நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 10, 2015

திருவேங்கட மலை


இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை..

பெருமாளின் கிடந்த திருக்கோலத்திற்கு அணை - ஆதிசேஷன்..

அரவணையான் என்பது பெருமாளின் திருப்பெயர்களுள் ஒன்று..

அந்த ஆதிசேஷன் மலை வடிவம் கொண்டான்..

அந்த மலை - ஏழு சிகரங்களுடன் பொலிகின்றது..

வேங்கட மலை, சேஷமலை, நீல மலை,கருட மலை, விருஷப மலை,  அஞ்சன மலை, நாராயண மலை - என்பன அவை..

திருவேங்கட மாமலை - எனும் திருமலையில் -
எம்பெருமான் திருப்பாதம் பதித்து விளங்குவதே பெருஞ்சிறப்பு.. !..

சிவராத்திரி அன்று நிகழும் க்ஷேத்ர பாலிகா உற்சவத்தின் போது பெருமான் வைரத்தால் ஆன விபூதிப் பட்டையுடன் திருவீதி கண்டருள்கின்றனன்..

அதனால் தான் - 

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து!.. (2344) 

- என்று, பேயாழ்வார் பாடித் துதித்தார்..

வேங்கடேசப் பெருமானின் திருவடிகளைப் போற்றும் திருப்பாசுரங்களை இன்றைய பதிவினில் சிந்திப்போம்!.. 


சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய் உலகு
தன்னைவாழ நின்றநம்பீ தாமோதரா சதிரா என்னையும்
என்னுடைமையையும்உஞ் சக்கரப்பொறியொற்றிக்கொண்டு
நின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக்குறிப்பே.. (0463) 
-: பெரியாழ்வார் :-  

வெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட விமல னெனக்குருக் காட்டான்
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும் உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடுங் குயிலே
மெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய்!.. (0546)
-: சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் :-

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவ நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து நின் பவளவாய் காண்பேனே!.. (0685) 
-: குலசேகராழ்வார் :- 

கடைந்தபாற்க டல்கிடந்து காலநேமி யைக்கடிந்து
உடைந்தவாலி தந்தனுக்கு உதவவந்தி ராமனாய்
மிடைந்தவேழ்ம ரங்களும டங்கவெய்து வேங்கடம்
அடைந்தமால பாதமே யடைந்துநாளு முய்ம்மினோ!..(0832)
-: திருமழிசை ஆழ்வார் :-


தாயேதந்தையென்றும் தாரமேகிளை மக்களென்றும்
நோயேபட்டொழிந்தேன் உன்னைக்காண்பதோர் ஆசையினால்
வேயேய்பூம்பொழில்சூழ் விரையார் திருவேங்கடவா
நாயேன்வந்தடைந்தேன் நல்கிஆளென்னைக்கொண்டருளே!..(1028)

மானேய்கண்மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து
நானேநானாவித நரகம்புகும்பாவம்செய்தேன்
தேனேய்பூம்பொழில்சூழ் திருவேங்கடமாமலை, என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே!..(1029)

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனு மிரந்தார்க்கு இனிதாகவுரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாமலைவேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே!..(1030)

குலந்தா னெத்தனையும் பிறந்தேயிறந்து எய்த்தொழிந்தேன்
நலந்தா னொன்றுமிலேன் நல்லதோரறம் செய்துமிலேன்
நிலம் தோய்நீள்முகில்சேர் நெறியார்த் திருவேங்கடவா
அலந் தேன்வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே!..(1031)

எப்பாவம்பலவும் இவையேசெய்திளைத்தொழிந்தேன்
துப்பா! நின்னடியே தொடர்ந்தேத்தவும்கிற்கின்றிலேன்
செப்பார்த்திண்வரைசூழ் திருவேங்கடமாமலை, என்
அப்பா!.. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே!..(1032)

மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவுமாகாசமுமாம்
புண்ணாராக்கைதன்னுள் புலம்பித்தளர்ந்தெய்த்தொழிந்தேன்
விண்ணார்நீள்சிகர விரையார்த்திருவேங்கடவா
அண்ணா! வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே!..(1033)

தெரியென்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துமிட்டேன்,
பெரியேனாயின பின் பிறர்க்கேயுழைத்தேழையானேன்,
கரிசேர்ப்பூம்பொழில்சூழ் கனமாமலைவேங்கடவா!,
அரிய!. வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே!..(1034)

நோற்றேன் பல்பிறவி உன்னைக்காண்ப தோராசையினால்
ஏற்றேனிப் பிறப்பே யிடருற்றனனெம் பெருமான்!..
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலை சூழ்வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனையாட் கொண்டருளே!..(1035)

பற்றேலொன்றுமிலேன் பாவமேசெய்துபாவியானேன்
மற்றேலொன்றறியேன் மாயனே!  எங்கள்மாதவனே!..
கல்தேன்பாய்ந்தொழுகும் கமலச்சுனைவேங்கடவா!..
அற்றேன்வந்தடைந்தேன் அடியேனையாட்கொண்டருளே!..(1036)

கண்ணாய் ஏழுலகுக்கு உயிராயவெங் கார்வண்ணனை
விண்ணோர் தாம்பரவும் பொழில்வேங்கடவேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திருமங்கையர்க் கோன்கலியன்
பண்ணார் பாடல்பத்தும் பயில்வார்க்கில்லைபாவங்களே!..(1037)
-: திருமங்கை ஆழ்வார் :-

ஸ்ரீ வேங்கடேச சரணம்.. சரணம்.. ப்ரபத்யே!..
ஓம் ஹரி ஓம்..
* * *

14 கருத்துகள்:

  1. புரட்டாசி கடைசி சனிக்கிழமை.... ஆழ்வார்களின் பாசுரங்களோடு தொடங்கியிருக்கிறது இன்றைய இனிய காலை.....

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தினமும் ஒரு தேவாரப்பதிகமும் விடுமுறை நாள்களில் அத்துடன் பிரபந்தமும் படித்துவருகிறேன். தாங்கள் இப்பதிவில் இட்டுள்ள திருமங்கையாழ்வாரின் பாடல்களைப் படித்துள்ளேன். இன்று அவரது (ஐந்தாம் பத்து, ஒன்பதாம் திருமொழி, கையிலங்காழி, திருப்பேர்நகர் எண்.1428 முதல் 1437) படிக்கவுள்ளேன். வேங்கடமலைக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும், கருத்துரையுடன் -
      மேலதிக தகவல்களை வழங்கியதற்கும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அழகான படங்களுடன் அருமையான தொகுப்பு ,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகை கண்டு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      அன்புடன்..
      அபுதாபியிலிருந்து.,

      நீக்கு
  4. நல்லதொரு பகிர்வு...
    புரட்டாசி சனிக்கிழமை.... இன்று பிரதோஷம் என்றும் நினைக்கிறேன்...
    மிக அருமையான பாடலும் அழகான படங்களும்...
    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      அன்புடன்..
      அபுதாபியிலிருந்து.,

      நீக்கு
  5. மனம் நிறைக்கும் பதிவு ஐயா!

    வேங்கடேசன் அருள் வேண்டி நிற்கின்றேன். அழகிய திருவுருவப் படங்களுடன்
    திருப்பாசுரமும் மிக அருமை!

    நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      அன்புடன்..
      அபுதாபியிலிருந்து.,

      நீக்கு
  6. அன்பின் ஜி
    ஆழ்வார் பாடல்களுடன் சிறப்பான பதிவு அழகான புகைப்படங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜீ..
      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      அன்புடன்..
      அபுதாபியிலிருந்து.,

      நீக்கு
  7. புரட்டாசிச் சனிக்கிழமை இறுதி சனி...அன்று சனி பிரதோஷம் வேறு. நாங்கள் அன்று நின்றிருந்த ஊர் திருவாரூர். அருள்மிகு தியாகராஜ கோயிலில் அந்த மரகத லிங்கம் முன்பு. அருமையான தரிசனம். எத்தனை லிங்கங்கள்! அருமை! காலையிலும் மாலையிலும் பூஜை கண்டு மனம் இதமாக, அந்த இறைவனின் லிங்க வடிவங்கள் அப்படியே கண்ணிலும், மனதிலும் நிறைந்திருக்க புதுக்கோட்டை நோக்கிப் பயணித்தோம்.

    உங்கள் பதிவு அருமை! ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. பிரதோஷத்தன்று - திருஆரூரில் தரிசனம்..
      மகிழ்ச்சியாக இருக்கின்றது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..