நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 10, 2020

மார்கழி தரிசனம் 25

தமிழமுதம்

வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்..(085)
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 25


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்
ஸ்ரீ நீர்வண்ணப்பெருமாள் - திருநீர்மலை
பேசுமிந்திருநாமம் எட்டெழுத்தும் சொல்லி நின்று பின்னரும்
பேசுவார்த் தம்மை உய்ய வாங்கிப் பிறப்பறுக்கும் பிரானிடம்
வாசமாமலர் நாறுவார் பொழில்சூழ்தரும் உலகுக்கெல்லாம்
தேசமாய்த் திகழும்மலை திருவேங்கடம் அடை நெஞ்சே..(1026)
-: திருமங்கையாழ்வார் :-

ஓம் ஹரி ஓம்
***

இன்று திரு ஆதிரைத் திருநாள்



வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே..(5/100)
-: திருநாவுக்கரசர் :-

சிவ தரிசனம்
திருஅண்ணாமலை


பூவார் மலர்கொண்டு அடியார் தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தாய்
தூமாமழை நின்று அதிர வெருவித் தொருவின் நிரையோடும்
ஆமாம் பிணைவந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே..(1/69)
-: திருஞானசம்பந்தப் பெருமான் :-


தீபத்திருநாளன்று திருஅண்ணாமலை 
உருவமும் உயிரும் ஆகிஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க
அருவி பொன் சொரியும் அண்ணாமலையுளாய் அண்டர்கோவே
மருவிநின் பாதம் அல்லால் மற்றொரு மாடிலேனே..(4/63)
-: அப்பர் ஸ்வாமிகள் :-
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை




உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம்அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்... 19

ஸ்ரீ நடராஜப்பெருமான் - உத்தரகோசமங்கை 
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.. 20

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை
இந்த அளவில் நிறைவடைகின்றது..
***

தேவி தரிசனம்

ஸ்ரீ வக்ரகாளியம்மன் - திருவக்கரை 
பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே!..(77) 
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

8 கருத்துகள்:

  1. எப்போவோ போனோம் திருநீர்மலை. நினைவில் அதிகம் இல்லை. மற்ற தெய்வ தரிசனங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  2. உத்தரகோசமங்கை வழியாவே 2,3 முறை போயும் இன்னமும் தரிசனத்துக்குக் கொடுத்து வைக்கலை. திருவக்கரை போனோம்.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய குறள் இதுவரை நான் படித்திராதது / அறிந்திராதது.

    பதிலளிநீக்கு
  4. ரசித்தேன், சுவைத்தேன்.  திருவண்ணாமலை பௌர்ணமி நாயகனையும் உத்தரகோசமங்கை நடராஜரையும் தரிசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. நீர்வண்ணப் பெருமளை தரிசனம் செய்து பல வருடம் ஆச்சு

    உத்தரகோசமங்கை கோவிலுக்கு திருவாதிரை அன்றே போய் தரிசனம் செய்து இருக்கிறோம் அம்மாவுடன்.

    நாங்கள் மறுமுறை போக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கும் கோவில்.
    திருவக்கரை காளியை தரிசனம் செய்து இருக்கிறோம் பலமுறை.
    இன்றைய தரிசனம் அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..