நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஸ்ரீதுர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீதுர்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 29, 2025

சின்னஞ்சிறு

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
புதன் கிழமை


இன்று 
இயல்பான இனிதான பாடல் ஒன்று

சின்னஞ்சிறு பெண் போலே 
சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே  
ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள் 
(சின்னஞ்சிறு)

பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

மின்னலைப் போல் மேனி 
அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் 
எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு 
பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக 
நர்த்தனம் ஆடிடுவாள்.. 
(சின்னஞ்சிறு)
 -::-

பாடல்
சீர்காழி கோவிந்தராஜன்

இயற்றியவர
 உளுந்தூர்பேட்டை சண்முகம்

இசை: T.R. பாப்பா 


 நன்றி இணையம்
-:-

ஓம் சக்தி ஓம்
**

ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2024

யோகமாயா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆவணி 9
ஞாயிற்றுக்கிழமை


ஸ்ரீ ஹரி பரந்தாமனின் விருப்பப்படி பசுக்களால் சூழ்ப்பட்டிருக்கும் நந்தகோபனின் மகவாக நந்தினி என்று, தானே தற்பரையாய் யசோதா தேவியின் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டு உதிரச் சேற்றில் விளையாடிக் கிடந்தவள் யோக மாயா.. 

யசோதைக்கு யாதவப் பெண்கள் எவரும் பேறு காலம் பார்த்ததாக எவ்விதக் குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..

கம்சனின் சிறைக் கதவுகள் திறந்து கொள்ள கூடைக்குள் வைத்து குழந்தையைச் சுமந்து வந்த வசுதேவர் இவளையே வாரியெடுத்துச் சென்று தேவகியின் அருகில் கிடத்தினார்..

கம்சன் அறிந்து கொள்ளட்டும் என - யாழைப் பழித்த மென் மொழியாள் விசும்பிக் குரல் எழுப்ப கொடியவன் ஓடோடி வந்தான்.. 

குழந்தை என்றும் பாராமல் கடுங்கோபத்துடன் கால்களைப் பிடித்துத் தலைகீழாகத் தூக்கி - 
வசுதேவ தேவகியர் கெஞ்சிக் கதறியதையும் கேட்காமல் -
எதிர் புறச் சுவற்றில் வீசியடித்தான்.. 


அந்த அளவில் பதினாறு திருக்கரங்களுடன் ஆங்காரமாக வெளிப்பட்ட தேவி, 
" அடே மூடனே... உன்னை அழிப்பதற்கே என்று அனந்தன்  கோகுலத்தில் பிறந்து விட்டான்..  என்னை நீ தூக்கியது அடித்துக் கொல்வதற்குத் தான் என்றாலும் எனது கால்களைப் பிடித்துத் தூக்கினாய்.. அதனால் உன்னை உயிருடன் விட்டுவிட்டுச் செல்கின்றேன்!.. " - என மொழிந்து மறைந்தாள்..

அண்ணன் தங்கை இருவருமே சங்கு சக்ரதாரிகள்.. 

அவன் ஷ்யாமளன்.. க்ருஷ்ணன்.
இவள் ஷ்யாமளி.. க்ருஷ்ணை.
அவன் மாயன்.. இவள் மாயை.
அவன் கோவிந்தன்... இவள் கோவிந்தரூபிணி..

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்,
வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை,
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்.. (3) 558

தேவர்கள் அனைவரும் வந்திருந்து எனக்கு திருமணம் நிச்சயித்த போது - 
கூறைப் புடவையை உடுத்திக் கொள்ளச் செய்தவள் அந்தரி.. அவளே எனக்கு மணமிகு மாலையைச்  சூட்டினாள்.. - என்று தான் கண்ட கனவினை ஆண்டாள் குறிப்பிடுகின்றாள்.. 

அந்தரி என்று குறிப்பது
ஷ்யாமளை ஆகிய துர்கா தேவியைத் தான்..


சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.. 66


ஸ்ரீ விஷ்ணுதுர்கா 
வேதாரண்யம்

பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறைசேர் திருநாமங்கள் செப்புவரே..
-: அபிராமி அந்தாதி :-
**

நாளை 
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி

 ஓம் சக்தி ஓம் 
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***

திங்கள், அக்டோபர் 07, 2013

ஸ்ரீ மகிஷாசுரமர்த்தனி

மூன்று திருவிழிகளுடனும் பதினெட்டு கரங்களுடனும் அன்னை எழுந்தாள். அவளுடைய திருக்கரங்களில் இலங்கியவை-

வாள், ஜபமாலை, தாமரை, அம்பு, கதை, வஜ்ரம், சூலம் ,மழு, சக்கரம்,
சங்கு, பாசம், மணி, சக்தி, தண்டம், வில், கபாலம், கமண்டலம், கேடயம் - என்பன.


செந்தணலின் நிறத்தினளாக திரிமூர்த்திகளின் அம்சங்களுடன் விளங்கினாள்.

ஏன்?..

முன்பொரு சமயம் , வரமுனி எனும் -  தவ வலிமை மிக்க முனிவர் ஒருவர் இருந்தார். 

அவர் மற்ற எல்லா முனிவர்களையும் விட தனித்தன்மையுடன் விளங்கி,  அதீத சக்திகள் உடையவராக இருந்ததால் - சக முனிவர்கள் அவருக்கு உரிய மரியாதை அளித்து மதித்து வந்தனர். 

இதனால் நாளடைவில் - தனக்கு நிகர் யாரும் இல்லை எனும் ஆணவம் வரமுனியின் மனதில் எழுந்தது. தவ வலிமையால் தலை சிறந்த இடத்தைப் பெற்றும் - ஆணவத்தால் - சராசரி பாமரனுக்கும் கீழாக - தலைகீழாக - ஆனார். 

இதனால் பின்னொரு காலத்தில் - தன் தலை தனியே போகப் போகின்றது என்பதை அப்போது அவர் உணர்ந்தாரில்லை. 

இந்நிலையில் அந்த வரமுனி தவமியற்றும் தபோவனத்திற்கு மகாமுனிவராகிய அகத்தியர் பெருமான் வருகை தருகின்றார் என தகவல் கிடைத்ததும் அவரை வரவேற்று மகிழ - மற்ற முனிவர்கள் முனைப்புடன் ஈடுபட்டனர். 

அதை வரமுனியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

''வானவரும் என்னை மதித்துப் போற்றுகின்றனர் என்றால் - நான் எப்பேறு பெற்றவன். அப்படிப்பட்ட நான் - அகத்தியரை வரவேற்க வேண்டும்!..''

நினைக்கும் போதே வரமுனியின் காதுகளில் இருந்து கனல் பீறிட்டுக் கிளம்பியது. 

''வரட்டும் வரட்டும்!..'' - என்று மதர்ப்புடன் மனதில் மருகியபடி இருந்தார் வரமுனி. 


சற்று நேரத்தில் தபோவனத்தின் மற்ற முனிவர்கள் - அகத்திய மாமுனிவரை அன்புடன் வரவேற்று  அழைத்து வந்தனர் 

வரமுனியோ இறுகிய முகத்துடனும் கருகிய மனத்துடனும் மதர்த்து இருந்தார். அகத்திய மகரிஷியை ஏறெடுத்து நோக்கவில்லை. இன்சொல் கூறவில்லை. முகம் கடுத்து இருந்தார். அடுத்து நடக்க இருப்பதை உணராமல்!.. 

அகத்திய மாமுனிவரோ - சிந்தித்தார். அவருக்கு விளங்கியது. இனியொரு நாடகம் அரங்கேற இருப்பதை. இறையுள்ளம் அதுவாயின் அவ்வண்ணமே ஆகுக!.. எனத் தெளிந்து வரமுனியுடன் நட்பு பாராட்டினார். நல் வார்த்தைகளுடன் நலம் கேட்டார். 

தம்மைத் தேடி அகத்திய மகரிஷி வந்திருப்பதையும் அவருக்கு நல்வரவு கூறும்படியும் மற்ற முனிவர்களும் வரமுனிக்கு நினைவு கூர்ந்தனர்.  எதற்கும் அசைந்து கொடுக்காத வரமுனி தனக்குத் தானே வினை விதைத்துக் கொண்டார். 

விளைவு - மதர்த்த மனத்தினராய் மகரிஷிகளை அவமதித்ததால் - மகிஷமாகப் போவது என சாபம் கிடைத்தது. 

அந்த காலகட்டத்தில் ரம்பன் என்ற அரக்கன், வழக்கம் போல வித விதமான வரங்களை வேண்டி - அக்னி தேவனை நோக்கி கடுந்தவத்தில் இருந்தான். அக்னி தேவனும் ப்ரத்யக்ஷமாக - சகல லோகங்களையும் அடக்கி ஆள,  சர்வ வல்லமை கொண்ட மகன் ஒருவன் எனக்குப் பிறக்க வேண்டும் - என வரம் கேட்டான். 

நீ எந்தப் பெண்ணைக் கண்டு மோகிக்கின்றாயோ அவள் மூலமாக உனக்கு நீ கேட்டபடி மகன் பிறப்பான் என்று அக்னியும் வரம் அளித்தான். வந்த வேகத்துக்கு கேட்டதைக் கொடுத்த அக்னி அப்புறம் தான் சிந்தித்தான்  - அசுரன் சகல லோகங்களையும் அடக்கி ஆண்டால் அதற்குள் நாமும் அல்லவா - சிக்கிக் கொண்டோம்! - என்று. 

அதன் பிறகு - தவம் நிறைந்து எழுந்த ரம்பன் மகிழ்ச்சியுடன் அசுர லோகத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, விதியின் வசமாக அங்கே ஒரு எருமை மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டான். மூடனின் மனம் மோகம் கொண்டு மூர்க்கமானது. தானும் எருமையாக உருமாறினான். அகத்தியரின் சாபம் பெற்ற வரமுனி ரம்பனின் மகனாக மகிஷாசுரனாகத் தோன்றினான். 

நன்மக்கட்பேறு வாய்க்க நல்ல எண்ணங்கள் மிக மிக அவசியம் என்பதை உணர்த்தும் சம்பவம் இது. 

ரம்பன் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. அப்புறம் என்ன!.. அவனுடைய முன்னோர்களைப் போலவே பத்தாயிரம் ஆண்டுகள் பிரம்மனைக் குறித்து கடுந்தவம் இயற்றினான். ஒரு கன்னிப் பெண்ணால் அன்றி வேறு எவராலும் எதாலும் மரணம் சம்பவிக்கக்கூடாது என வரம் பெற்றுக் கொண்டான். 

அதன் பின் அவனால் சும்மா இருக்க முடியவில்லை. மற்ற தோழர்களான சும்பன், நிசும்பன், தூம்ர லோசனன், ரக்த பீஜன் - முதலானோர்களுடன் கூடி தேவ லோகத்தை துவம்சம் செய்தான். அஞ்சி நடுங்கிய தேவர்கள் உயிரோடு வைகுந்தத்துக்கு ஓடினர். 

மஹாவிஷ்ணு புன்னகைத்தார். மகிஷனுக்குப் பெண்ணால் தான் மரணம். எனவே அன்னை பராசக்தியை சரணடையுங்கள் என்றார். 

அங்கிருந்து தலை தெறிக்க ஓடிய தேவர்கள் - திருக்கயிலாய மாமலையின் தலைவாசலில் நின்று கதறினர். நந்தியம்பெருமான் அவர்களை திருமாமணி மண்டபத்துக்கு அழைத்துச் சென்று சிவதரிசனம் செய்வித்தார். 

காவாய் கனகத் திரளே போற்றி!.. 
கயிலை மலையானே போற்றி!.. போற்றி!..

கண்ணீருடன் நின்றவர்களைக் கண்டு அன்னை இரக்கங் கொண்டாள்.

ஞானசரஸ்வதியுடன் நான்முகனும் மஹாலக்ஷ்மியுடன் பரந்தாமனும் அங்கே எழுந்தருளினர். முப்பத்து முக்கோடி தேவர்களும் முனிவர்களும் கந்தர்வர்களும் கூடி நின்று துதித்த வேளையில், அண்டசராசரங்கள் அனைத்தும் நடுநடுங்கியது. 


கோடானுகோடியாய்த் திகழ்ந்த சூர்யப் பிரகாசத்தின் உள்ளிருந்து, அன்னை பராசக்தி -  வாலை எனும் இளங் கன்னியாய்த் தோன்றினாள். அவளுடைய திருமேனியில் அங்கேயிருந்த அனைவரும் தம்மைக் கண்டனர். அப்போது அவள் - லக்ஷ்மி,சரஸ்வதி - எனும் தேவியரின் அம்சங்களுடன் திகழ்ந்தாள். 

செந்தாமரைப் பூவில் நின்ற அவளை  - பொற்றாமரைப் பூக்களைத் தூவிப் போற்றினர். துக்கங்களை அழிக்க வந்தவள் என்பதனால் துர்கா என்று வாழ்த்தினர். மூன்று விழிகளுடன் திகழ்ந்த அவளைக் கண்டு மகிழ்ந்தனர். 

துர்கையின் முன் நாமெல்லாம் சாதாரணம் என்பதை உணர்ந்த தேவர்கள் அனைவரும் தத்தம் படைக் கலன்களை - இவை எம்மிடம் இருப்பதை விட,  தாயே!.. உன்னிடம் இருப்பது தான் சாலச் சிறந்தது - என்று அவளிடமே சமர்ப்பித்து விட்டனர். 

புன்னகைத்த துர்கா அந்த படைக் கலன்கள் அனைத்தையும் தானே ஸ்வீகரித்துக் கொண்டாள். அளப்பரிய சக்தி உடையவளான துர்கையின் கரங்களில் அமர்ந்ததும் அந்த ஆயுதங்கள் மீண்டும் வலிமை பெற்றன. 

மகிஷனைச் சம்ஹரிக்க - அம்பிகை, சர்வாங்க பூஷிதையாகப் புறப்பட்டாள். ஆர்ப்பரித்து வந்த அசுரன் அம்பிகையுடன் கடும் போர் புரிந்தான். 


அவனுடன் சேர்ந்து போரிட்ட ரக்தபீஜனின் உடலில் இருந்து சிந்திய ரத்தத் துளிகள் அசுரர்களாக உருமாறியதால் பராசக்தியிடம் இருந்து காளி வெளிப்பட்டு ரத்தத் துளிகளை தன் நாவினால் உறிஞ்சி உயிர்க் குலத்தினைக் காத்து நின்றாள். 

 

எட்டாம் நாள் போர் மிக உக்ரமாக இருந்தது. ஒரு கணம் சிவ தியானத்தில் நின்ற அம்பிகை - சீற்றம் பொங்க திரிசூலத்தை மகிஷன் மீது பிரயோகித்தால். மகிஷன் வீழ்ந்தான். 

அம்பிகை ஆரோகணித்து வந்த சிங்கம் - கர்ஜித்தவாறு கீழே வீழ்ந்த எருமையின் மீது பாய்ந்து கூரிய நகங்களால் கீறிக் கிழித்தது.  தன் திருக்கரத்தில் ஒளிர்ந்த பொன் வாளால் மகிஷத்தின் தலையைச் சேதித்தாள் அம்பிகை.   


அசுரனாக அலைந்த மகிஷத்தின் தலை மீது தன் பத்ம பாதங்களைப் பதித்து அருளினாள். மூர்க்கனாகத் திரிந்த வரமுனி- அம்பிகையின் பாத ஸ்பரிசத்தால் நற்கதி அடைந்தார். 


முப்பத்து முக்கோடிதேவர்களும் ஒன்று கூடி நின்று, 

அயிகிரி நந்தினி நந்தித மேதினி 
விஸ்வ விநோதினி நந்தநுதே 
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸிநி 
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே 
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி 
பூரி குடும்பினி பூரிக்ருதே 
ஜய ஜய ஹே மகிஷாஸுரமர்த்தனி 
ரம்ய கபர்த்தினி சைலஸுதே!..

என்று ஆரவாரித்து - போற்றி மகிழ்ந்தனர்.

பல்வேறு திருநாமங்களுடன் போரிட்ட அம்பிகை அசுரன் வீழ்ந்ததும் ஸ்ரீ துர்கா  -   தன்னுள் விளங்கும் வன துர்கா, சூலினி துர்கா, ஜாதவேதோ துர்கா, சாந்தி துர்கா, சபரி துர்கா, ஜ்வாலா துர்கா, லவண துர்கா, தீப துர்கா, ஆசுரி துர்கா - எனும் நவ அம்சங்களுடன்  விஸ்வரூபங் கொண்டு நின்றாள். 

அன்னையின் திருத்தோற்றங்களைக் கண்டு அண்டசராசரமும் மகிழ்வெய்தியது. 

எல்லாவற்றையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஈசன் எம்பெருமான்  - அன்புடன் அம்பிகையின் திருக்கரம் பற்றினார். அன்னையும் மனக்குளிர்ந்து ஐயனின் திருமார்பினில் சாய்ந்து கொண்டாள். 

உயிர்க் குலமும் அந்த அளவில் இன்புற்று மகிழ்ந்தது. 

இந்த வைபவத்தை அப்பர் பெருமான் தம் திருவாக்கினால், 

''..போகமார் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும்!..'' - 

என்று புகழ்கின்றார். மோடி என்பது துர்கையின் திருநாமங்களுள் ஒன்றாக தேவாரத்தினுள் இலங்குகின்றது. 

சிவமும் துர்க்கையும் வேறு வேறு அல்ல!.. சிவபெருமானின் சக்திகள் நான்கு. அவை - அருட் சக்தி, புருஷ சக்தி, போர் சக்தி, கோப சக்தி என்பன. 

அருட் சக்தி  - பரமேஸ்வரி எனவும், புருஷ சக்தி - ஸ்ரீமஹாவிஷ்ணு எனவும், கோப சக்தி ஸ்ரீ காளி எனவும் -  விளங்கும் போது போர் சக்தி ஸ்ரீ துர்கா என திகழ்கின்றது. 

 

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியின் வழிபாடு ஒன்றினால் தான் - முற்பிறவியில் நாம்  செய்த வினையின் விளைவுகள் அழிகின்றன என்பது ஆன்றோர் வாக்கு. 

அபிராமி அந்தாதியில் அபிராமிபட்டரும் அதையே கூறி அருள்கின்றார்.

சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரை எல்லாம் 
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் 
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே (8)

ஜய ஜய தேவி.. ஜய ஜய தேவி.. துர்கா தேவி சரணம்!.. 
ஜய ஜய தேவி.. ஜய ஜய தேவி.. துர்கா தேவி சரணம்!..

சனி, அக்டோபர் 05, 2013

நலம் தரும் நவராத்திரி

அம்பிகையைக் குறித்து மேற்கொள்ளும் விரதங்களுள் முதன்மையானது நவராத்திரி விரதம். 


புரட்டாசி மாதத்தின் வளர்பிறை (சுக்ல பட்சம் ) பிரதமை முதற்கொண்டு நவமி முடிய அனுசரிக்கப்படுவது நவராத்திரி விரதம்.

இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் - பிரதமை தொடங்கி, பகலில் உணவு இன்றி - மாலையில் பூஜை முடித்தபின் நிவேத்ய பிரசாதம் உண்டு பால் பழம் அருந்துவர். 

ஒன்பதாம் நாளாகிய நவமியன்று உபவாசம் இருந்து பத்தாம் நாள் விஜய தசமியன்று காலையில் வழிபாடு செய்து மங்களகரமாக விரதத்தினை நிறைவு செய்வர். 

விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள் - நவராத்திரி நாட்களில் - ஒரு நேரம் உணவு  உண்டு பக்தி சிரத்தையுடன் அம்பிகையை இதயக்கமலத்தில் இருத்தி, தியானிக்க -  பரிபூரண அருளைப்பெற்று நல்வாழ்வினை எய்தலாம்.

மகிஷனை வென்று நல்லோரைக் காத்தருளிய, அம்பிகையைப் போற்றும் பக்தியின் வெளிப்பாடு தான் - நவராத்திரி கொண்டாட்டங்கள். 

விரதம் மேற்கொள்வது அவரவர் விருப்பம். 

உண்மையான அன்புடன் எளிமையான வழிபாட்டின் மூலம் அம்பிகையின் அருளைப் பெறலாம் என்பது வெளிப்படை.

மனிதனின் அத்யாவசியங்களான - கல்வி, செல்வம், வீரம் - இந்த மூன்றனையும் அருளும்படி அன்னை ஆதிபராசக்தியை, அவற்றுக்கு அதிபதிகளான ஸ்ரீஸரஸ்வதி, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீதுர்கை எனும் அம்சங்களாகப் பாவித்து வழிபடுதலே நவராத்தியின் நோக்கம். 

வீரம் எனப்படுவது  போர்க்களத்தில் வேலெடுத்து வீசி எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவது என்றாலும்,

ஐம்புலன்கள் தான் ஆன்மாவின் முதல் எதிரி. அவற்றை வென்று அடக்குவதே உண்மையான வீரம் என்று மகான்களும் ஞானியரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

திருவள்ளுவப் பெருமானும்,

ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் 
எழுமையும் ஏமாப்பு உடைத்து.

என்று நமக்கு அருளிச் செய்கின்றார். இப்படி தன்னை வென்று தன்னடக்கத்துடன் இருப்பவர்க்கு என்ன கிடைக்கும்?.. 

வள்ளுவப்பெருமான் அதையும் விளக்குகின்றார். 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 
ஆரிருள் உய்த்து விடும்.

தன்னடக்கமாகிய நல்ல பண்பினை உடைய ஒருவன் தேவ நிலையினை எய்துகின்றான். அடங்காமை எனும் குணத்தின் வசப்பட்டவன்  - தீமை நிறைந்த - காரிருள் போன்ற (அசுர) வாழ்வினில் வீழ்கின்றான். வீழ்ந்து அழிகின்றான்.

மகிஷாசுரன் - நினைவுக்கு வருகின்றானா!..

இந்த இரு முனைகளுக்கும் இடையே ஞானம் எனும் நல்லறிவு தான் உண்மையான செல்வம்!.. 

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

இங்கே செல்வம் என்பது  - பொன்னோ பொருளோ அல்ல!.. 

நல்லறிவு!..

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு 
மாடல்ல மற்றயவை.

எனவே, கல்வியும் அதனால் பெறும் நல்லறிவும் தான் ஒருவருக்கு செல்வம். அப்படி கல்வியும் நல்லறிவுச் செல்வமும்  பெற்று விட்டால் அடுத்த நிலை எதுவாக இருக்கமுடியும்?.. 

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழார் எனின்..

கற்ற கல்வியின் பயன் இறைவன் திருவடிகளை தொழுதலே!..

இதுதான் உண்மையான நவராத்திரியின் தத்துவம். 

இதை உய்த்து உணர்வதற்கே -  நவராத்திரி வழிபாடும், வைபவமும்!..

உண்மையான - வீரத்தையும் , செல்வத்தையும், கல்வியையும் வழங்க வேண்டியே - அம்பிகையைத் தொழ வேண்டும்!.. 

முதல் மூன்று நாட்களில் தன்னை அடக்கும் தைரியத்தையும் வீரத்தையும் நம்முள் விதைக்க வேண்டி ஸ்ரீதுர்காதேவியையும், 

அடுத்த மூன்று நாட்களில் நல்லறிவு ஞானம் எனும் செல்வத்தினை  நல்க வேண்டி ஸ்ரீ மஹாலக்ஷ்மியையும், 

அடுத்த மூன்று நாட்களில் நல்லறிவையும் ஞானத்தையும் தழைக்கச் செய்யும் கல்வியைக் கற்கும் வகையினை வேண்டி ஸ்ரீ ஸரஸ்வதியையும் வழிபடவேண்டும்.

வீடுகளில் கொலு வைத்தல் சிறப்பு அம்சம். ஒற்றைப்படையாக அமைக்கப்பட்ட படிகளில் அழகான பதுமைகளை அணி அணியாக கொலு வைத்து அலங்கரிக்கப்படுகின்றது.

நடுநாயகமாக கும்பம் வைத்து அணையா விளக்கு ஏற்றப்படும். மாலை வேளைகளில் - சுண்டல் இனிப்பு முதலான நிவேத்யங்கள் வைத்து ஒன்பது நாட்களும் ஆராதிப்பர்.

சிலர் அவரவர் குல ஆசாரப்படி நவதானிய  முளைப்பாரியும்  வைத்து அம்பிகையை வழிபடுவர். 

இல்லத்திற்கு சுமங்கலிப் பெண்களையும் திருமண வயதில் உள்ள கன்னிப் பெண்களையும் அழைத்து - தேவியாக பாவித்து - மஞ்சள் குங்குமம் தாம்பூலம் கொடுத்து உபசரிப்பர். 

நவராத்திரி - சுபராத்திரி என்பர். 

நாடு முழுவதும் கோலாகலமாக நவராத்திரிப் பெருவிழா தொடங்கியுள்ளது. மக்கள் உற்சாகத்துடனும் பக்திப் பெருக்குடனும் தத்தம் இல்லங்களில் வழிபாடுகளை அனுசரிக்கின்றனர்.

நன்மை பெருக வேண்டும். தீமை அகல வேண்டும்!..
தாயாகிய பராசக்தி அனைத்து நலன்களையும் அருள வேண்டும்!..

காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி 
தந்நோ துர்கே: ப்ரசோதயாத்.