நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், நவம்பர் 16, 2017

உன்னுடன் நான்..

பொழுது விடிவதற்கான நேரம் தான்..

மிச்சம் மீதியாக இருந்த சின்னஞ்சிறு குருவிகளும்
காக்கைகளும் சேர்ந்து கொண்டு கதிரவனை வரவேற்றுக் கொண்டிருந்தன..

இந்த வருடம் தேவியரின் தரிசனத்திற்கு தாமதமாயிற்று..

ஆவல் மீதூற விரைந்து நடந்து படித்துறையை அடைந்தபோது -
அங்கே எனக்கு முன்பாக வந்து காத்திருந்தனர் -

காவிரியும் கங்கையும்!..

ஆகா.. என்ன ஒரு அரிய காட்சி!.. பார்க்கப் பார்க்கப் பரவசம்!..

கிழக்கு நோக்கியவளாக கங்கா அமர்ந்திருக்க
அவளுடைய மென்தோளில் சாய்ந்தவளாக - காவேரி!..

கங்கையின் திருவடிகள் நீரில் அளைந்து கொண்டிருக்க-
அவளுடைய திருப்பாதக் கொலுசுகளில் மோதுவதற்கு
நீரலைகள் - ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டிருந்தன...

படிக்கட்டுகளில் தாவிக் குதித்து இறங்கிய நான்
தெய்வமங்கையரின் திருவடிகளைத் தொட்டு சிரசில் வைத்துக் கொண்டேன்..

காவிரியாள்
தாயே சரணம்!.. தாயே சரணம்!..

காவேரி.. இதோ வந்து விட்டான் உன் மகன்!.. - கங்கா திருவாய் மலர்ந்தாள்..

ஏனக்கா.. இவன் உங்களுக்கும் மகன் இல்லையா!.. - காவேரி வினவினாள்..

எனக்கும் மகன் தான்.. ஆனாலும், இந்த ஊர்க்காரர்கள் எல்லாம் உனக்கு மகனும் மகளும் ஆகின்றார்கள்.. அவர்களுக்கெல்லாம் நீ அன்பு மகள் ஆகின்றாய்!.. காதோலை கருகமணியுடன் வளையலும் பூம்பட்டும் புதுத் தாவணியும் பூச்சரமும் மாலைகளும்.. இதெல்லாம் யாருக்குக் கிடைக்கும்!..

இதைக் கேட்டு காவிரி மெல்லச் சிரித்தாள்...

அப்படியும் இருக்கின்றார்கள்... 
அங்கமெல்லாம் நோகும்படிக்கு என்னை அலைக்கழித்து 
விஷக் கழிவுகளைப் பாய்ச்சி சீரழிப்பவர்களும் இருக்கின்றார்கள்...
இதையெல்லாம் என்னவென்று சொல்வது!?..

அதெல்லாம் காலப்போக்கில் சரியாகிவிடும்... கலங்காதே காவிரி!..

காவிரியைத் தேற்றினாள் - கங்கா...

தாயே.. துலா மாதமாகிய ஐப்பசியின் முப்பது நாளும் 
தாங்கள் இங்கே காவிரியுடன் கலந்திருந்தீர்கள்.. 
ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா!.. - என்பதுடன் இதுவும் சிறப்பு...

ஆமாம்.. இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும்
அருள் பொழியும் பொருட்டு நாளை ஒருநாள் கூடுதலாக!..

- கங்கையாள் அன்புடன் மொழிந்தாள்..

ஆம் தாயே!.. எல்லாருக்கும் அருளும் பொருட்டல்லவோ
அம்பிகை மயிலாக உருமாறி இங்கே நடமாடினாள்...
அம்பிகையுடன் எம்பெருமானும் கலந்து மயூர தாண்டவம் நிகழ்த்தினன்
என்றால் காவிரிக் கரையின் பெருமையை சொல்ல வல்லார் யார்!?..

அதனால் தானே - காவிரியின் வண்ண முகம் காண்பதற்கு
வடக்கேயிருந்து ஓடோடி வருகின்றேன்!.. என்ன காவிரி.. வடிவழகி தானே நீ!..

போங்கள் அக்கா!.. நீங்கள் தான் அழகு.. பேரழகு!.. 
உங்களுக்கு இங்கே யார் ஈடு இணை!?..

ஆனாலும், கங்கையினும் புனிதமாய காவிரி!..
- என்று உன்னைத் தானே போற்றுகின்றார்கள்...

தாயே!.. தாங்கள் இருவருமே இவ்வையகத்தின் கண்கள்!...
நீரும் சோறும் அறிவும் ஞானமும் உங்களால் ஆகின்றன..
தாங்களின்றி எங்களுக்கு எதுவும் இல்லை!..

காலங்கள் தோறும் பிறவி எடுத்துக் கிடந்தாலும்
இங்கே - இங்கேயே நதிக்கரையின் ஓரமாக
ஒரு புல்லாக முளைத்துக் கிடப்பதே புண்ணியம்!..

அதைத் தானே ஆன்றோரும் சான்றோரும் வேண்டி நிற்கின்றனர்..
அவ்வண்ணமாகத் தானே எளியவராகிய நாங்களும் வேண்டுகின்றோம்!..

என்னப்பா!.. எல்லாரும் பிறப்பற்ற நிலையை அல்லவா விழைகின்றனர்!..

கங்கையின் திருமுகத்தில் வியப்பு..

தாயே.. அதுவும் பேரின்பம் தான்.. இதுவும் பேரின்பம் தான்!..

பச்சைமா மலைபோல் மேனிபவள வாய்கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும் 
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெரினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!.. 
- என்கிறார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்...

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!..
- என்கிறார் அப்பர் ஸ்வாமிகள்...

அடியார்களும் ஆழ்வார்களும் - 
மாதவனை மகாதேவனைத் துதித்துக் கிடப்பதற்கு 
மீண்டும் பிறவியை வேண்டுகின்றார்கள் எனில் -
அவர்தமக்கு அடியார்களாகிய நாங்களும் 
அவ்வண்ணம் தானே வேண்டி நிற்போம்!..

அப்படிப் பிறக்குங்கால் 
நீர் இன்றிப் பிறப்பேது!..
நீவிர் இன்றிச் சிறப்பேது!..

ஓ!.. தமிழ்.. காவிரித் தமிழ்!.. - கங்கையின் திருமுகத்தில் பூஞ்சிரிப்பு..

ஆம்.. தாயே!..
காவிரியால் வந்ததே சொல்..
காவிரியாள் தந்ததே சொல்!..

கல.. கல.. - எனச் சிரித்தனர் காவிரியும் கங்கையும்..

இந்த மங்கலமும் மாட்சியும் என்றென்றும் நிறைந்திருக்க வேண்டும்..
எல்லாரும் இன்புற்று வாழ்ந்து இவ்வையகத்தைக் காத்திட வேண்டும்..
கங்கையும் காவிரியும் எங்களுக்கு நல்லருள் புரிய வேண்டுகின்றேன்!..

கங்கையும் காவிரியும் அபய வரதம் காட்டி நின்றருளினர்..

கைகளைக் கூப்பியவாறு வலம் செய்து
திருவடிகளில் வீழ்ந்து வணங்கினேன்..

வளமும் நலமும் பெற்று 
நீடூழி வாழ்க.. நீடூழி வாழ்க!..

மலர்களைத் தூவி இவ்வையகத்தை 
வாழ்த்திய வண்ணம்
நீரொடு நீராகக் கலந்தனர்...

கிழக்கே ஆதவன் புன்னகையுடன்
கடைமுழுக்குக் காண்பதற்காக 
எழுந்து கொண்டிருந்தான்.. 
*** 

திருத்தலம்
மயிலாடுதுறை




இறைவன் - மயூரநாதர்
அம்பிகை - அஞ்சொலாள்

தீர்த்தம்
கங்கையிற் புனித காவிரி, ரிஷப தீர்த்தம்
தல விருட்சம் - மாமரம்

காசிக்கு நிகரான திருத்தலங்கள் ஆறனுள் மயிலாடுதுறையும் ஒன்று..

திருஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசு ஸ்வாமிகளும்
திருப்பதிகம் பாடித் துதித்த திருத்தலம்...

ஐப்பசியில் திருவிழா காணும் திருத்தலம் மயிலாடுதுறை..
துலா ஸ்நானம் - என, மாதம் முழுதும் இங்கே கோலாகலங்கள்..
பூர நட்சத்திரத்தை அனுசரித்து திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்தது..

இன்று கடை முழுக்கு...
நாளை - முடவன் முழுக்கு

நேற்று திருத்தேரில் ஈசனும் அம்பிகையும் எழுந்தருளினர்..

இன்று கடைமுக தீர்த்த வாரிக்காக -
ஸ்வாமியும் அம்பிகையும் விடை வாகனத்தில் எழுந்தருள்கின்றனர்..

காவிரியின் அக்கரையில் விளங்கும் ஸ்ரீ பரிமளரங்கன் திருத்தேரில் உற்சவம் காணுகின்றார்..

இன்றைய பதிவில் -
மயிலாடுதுறையில் நடந்து கொண்டிருக்கும்
துலா உற்சவத்தின் திருவிழாக் காட்சிகள்...

படங்களை FB வழியாக வழங்கியவர்கள்
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்..
அவர்தமக்கு மனமார்ந்த நன்றிகள்..





 






நிலைமை சொல்லுநெஞ்சே தவம் என்செய்தாய்
கலைகள் ஆயவல்லான் கயிலாய நன்
மலையன் மாமயிலாடு துறையன் நம்
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே!..(5/39)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

18 கருத்துகள்:

  1. நல்ல தரிசனம். சுவாரஸ்யமான விவரிப்பு.

    // நீர் இன்றி பிறப்பேது?
    நீவிர் இன்றி சிறப்பேது? //

    அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  2. அன்பின் ஜி விளக்கமும் அழகிய படங்களுடன் தரிசித்தேன் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி ..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
      வாழ்க நலம்..

      நீக்கு
  3. மயூர நாதனின் தரிசனம் ஆகியது.

    'காவிரியாள் தந்ததே சொல்' என்பது, அழகிய சொல்லுடையாளுக்காக எழுதியதா? அஞ்சொலாள் என்பதற்கு அதுதானே அர்த்தம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர் ..
      அழகிய சொல்லுடையாள் - அஞ்சொலாள்.. இந்த சொற்பிரயோகம் அப்பர் சுவாமிகளுடையது..

      காவிரியால் தான் நீரும் சோறும் சொல்லும் பொருளும் என்ற அர்த்தத்தில் நான் எழுதியதே - காவிரியாள் தந்ததே சொல்!..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அருமையான விவரிப்பு...
    அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார் ..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. நாங்கள் மாயவரம் சென்றிருந்தபோது திருமதி கோமதி அரசு அவர்கள் சில கோவில்களுக்கு அழைத்துச் சென்றார் காவிரி நதி ஏனோ விடுபட்டுப் போயிற்று உங்கள் எழுத்தில் நான் திளைக்கிறேன் வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா ..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. இன்று முழுவதும் மாயவரம் நினைப்புதான். முப்பது நாளும் காவிரி முழுக்கு செய்யும் பக்தர்கள் கூட்டம் ஊர் முழுவதும் இருக்கும். ஐப்பசி கடைமுழுக்கு எல்லா கோவில்களிலும் இருந்து பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி செய்வர்.
    கார்த்திகை ஒன்று முடவன் முழுக்குடன் முடிவடையும் திருவிழா.
    நீங்கள் தந்துள்ள படங்கள் மூலம் தரிசனம் செய்து விட்டேன்.
    வாழ்த்துக்கள் நன்றி.

    சாமி புறப்பாட்டை கண்டு களித்தேன். நண்பர்களையும் அதில் கண்டேன்.
    நன்றி நன்றி.

    பாலசுப்பிரமணியம் சார், முழுக்குதுறையை காட்டவில்லை என்று தெரிகிறது. மாயவரம் பதிவு வரும் போது எல்லாம் என்னை மறக்காமல் குறிப்பிடுவதற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர் ..

      துலா உற்சவத்தின் படங்களில் தங்களது நண்பர்களைக் கண்டு கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..

      நன்றி எல்லாம் படங்களை வலையேற்றிய நண்பர்களுக்கு உரியது..
      தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதில்கள்
    1. அன்புடையீர் ..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அழகு நடையில் காவிரியும் கங்கையும்!!! ஒயிலாய் இங்கு அரங்கேறி நம் எல்லோருக்கும் துலா தரிசனம்! பாடல்கள் அனைத்தும் அருமை இனிமை பதிவும் அப்படியே!! அதுவும் சொன்ன விதம் படு ஸ்வாரஸ்யமாய் தங்கள் எழுத்து கட்டிப் போட்டுவிடுகிறது இதமாய்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன் ..

      நான் சாதாரணமாகத் தான் எழுதியிருக்கிறேன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. கடை முழுக்கு...முடவன் முழுக்கு கண்ட பெருமான் தரிசனம் கண்டோம்....

    நன்றிகள் பல ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..