நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 03, 2017

வயலும் வாழ்வும்

அன்புக்குரிய நெல்லைத் தமிழன் அவர்கள் முதலடி எடுத்துக் கொடுக்க -
நமது ஏரியா தளத்தில் இன்றைய தினம் எனது கதையொன்று வெளியாகி உள்ளது..

நேற்று காலையில் தான் கேட்டிருந்தார்கள் - கதை வேண்டும் என்று..

மின்னஞ்சல் வழியே மாலைப் பொழுதில் அனுப்பி வைத்தேன்...

இதோ இன்று காலையில் கதை வெளியாகி உள்ளது..

அவர்களுடைய தளத்தில் வெளியாகும் இரண்டாவது கதை இது...

முதலடி எடுத்துக் கொடுத்த அன்பின் நெல்லைத்தமிழன் அவர்களுக்கும்
கதையுடன் அழகான படங்களை இணைத்த அன்பின் கௌதம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி..

எங்கள் Blog தளத்தின் எழுத்தாளர்கள் வரிசையில் எனக்கும் இடமளித்திருக்கின்றார்கள்...

மீண்டும் என்னை எழுதத் தூண்டிய அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..

நம்ம ஏரியா தளத்திற்கான இணைப்பு - இதோ!..

* * *

அப்பா.. போதும்பா.. நீங்க தனியா இங்க இருக்கறது.. எங்களோட வந்துடுங்க!..

வாசு அப்பாவிடம் இறைஞ்சினான்..

வேணாம்டா.. இங்கேயே இருந்துட்டேன்.. இங்கேயே போயிடறேண்டா.. வானதியோட எப்பவும் தொடர்புல இரு.. அவளுக்கு உங்க அரவணைப்பு அவசியம்!..

சுவாமிநாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு கண்களை மூடினார்..

வாசுவுக்கு அப்பாவை அந்த நிலையில் பார்ப்பது வருத்தமுறச் செய்தது..

கண்ணில் நீர் வருவது அப்பாவுக்குப் பிடிக்காது என்று அடக்கிக் கொண்டான்..

வசுமதி அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்..

அவளுக்கு சற்றே அச்சமாக இருந்தது..

அந்தத் திண்ணையின் கீழ்ப் பக்கமாக நின்று கொண்டிருந்த கலியன் கண்ணைக் காட்டினான்...

சரி.. புறப்படுங்க.. நாங்க ஐயாவைப் பார்த்துக்கறோம்.. - என்று அர்த்தம்..


சுவாமிநாதனின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு -
வாசுவும் வசுமதியும் கனத்த மனதுடன் வாசற்படிக்கட்டுகளில் இறங்கினர்..

கலியனின் மனைவி வசுமதியின் அருகில் வந்தாள்..

இந்தப் பையில மாவடுவும் நாரத்தங்காயும் இருக்கு.. நம்ம தோட்டத்துல வெளைஞ்சது... - என்றாள்..

வசுமதி வாங்கிக் கொண்டு -
சரி போய்ட்டு வர்றோம்... மாமாவைப் பார்த்துக்குங்க!.. - என்றாள்..

துக்கம் தொண்டையை அடைத்தது..

அழக்கூடாது.. நல்ல பொண்ணு..ல்ல.. - கலியனின் மனைவி தேற்றினாள்..

சற்றைக்கெல்லாம் ஆட்டோ வந்து நின்றது..

அடுத்த சில மணி நேரங்களில் தஞ்சையிலிருந்து புறப்பட்ட உழவன் விரைவு வண்டி பொழுது விடியும் நேரத்தில் தாம்பரம் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தது...

அங்கிருந்து ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்தபோது நன்றாகப் பொழுது விடிந்திருந்தது..

வீட்டுக்கு வந்ததும் வானதிக்கு தகவலைச் சொன்னான்...

பத்து நிமிடத்திற்குள் வீட்டு வாசலில் வந்து நின்றாள்...
ஒரு கையில் தூக்குவாளி.. வேறொன்றில் பிளாஸ்டிக் கூடை

வாங்க அத்தை!.. - வாட்டம் தீராதவனாக வரவேற்றான் வாசு

என்னா ஒரு பிடிவாதம்.. அண்ணன் ஒரு முடிவெடுத்தா அவ்வளவு தான்.. மாறவே மாறாது... சின்ன வயசுல.. இருந்தே பழக்கம்...

எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டாங்க.. மாமா மனசு இரங்கவே இல்லை..

என்னத்துக்கு இந்தப் பிடிவாதம்...ங்கறேன்..
வயசான காலத்துல புள்ளைங்க முகத்தைப் பார்த்தோமா..
நாலு நல்ல வார்த்தைகளப் பேசுனமா..ன்னு இல்லாம...

அப்பா குணம் தெரிஞ்சது தானே!.. யாருக்கும் எந்த இடைஞ்சலும் கொடுக்கக் கூடாது..ன்னு நெனைக்கிறார்... பொறந்த மண்ணு...லயே இருக்கணும் ..ன்னு பிரியப்படுறார்...

இப்ப இவரு திருவையாத்தில இல்லை..ன்னு யாரு வந்து அடிக்கிறாங்க...
ஆச்சு அண்ணனுக்கும் வயசு அறுவத்தி அஞ்சு...
ஏதாவது ஒன்னு..ன்னா யாரு கூட இருந்து பார்க்கிறது?..
அவசரத்துக்கு இங்கேயிருந்து தஞ்சாவூருக்கு ஓட முடியுதா?..
இது மட்டும் இடைஞ்சல் இல்லையா?..

அதான் உங்களைக் கூப்பிட்டேன்..
நீலாவுக்கு இன்டர்வ்யூ..ன்னு வரமுடியாம போச்சு...

சரி..சரி.. எல்லாத்தையும் மகமாயி பார்த்துக்குவா..
இந்தாம்மா.. வசுமதி..  இதுல பால் இருக்கு..
வாளியில இட்லி பொங்கல் இருக்கு..
சாப்பிட்டுட்டு மத்தியான சமையல ஆரம்பி....
இல்லேன்னா.. உங்களுக்கும் சேர்த்து சமைக்கிறேன்!..
வாசு.. நீ வேலைக்குப் போகணும்..ல்ல!..

இல்லை.. அத்தை.. இன்னைக்கு லீவு.. ஒரே அசதியா இருக்கு!..

வானதி புறப்பட்டுச் சென்றாள்.. அடுத்த தெருவில் தான் அவளுடைய வீடு..

சுவாமிநாதனுக்கு இளையவள்.. பத்து வயது வித்தியாசம்...

சுவாமிநாதனின் அப்பா சம்பந்த மூர்த்தி.. பெருந்தனக்காரர்..

திங்களூர் திருப்பழனம் திருவேதிக்குடி.. - என்று சுற்றுப்பட்ட கிராமங்களில் இருபது வேலிக்கு நஞ்சை நிலங்கள்..

திருவையாற்றில் ஒரே இடமாக ஒன்றரை வேலி தென்னந்தோப்பு..

சுவாமிநாதன் பிறக்கும் முன்பே தாத்தாவின் பெயர் தான் என்று முடிவாகிவிட இளையவளுக்கு வானதி என்று பெயர் சூட்டினார்கள்..

சுவாமிநாதன் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் பயின்று ஆசிரியராகப் பணியாற்ற -

இளையவள் வானதி தாம்பரத்தில் வாழ்க்கைப்பட்டாள்...

அப்போது தாம்பரம் சுமாரான ஊர்.. ஆனாலும் மெட்ராஸ் என்ற பெரிய பெயர்..

மாப்பிள்ளைக்கு ரயில்வேயில் பெரிய வேலை.. மெட்ராசில் பெரிய வீடு.. கொடுத்து வைத்தவள்!.. - என்று திருவையாறே பேசிக் கொண்டது...

அடுத்த சில வருடங்களில் புதிதாகப் பரவிய கொடுநோய் -
சுவாமிநாதனின் மனைவி செண்பகவல்லியைப் பிரித்துக் கொண்டு போனது ..

உற்றார் உறவினர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்
இன்னொரு கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ளவே இல்லை...

வாசுவை கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தெடுத்தார்...

பெரியோர்களின் நல்லாசியினால் வங்கி ஒன்றில் வேலை கிடைத்தது வாசுவுக்கு.. கும்பகோணத்தில் சில ஆண்டுகள்...

பட்டுக்கோட்டைக்குப் பக்கம்.. தாமரங்கோட்டையில் சம்பந்தம் முடிவாகியது.. அங்கேயும் இங்கேயுமாக அறுபது ஏக்கர் தென்னந்தோப்பு... அத்தனைக்கும் வசுமதி தான் ஒரே வாரிசு...

அதுவும் தலைச்சன்.. இதுவும் தலைச்சனா!.. - என்றார்கள்..

டேய்!.. அடுத்து ஒன்னு பொறந்திருந்தாத் தான் தலைச்சன் இடைச்சன் எல்லாம்.. இதுங்களே தனிக்காட்டு ராஜா மாதிரி இருக்கிறப்போ தலைச்சனாவது.. இடைச்சனாவது?.. பந்தக்காலை நாட்டுங்கடா!..

பெரியவர் ஒருவர் சத்தம் போட்டார்...

அவ்வளவுதான்.. தாமரங்கோட்டையில் இருந்து இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ரெண்டு கிலோ மீட்டருக்கு டியூப் லைட் போட்டு தோரணம் கட்டி மூன்று நாள் நடந்தது - கல்யாணம்..

வசுமதி வாசுவைச் சேர்ந்த நேரம் பதவி உயர்வுடன் மாற்றல் - சென்னைக்கு..

வானதி அந்தக் காலத்திலேயே தனது வீட்டுக்கு அருகில்
விலைக்கு வந்த பெரிய வீட்டை வாங்கிப் போட்டாள்..

அதுவும் அப்பா பணம் கொடுத்தார் - என்று வாசுவின் பேரிலேயே!..

ஏதோ ஒரு தீர்க்க தரிசனம் போல் நடந்த அந்த செயல் -
வாசு வசுமதி தம்பதியர்க்கு திரவியம் கிடைத்ததைப் போலாகி விட்டது...

கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் ஓடி விட்டன..

மாதத்துக்கு ரெண்டு தடவை திருவையாற்றில் இருந்து அரிசி பருப்பு தேங்காய் - என்று மூட்டை கட்டிக் கொண்டு சுவாமிநாதன் வந்து விடுவார்...

தங்கை வீட்டிலும் மகன் வீட்டிலும் சில நாட்கள் இருப்பார்..

அதற்குள் காடுகரையின் ஞாபகம் வந்து விடும்... கிளம்பி விடுவார்..

கடந்த சில வருடங்களாக மழை இல்லை..
காவிரியும் வறண்டு விட்டது..
சாகுபடி சொல்லிக் கொள்ளும்படி இல்லை..

வாய்க்கால் வரப்பு என்று அலைந்து சுவாசித்துக் கிடந்தவருக்கு அதிர்ச்சி..
தாளாத மனம் தத்தளித்ததில் படுத்த படுக்கையானார்..

சென்னையிலிருந்து எல்லாரும் ஓடி வந்தார்கள்...
தஞ்சாவூர் பெரிய ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்த்தார்கள்...

ஒரு பிணியும் கிடையாது.. நன்றாக இருக்கின்றார்.. மன உளைச்சல் தான்.. வேண்டியப்பட்டவர்கள் அருகில் இருங்கள்!.. - என்று சொல்லிவிட்டார்கள்..

காவிரி காய்ந்து போனது தான் மன உளைச்சல்...

அதற்கு யார் என்ன செய்யமுடியும்?...

வயற்காட்டை விற்றுப் போட்டு சென்னைக்கு வந்து விடுங்கள்!..
- என்று சொன்னால் பிரளயமே வந்து விடும்..

ஆனாலும் மெதுவாக சொல்லிப் பார்த்தான் வாசு..

ஒன்றும் நடக்கவில்லை.. பிடிவாதமாக மறுத்து விட்டார் சுவாமிநாதன்...

அதையெல்லாம் நினைத்துக் கொண்டே தூங்கிப் போன வாசு
மெல்ல கண் விழித்தான் ...

அருகே வசுமதியைக் காணவில்லை.. எங்கே போய் விட்டாள்!?..

வசுமதியைத் தேடிய வண்ணம் வாசு புரண்டு எழுந்தான் ..

குளித்து விட்டு ஈரத் தலையைத் துவட்டி கொண்டு எதிரே வந்தாள்..

என்ன.. குளியல் இந்த நேரத்தில!..

என்ன குளியல்..ன்னா?..

அதான் என்ன குளியல்...ங்கறேன்!..

அதான் என்ன...ங்கறேன்!..

கையை நீட்டி - வசுமதியின் கையைப் பிடித்து இழுத்தான்...

கை வளையல்கள் சல..சல.. என்றதும்
கால் கொலுசுகள் கல.. கல.. என்றன..

***

நாட்கள் விரைந்து ஓடியதில் மூன்று மாதங்களாகி இருந்தன..

அவ்வப்போது கலியனிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும்...

இடையில் ஒருதடவை வானதியுடன் சேர்ந்து வாசுவும் வசுமதியும் திருவையாற்றுக்குச் சென்று வந்தார்கள்...

அப்பா சற்று தெளிவாக இருப்பதாகப்பட்டது வாசுவுக்கு..
காவிரியில் இந்த ஆண்டு தண்ணீர் ஓடுவது காரணமாக இருக்கலாம்...

சென்னைக்கு வந்த நான்காம் காலை..

வாசு சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்..
வேலைக்கு நேரமாயிற்று..

அருகில் வந்து நின்ற வசுமதி - வாசுவின் தலையைக் கோதினாள்..

என்ன விசேஷம் !..

எல்லாம் விசேஷந்தான்!..

இன்னைக்கு இட்லி சாம்பார் அபாரம்!..

எப்ப பார்த்தாலும் சட்னி சாம்பார் தானா?!..

தஞ்சாவூர்க்காரன்... சட்னி சாம்பாருக்கு ரசிகன்.. தெரியுமா!..

- என்றபடி நிமிர்ந்து வசுமதியை நோக்கினான் வாசு..

என்றும் இல்லாத ஒரு மகிழ்ச்சி.. மலர்ச்சி - அவள் முகத்தில்

என்ன.. மாமாவும் அத்தையும் வர்றாங்களா!.. - என்றான்..

ம்ஹூம்.. காதைக் கொடுங்களேன்..

எதுக்கு!.. கதை சொல்லவா.. கவிதை சொல்லவா?..

செல்லமாக அவன் காதைப் பிடித்து இழுத்தபடி வசுமதி குனிந்தாள்..
குளிர்க் கூந்தல் வாசுவின் முகத்தில் சிலுசிலு - எனச் சரிந்தது..

எத்தனை நேரம் ஆயிற்றோ..

இருவரின் கன்னங்களும் கண்ணீரால் நனைந்திருந்தன..


பத்து வருடங்களுக்குப் பிறகு நெஞ்சில் பால் வார்க்கப்பட்டிருக்கின்றது..

சரி.. சரி.. அப்பாகிட்டே சொல்லுவோம்... ரொம்ப சந்தோஷப்படுவாங்க!..

நெஜந்தானா..ன்னு ஒரு தடவை ..

என்ன நெஜந்தானா..ன்னு!.. என்ன விஷயம்?.. - வானதி வீட்டினுள் நுழைந்தாள்..

மெல்லிய புன்னகை இருவரின் முகத்திலும்..

என்னடா வாசு... என்னா சேதி!.. - வானதியின் முகத்தில் கேள்வி..

உதட்டைக் கடித்தபடி ஓரவிழியால் பார்த்தாள் வசுமதி..
வெட்கம் அவளைப் பாடாய்ப் படுத்தியது...

வானதிக்குப் புரிந்து விட்டது...

சரி.. சரி..அண்ணனுக்கு சொல்லுங்க...
பேரன் பொறக்கப் போறான்..னு தெம்பா இருக்கும்...

அடுத்த மூன்றாம் நாள் - திருவையாற்றில்..

சுவாமிநாதனின் கால்களில் விழுந்தான் வாசு.. உடன் வசுமதியும்...

இப்படி கால்..ல விழுந்தா - நான் வந்திடுவேனாக்கும்!..
- மீசையை முறுக்கிக் கொண்டார்...

நாங்க கூப்பிட்டா வரமாட்டீங்க.. உங்க பேரன் வந்து கூப்பிட்டா!..

என்னது!?.. - ஆனந்த அதிர்ச்சி சுவாமிநாதனுக்கு..

இருவரையும் வாரி அணைத்துக் கொண்டார்..

ஆத்தா மகமாயீ!.. எங்குடிய வாழ வைச்சவளே!..  - கண்ணீர் வழிந்தது..

 ஆட்கொண்டார் சந்நிதிக்கு ஓடினார்.. நெய் விளக்கு ஏற்றி வைத்தார்..

இன்னும் பத்து பதினைஞ்சு வருசத்துக்கு ஒருத்தனும் என்னைய தேடிக்கிட்டு வரக்கூடாது.. ஆமா.. சொல்லிட்டேன்!..

திருக்கருகாவூருக்கு ஓடினார்..

அம்மா.. கர்ப்பரக்ஷாம்பிகே.. தாயும் புள்ளையும் உனக்கே அடைக்கலம்...
உன் சந்நிதியில வெச்சு ஆயிரம் பேருக்கு அன்னதானம்...

அதற்குப் பிறகு சுவாமிநாதனைக் கையால் பிடிக்கமுடியவில்லை..


சரி.. இப்போ எங்கே அவர்!?.. - என்று கேட்கின்றீர்களா!..

கலியா.. வெள்ளாமை எல்லாம் நீயே பார்த்துக்கோ!.. - என்று சொல்லி விட்டு தாம்பரத்துக்கு வந்து விட்டார்..

தத்தக்கா.. தத்தக்கா!.. -  என்று,
தோளிலும் நெஞ்சிலும் குதிக்கின்றான்.. மிதிக்கின்றான் - பேரன்...

கொள்ளை மகிழ்ச்சி.. சுவாமிநாதனுக்கு...

காடுகரை விளைந்ததைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்த நாட்கள் எல்லாம்
திரும்பவும் வந்து விட்டதைப் போலிருந்தது..

சரி.. இருக்கட்டும்.. திருவையாற்றுக்கு எப்போ வருவாராம்!?..

தெரியவில்லை!..
* * *

14 கருத்துகள்:

  1. துரை செல்வராஜு ஐயா!/சகோ ஹப்பா என்னமா ஒரு கதை! அசத்திட்டீங்க! அப்படியே காட்சிகள் கண்களில் விரிய...மனம் இதமான அன்புடன் ம்ம்ம் பேரன் என்றால் எல்லாம் போட்டுவிட்டு உடனே வந்து மகனுடனும் மருமகளுடனும் புதுவரவாகிய பேரனுடனும் கொஞ்சி அன்பை வழங்கி அன்பையும் பெற்று என்று அருமை!!! அதே சமயம் வயலும் காவிரியும் சொல்லி அதையும் வாழ்க்கையோடு பிணைத்துச் சொன்ன விதம் மனதைத் தொட்டுவிட்டது. அன்பு என்பது எத்தனை வலியது இல்லையா?!! கலியனைப் போல என்றும் சொல்லலாம்...அந்த அன்புதானே இப்படிக் கட்டிப் போட்டுவிட்டது!!!அருமை!! அருமை!!

    மிக மிக அருமையான ஒரு கதையை வாசித்த இன்பம்...தங்களின் வலைத்தளத்தைப் போலவே!!

    துளசிதரன், கீதா

    அந்தத் தளத்திலும் வாசித்தோம். அங்கு கொடுத்த அதே கருத்தையே இங்கும் பதிகிறோம். மிக மிக இதமாக வருடிச் சென்ற அன்பை வலியுறுத்தும் அழகான கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன் - கீதா..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மட்டற்ற மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அருமையான கதை. வயதானவர்கள் உணர்வும், இளையவர்கள் உணர்வும் ஒன்றோடு ஒன்று நெகிழ்ந்து பின்னப்பட்ட கதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  3. /மீண்டும் என்னை எழுதத் தூண்டிய அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி..//

    இல்லா விட்டால் எழுத மாட்டீர்களா என்ன! நீங்கள் எழுதாத எழுத்தா?​
    பெருந்தன்மையுடன் என்னைப்பற்றி குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      உண்மை இது தான்..

      அன்பின் குமார் அவர்கள் தளத்தில் என்னைப் பற்றி நான் - எழுதிய பிறகு தான் தங்களிடமிருந்து அழைப்பு வந்தது - கதைகள் எழுதும்படி..

      அதன் பிறகுதான் - மீண்டும் கதைகளிலும் கவிதைகளிலும் சிந்தனை சென்றது..

      பழைய நினைவுகளை முழுமையாக மீட்டெடுத்தது தங்களால் தான்!..

      மகிழ்ச்சியும் நன்றியும் என்றைக்கும் உரியன..

      நீக்கு
  4. அன்பின் ஜி
    அழகிய பாசஉணர்வுகளை தங்களுக்கே உரிந்த சம்பாஷனைகளில் அழகாக நகர்த்திச் சென்ற விதம் அழகு

    பட்டுப்போய் கிடந்த சுவாமிநாதன் ஐயா வாழ்வில் பேரனின் வரவு மறுமலர்ச்சி கொள்ள வைத்தது மிகவும் அருமையான கட்டம்

    எல்லாம் திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை அருள்

    கலியா வெள்ளாமை எல்லாம் நீயே பார்க்குக்கோ
    //அருமையான கிராமிய வசனம்//

    இணைப்பிற்கும் சென்று வந்தேன்

    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் உற்சாகமாக இருக்கின்றது..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. வயலும் வாழ்வும் கிராமத்து மண்வாசனையுடன் மிக அருமை.
    பெரியவரை குழந்தையாக துள்ளி குதிக்க வைத்த பேரன் வாழ்க!
    அன்பும், பாசமும் என்றும் வாழவைக்கும் .
    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      >>> அன்பும் பாசமும் என்றும் வாழ வைக்கும்..<<<

      அதுவே வாழ்க என்றென்றும்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பேரன்வந்தா வாழ்வு மலரும் நல்ல கதை அருமையான நடை ஆனால் பேரன்கள் எல்லாம் சிறு வயதில்தான் எண்ணி மகிழ முடியும் வளர்ந்துவிட்டால் இந்தக் காலத்தில் சில கசப்பான உண்மைகள்தான்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..