நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 04, 2017

கார்த்திகைத் திங்கள் 3

கார்த்திகையின் முதல் திங்களன்று
திருஆலம் பொழில் சிவாலயத்தையும்

இரண்டாம் திங்களன்று
திருக்காட்டுப்பள்ளி சிவாலயத்தையும்
தரிசனம் செய்தோம்..

இன்று கார்த்திகை மூன்றாம் திங்கள்..
வழக்கம் போலவே சிவாலய தரிசனம்..

இன்றைய தரிசனம் - திருக்கரந்தை..

இந்நாளில் கரந்தட்டாங்குடி என்று வழங்கப்படுகின்றது..

இத்திருக்கோயில் தஞ்சை மாநகரின் வடபுறமாக
வடவாற்றங்கரையில் அமைந்துள்ளது..

திருத்தலம்
திருக்கருந்திட்டைக்குடி


இறைவன் - ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீபிரஹந்நாயகி

தலவிருட்சம் - வன்னி
தீர்த்தம்
சந்திர தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம், வடவாறு...

வசிஷ்டர் சிவலிங்க பிரதிஷ்டை செய்ததால் - இறைவனின் திருப்பெயர் ஸ்ரீவசிஷ்டேஸ்வரர்.

இகபர செளபாக்யங்களை அருள்வதற்கு திருஅவதாரம் செய்த 
ஸ்ரீராமசந்திர மூர்த்திக்கு குருவாக விளங்கியவர் ஸ்ரீவசிஷ்ட மகரிஷி...

அவர் தென்குடித் திட்டை எனும் உலவாப் பதியாகியில்
சிவபூஜை செய்து சிவ தரிசனம் பெற்றார்..

அந்தப் புண்ணியத்தின் நற்பயனாக -
தான் செய்து வரும் நித்ய அக்னிஹோத்ரம் முதலான
ஆசார அனுஷ்டானங்களுக்கு உதவும் வகையில்
தெய்வப் பசுவாகிய காமதேனுவைப் பெற்றார். 

வசிஷ்ட மகரிஷி - அருந்ததி தம்பதியருடன்  இருந்து,
அவர்களுடைய தவ நெறிகளில் காமதேனுவும்
தன் மக்களாகிய நந்தினி, கமலினியுடன் பங்கெடுத்துக் கொண்டது. 

அதன் பயனாக - 
தெய்வப் பசுக்களாகிய -  நந்தினியும் , கமலினியும்
தங்கள் தாயாகிய காமதேனுவைப் போலவே
எல்லா உலகத்துக்கும் செல்லும் ஆற்றலையும்,
தீய அரக்கர்களை எதிர்க்கும் சக்தியையும் பெற்றன.

இத்தகைய சூழலில், வசிஷ்ட மகரிஷிக்கு -
கால மாற்றங்களினால் தோல் நோய் ஏற்பட்டது. 

இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிப்பவராகிய வசிஷ்டர் -
இதன் காரணத்தினை அறிய விரும்பி  - இறைவனிடம் வேண்டி நின்றார்.

உலகோர் உய்வடையும் பொருட்டு -
இத்திருத்தலத்தின் தென்கிழக்கே உள்ள
கரந்தை வனத்தில் எம்மை வழிபடுவீராக!.
அங்கே உமக்கு நலமும் பலமும் கிடைக்கும்!..  

- என ஈசன் மறுமொழி அளித்தனன்.   

அந்த அளவில் பின் வரும் ஒரு நன்மையின் பொருட்டு, வசிஷ்டர் அருந்ததி அம்மையுடன் ஈசன் குறிப்பிட்டருளிய
கரந்தை வனத்தை அடைந்தார்..

கரந்தைச் செடி - துளசி இனத்தை (OCIMUM BASILICUM.) சேர்ந்தது..
இதனை - திருநீற்றுப் பச்சை என்றும் சொல்வர்.

கரந்தை வனத்தினை அடைந்த வசிஷ்டர் -
தனது - நித்ய வழிபாட்டுக்கு என ஒரு குளத்தை உருவாக்கினார். 

அக்குளத்தை சந்திரன் தனது அமுத கலைகளால் நிரப்பினான். 
அக்குளத்தில் நீராடி - ஈசன் அருளியபடி வழிபாடு செய்தார் வசிஷ்டர். 

அவருடன் அந்த வனத்திலிருந்த ஏனைய முனிவர்களும் 
யாக வேள்வி பூஜைகளில் கலந்து கொண்டனர்.

சாயா தேவியின் சாபத்தினால் கலக்கமுற்றிருந்த 
யமதர்மராஜன் - இதனை அறிந்து கொண்டான்..  

கரந்தை வனத்திற்கு வந்து வசிஷ்டரையும் 
ஸ்ரீ வசிஷ்டேஸ்வர ஸ்வாமியையும் பணிந்து வணங்கி நின்றான். 

சாயாதேவியின் சாபம் யமதர்மனை விட்டு விலகியது.  
சாப விமோசனம் பெற்று தென் திசைக்குத் தலைவன் ஆனான். 

வசிஷ்ட மகரிஷியை வந்து வணங்கிய ஆதிசேஷன் 
ஸ்ரீ வசிஷ்டேஸ்வரரின் அனுக்ரகத்தால் - 
தளர்ச்சியின்றி  பூவுலகைத் தாங்கும் திறன் பெற்றான். 

அத்துடன் தன் இனத்தவரால்  - எட்டுத் திக்கிலும் ஒரு குரோச தொலைவுக்கு விஷ பயம் கிடையாது!.. - என வாக்கு கொடுத்தான்..

ஒரு குரோசம் என்பது இரண்டரை மைல்.. நான்கு கி,மீ..

வசிஷ்ட மகரிஷி கரந்தை வனத்தில் சிவபிரதிஷ்டை செய்து தவமிருக்கின்றார் என்பதை அறிந்த  - அருட்குரு கோரக்க சித்தர் -
ஸ்ரீவசிஷ்ட மகரிஷியை வந்து வணங்கி இன்புற்றார்.  

இன்றளவும் வசிஷ்ட மகரிஷி நித்ய வாசமாக இங்கேயே உறைவதால்
அருட்குரு கோரக்க சித்தர் ஒவ்வொரு  வியாழன் அன்றும் இரவு குரு ஹோரையில் - கரந்தை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலுக்கு வந்து ஸ்வாமியையும் ஸ்ரீவசிஷ்ட மகரிஷியையும் வணங்கி மகிழ்கின்றார் ..

கோரக்க சித்தரின் வருகையை முன்னிட்டு - 
இங்குள்ள  அருட்குரு கோரக்க சித்தர் பீடத்தில் -
வியாழக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..

ஸ்ரீ கோரக்க சித்தர் அதிஷ்டானம்
மற்றும் பெளர்ணமி சிறப்பு பூஜைகளும் 
அவர்தம் அடியார்களால் சிறப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. 

அருட்குரு கோரக்க சித்தர் - தம் அடியார்களுள் எளியேனும் ஒருவன். 

தனது சந்திரரேகை எனும் ஞான நூலில் திருநீற்றுப் பச்சிலை (144 -145) - சாபமற்ற மூலிகை - குரு மூலிகை - வில்வம், துளசி ஆகியனவற்றுக்கு இணையானது என்று அருளுகின்றார். 

கோயிலின் தெற்கு கோபுரம்
கிழக்கு ராஜகோபுரம் கிடையாது.
தெற்கு கோபுர வாசல் தான் பிரதானம்.  மூன்று நிலை கோபுரம்..

கிழக்கே உள்ள கொடிமரம்
தெற்கு உள் பிரகாரம்
ஸ்வாமி சந்நிதி விமானம்



ஸ்ரீ வசிஷ்டர் - அருந்ததி அம்மை

இத்தகைய தலவரலாறு கொண்ட -
திருக்கோயிலுக்கு எதிரில் உள்ள வசிஷ்ட தீர்த்தத்தில் நீராடி
கரிகால் சோழன் தோல் நோய் நீங்கப் பெற்றதாக ஐதீகம்.

வசிஷ்ட தீர்த்தத்தில் தொடர்ந்து 45 நாள்கள் மூழ்கி,
ஈசனை வழிபட்டால் சரும நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. 

சந்நிதி வாசலிலுள்ள திருக்குளம்
ஆலயத்தின் கிழக்கு வாசலில் திருக்குளமானதால் -
கிழக்கு முகமாக கோயிலினுள் நுழைய முடியாது...

விமானத்தின் மேற்கு தரிசனம்
ஸ்தல விருட்சம் - வன்னி
அம்பிகை தனி சந்நிதியில் திகழ்கின்றனள்.

அம்பிகை சந்நிதி கொடிமரம்
தெற்கு நோக்கிய அம்பிகைக்கு தனியே ஒரு கொடிமரம். தெற்கு வாசலில் அம்பிகையை நோக்கியவாறு 
பிரத்யேக மண்டபத்தில் நந்தி விளங்குகின்றார்..

இறைவன் கருவறை கோஷ்டத்தில்
மிகுந்த கலை நுணுக்கத்துடன் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

தெற்கு கோஷ்டத்தில் விரித்த சடையுடன் முயலகன் மீது காலை ஊன்றி நடமாடும்  நடராஜப் பெருமானின் இருபுறமும் அப்பரும் திருஞானசம்பந்தரும் திகழ்கின்றனர். 

கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தியை அடுத்து வசிஷ்டரும் அருந்ததி அம்மையாரும் விளங்குகின்றனர்.

நிருதி மூலையில் விநாயகர்..
அருகில் வள்ளி தேவசேனா உடனுறையும் திருமுருகன் சந்நிதி..

திருச்சுற்று மண்டபத்தில் சப்த லிங்கங்கள்..
ஜூர ஹரலிங்கம் தொட்டிக்குள் விளங்குகின்றது.. 

தீராத காய்ச்சல் உடையவர்கள் தொட்டிக்குள் நீர் நிரப்பி வழிபட
ஜூரம் தணியும் என்பது நம்பிக்கை..

ஸ்ரீ துர்காம்பிகை
கோஷ்டத்தில்  விநாயகர், பிட்க்ஷாடனர், கங்காதரர், கங்காளர்,லிங்கோத்பவர், வலம் இடம் மாறி விளங்கும் அர்த்தநாரீஸ்வரர், காலாந்தகர், துர்கை - என வெகு சிறப்புடைய திருமேனிகள் விளங்குகின்றன. 

அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தில் - 
உமை வலப்புறமும், ஈசன் இடப்புறமும் மாறித் திகழ்கின்றனர்...

இரண்டாம் திருச்சுற்றில் - 
கோயிலின்  நான்கு மூலைகளிலும் நான்கு விநாயகர் சந்நிதிகள் உள்ளன..

ஸ்ரீ தண்டாயுதபாணி சந்நிதி
ஸ்ரீ செல்லியம்மன் மூலஸ்தானம்
மேற்குப் பிரகாரத்தில்
மேற்கு நோக்கிய வண்ணம் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சந்நிதி

பிரகாரத்தின் வடபுறத்தில் - வெளிப்பக்கமாக 
மாகாளியாகிய ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில்...

இந்த அம்மனை - கோயிலுக்கு வெளியே வந்து தான் தரிசிக்க முடியும்..

மன்னன் கரிகால் சோழனால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில். 
பின்னர் முதலாம் பராந்தக சோழரால்  கருங்கல் கோயிலாக சிற்பச் செறிவுடன் திகழ்கின்றது. கருவறைச் சுவரில் நிறைய கல்வெட்டுக்கள்  உள்ளன.



பெருந்திருவிழாக்கள்  - தேரோட்டத்துடன் நிகழ்ந்திருக்கின்றன. 

ஆனால், இப்போது தேர் போய்ச் சேர்ந்த இடம் தெரியவில்லை. 

பிரதோஷம், சோமவாரம், பெளர்ணமி, திருக்கார்த்திகை முதலான விசேஷங்கள் சிறப்புடன் நிகழ்கின்றன. 

தைப்பூச நாளில் இறைவனுக்கும் அம்பிகைக்கும் திருக்கல்யாண வைபவம்... 

அதே நேரத்தில் - வசிஷ்டர் - அருந்ததி தம்பதியருக்கும் திருக்கல்யாணம் நிகழ்கின்றது...

தீண்டுவீராகில் எமைத் திருநீலகண்டம்!..  
- என்று மனையாள் சூளுரைத்ததால் - இளமையைத் துறந்த திருநீலகண்ட நாயனாருக்கு வாழ்வும் வளமும் நல்கிய வைபவம் ஆண்டுதோறும் நிகழ்கின்றது. 

ஆண்டு தோறும் பங்குனி மாதம் 3,4,5, ஆகிய நாட்களில்
உதயாதி நாழிகையில் சூரிய கதிர்கள் கருவறையில் படர்கின்றன..

அந்த நேரத்தில் வெகு சிறப்பாக சூரிய பூஜை நிகழ்கின்றது. 


திருநாவுக்கரசர் தனது திருவாக்கினால் - 
இத்தலத்தை க்ஷேத்ர கோவையில் குறிப்பிட்டுள்ளார். 

இன்று திருக்கோயில் கருணாசாமி கோயில் எனவும் திருத்தலம் கரந்தை எனவும் கரந்தட்டாங்குடி எனவும் வழங்கப்படுகின்றது.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருவையாறு பாபநாசம் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் கரந்தையில் நின்று செல்கின்றன..

பிரதான சாலையில் இருந்து அரை கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது.. பூஜைப் பொருட்களைக் கரந்தை கடைத் தெருவில் வாங்கிக் கொள்ளலாம்..


கரந்தை திருக் கோயிலுக்கு 2017 
பிப்ரவரி இரணடாம் நாள் திருக் குடமுழுக்கு நடந்துள்ளது...

நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்
குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி
கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி
கருந்திட்டைக்குடி கடையக் குடிகா ணுங்கால்
விற்குடிவேள் விக்குடிநல் வேட்டக் குடி
வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி
புதுக்குடியும் போற்ற இடர் போகுமன்றே!..(6/71)
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

9 கருத்துகள்:

  1. எத்தனை கோவில்கள் தஞ்சையில்? இதெல்லாம் அறியாது ஓரிரு கோவில்களுக்கு மட்டுமே சென்றிருக்கிறேன் என் இளமையில்! இந்தக் கோவில் என்றில்லை, எந்தக் கோவிலையும், கோவில்களின் குளங்களையும் இந்த அரசு சரிவர பராமரிப்பது இல்லை.

    பதிலளிநீக்கு
  2. விரிவான விளக்கங்கள் அருமையான படங்கள் எங்கு வருமானம் உள்ளதோ அங்கு கால் பதிப்பது அறநிலைத்துறையின் அவலக்கேட்டை பிரதிபலிக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. வெகு சிறப்பாய் பதிவு செய்து விட்டீர்கள். விரிவாய் ஒன்றையும் விடாமல்.
    மீண்டும் நேரில் தரிசனம் செய்த
    மகிழ்ச்சி.
    படங்கள் நன்றாக இருக்கிறது. குளத்திற்கு நீர்வரும் பாதைகள் அடைபட்டு விட்டால் எப்படி நீர் வரும்?

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. கோயிலைப் பற்றியத் தகவல்கள் அருமை! படங்களும் மிக அழகாக இருக்கின்றன சகோ. உங்கள் கை வண்ணத்தில். தஞ்சையிலும் தஞ்சையைச் சுற்றியும் நிறைய கோயில்கள் உண்டு என்பது தெரியும். ஒரு சில கோயில்களுக்குத்தான் சென்றிருக்கின்றேன். இக்கோயிலுக்கு எல்லாம் சென்றதில்லை. குளங்கள் ம்ம்ம்ம் என்ன சொல்ல? எந்தக் கோயிலின் குளங்களும் பராமரிக்கப்படுவதில்லை.

    எங்கள் ஊர்க் கோயிலின் குளம், மற்றும் சுசீந்திரம் கோயிலின் குளமும் நன்றாகப் பராமரிக்கப்படுகிறது. இதோ இப்போது கூட அங்கெல்லாம் குளங்கள் புயல் மழையில் நிரம்பி வழிந்து ரோடெல்லாம் நீரில் மூழ்கியிருந்துருக்கின்றன. கேரளத்திலும் குளங்கள் நன்றாகவே பராமரிக்கபடுகின்றன என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டின் அறநிலையத் துறையை என்ன்வென்று சொல்ல? வருத்தம் தான் மேலிடுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ஒரு பதிவில் எவ்வளவு விசயங்களைச் சொல்லிட்டீங்க... அதுக்குள்,கார்த்திகைத் திங்கள் மூன்றாவது திங்களைக் கண்டு விட்டதே.. என்னா ஸ்பீட்டூ..

    பதிலளிநீக்கு
  6. குளத்திற்கு தண்ணீர் வந்த வழியை அடைத்துவிட்டார்கள்
    இன்றைய விஞ்ஞானத்தால் இதுநாள் வரை இந்தக் குளத்திற்குத்தண்ணீரைக் கொண்டு வர இயலவில்லையே
    மூத்தோரையும், அவர்தம் நீர் மேலாண்மையினையும் மறந்தே போய்விட்டோம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  7. அழகான படங்கள். வரண்டு கிடக்கும் குளம் பார்க்கையில் மனதில் வலி.

    சிறப்பானதோர் கோவில் பற்றி உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  8. மிக அழகிய கோவில் தரிசனத்திற்கு நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  9. கோஷ்ட சிற்பங்களுக்கு புகழ் பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. குடமுழுக்கிற்கு முன்பும், குடமுழுக்கு முடிந்த பின்னும் சென்றுள்ளேன். இக்கோயிலைப் பற்றி விக்கிபீடியாவில் பதிந்துள்ளேன். கோயிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் குளத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டது வேதனையாக இருந்தது. குடமுழுக்கின்போதே கோயிலில் இதுபற்றி பலர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..