நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 12, 2016

மாமதுரைத் திருவிழா 1

மாமதுரையில் சித்திரைத் திருநாள்!..


மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர் திருக்கோயிலில் நிகழும் மங்கலகரமான துன்முகி வருடத்தின் சித்திரைத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று முன் தினம் ஏப்ரல்/10 ஞாயிற்றுக் கிழமை - கோலாகலமாக நிகழ்ந்தது.

முன்னதாக ஏப்ரல்/09 அன்று பூமி பூஜை (வாஸ்து சாந்தி) நடைபெற்றது.

நன்றி - ஸ்ரீ மீனாட்சியம்மன் திருக்கோயில்
ஏப்ரல்/10 - காலையிலேயே ஸ்வாமி சந்நிதியின் கம்பத்தடி மண்டபத்தில் தேவார திருமுறைப் பாராயணங்களுடன் திருக்கொடியேற்றத்திற்கான சிறப்பு பூஜைகள் தொடங்கின.


கம்பத்தடி மண்டபத்தில் நறுமணம் மிக்க மலர்களாலும் - பூந்தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காலை 9.40 மணியளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ சுந்தரேசர் பிரியா விடையுடனும் ஸ்ரீமீனாக்ஷி அம்மனும் கம்பத்தடியில் எழுந்தருளினர்.

அதன்பின் திருக்கொடி பூஜை நடந்தது.

தர்ப்பை புற்களுடன் பெரிய மாலைகளும் சாற்றப்பட்டன.



காலை 10.40 மணியளவில் மங்கல மேளங்கள் முழங்க -
மிதுன லக்னத்தில் - நந்தியும் சிவலிங்கமும் எழுதப் பெற்ற வெண்ணிறத் திருக்கொடி தங்கக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.

பதினாறு வகையான தீப உபசாரங்கள் செய்யப்பெற்றன.

மதியம் 11.10 மணி அளவில் - பூச்சொரிதலுடன் மகாதீப ஆராதனை நிகழ்ந்தது.



கொடியேற்றத்திற்குப் பின் - ஸ்வாமி அம்மன் - வெள்ளி சிம்மாசனத்தில் குலாளர் மண்டபத்திற்கு எழுந்தருளினர்.


சுரும்பு முரல் கடிமலர் பூங்குழல் போற்றி 
உத்தரியத் தொடித்தோள் போற்றி 
கரும்புருவச் சிலை போற்றி 
கவுணியர்க்குப் பால்சுரந்த கலசம் போற்றி 
இரும்பு மனம் குழைத் தென்னை 
எடுத்தாண்ட அங்கயற்கண் எம்பிராட்டி 
அரும்பும் இளநகை போற்றி ஆரண 
நூபுரஞ்சிலம்பும் அடிகள் போற்றி!..
(திருவிளையாடற் புராணம்)  
* * *

முதலாம் திருநாள் (10/4) வைபவம் 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

காலை - வெள்ளி சிம்மாசனம்.

-: இரவு :- 
ஸ்ரீசொக்கநாதப் பெருமான் கற்பக விருட்சத்திலும் -
அன்னை கயற்கண்ணி சிம்ம வாகனத்திலும் எழுந்தருளினர். 




இரண்டாம் திருநாள் (11/4) வைபவம். 
மாசி வீதிகளில் திருவீதி உலா.

காலை - தங்க சப்பரம்.

-: இரவு :- 
ஸ்ரீசுந்தரேசப் பெருமான் பூத வாகனத்திலும் -
அன்னை மீனாட்சி அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர். 




தொடர்ந்து வரும் நாட்களில் சிறப்பு மிகு அலங்காரங்களுடன் அம்மையும் அப்பனும் ஆருயிர்களுக்கு அருள் செய்யும் விதமாக எழுந்தருள்கின்றனர்.

அவ்வண்ணமாகிய மங்கல நிகழ்வுகளை - எவ்விதத் தடையுமின்றி
தளத்தினில் வழங்குதற்கு எல்லாம் வல்ல இறையை வேண்டுகின்றேன்..

சித்திரைத் திருநாளின் சிறப்பு வைபவமான திருக்கல்யாணம்.
பத்தாம் திருநாளாகிய ஏப்ரல்/19 அன்று நிகழ்கின்றது..

வழக்கம் போல - அழகிய படங்களை வழங்குகின்ற -
அன்பு நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி!..
***

மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக் கைம்மடமானி
பங்கயச்செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும்பரவப்
பொங்கழலுருவன் பூதநாயகனால் வேதமும் பொருள்களும்அருளி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதுமிதுவே!..
(3/120)
-: திருஞானசம்பந்தர் :-

மீனாட்சி சுந்தரேசர் திருவடிகள் போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * * 

15 கருத்துகள்:

  1. அழகான புகைப்படங்களுடன்
    அருமையான பதிவு ....
    வாழ்த்துக்கள் நண்பரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  2. புகைப்படங்கள் சிறப்பு விளக்கமான விடயங்களுடன் வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நான்மாடக்கூடலுக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      என்னுடன் நான்மாடக்கூடலுக்கு வருகை தந்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அழகானபுகைப் படங்கள்
    அருமையானப் பதிவு
    நன்றி ஐயா
    சித்திரைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பகிர்வு அருமை, புகைப்படங்கள் அனைத்தும் அழகு,,

    தொடர்ந்து பதிவுகள் வரட்டும்,,

    நன்றி,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நல்வரவு..

      வெகு நாட்களுக்குப் பின் தங்களுடைய வருகை..
      மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  6. மதுரைக்குச் செல்லாமலேயே சித்திரைத் திருவிழா விஷயங்களை அசைபோட இன்னொரு வாய்ப்பு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      செலவும் மிச்சம் தானே.. ஆனாலும் - இத்தனை துல்லியமான விழாவினைப் பார்க்க இயலுமா என்பதும் ஆச்சர்யம்..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. பதிவும் புகைப்படங்களும் அருமை சார். தங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

      நீக்கு
  8. திருவிழா குறித்த படங்களும் தகவல்களும் அருமை! தொடர்ந்து தாருங்கள். இவ்வளவு அழகாக ஆன்மீகப் பதிவுகளைத் தரும் உங்களுக்கு இறவன் அருள்வார் ஐயா! தொடருங்கள்..தொடர்கின்றோம்..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..