நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜூன் 23, 2025

சமையல்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 9
திங்கட்கிழமை


பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்

மகாபாரதப் போரின் போது உணவு வழங்கி உபசரித்த மாமன்னன்..

சோற்றால் மடையடைத்த சோழ நாடு...

உண்ணீர் உண்ணீர் என்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடியுறும்..

இதெல்லாம் இம்மண்ணுக்கே உரிய பெருஞ்சிறப்புகள்..

ஆனால் 
இன்றைக்கு வீடுகள் பலவற்றிலும்  - வார நாட்களில் சில வேளைகளாவது - ஆடம்பரத்தின் காரணமாக சமையல் நிறுத்தப்படுகின்ற சூழ்நிலை  உருவாகிக் கொண்டிருக்கின்றது..

சமையலையும் சாப்பாட்டையும் பிறர் வசம் ஒப்படைப்பதற்கு (ஒப்படைத்து விட்டு -  வக்கணையாகத் தின்கின்ற வேலையை மட்டும் கைவசம் வைத்துக் கொள்வதற்கு) இளந்தலைமுறையினர் தயாராக இருக்கின்றனர்..

கேட்டால்,
சும்மா ஒரு மாற்றுக்கு!.. - என்ற பதில்...

இப்படியே போனால் வீட்டிலுள்ள
மற்றவர்கள் கதி??...

குடும்ப வாழ்க்கை என்பதே அழிந்து விடும். 

ஊர் விட்டு ஊர் வந்து அலுவலகப் 
பணி செய்வோரும் உடல் நலம் குன்றியோரும் உணவகங்களைத் தான் நாடியாக வேண்டும்..

ஆனால் இன்றைய நிலைமை வேறு..

வீட்டில் சமையல் நிறுத்தப்பட்டு வெளியில் உணவைப் பதிவு செய்து வரவழைத்துச் சாப்பிடும் பழக்கம் - மேலை நாடுகளைப் போல பரவுகின்றது.. 

அது  குடும்பங்களின்  சீரழிவிற்கு வழி வகுக்கின்றது.

நமது நாட்டிலோ
வாழும் முறையில்
அன்புடன் சமைப்பதையும் ஆதரவுடன் உபசரிப்பதையும்   இல்லாததாக்கி விடுகின்றது...

சமையல் என்பது நமது பாரம்பரியத்தின் அருங்கலைகளில் ஒன்றாக விளங்குவது மட்டுமல்ல
தனிப்பட்ட குடும்பத்தின் கலாச்சார அச்சாணி...

சமையல் கூடம் இல்லாத வீடுகள் நம்மிடையே இல்லை.. 

வரவேற்பறை படுக்கையறை
கழிவறை - இவை மட்டுமே  நமது கலாச்சாரம் ஆகாது..

சமையலறையையும் மூடி விட்டு படுக்கையறை மட்டும் போதும் என்று நினைப்பது  அவலம்..

மேலைத் திருமண வாழ்வியல் முறைகள் என்றுமே பிரச்னைக்குரியவை..

படுக்கையறை   மட்டுமே வாழ்க்கை ஆகாது..

அதற்கொரு அறை இதற்கொரு அறை என்பது நாகரிகம் என்றாலும் அதுவே நம்முடைய வாழ்வியல்  இல்லை..

மேலைத் தேசங்களுக்கு இணையாக தற்போது நமது நாடும் திருமண முறிவுகளில்
இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.. .

இங்குள்ள குடும்பக் கலாச்சாரம் அழிந்தால்  மேலை நாகரிக அடிவருடிகளுக்கு கொண்டாட்டம்..

குடும்ப உணர்வுகள் அழியும் போது மன நலமும் சேர்ந்தே அழிகின்றது.

தொடர்ந்து வெளியில் சாப்பிடுவதால் உடலானது நோய்களின் கிடங்காக மாறுகின்றது. 

தனியறையில் மகிழ்ந்து
வெளியறையில் சாப்பிடுவது மட்டுமே குடும்ப நலனுக்குக் காரணமல்ல.

எப்போதாவது வெளியில் சாப்பாடு என்பது ஓரளவுக்கு ஏற்புடையது..

இன்றைக்கு எல்லாமே மாற்றப்பட்டு விட்டன..

எனினும்,
மன மகிழ்வுடன் சமைப்பதும் சாப்பிடுவதும் உள்ளத்திற்கும் இல்லத்திற்கும்  இன்றியமையாதவை..

அதனால் தான் நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொன்னார்கள்..

வெளியில் சாப்பிட்டு விட்டு வந்ததற்காக  அடுத்த வீட்டு அண்ணன்கள் அடி வாங்கியது 1960 களின் நிலைமை...

இக்காலத்தில்  ஒவ்வொரு விடுமுறை நாளிலும்  ஒவ்வொரு உணவகத்தில் சாப்பிடுவது என்பது நாகரிகம் ஆகிவிட்டது ... 

உடனுக்குடன் பதிவு  செய்து வரவழைத்துச்
சாப்பிடும் வழக்கம் மக்கள் மத்தியில் கௌரவமாகி வருகின்றது.,

இந்தப் பழக்கம் வருத்தத்துக்கு உரியதாகும்...

இவையே உணவு - இவற்றையே சாப்பிட  வேண்டும் - என, முன்பதிவு செய்யும்படியாக விளம்பரங்கள் வாயிலாகத் தூண்டுவதும் உளவியல் ரீதியான காரணம். 

விளம்பரங்கள் ஒரு சில வழிகளில் மட்டுமே நன்மை தருகின்றன..

நமது விருப்பத்தை  முடிவு செய்வதற்கு  நிறுவனங்கள் யார்?..

நமது முன்னோர்கள் அக்காலத்தில் யாத்திரை, வெளியூர் என்று சென்றபோது சமைத்து எடுத்துச் சென்றது எல்லாம் கேலிக் கூத்து என்றாகி விட்டது...

அப்போது உணவு பாதுகாப்பு இருந்தது.. ஆரோக்கியம் இருந்தது..

கீழான அவலம் தேடி வரும் முன்  - 
நமது வீட்டில் நாமே
அக்கறையுடன் சமைத்து,
அன்புடன் பரிமாறி
 ஆதரவுடன் சாப்பிட்டு அடுத்த தலைமுறையினருக்கு வாழ்ந்த காட்டி   மகிழ்ச்சி கொள்வோம்..

யாரோ சமைக்க யாரோ முன் பதிவு செய்ய -  உனக்கென்ன பிரச்னை ??..
என்றால் -

ஏதோ ஒரு ஆதங்கம் தான்!..


ஓம்  சிவாய நம
**

சனி, ஜூன் 21, 2025

கருட சேவை 2

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 
சனிக்கிழமை

கடந்த திங்களன்று காலை தஞ்சை மா நகரில் நடைபெற்ற 
இருபத்தைந்து கருட சேவை.. 
இரண்டாம் பகுதி..













உச்சிப் பொழுதில்  மேல ராஜவீதி ஸ்ரீ விஜயராமர் திருக்கோயிலில் தனித்தனியே தீப ஆராதனை நிகழ்ந்த பின் அவரவர் திருக்கோயிலுக்குத் திரும்பினர்..

ஓம் ஹரி ஓம் 
நம சிவாய ஓம்
**

புதன், ஜூன் 18, 2025

கருட சேவை 1

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 4
புதன் கிழமை

கடந்த திங்களன்று காலை தஞ்சை மா நகரில்  நடைபெற்ற இருபத்தைந்து கருட சேவை முதல் பகுதி..

முதல் இரண்டு படங்களில் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்..  

மூன்றாவது ஸ்ரீ நீலமேகப்பெருமாள்.

















ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய 
**

ஞாயிறு, ஜூன் 15, 2025

தரிசனம் 2

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி முதல் நாள்
ஞாயிற்றுக்கிழமை


ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் இருந்து புறப்பட்ட பல்லக்குகள்
திட்டை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயில் 
குளமங்கலம், 
கூடலூர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
கடகடப்பை ஸ்ரீ ராஜராஜேஸ்வரர் கோயில்
புன்னை நல்லூர் ஸ்ரீ கைலாச நாதர் கோயில்களில் தங்கி மறுநாள் காலையில் தஞ்சை கீழவாசல் ஸ்ரீ பூமாலை வைத்திய நாதர் கோயிலில் காலை சந்தி பூஜை நடந்த பின் கீழவாசல் கோட்டை வழியாக அரண்மனைக்கு எழுந்தருளி கீழ ராஜவீதி தெற்கு ராஜவீதிகளில் பவனி வந்தபின் மேல ராஜவீதி ஸ்ரீ கொங்கணேஸ்வரர் கோயிலில் உச்சி கால பூஜை கண்டருளி வடக்கு ராஜவீதியில் பவனி வந்து கரந்தைக்குள் பிரவேசம் ஆகின..  


கரந்தை ராஜவீதி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பல்லக்குகளுக்கு வரவேற்பும் சாயரட்சை பூஜையும்...

வீட்டுக்கு வீடு மங்கல ஆரத்தி... 
முன்னிரவுப் போதில் ஆலயப் பிரவேசம்.. 

இரவு ஒன்பது மணியளவில் பதுமை மாலையிட
சிவகண வாத்தியங்கள் முழங்க - மகா ஆரத்தியுடன்  யதா ஸ்தானம் சேர்ந்தனர்..

ஏழூர் சென்று விட்டுத் திரும்புகின்ற பல்லக்குகளை வரவேற்பதற்கு
கடும் கூட்டம்.. மக்கள் நெரிசல்..

வீட்டில் தரிசனம் செய்து விட்டு வந்தனர்..

என்னால் கோயிலுக்குச் செல்வதற்கு இயலவில்லை... 

நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்
குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான் குடி
கற்குடி தென் களக்குடி செங் காட்டங்குடி
கருந்திட்டைக்குடி கடையக்குடி காணுங்கால்
விற்குடிவேள் விக்குடி நல்வேட்டக் குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே.. 6/71/3
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

சனி, ஜூன் 14, 2025

தரிசனம் 1

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
 வைகாசி 31 
சனிக்கிழமை

வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு வைகாசி 28 (11/6) புதன்கிழமை அதிகாலை ஐந்து மணியளவிலதஞ்சை கரஎந்தை ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய
வசிஷ்டேஸ்வரர் கண்ணாடி பல்லக்கில் ஏழூர் வலம் எழுந்தருளினார்... உடன் ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி அருந்ததி தேவியும் வெட்டி வேர் பல்லக்கில் எழுந்தருளினர்..

கரந்தையில் நகர் வலம் வந்த பிறகு
முதல் தலமாம திரு வெண்ணாறு ஸ்ரீ ஆனந்தவல்லி உடனாகிய தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்... 
ஸ்ரீ சண்டிகேசர் எதிர்கொண்டு வரவேற்க மாலை மரியாதை மகாதீப ஆராதனை... அடுத்துள்ள ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள் கோயிலில் இருந்தும் மாலை மரியாதை தீப ஆராதனை செய்யப்பட்டது...

அதனைத் தொடர்ந்து பள்ளியக்ரஹாரம் ஊர் மரியாதையை ஏற்றுக் கொண்டு  தென்குடித்திட்டை கோயிலை நோக்கி பல்லக்குகள் புறப்பட்டன..














அடுத்த பதிவில் மேலும் விவரங்கள்..

இணைய வேகம் இன்மையால் பதிவு தாமதம் ஆகியது..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

வியாழன், ஜூன் 12, 2025

சிவ ஞானம்

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 29
வியாழக்கிழமை


ஞானசம்பந்தப் பெருமானின் குருபூஜை நாள்..

தனக்கு நிச்சயிக்கப்பட்ட 
தோத்திர பூர்ணாம்பிகை எனும் மங்கை நல்லாளுடன் மணவேளையில் யாக அக்னியில் சிவ சாயுஜ்யம் அடைந்தார்..


ஸ்வாமிகளுடன் தாய் தந்தையர் முருக நாயனார் திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவரது துணைவியார் மதங்க சூளாமணி ஏனையோரும் சிவமுக்தி எய்தினர்..


அருளாளர் நால்வருள் முதலாமவராகத் திகழ்பவர் ஞானசம்பந்தப் பெருமான்.. 
இறைவனை அடைவதில் 
சத்புத்திர மார்க்கத்திற்கு வழி காட்டியவர்..

அருளிச் செய்த திருப்பதிகங்கள் 16000.. நமக்குக்
கிடைத்திருப்பவை 384..

இவற்றுள் முத்து ரத்னம் வைர வைடூரியம் என ஏராளம்..

அப்பொக்கிஷத்தில் இருந்து
தங்கத் தட்டில் நவ ரத்தினங்களை வைத்தாற்போல இன்றைக்கு சில திருப்பாடல்கள்...

எனது நித்ய பிரார்த்தனையில்  உள்ள திருப்பாடல்களும் இவற்றுள் உள்ளன...


தோடுடைய செவியன் விடை 
யேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி 
என்உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரால் முனைநாட் பணிந் 
தேத்த அருள் செய்த
பீடுடைய பிர மாபுரம் மேவிய 
பெம்மான் இவ னன்றே..1/1/1

செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.  1/80/5 

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே.  1/98/1 

எங்கேனும் யாதாகிப்
  பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும்
  எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக்
  குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச்
  சங்கரன் தன் தன்மைகளே. 2/40/6 

மந்திரம் ஆவது நீறு
  வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு
  துதிக்கப் படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு
  சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன்
  திருஆல வாயான் திருநீறே.  2/66/1 

என்ன புண்ணியஞ் செய்தனை
  நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப்
  பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு
  வலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும்
  பாடியும் வழிபடும் அதனாலே.  2/106/1 

மருந்துவேண் டில் இவை
  மந்திரங் கள் இவை
புரிந்துகேட் கப்படும்
  புண்ணியங் கள் இவை
திருந்துதே வன்குடித்
  தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும்
  அடிகள்வே டங்களே.  3/25/1 

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
  வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
  பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்
  வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
  ஆலவாய் ஆவதும் இதுவே.  3/120/1


வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம் பிரண்டும் உடனே
ஆசறுநல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.. 2/85/1

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே.. 3/54/1

திருச்சிற்றம்பலம்

சிவாய நம ஓம்
**