளுக்கு சித்த மருத்துவரை அணுகவும்.

நாவல் :
தலவிருட்சம் - திரு ஆனைக்கா
நாவல் மரப் பட்டைகளை இடித்து சலித்து கஷாயம் வைத்துக் குடிக்க நீரிழிவு கட்டுக்குள் வரும்.. 
சித்த மருத்துவரின் கண்காணிப்பு அவசியம்..
மாதாந்திர சுழற்சி காலம்  சீராகும்.. வேறு பல நன்மைகளையும் கொண்டது நாவல்... 

வேத காலத்தில் இந்த புண்ணிய தேசத்திற்கு 
ஜம்பு த்வீபம் என்பது பெயர்.. 

நாவலந்தீவு, நாவலந்தண் பொழில் -  என்றெல்லாம் தமிழில் குறிப்புகள் கிடைத்திருக்கின்றன..

தேவாரத்தில் இருந்து இதோ ஒரு திருப்பாடல்..

நாவலம் பெருந்
  தீவினில் வாழ்பவர்
மேவி வந்து
  வணங்கி வினையொடு
பாவ மாயின
  பற்றறு வித்திடுந்
தேவர் போல்திரு
  நாகேச் சரவரே..  5/52/2 
-: திருநாவுக்கரசர் :-

ஓம் சக்தி ஓம்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

சனி, மார்ச் 08, 2025

கிருஷ்ணா

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 24
சனிக்கிழமை



காணொளி பகிர்வு
 நன்றி
ஸ்ரீ கோரக்க சித்தர் 
வழிபாட்டுக்குழு

ஓம் ஹரி ஓம்
ஓம்  சிவாய நம ஓம்
**

வெள்ளி, மார்ச் 07, 2025

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 23
வெள்ளிக்கிழமை


 ஸ்ரீ பெருவுடையார்
ஸ்ரீ பிரஹந்நாயகி

சிவராத்திரி தரிசனம்

தஞ்சை திருப்புகழ்


தந்தன தானன ... தனதான

அஞ்சன வேல்விழி ... மடமாதர்
அங்கவர் மாயையி ... லலைவேனோ

விஞ்சுறு மாவுன ... தடிசேர
விம்பம தாயரு ... ளருளாயோ

நஞ்சமு தாவுணு ... மரனார்தம்
நன்கும ராவுமை ... யருள்பாலா

தஞ்சென வாமடி ... யவர்வாழத்
தஞ்சையில் மேவிய ... பெருமாளே.
-: அருணகிரிநாதர் :-

பதிவில் 
தஞ்சை முருகப்பெருமானின்
திருக்கோலங்கள்


மை பூசிய வேலைப் போல விளங்குகின்ற கண்களை உடைய அழகிய
பெண்களிடத்தில்  மயக்கம் கொண்டு அவர் பின்னே அலைவேனோ?

அதனின்று நான்
 விடுபட்டு மிகுந்த புகழுடன்  
விளங்குகின்ற உனது திருவடிகளைப்
போற்றுவதற்கு -

  உனது திருவருளை எனக்கு வழங்கக் கூடாதோ?.

நஞ்சினை அமுதாக உட்கொண்ட சிவபெருமானுடைய
திருமகனே உமாதேவி பெற்றருளிய பாலனே..

நீயே சரணம் - எனக் கொண்ட அடியார்கள் வாழ்வதற்கென
தஞ்சையில் வீற்றிருக்கும் பெருமாளே...


 முருகா முருகா
முருகா முருகா

ஓம் சிவாய நம ஓம்
**

வியாழன், மார்ச் 06, 2025

விரதங்கள்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 22
வியாழக்கிழமை


கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.. 269

என்கின்றார் ஐயன் திருவள்ளுவர்..

நோற்றல் என்பது குறிக்கோளில் உறுதியாக நிற்றல்.. விரதம் எனினும் இதுவே..

நோற்பது நோன்பு (அதனால், நம்மைக்) காப்பது விரதம்...

என்பது தமிழ் மூதாட்டி ஔவையார் தம் திருவாக்கு.. 


ஔவையார் மேலும் சில செய்திகளை 
அறிவுறுத்துகின்றார்..

மீதூண் விரும்பேல்..
வளவன் ஆயினும் அளவறிந்து உண்.. 

பஞ்சமில்லாத சோழ நாட்டுக்காரன் எனினும். தேவைக்கு மேல் உண்ண வேண்டாம் .. - என்று!..

அதையெல்லாம் உய்த்து உணராமல் போனதனாலேயே  இங்கு நோய்கள் மலிந்து விட்டன.

சரி.. அதற்கென்ன டா இப்போது?...

அவற்றை ஓரளவுக்காவது சரி செய்து கொள்ள வேண்டாமா?..

என்ன செய்வது!?..

விரதங்களை ஏற்பதும் அவற்றை நோற்பதும் தான்..

ஏத்துக்கலாம் தான்..
சாப்பாட்டு கடைக் காரங்க கஷ்டப்பட்டுடுவாங்களே...

அட!?..

விரதம் இருப்பதன் பயன்களை அறிவியல் ஆய்வுகளின் மூலம் கண்டுணர்ந்து உலகிற்கு சொல்லியதற்காக ஜப்பானை சேர்ந்த  உயிரியலார் நோபல் பரிசு பெற்றார்..


யோஷினோரி ஓசுமி Yoshinori Ohsumi..
 தன்னியக்க இயலில் இவர்  முக்கிய பங்காற்றினார்..

இவருக்கு 2016 ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது..

(Japanese cell biologist Yoshinori Ohsumi won the Nobel Prize in Medicine for his research on how cells recycle and renew their content..)

இதன்படி -
விரதம் இருக்கும் நேரத்தில் நமது செல்களே நமது உடலை சுத்தம் செய்து கொள்கின்றன.. பலவீனமான,  செல்களும்
புற்றுநோய் செல்களும்
 அழிக்கப்படுகின்றன.. நோய்கள் பலவற்றை உருவாக்குகின்ற காரணிகள் அழிகின்றன..

தொடர்ச்சியாக பன்னிரண்டு மணி நேரத்திற்கு எதுவும் உண்ணாமல்  விரதம்  இருக்கின்ற போது  இந்த நல்ல விஷயங்கள் நிகழ்கின்றன..

நமது விரத நேரம் படிப்படியாக அதிகரிக்கும் போது நன்மைகள் பலவும் நடக்கின்றன..


நாம் எப்போதும் எதையாவது,    தின்று கொண்டே இருந்தால் அந்த உணவை  செரிப்பதிலேயே அதிக சக்தி செலவாகி விடும் என்பதே மையப்புள்ளி.

சாப்பிடாமல் விரதம் இருக்கும் போது, நமது வயிற்றுக்கு ஓய்வு கிடைக்கின்றது.. அப்போது  நமது உடல் அதன் சக்தியைப் பயன்படுத்தி தன்னைத் தானே சுத்தம் செய்து கொள்கின்றது.. 

லைசோசோம்  - இது, ரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களையும், தீங்கு விளைவிக்கும் நோய்க் கிருமிகளையும் செரித்து விடுகின்றது.. 

( Lysosome is an organelle in animal cells that digests waste products and harmful pathogens..)
 நன்றி விக்கி

நோய் வாய்ப்பட்டாலும்  எதையாவது தின்று தீர்க்கின்ற மனிதன் -  உண்ணாமல் இருந்து தன்னைத் தானே மேம்படுத்திக் கொள்வதற்கும்  வழியையும் வாய்ப்பையும் இயற்கையே  கொடுத்துள்ளது..

மாதந்தோறும்
அமாவாசை, ஏகாதசி, பிரதோஷம், நிறை நிலா, கார்த்திகை, விசாகம், உத்திரம் - இவை தவிர்த்து வருடாந்திர விரதங்கள்  என, எத்தனை எத்தனை விரத நாட்கள் நமக்கு!..

எடுத்த எடுப்பில் பன்னிரண்டு மணி நேரத்திற்கு விரதம் என்பது சிரமம் -  என்று உணர்ந்தால் மிக மிக எளிய உணவினை ஒரு பொழுதாக உட்கொண்டு நாளடைவில் பழக்கப் படுத்திக் கொள்ளலாம்.. பன்னிரண்டு வயதிற்கு மேல் என்றும் பதினெட்டு வயதிற்கு மேல் என்றும் இப்படியான  விரதங்களுக்கு  சொல்கின்றனர்.. 

உடல் நலம் உடையவர்கள் எதிர் காலத்தை உத்தேசித்து ஒரு வேளை உணவைக் குறைத்துக் கொள்வதால் பாதகம் இல்லை.. 

செரிப்பதற்கு எளிதான உணவுகள் என்றாலும் மிதமான அளவு தான் ஏற்றது..


ஒரு வேளை உண்பவன் யோகி 
இரண்டு வேளை உண்பவன் போகி - அனுபவிப்பவன்.
மூன்று வேளை உண்பவன் ரோகி - நோயாளன்.
நான்கு வேளை உண்பவன் துரோகி!..

என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்..

பல தரப்பட்ட பணிகளில் இருப்போர், மாதச் சுழற்சிக்குள் இருக்கின்ற பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பயணம் செய்வோர்,
நோய் வாய்ப்பட்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள், முதியவர்கள் ஆகியோர் விரதம் அனுசரிக்க வேண்டும் என்பதில் கட்டாயம் இல்லை.. எனவே விரதம் அனுசரிப்பது  அவரவர் சூழ்நிலைகளைப் பொறுத்தது.. 

சூழ்நிலைகளைப் பொறுத்து - 
வாரத்தில் ஒருநாள் அல்லது பட்சத்தில் ஒருநாள் அல்லது
மாதத்தில் ஒரு நாள் விரதம் இருக்கலாம்.

மிதமாக உணவருந்தி விரதம் இருந்து  நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்..

நமது நலம் 
நமது கையில்..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

புதன், மார்ச் 05, 2025

பச்சைப் பயறு 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 21
 புதன்கிழமை

பச்சைப் பயறு


பாசிப்பயறு - சிறு பயறு என்றும்
அழைக்கப்படுகிறது...

நமது  பாரத தேசத்தைத் தாயகமாகக் கொண்டது. 

இக்கு (கரும்பு) அவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய் - என்று திருப்புகழில்
 விநாயகப் பெருமானின் திரு முன்னர் பச்சைப் பயறையும் அருணகிரிநாதர் சமர்ப்பிக்கின்றார்..
 
பயற்றூர் என திருத்தலம் ஒன்று ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே 
தமிழகத்தில் இருந்துள்ளது.. அவ்வூரின் ஈசனை அப்பர் ஸ்வாமிகள் தரிசித்துப் பதிகம் பாடியிருக்கின்றார்.. இன்றைக்கு அவ்வூர் பயத்தங்குடி என்று வழங்கப்படுகின்றது..

தஞ்சை மாவட்டத்தின் சிறப்புகளில் பச்சைப் பயறும் ஒன்று..

நன்செய் மானாவாரி நிலப்பரப்பில் தழைத்து வளரக் கூடியது..
 
பெரும்பாலும் இன்றைய
பயறு வகைகள் - உறுதியற்ற வளர்ச்சிப் பண்புகளுடன்  எளிதில் நோய் வாய்ப்பட்டு விடுகின்றன.. 

எனவே இவற்றுக்கு ரசாயன வைத்தியம் சற்று கூடுதல்..

விதைத்த 45 நாட்களில் மேல் உரம் இடப் படுகின்றது..



பயிர் வளர்ந்து 60 - 65 நாட்களில் பூத்து காய் பிடித்து முதிர்ந்து  காணப்படும்.

முதல் அறுவடைக்குப் பின்
 அடுத்த 20 - 25 நாட்களில் இரண்டாம் முறை முதிர்ந்த காய்கள் காணப்படும். 

எனவே 100 நாட்களில் இரண்டு முறை அறுவடை செய்ய முடியும்.

வேளாண் செய்திகள் மற்றும் படங்கள் நன்றி : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக இணையம்

பச்சைப் பயறு கல்லீரலில் கொழுப்பு சேர்வதைக் குறைக்கின்றது, நரம்பு மண்டலத்தின் செயல்பாடு மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றது, உடலில் கொழுப்பு எடையைக் குறைக்க உதவுகின்றது. 

இதய நோய் அபாயத்தைத் தடுக்கின்றது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.. உடலுக்குப் பாதுகாப்பு கிடைக்கின்றது..

இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இது உடலுக்கு மிகுந்த வலுவை சேர்க்கிறது..

பச்சைப் பயறில் புரதச் சத்து, நார்ச் சத்து , ஆகியனவும்  வைட்டமின் A , வைட்டமின் C ஆகியவையும் பொதிந்துள்ளன... பொட்டசியம்,  கால்சியம், மாங்கனீஸ் போன்ற கனிம சத்துக்களும் அதிக அளவில்  காணப்படுகின்றன. 

நுண்ணூட்டச் சத்து விவரங்கள் : நன்றி விக்கி..


நவக்ரகங்களில் புதனுக்கு உரியது பச்சைப் பயறு.. புதன் கிழமைகளில் 
பச்சைப் பயறைத் தானமளித்தல் நல்லது.. பல நன்மைகள் நம்மைத் தேடி வரும்..

முழு பச்சைப் பயறு மற்றும் உடைத்த பருப்பு கொண்டு 
சத்து மாவு, தோசை,  குழம்பு, கடையல், 
பாயசம், இனிப்பு சுண்டல், கார சுண்டல், இனிப்பு உருண்டை,  - என, அனைவரும் கை வரிசையைக் காட்டலாம்..

எனவே இதன் (பச்சைப் பயிறு)  சாகுபடியில் ரசாயனங்கள் சற்று கூடுதல்..

இப்படியிருக்க இதற்கு ஏன் இத்தனை கட்டுமானம்?..

அடுத்த பதிவில் சொல்கின்றேன்!....

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

செவ்வாய், மார்ச் 04, 2025

வேம்பு

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 20
செவ்வாய்க்கிழமை


ஹிந்து மக்களின் வழிபாட்டுடனும் பழக்க வழக்கங்களுடனும் பின்னிப் பிணைந்திருப்பது வேம்பு..

வேம்பு - பாரதத்தின்  மருத்துவ நுண்ணறிவு மற்றும் பண்பாட்டின் அடையாளமாகும்..


சக்தியின் வடிவமாக இன்றும் கிராமப் புறங்களில் வேப்பமரம் வழிபடப் படுகிறது...

அரச மரத்தின் அருகில்
வேப்ப மரம் தழைத்து விட்டால்
சிவசக்தியாகப் பாவித்து திருக்கல்யாண வைபவம் நடத்தி மகிழ்வது தொன்று தொட்டு வருகின்ற வழக்கமாகும்..

இயற்கையின் வரப் பிரசாதமான வேம்பின்
 அனைத்து பாகங்களும் பயன் உடையவை என்பது சித்த மருத்துவம்..
 
இதனாலேயே மனித குலத்தின் மருந்தகம் என்று வேப்ப மரம் சிறப்பிக்கப்படுகின்றது..

நம்மிடையே தற்போது நிலவும் நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே - வேம்பு என ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் பெயர் சூட்டுவதும்  வழக்கமாக இருந்தது...

இப்போது கஷ்க்
முஷ்க் என்பதே பெயர் வடிவம்..

இன்றும் கிராமப் புறங்களில் வளைகாப்பு வைபவம் எனில் கர்ப்பிணிக்கு முதன் முதலில் அணிவிக்கப்படுவது வேப்பிலை இணுக்குகளால் ஆன வளையலே!..

மகப்பேறு ஆன பிறகும் ஒரு வருட காலத்திற்கு  தாயும் சேயுமாக வெளியில் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் வேப்பிலை இணுக்குகளுடன் தான் அனுப்பி வைப்பர்.. 

 துஷ்ட தேவதைகளிடமிருந்து வேப்பிலை பாதுகாப்பு அளிப்பதாக அசைக்க முடியாத நம்பிக்கை..

வீட்டில் எவருக்காவது காய்ச்சல்,  கடும் பிணி என்றால் தலைவாசலில் கட்டி வைப்பது வேப்பிலைக் கொத்துகளையே...

நமது பாரம்பரியமான வேம்பு  மன நல மற்றும் பலவித 
உடல் நலப் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்திருக்கின்றது..

இன்றைக்கும் வேம்பின் நற்குணங்களோடு அழகிகளுக்கான குளியல் சோப்பு, கழிவு நீரின் கிருமிகளிடமிருந்து குழந்தைகள் தப்பிப்பதற்காக வேம்பின்  மருத்துவ குணங்களோடு கூடிய சோப்பு என்றெல்லாம் விளம்பரங்கள் நமது வீட்டுக்குள் வந்து நமது பணத்தில் ஆடிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருக்கின்றனவே..

வீட்டில் வேம்பு இருக்க வியாதிக்கு வழி இல்லை என்பார்கள்..

வேப்ப மர நிழலில் அமர்ந்திருந்தால் மனம் அமைதி பெறுகின்றது...
அமைதியுறும் நெஞ்சில் அருள் நிறைகின்றது.. 

வேம்பின் நிழலே கோயில் என்று சொல்லப்பட்டதன் மகத்துவம் இதுதான்.. 

வைத்தீஸ்வரன் கோயில் எனப்படும் புள்ளிருக்கு வேளூரில் வேம்பு தான் தல விருட்சம்..

வேம்பின் இலை, காய், வேர், சாறு என அனைத்தும் கிருமி நாசினி ஆனவை.. கிருமிகளை அழிக்கின்ற  தன்மை கொண்டவை..

வேப்பம் பூவை மென்று தின்பதால்  குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். 

வேப்ப இலைகளை மஞ்சளுடன்  அரைத்துத் தடவுவதால் காயங்கள் விரைவில் ஆறுகின்றன. 

வேப்ப எண்ணெயினால் தோல் அரிப்பு நீங்கும்.. முகப்பரு, அரிப்பு, சொரி,  மற்றும் பிற தோல் நோய்களை வேம்பு  தடுக்கின்றது..


வேப்பம் பூவை வெயிலில் காயவைத்து பொடியாக்கி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் , வாயுத் தொல்லை, புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் நீங்கும் ..
வேப்பம் பூ பொடியினால்
பித்தமும் அதனால் ஏற்படுகின்ற வாந்தியும் மட்டுப்படுகின்றது..

கொதி நீரில் வேப்பம் பூவை போட்டு ஆவி பிடிப்பதன் மூலம் தலை வலி, காது வலி குறையும். 

வேப்பிலைச்சாறு  இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. வேப்பம் பூ ரத்தத்தை சுத்திகரித்து  உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்றது. 

வேம்பு கல்லீரலுக்கு  பாதுகாப்பாக இருக்கின்றது. 

வேப்பம் பூ ரசத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் புழுக்களின் தொல்லை நீங்கும். 

பற்களின் கிருமிகளை அழிக்கவும், வாய் துர்நாற்றத்தை போக்கவும் வேப்பமரப் பட்டையின் பொடி சிறந்தது. 


வேப்ப மரப் பட்டையின் பொடி என்பதைக் கவனிக்கவும்.. வேப்பங்குச்சி எனப்படும் தளிர் அல்ல..

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்று சொல்லி இருக்கின்றார்களே!.. - என்றால் அது வேல மரம்.. வேப்ப மரம் அல்ல..


வேப்ப எண்ணெயைத் தலையில் தடவிக் கொள்வதால் பொடுகு நீங்கும்..
முடி உதிர்தல் நிற்கும்..

புற்றுநோயின்
 செல்களை அழிப்பதிலும்   வேம்பு மகத்தானது  என்கின்றது பாரதத்தின் மருத்துவம்..

வேப்பிலை, வேப்பம் பூ ரசம், வேப்பெண்ணெய் இவற்றைத் தவிர்த்து ஏனைய கை வைத்திய முறைகளுக்கு தக்கதொரு சித்த மருத்துவரின் ஆலோசனைகள் அவசியம்..
அவசியம்!...

வேம்பினை வணங்கினாலே
மாரியம்மனை வணங்கியதாக அர்த்தம்..


ஊருக்கெல்லாம் கை கொடுக்கும்
உத்தமியின் வேப்பிலையாம்
பேருக்கெல்லாம் நலம் கொடுக்கும்
பெரியவளின் வேப்பிலையாம்

மண்ணில் நல்ல வேப்பிலையாம்
மாரியம்மன் மருத்துவமாம்
கண்ணில் நல்ல வேப்பிலையாம்
காளியம்மன் மருத்துவமாம்

ஈரெட்டுப் பேறு தரும் 
ஈஸ்வரியின் அருமருந்தாம்
வாளெடுத்து நடந்து வரும்
நாயகியின் திருமருந்தாம்..

வேப்பிலையின் உள்ளிருக்கும் 
வித்தை தனை ஆரறிவார்
வேப்பிலையின் உள்ளிருக்கும் 
வித்தகியே தான் அறிவாள்

ஈங்கிதனைச் சொல்வதற்கு
எவராலே ஆகுமம்மா
ஈஸ்வரனும் ஈஸ்வரியும் 
தந்தாலே தானறிவார்...

ஆயா மனம் இரங்கு என்
ஆத்தா மனம் இரங்கு
வேண்டுதலில் மனம் இரங்கு
வேப்பிலையில் நீ இறங்கு..
**

ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

திங்கள், மார்ச் 03, 2025

கடலை உருண்டை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 19
திங்கட்கிழமை


வழக்கத்தில் இருந்து மறைந்து. கொண்டிருக்கின்ற அருமையான தின்பண்டம் - கடலை உருண்டை...

இன்று நாம் -  நமது கைகளாலேயே
நமது வீட்டில்
எளிமையான வேர்க்கடலை மாவு உருண்டை செய்வது எப்படி என்று இந்தப் பதிவின் வழி பார்க்கலாம்..

வறுத்த வேர்க்கடலை அரை கிலோ (தோலை நீக்கி விடவும்)
 உருண்டை வெல்லம் கால் கிலோ  
ஏலக்காய் பொடி சிறிது

பளிச் என்றிருக்கும் வெல்லத்தை விட பழுப்பு நிற உருண்டை வெல்லம் நல்லது..

உருண்டை வெல்லத்தை உடைத்து சமச்சீராக தூளாக்கிக் கொள்ளவும்..

வறுத்த வேர்க்கடலையை 
சிற்றரவையில் இட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்தெடுத்த மாவை சுத்தமான தாம்பாளத்தில் கொட்டி வெல்லத் தூளையும் சேர்த்து -
இத்துடன்  நாலு தேக்கரண்டி பசு நெய் விட்டுக் கிளறி உருண்டைகளாக உருட்டி சுத்தமான பாத்திரத்தில் வைத்திருந்து  பிள்ளைகளுக்குக்  கொடுக்கவும்..

அதெல்லாம் முடியாது. இப்போதே தின்றாக வேண்டும் என்று ஆவல் பிறந்தால் அரை மூடி தேங்காயைத் துருவி மாவில் போட்டுக் கிளறி தின்று விடலாம்..

அமிர்தத்திற்கு அமிர்தம்!..
ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியம்!..

அரைக் கிலோ வேர்க் கடலைக்கு இருபது  உருண்டைகள் கிடைக்கும்..

வேர்க் கடலைக்குப் பதிலாக வரகரிசியை மிதமான சூட்டில் சிவக்க வறுத்து அரைத்து மாவாக்கியும் இதேபோல
செய்யலாம்..

தினை மாவிலும் செய்யலாம்..

நமது நலம் 
நமது கையில்..
ஃஃ

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

ஞாயிறு, மார்ச் 02, 2025

கையருகே..

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 20 
ஞாயிற்றுக்கிழமை


பொதுவாக
மூலிகைகள் என்றாலே காடுகளிலும் ஆள் நடமாட்டம் இல்லாத வனாந்தரத்திலும் தான் கிடைப்பதாக நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

உண்மையில் அவை நம்மைச் சுற்றி தழைத்திருப்பவை... நமது அன்றாட  உணவில் கலந்திருக்கின்ற பலவும் மூலிகைப் பொருட்களே -  மிளகாயைத் தவிர்த்து..

தக்கபடி எடுத்துரைக்க ஆள் இன்றி தடுமாறிக் கிடக்கின்றனர் பலரும்..

இதைப் பற்றி வேறொரு பதிவில் பேசுவோம்..

- என்று முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன்..

இதோ - கையருகே!.. 


சீரகம் :
நாம் உட்கொண்ட உணவு நல்ல முறையில் செரிப்பதற்கு துணையாகின்றது..

சீரகத்தினால் வாயுத் தொல்லை நீங்குகின்றது..

சீரகத்தைப் பொடி செய்து பழுப்புச் சர்க்கரையுடன்  எடுத்துக் கொள்ளும் போது, தேகத்தின்  தசைகள் வலிமை ஆகின்றன.. 

கேரளத்தின் பாரம்பரிய சீரகக் குடிநீர் பற்றி நாம் அறிந்ததே..

சோம்பு :
கடினமான புலால் உணவுகள்
சீக்கிரமாக ஜீரணமாவதற்கு இது துணை புரிகின்றது.. அடுத்த வேளைக்கான பசியைத் தூண்டி விடும்..

புலால் உணவு உண்பவர்கள் உணவுக்குப் பின் சிறிது சோம்பினை வாயில் இட்டுக் கொள்வர்.. ஏனெனில் இது நறுமணம் உடையது.. பார்ப்பதற்கு இளம் சீரகத்தைப் போலவே இருப்பது சோம்பு..

சோம்பினை சிறிதளவு கொதிக்க வைத்து கஷாயமாகக்  குடித்தால்  வறட்டு இருமல் சரியாகும்..

கடுகு :
இது எண்ணெயில் பொரியும்  போது ஏற்படுகின்ற வாசம் பசியைத் தூண்டுகின்றது.. அத்துடன் செரிமானத்தையும் சீராக்குகின்றது..

தசை வலி, வீக்கம், வாத நோய், மற்றும் மூட்டு வலியைப் போக்குகின்றது..

வெந்தயம்
நீரிழிவில் இருந்து மீள்வதற்கு வெந்தயம்
மிகச்சிறந்த ஒன்று.. யார் சாட்சி எனில் நான்.. நானே சாட்சி..

இரத்த அணுக்களின் உற்பத்தியை வெந்தயம் தூண்டுகின்றது... கல்லீரல் செயல்பாடுகளை மீட்டெடுக்கின்றது.. இரத்த சோகை உள்ளவர்களை  அதிலிருந்து விடுவிக்கின்றது .. அஜீரணக் கோளாறுகளைப் போக்குகின்றது.

மிளகு :
இதைத் தேடியே அந்நியர் இந்நாட்டிற்குள் புகுந்தனர்..
புலால் வகை சமையலில்  அதிகம் பயன்படுத்தப்படுகின்ற ஒன்றாகும்.. காரச் சுவையுடைய இதன் பயன்கள் மிகவும் அதிகம்..  பழந்தமிழ் இலக்கியங்களில் மிளகினைப் பற்றிய குறிப்புகள் உள்ளன..


உலர்ந்த கொத்தமல்லி :
கையளவு கொத்தமல்லியை 
இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு 150 மிலி யாக காய்ச்சி வடிகட்டி - பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட  நா வறட்சி, பித்த மயக்கம்,  வயிற்றுப் போக்கு ஆகியவை தீரும்.. 

இன்னும் பல மருத்துவ குணங்களை உடையதாய் திகழ்கின்றது கொத்தமல்லி... 

இதனை வறட்டு மிளகாயுடன் சேர்த்து அரைத்துப் பயன் படுத்துகின்ற நிலைக்கு ஆளாகி விட்டோம்..


பட்டை (இலவங்கம்) :
புலால் வகை சமையலில்  தவறாமல் இடம் பெறுவது..

உணவின் நறுமணம் மற்றும் ருசிக்காகவும், மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது..

மிருகக் கொழுப்பினை உட்கொண்டால் - உட்கொண்ட கொழுப்பு வயிற்றில் விரைவில் செரிப்பதற்கு இதுவே காரணம்.. ரத்த ஓட்டத்தை சீராக்கி தூய்மைப் படுத்துகின்றது.. நீரிழிவு குறைபாட்டில் உடல் நலத்திற்கு பெரும்பங்கினைச் செய்கின்றது..

கிராம்பு :
புலால் வகை சமையலில்  இதுவும் தனித்துவமான பங்கு வகிக்கின்றது... கிராம்பினால் பற்பல நன்மைகள்.. 

புலால் உணவுகளின் செரிமானத்தை மேம்படுத்தி வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றது.. நோய் எதிர்ப்புப் பண்புகளை மேம்படுத்தி நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது..


ஏலக்காய் :
நம் நாட்டிற்குள் அந்நியர் புகுந்து தேடி - வாரிச் சுருட்டியவற்றுள் ஏலக்காயும் ஒன்று..

சமையலுக்கான இயற்கை நறுமணமூட்டிகளுள் மிகச் சிறந்தது ..

வாய் நாற்றத்தைப் போக்குகின்றது.. இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது..

மூச்சுக் குழாய் அழற்சியை சமன் செய்கின்றது..

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவை சமன் செய்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகின்றது..

புற்று நோய்த் திசுக்களின்

வளர்ச்சியைக் குறைக்கின்றது..

ஜாதிக்காய் :
புலால் சமையலில் கடினமான இறைச்சி (பெருஞ்சதை) வகைகள் வெந்து பக்குவம் ஆவதில் ஜாதிக்காயின் பங்கு  உள்ளது..

பொதுவாக நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை ஜாதிக்காய் பேணுகின்றது. 

ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும் போது அருந்தினால் மன அழுத்தம் நீங்கி, நல்ல தூக்கம்
 கிடைக்கின்றது..

இவற்றை தக்கபடி சேர்த்து  சுத்தம் சுகாதாரத்துடனும் பொறுப்புணர்வுடனும் தயாரிக்கப்படும் உணவுகள் எதுவாயினும் அவரவர் வாழ்வியல் முறைக்கு சிறந்தவையே...

அவ்வாறே அனைவருக்கும் அமைவதற்குப் பிரார்த்தனை செய்து கொள்வோம்..

நானறிந்த குறிப்புகளும்  விக்கியில் இருந்து சில நுணுக்கங்களும் பதிவில் இடம் பெற்றுள்ளன..

எல்லாவற்றிற்கும் மேலாக
நமது சமையலே
நமது ஆரோக்கியம்

வாழ்க நலம்..
**

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**