நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 19, 2016

மாமதுரைத் திருவிழா 5

மாமதுரையில் நிகழ்வுறும்
சித்திரைத் திருவிழாவின் முத்திரைத் திருநாள் - இன்று..
***

நேற்று ஒன்பதாம் திருநாள்.

அன்னை மீனாக்ஷி திக்விஜயம் செய்தாள்..
சுந்தரேசப்பெருமானைக் கண்டு நாணித் தலை கவிழ்ந்தாள்..

போர்க்கோலங் கொண்ட பூங்குழலாள்
புதுமலர் சூடி திருமணக்கோலங் கொண்டாள்!..

இன்று மதுரையம்பதியில் மங்கலகரமாக 
ஸ்ரீ மீனாட்சி - ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நிகழ்ந்தது.

மங்கல வைபவத்தின் நிகழ்வுகளை -
இன்றைய பதிவில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்..

இன்றைய பதிவின் படங்களை வழங்கியோர் :- 
திரு. குணா அமுதன், திரு. ஸ்டாலின், திரு.அருண்., 
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..
* * *


மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்குப் 
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்பெரு விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே!.. (24)
* * *

ஒன்பதாம் திருநாள் (18/4) வைபவம் 
மாசி வீதிகளில் நிகழ்ந்த திருவீதி உலா!..

-: காலை :-
மரவர்ண சப்பரத்தில் எழுந்தருளல்.









-: இரவு :-
அருள் தரும் சுந்தரேசப்பெருமானும் 
அங்கயற்கண் அம்பிகையும்
இந்திர விமானத்தில் 
எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.





பத்தாம் திருநாள் (19/4) வைபவம்
ஸ்ரீ மீனாக்ஷி திருக்கல்யாணம். 


-: காலை :-
சித்திரை வீதிகளில் 
வெள்ளி சிம்மாசனத்தில் திருவீதி உலா!..

முத்துராமையர் மண்டபத்தில் 
கன்னி ஊஞ்சலாடிய கயற்கண்ணி
திருமண மண்டபத்திற்கு எழுந்தருளினாள்.

பல்லாயிரக்கணக்கானவர் மாமதுரையில் கூடியிருக்க - 
அம்மையும் அப்பனும் சர்வ அலங்காரத்துடன் -
ஆடி வீதி மற்றும் சித்திரை வீதிகளில் எழுந்தருளினர்.












தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில்
சுந்தரேசப் பெருமான் எழுந்தருளினார்.

பெருமானைத் தொடர்ந்து - பிரியாவிடையும் மீனாக்ஷி அம்மனும்
திருமணக் கோலத்தில் மணமேடைக்கு எழுந்தருளினர்.

அன்புத் தங்கையை கன்யாதானம் செய்து கொடுப்பதற்கென - திருப்பரங்குன்றத்திலிருந்து ஸ்ரீ பவளக்கனிவாய்ப் பெருமான்
 எழுந்தருளினார். 

அம்மையப்பனின் திருமணக் கோலத்தைக் கண்டு மகிழ்வதற்கு - 
வள்ளி தெய்வானையுடன் திருமுருகன் - தானும் எழுந்தளினன்.

காலை 8.45 மணியளவில் ரிஷப லக்னம் கூடிய சுபவேளையில் திருமாங்கல்யதாரணம் நிகழ்ந்தது.




ஸ்ரீ மீனாக்ஷிக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட சுபவேளையில் கூடியிருந்த மக்கள் மலர்களுடன் அட்சதை தூவி வழிபட்டதுடன் - சுமங்கலிகள் தாலிச்சரடு மாற்றிக் கொண்டனர்.

திருமண விழாவில் மகிழ்ச்சியுடன் சுற்றி வருகின்ற மச்சக்கன்னியும் 
கனகசுந்தரம் அருகிருக்க புது மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டாள்..

-: இரவு :-
அருள்தரும் சுந்தரேசப்பெருமான் யானை வாகனத்திலும் 
அங்கயற்கண் அம்பிகை பூம்பல்லக்கிலும்
மாசி வீதிகளில் எழுந்தருள்வர்.



புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம்காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம்அடியார்கள் நடுஇருக்கப்
பண்ணிநம் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே!.. (41)
-: அபிராமி அந்தாதி :-   

மீனாட்சி சுந்தரேசர்
திருவடிகள் போற்றி.. போற்றி!..

ஓம் நம் சிவாய சிவாய நம ஓம் 
* * *

4 கருத்துகள்:

  1. அன்பின்ஜி புகைப்படங்கள் அனைத்தும் கண்ணைப் பறிக்கின்றன....
    திருவிழா 5 நன்று வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  2. இன்றைய விழாவில் உங்களோடு பயணித்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மீனாட்சி கல்யாணத்தில் நாங்களும் கலந்து கொண்டோம்

    பதிலளிநீக்கு
  4. திருவிழாவில்...
    புகைப்படங்கள் வழி எங்களையும் கலந்து கொள்ள வைத்தீர் நண்பரே

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..